அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பயங்கரவாத செயலுடன் தொடர்புடைய இருவர் தெனியாயவில் கைது

220909prisoner1.jpgதெனியாய – இத்தகந்த லங்காபேரி தோட்டத்தைச் சேர்ந்த இருவர், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். ஏ. குலரட்னவின் கண்காணிப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மதிவக தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் – 6 மாதத்தில் 2,180 பேர் பலி :உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgஉலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் அடுத்த அவதாரம் தலைதூக்க தயாராகி விட்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக் காய்ச்சலின் இரணடாவது பரிமாணம் இது. இந்த புதிய வகை ஹெச்1 என்1 வைரஸ் காய்ச்சல் உலகின் வட பகுதி நாடுகளில் ஓசைப்படாமல் பரவி வருகிறது. சில நாடுகளில் இந்நோயால் 15 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜப்பானில் மிக கடுமையாகப் பரவிய பன்றிக் காய்ச்சல் குளிர் காலங்களில் உலகின் தென் பகுதி நாடுகளில் வேகமாக பரவியது. இதனால் முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் எடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

இப்போது, வட பகுதியில் உள்ள நாடுகளில் இப்பன்றிக் காய்ச்சல் புதிய பரிமாணம் எடுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல உடல் ஆரோக்கியமுள்ள இளைய நடுத்தர வயதினர் இந்நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக நுரையீரலைத் தாக்கி சுவாச மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது.  வீரியமிக்க இந்தப் புதுவகை பன்றிக் காயச்சலை போக்க மருத்துவ செலவும் அதிகமாகும்.  இந்தப் புதிய வகை நோய் பரவுவது எப்படி என்பது தெரியவில்லை. எனினும், சுகாதாரமற்ற வாழ்க்கை, ஆஸ்துமா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் இக்காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது.

வெப்ப மண்டல நாடுகளில் இது வேகமாகப் பரவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற வைரஸ் காய்ச்சல்களைவிட நான்கு மடங்கு வேகத்துடன் இந்தப் புது வகை பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. பிற வைரஸ் காய்ச்சல்கள் ஆறு மாதங்களில் தாக்கும்.

இது ஆறே நாட்களில் தாக்கி விடுகிறது. இதன் தாக்குதலைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவதற்கு முன் கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 2,180 பேர் இறந்துள்ளனர். இதற்கான தடுப்பூசிகள் தயாராவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான் கூறினார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவேண்டும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

220909malcom_ranjith.gifஇலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம்,  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையையும்  ஏனைய சகல உதவிகளையும் வழங்கவேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனிப்பட்டவகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நட்பு ரீதியான உதவிகள் மூலமே உண்மையான சமாதானத்தைப் பெற்று,  நீதியை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நிலைநாட்ட முடியும் எனவும் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை பேராயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துப் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னரே பேராயர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு பேராயர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மட்டுமன்றி,  ஏனைய அனைத்து விதமான உதவிகளையும் இலங்கைக்கு சர்வதேசம் வழங்கவேண்டும். இனவாதம் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தினால் மக்கள் பாரியளவு பாதிப்புக்களை எதிர்கொண்டனர். மேற்குலக நாடுகளின் நட்பு ரீதியான உதவிகள் மூலமே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒற்றுமை,  கௌரவம்,  தனி மனித சுதந்திரம் போன்றவற்றை உறுதிப்படுத்த முடியும்.

மாறாக,  தடைகளை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றைச் செய்யமுடியாது. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன என்பதனால்,  இந்த வேண்டு கோளை விடுக்கின்றேன் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடல் உள்வாங்கி சேற்றில் சிக்கி இறந்த மீன்கள்

தூத்துக்குடி கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஆயிரக்கணக்கான மீ்ன்கள் கடலோரத்தில் உள்ள சேற்றில் சிக்கி இறந்தன. இந்த மீன்களை மீனவர்கள் அள்ளிச் சென்றனர். தூத்துக்குடி பீச்ரோட்டில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலை கடல்நீர் திடீரென உள்வாங்கியது. நீண்ட தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதி, வற்றிய குளம் போல காட்சி அளித்தது.

