அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வைகோ, விஜயகாந்த், திருமா. புலிகளிடம் பணம் பெற்றனர்-சாமி

swamy1111.jpgவிடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். அவ்வப்போது சுப்ரமணிய சாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிகள் கொடுப்பது வழக்கம். அந்த ரீதியில், இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது சாமி கூறுகையில்,  இந்தியாவில் இருக்கும் 27 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது இலங்கையில் இருந்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது.

அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் , மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  ஆகியோரும் அடங்குவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே நீதிமன்றத்துக்கு சென்று இதை அம்பலப்படுத்துவேன் என்றார் சுப்பிரமணிய சாமி.

ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு : அமைச்சர் ஆறுமுகன்

pluckers.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமைப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

“கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இவ்வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. இதன் பிறகு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  இதன் போது தோட்டத்தொழிலாளர்களுக்கு 12.5 வீத சம்பள உயர்வை வழங்குவதற்கே முன்வந்தனர். இந்தச் சம்மேளனத்துடன் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதாக இல்லை.

இதனைத்தொடர்ந்து கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களின் தீர்மானத்தின்படி தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை வலியுறுத்தி தோட்ட நிர்வாகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத வகையில் ஒத்துழையாமைப் போராட்டத்தினை கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளனர். அதாவது வேலை நிறுத்தம், மெதுவாக வேலை செய்தல் போன்ற போராட்டங்களைத் தவிர்த்து இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினை தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ளனர். காரணம்: வேலை நிறுத்தப் போராட்டம் செய்தால் தொழிலாளர்கள் தமது சம்பளத்தினை இழக்க நேரிடும்.

இதனைக் கருத்திற்கொண்டு தான் இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் தொழிலாளர்கள் ஒற்றுமையாக முன்னெடுத்து வருகின்றனர். கடந்த முறை சம்பள உயர்வை வலியுறுத்தித் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தினை மேற்கொண்ட போது, சில சக்திகள் அதனை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றியது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான சக்திகள் தமது சுய விளம்பரத்துக்காக இந்த ஒத்துழையாமைப் போராட்டத்தினைத் திசை திருப்புவதற்கு எத்தனிக்கலாம். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.இதற்காக இ.தொ.கா.முழுமூச்சாக செயற்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

யுத்தத்தில் ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் – கோதபாய ராஜபக்ஷ

யுத்தம் காரணமாக ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என கோதபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நாட்டை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட படைவீரர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கைவிடாதென குறிப்பிட்ட அவர், ஊனமுற்ற படைவீரர்களை வாழ் நாள் முழுவதும் பராமரிப்பதற்கான விசேட செயற் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
படைவீரர்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்வைன்: இந்தியாவில் 116 பேர் சாவு

swine.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று பலியானவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 116 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்தியா முழுவதும் 124 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 50, தமிழகத்தி்ல் 33, மகராஷ்டிராவில் 21 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரத்து 315 என கூறப்படுகிறது. அதிகபட்சமாக பிரேசிலில் 657, அமெரிக்காவில் 593, அர்ஜென்டினாவில் 465 பேர் பலியாகியுள்ளனர்.

யாழில் 500 தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில – அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்கலாம்

police_jaff.jpgயாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுவதற்காக 500 தமிழ் இளைஞர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்குப் பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் யாழ்.மாவட்டத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைத் தமிழில் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து அடுத்த வாரம் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்தவர்களிற்கான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்குப் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தப்படும். மேலும் சிவில் பாதுகாப்பு விடயங்களைத் தீவிரப்படுத்தவும் முடியும் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்

சம்பந்தன் தலைமையில் 7 பேர் ஜனாதிபதியுடன் திங்களன்று சந்திப்பு

TNA Leader R Sampanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் திங்கள்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது அக் கட்சியின் சார்பில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 7 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு கூடி இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா,  பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ சார்பில் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஐ.எம்.இமாம் ஆகியோரே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரகள் ஆவர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசைச் சேர்ந்த கஜேந்திரன் பொன்னம்பலம தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பதால் இக் குழுவில் இடம் பெறவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இடம் பெறவிருக்கும் சந்திப்பில் பேச வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்ததாகவும், இடம் பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம், 1990 ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், அண்மைக் காலமாக வடக்கு கிழக்கில் இடம் பெற்று வருவதாகக் கூறும் அத்து மீறிய குடியேற்றங்கள் போன்ற விடயங்களுடன் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசுவதென்றும் அக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் சிம்பாப்வேக்கு கடன்

ro-mu.jpgகடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேச நாணய நிதியம் சிம்பாவேவுக்கு கடன் வழங்கவுள்ளது.

சிம்பாப்வே தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் மிகக் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுவரும் நிலையில் அதனை ஈடுகட்டும் நோக்கில் அந்நாட்டுக்கு 50 கோடி டாலர்கள் வழங்கப்படவுள்ளதாக பிபிசி அறிந்துள்ளது.

இந்தப் பணம் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டுமே ஒழிய வேறு திட்டங்களில் செலவழிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் சர்வதேச நாணய நிதியம் கடன் தொகையை வழங்கபோவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

சிம்பாப்வேயின் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டின் மத்திய வங்கியில் நடந்த மோசமான நிதி நிர்வாகமும் ஒரு காரணம் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மிதிவெடி அகற்றும் இயந்திரங்கள் விமான நிலையத்தில் கையேற்பு

demining_tools.jpgவடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை விரைவு படுத்தும் வகையில் செலோவாக்கிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசு 250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மிதிவெடியகற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளது.

இந்த இயந்திரங்களை மிதிவெடியகற்றும் பணிகளுக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் நேற்றுக் காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், சரத்குமார குணரத்ன,  தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவி ருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி ஆகியோர் மேற்படி இயந்திரங்களை பாது காப்பு உயரதிகாரி மேஜர் ஜெனரல் தீபால் அல்விஸிடம் இவ்வியந்திரங்களைக் கையளித்தனர்.

இந்நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவாக மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமெனத் தெரிவித்தார்.

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம் பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அதனை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளுக்காகவே ஐந்து புதிய இயந்திரங்களை அரசாங்கம் செலோவாக்கியாவிலிருந்து கொள்வனவு செய்துள்ளதாகவும் மேலும் சில இயந்தி ரங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார்.

மலையகத்தில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0000rain.jpgமலைய கத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீரோந்தும் பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் காசல்ரீ, மவுசாகலை,கெனியன் போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

அதேவேளை, தொடர்ச்சியான அடைமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயப் பயிர்ச் செய்கையும் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

450 யாழ். மாணவர்கள் ஏ-9 வழியாக கொழும்பு வருகை

bus-2222.jpgகொழும்பில் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து 450 மாணவர்கள் பங்குபற்றவுள்ளளனர்.

இவர்கள் நேற்று ஏ-9 ஊடாக கொழும்பு புறப்பட்டனர்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து 10 பஸ்களில் நேற்றுக் காலை புறப்பட்ட இவர்கள் நேற்று இரவு கொழும்பை வந்தடைய ஏற்பாடாகியிருந்தது.