அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இடம்பெயர் முகாம்களுக்கு மேலும் 15 மருத்துவர்கள் : சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

sri-lankan-doctors.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பணியாற்றவென மேலும் 15 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஏற்கனவே 102 மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகவும் அதற்கு மேலதிகமாக இந்த 15 மருத்துவர்களை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முகாம்களில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் அங்குள்ள மக்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஒரு நாள் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மறுநாள் அங்கிருப்பதில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற வேண்டிய நீரிழிவு உள்ளிட்ட நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்தே மேலதிக மருத்துவர்களை அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

குடாநாட்டில் எரிபொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம்

jaffna1.jpgயாழ். மாவட்டத்தில் எரிபொருட்களுக்கான புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெற்றோல் 90 ஒக்டேன் ஒரு லீற்றர் 134 ரூபா ஆகவும் லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் 78 ரூபா 50 சதமாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 54 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்ட செயலணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ எரிபொருட்கள் ஏ9 பாதையால் எடுத்து வரப்படுவதால் அவற்றின் விலையைக் குறைப்பதற்கு ஆவன செய்ததையடுத்து புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

வினாத்தாள் குளறுபடி: விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு

sri-lanka-school.jpgஇரண்டாம் தவணைப் பரீட்சைக்குரிய வினாத்தாள்களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக மாகாண, வலய மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வினாத்தாள்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும், மாகாணங்கள், வலயங்களிலிருந்து விசாரணைகள் மேற்கொண்டு தகவல்களை சேகரிக்கும் வேலைகளை கல்வி அமைச்சு தொடங்கியுள்ளது.

தவணைப் பரீட்சைகள் நடத்தும் போது எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் ஏற்படாதவாறு பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்லால் பெரேராவின் தலைமையிலான குழுவொன்று மேற்படி விசாரணைகளை நடத்துகிறது. விசாரணைகளின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு வாரத்துள் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

தனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் அதிகரிக்கலாம்

bus.jpgதனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் மட்டுமே அதிகரிக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோருகின்ற போதும் தாம் அதற்கு அனுமதிக்கப் போவதில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையுயர்வு மற்றும் பஸ் சம்பந்தப்பட்ட செலவு தொடர்பிலேயே 7 வீத பஸ் கட்டண உயர்வை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.

விமான நிலைய பார்வையாளர் மண்டபம் நாளை முதல் மீண்டும் திறப்பு

mihinlankaflight.jpg இதுவரை காலமும் மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் மண்டபம் நாளை 3ஆம் திகதி முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

சிற்றுண்டிச்சாலை வசதியுடன் நவீன வசதிகளுடன் கூடியதாக இப் பார்வையாளர் மண்டபம் அமைந்துள்ளதுடன் விமானம் ஒன்றின் உட்புறம் எவ்வாறு உள்ளது என்பதை பொதுமக்கள், மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் மாதிரி விமானமொன்றும் பார்வையாளர் மண்டபத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பார்வையாளர் மண்டபத்திலிருந்து விமான ஓடுபாதை, விமானங்கள் தரையிறங்குதல், புறப்பட்டுச் செல்லல் என்பவற்றை காணமுடியும் இதற்கு நுழைவுக்கட்டணமாக 20 ரூபா அறவிடப்படும் என்றும் விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

ஏ-9 இன்று முதல் தினமும் பஸ் சேவை

north-governor.jpgஏ-9  வீதியூடாக பயணிகள் பஸ் சேவை இன்று முதல் தினமும் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். நகரிலுள்ள சிங்கள மகா வித்தியாலய திடலிலிருந்து தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகள் வவுனியா நகரில் ரம்யா ஹவுஸ் பகுதியை வந்தடைந்ததும் அங்கிருந்து கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அனுமதி பெற்றவர்கள் தினமும் காலை 9.00 மணிக்கு புறப்படும் 5 பஸ் வண்டிகளில் பயணிக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.வவுனியாவுக்கு தினமும் செல்லும் 5 பஸ் வண்டிகளும் அதே தினம் யாழ். நகரை சென்றடையும் என யாழ். அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்தார்.