பச்சை வயல்வெளி போல காணப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் இல்லாததால் ஏராளமான மீன்கள் சகதியில் சிக்கி கிடந்தன. இதனை கொத்த பறவைகள் குவிந்தன. சகதிக்குள் பாம்புகளும், மீன்களும் அதிக அளவில் சிக்கியிருந்தன. இதைத்தொடர்ந்து பொது மக்கள் சகதியில் சிக்கி கிடந்த மீன்களை சேகரித்தனர். ஏராளமான மீன்களை மீனவர்களும் எடுத்துச் சென்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: போலி முகவர்களை கட்டுப்படுத்த பாராளுமன்றில் சட்டத்திருத்தம்

26parliament.jpgசட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படவிருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் தொடர்பான திருத்தச் சட்ட மூலங்களுக்கு அமையவே இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சட்ட ரீதியாக மற்றும் சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆட்சேர்ப்போர் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்த சட்டமூலம் அமைந்துள்ளது. இந்தத் திருத்த சட்ட மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் போலி முகவர் நிலையங்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடவும் ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கும் வகையிலும் சட்டங்களை மீளதிருத்தியமைத்துள்ளது. இதேவேளை, சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கொள்கைகளின் அடிப்படையில், தகுதியுடைய ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய ஒருவருக்கு 1500 ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையில் தண்டப் பணம் அறவிடப்படும்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் துப்பறிபவர்களின் உதவியுடன் தேவையான சந்தர்ப்பத்தில் அனைத்து முகவர் நிலையங்களையும் அதன் ஆவணங்களையும் சோதனையிட வேலை வாய்ப்பு பணியகம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டுக்கு பணியாட்களை அனுப்புவதில் இலங்கை முதலிடத்தில் திகழ்கின்றது. தற்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் 1.6 மில்லியன் இலங்கைப் பணியாளர்களினால் 35 சதவீதமான அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைக்கின்றது.

தற்போது நாடளாவிய ரீதியில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப் பதனை போலி முகவர் நிலையங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.

வவுனியாவில் மீளக்குடியேறியோருக்கு அடிப்படை வசதிகள் யாவும் இலவசம்

210909va-re-set.jpgவவுனியா தெற்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 320 பேருக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு இலவசமாக அத்தியாவசிய உலர் உணவுகள், மின்சார இணைப்பு, நிவாரண உதவிகள் ஆகியன வழங்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கும் அவர்களது சொந்த காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக கருத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது குறித்து உயர்மட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு வவுனியா வடக்கில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூவின மக்களும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தமது சொந்த காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தமது காணிகளை சுத்திகரித்து பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வமாக இவர்களை குடியேற்றும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்வெட்டி, கோடரி ஆகியன உள்ளிட்ட காணி சுத்திகரிப்பு உபகரணங்களும் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்கான 16 தகரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். வீதிகள், குளங்கள், ஆலயங்கள், பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், வைத்தியசாலைகள், தபாலகங்கள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டிருப்பதுடன் ஒவ்வொருவரது காணிகளுக்கும் நீர் மற்றும் மின் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் இணைப்புக்கள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருப்பதால் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாதெனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இவர்களுடைய சுத்திகரிப்பு பணிகளை ஊக்குவிக்கும் முகமாக ஒரு ஏக்கர் நிலபரப்புக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலரது காணிகள் பற்றைக் காடுகளாக மாறியிருப்பதனால் அவற்றை சுத்திகரிக்க சிறிது காலம் தேவைபடுமென்பதனால் இந்திய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகள் கோரப்பட்டிருந்தன. அந்த வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வரும் 06 மாதகாலத்துக்கு அக்காணிகளைச் சேர்ந்தோருக்கு நிவாரணமாக குறிப்பிட்ட உதவித் தொகையை வழங்க முன்வந்துள்ளது. ணிகளில் தூர்ந்துபோன கிணறுகளை மீள வெட்டி புதுப்பிப்பதற்காக இந்திய அரசாங்கம் உதவுவதாக வாக்குறுதியளித்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

பெரும்போக பயிர்ச் செய்கையை முன்னிட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டமையினால் இவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 06 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம்; சிவல் நிர்வாகத்தை ஏக காலத்தில் முன்னெடுக்க நடவடிக்கை

mullai-ga.jpgகிளி நொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் அதேநேரத்தில் சிவில் நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக முல்லைத்தீவு கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதற்கமைய துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகக் கட்டடங்களை திருத்துவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மாவட்ட நிர்வாகத்தையும் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இந்த மாதம் 25ஆம் திகதியும் அடுத்த மாதம் 15ஆம் திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களை மீளகுடியமர்த்தும் அதே சமயத்தில் சிவில் நிர்வாகமும் தோற்றுவிக்கப்படுமென அரச அதிபர் திருமதி சுகுமார் கூறியுள்ளார்.

மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்பதாகக் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியது பாரிய சவாலான விடயமாகும். அதற்கு முன்பதாக கட்டடங்களின் அமைவிடம் குறித்து அறிந்து அவற்றுக்கான பாதைகளையும் அடையாளம் கண்டு அதன்பின்னர் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரச அதிபர் கூறியுள்ளார்..

கட்டடங்களைத் திருத்துவதற்குத் தேவையான மூலப் பொருள்களைக் கொண்டு வந்துள்ளதுடன், மக்களைக் குடியேற்றியதும் சிவில் நிர்வாகத்தையும் தோற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருவதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைத் திறப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கைச் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அரசாங்கத்துக்கு கடிதம்

210909jail.jpgஇலங் கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மற்றும் அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள் தமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை எவ்வித விசாரணையும் இன்றி தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது குறித்த அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

இது குறித்து தமிழோசையிடம் பேசிய இலங்கை அமைச்சர் புத்திரசிகாமணி, இவர்களின் விவகாரம் தொடர்பாக ஒரு அரசாங்ககுழு ஆராய்ந்து வருவதாகவும் அது எடுக்கும் முடிவுன் அடிப்பையில் இவர்கள் ஒவ்வொருவரது விடயமும் தனித்தனியாக கையாளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரையும் அரசியல் கைதிகள் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியாத போதிலும், விரைவில் இவர்கள் விடயம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

கிழக்கு இலக்கிய பெருவிழா 24, 25 ம் திகதிகளில்

கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழா எதிர்வரும் 24 ம், 25 ம், திகதிகளில் அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா கல்லூரியில் இடம் பெறவுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும், கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இலக்கிய விழாவையொட்டிய ஆய்வரங்கு நிகழ்வு அக்கரைப்பற்று அல்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி (24/9/2009) இடம் பெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் க. அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வரங்கில் “கிழக்கிலங்கையின் நாட்டார் நம்பிக்கைகள்” எனும் தலைப்பில் எம். எஸ். அபுல்ஹஸனும், “கிழக்கிலங்கையின் கூத்து மரபு” எனும் தலைப்பில் நடராஜரத்தினமும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பாடல்கள்” எனும் தலைப்பில் ரமீஸ் அப்துல்லாவும், “கிழக்கிலங்கையின் நாட்டார் பட்டப் பெயர்கள்” – எனும் தலைப்பில் த. மலர்ச் செல்வனும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் பழமொழிகள்” – எனும் தலைப்பில் எஸ்.  முத்துமீரானும், “கிழக்கிலங்கையின் நாட்டார் ஆய்வுகள் அன்றும் இன்றும்” எனும் தலைப்பில் கலாநிதி. செ. யோகராசாவும், “கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள்” எனும் தலைப்பில் ஜலீலும், “கிழக்கிலங்கையின் நாட்டாரியல் வாய்மொழி மொழிகள் எனும் தலைப்பில் பேராசிரியர் சண்முகதாஸ¤ம், “கிழக்கிலங்கை மக்களின் வாழ்வும் வளமும்” எனும் தலைப்பில் எம். ஏ. மஜீத்தும், “கிழக்கிலங்கையின் நாட்டார் அறிவியல் எனும் தலைப்பில் தேனூரானும், “கிழக்கிலங்கையின் கிராமிய சிறு தெய்வ சடங்கு” எனும் தலைப்பில் முருகேசு தயாநிதியும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் நாடகம், நாட்டு கூத்து வளர்ச்சிக்காக காத்திரமான பணியாற்றிவரும் பேராசிரியர் சி. மெளனகுரு தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

இவ்விழாவில் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது பெரும் கலைஞர்களின் விபரம் வருமாறு, அக்கரை மாணிக்கம் (வ. ஞானமாணிக்கம்)  த. தில்லைமுகிலன், ஆ. சிங்கராயர், செல்வி மணிமேகலா கார்த்திகேசு, இராமன் பிச்சை, ஏ. ஆர். ஏ. பிஷ்றுல்ஹாபி, என். மணிவாசகன், ஏ. முஸம்மில் இ. அரசகேசரி, க. தருமரெத்தினம், மா. செல்வராசா, க. செல்வத்தம்பி, பாவலர் சாந்திமுகைதீன் ஆகியோர் நாடகம், நாட்டுக் கூத்து, கவிதை, இலக்கியம், உயர் கல்வி, கைவினை, எழுத்து ஆகிய துறைகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர்.

சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 28 ஆம் திகதியே 3 ஆம் தவணைக்கு திறக்கப்படும்

school-girls.jpgபுனித ரமழான் மாத விடுமுறைக்குப் பின்னர் மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படவிருந்த சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 28 ஆம் திகதியே இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

நோன்புப் பெருநாளைக்கு மறுதினம் ஆரம்பிக்கும் ஆறு நோன்பை நோற்பதற்கு வசதியை கருத்திற்கொண்டு மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முதலமைச்சின் செயலாளர் ஹேரத், பி.குலரத்ன, மாகாணச் செயலாளர் பீ.கொடிதுவக்கு, சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க முஸ்லிம் சமூகத்தின் சமயக் கடமைகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் இப்பாடசாலைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.  இதற்கமைய சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க இப்பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்புக் கடிதங்களை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 4 சனிக்கிழமைகளிலும் இந்தப் பாடசாலைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டுமெனவும் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.