யாழ். நகருக்குள் மீண்டும் செல்பவர்கள் வவுனியா நகரிலுள்ள ரம்யா ஹவுஸ¤க்கு வரும் பட்சத்தில் அங்கிருந்து யாழ்.நகர் நோக்கி புறப்படும் பஸ் வண்டிகளில் செல்ல முடியும் எனவும் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ஏ-9 பாதையூடாக மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்துச் சேவை இதுவரை நடத்தப்பட்டுவந்தது. ஐந்து வஸ் வண்டிகள் வீதம் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தன.

இதேவேளை, மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படவுள்ளன. மதவாச்சிவரை வரும் யாத்திரிகர்களை பாதுகாப்பு நடைமுறைகளின் பின்னர் வேறு பஸ் வண்டிகள் மூலம் மடுத்தேவாலயம் வரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

(02-09-2009)”இந்தியாவுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் வவுனியா முகாம்களிலுள்ள அகதிகள்’

srilanka-refugees.jpg இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கூட தமிழர்கள் இப்போதும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் முன்னர் போன்று அல்லாமல் குறைந்தளவு அகதிகளாக வருவதாகவும் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது. தற்போது அநேகமானவர்கள் விமானம் மூலம் வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 109 தமிழ் மக்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். ஜூனில் 142 பேரும் ஜூலையில் 89 பேரும் சென்றிருக்கின்றனர். 1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து தமிழ் அகதிகள் இந்தியாவுக்குப் பெருந்தொகையாகச் சென்றனர். கடல் மார்க்கமாகப் படகுகளில் மிக நெருக்கடியான பயணங்களை அவர்கள் மேற்கொண்டனர்.

இப்போது கொழும்புக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வருவதாகவும் படகில் செல்வது இப்போது இலகுவானவிடயமாக இல்லாததால் விமானம் மூலம் வருவதாகவும் “ஒவ்வர்’ அமைப்பின் தலைவர் சீனா சந்திரஹாசன் கூறியுள்ளார். மே மாதம் 109 பேர் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூனில் இந்தியா சென்ற 142 பேரில் 39 பேர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். ஜூலையில் 10 பேர் படகில் சென்றனர். இதேவேளை, வவுனியாப் பகுதி முகாம்களில் உள்ள 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்களில் அநேகமானவர்கள் இந்தியாவுக்குச் சென்று புதிய வாழ்வை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பாக விசாரிப்பதாக சந்திரஹாசன் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள மக்களில் கணிசமான தொகையினர் மத்தியில் இந்தியாவுக்கு வருவதற்கான எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ஆனால், புலிகளின் பகுதிகளில் இருந்த இந்த மக்களுக்கு இடமளிப்பது தொடர்பான விடயம் அரசியல் நிலைவரத்தில் தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 73,475 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ளனர். இதனை விட பலர் முகாம்களுக்கு வெளியே வாழ்கின்றனர்.

இந்தியாவுக்கு தமிழ் மக்கள் செல்வதற்கு விரும்பும் பிரதான காரணம் அவர்களுக்கு உள்ள அச்சமே என்று சந்திரஹாசன் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி அகினோ காலமானார்

n13.jpgபிலிப் பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொராஷோன் அகினோ நேற்றுக் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 76 சிலகாலம் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அகினோவின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் 10 நாட்கள் துக்கம் கடை பிடிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி குளோரியா மெகாபாக்ல் அரோயோ அறிவித்துள்ளார். அகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர் பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்தில் ஆறு வாக்குச் சாவடிகள்!

election_fingercolur.jpgயாழ் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும்  மக்களில் 4388 பேர் யாழ். மாநகரசபைத் தேர்தலில்  வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம். நபீல் தெரிவித்துள்ளார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி,  பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம்,  கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர்பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் : சந்திரிக்கா

chandrika.jpgநமது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 13 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ‘இந்திய அரசியலில் பெண்களின் வாக்குகள்’ என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடுபோது இலங்கையில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.