அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சரத் பொன்சேகா குற்றவாளி

sarathfonsekasad.jpg2 ஆவது இராணுவ நீதிமன்றிலும் சரத் பொன்சேகா குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார். சரத் பொன்சேகா மீதான 2 ஆம் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் இடம்பெற்றன. இவ் விசாரணைகளின் பின்னர் அவர் குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார்.

2 ஆம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுகளிகன் கீழ் சரத் பொன்சேகா குற்றவாளியென இனங்காணப்பட்டுள்ளார். அவர் இராணுவத்தில் பணியாற்றிய போது அவரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியிருந்தது.

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 25,000 பேர் மாத்திரமே

இடம் பெயர்ந்த மக்களில் சுமார் 25 ஆயிரம் பேரே மீள்குடியேற்றுவதற்காக எஞ்சியுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

10 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.  இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினமும் தொழிலுக்குச் சென்று மாலையில் திரும்பி வருகின் றனர்.

துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்: 5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்

பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாபதி ஆகியோர் நேற்று பொலிஸ் களப்பிரிவு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றி வளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த 07 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததுடன் அவனது தந்தை காயங்களுக்கு உள்ளானார். சம்பவத்தின்போது தப்பிச் சென்ற கொள்ளைக் கோஷ்டியினரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று 16 ஆம் திகதி மாலை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர் வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வடமாகாண சுகாதார அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

ag-chanra.jpgவட மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் அடுத்த மாத நடுப்பகுதியில் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடைமுறை ப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச் சையும் கிளிநொச்சி நகருக்கு மாற்ற தீர்மானித்ததாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண கல்வி, கலாசார அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.

புலிகளுக்கு பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவையானோருக்கு சுயதொழில் பயிற்சி – டியூ குணசேகர

due-00000.jpgபுலி களுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளானவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளதென அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

‘புலிகளுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் நடமாடும் சேவைக்கு வந்தபோது நான் மிகவும் வேதனைய டைந்தேன்’ என அவர் கூறினார்.

வடக்கில் (மாவட்ட ரீதியாக) மூன்று தினங்கள் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது சுமார் 36 ஆயிரம் பேர் அங்கு வந்து பிரச்சினைகளை முன் வைத்தனர். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் உணரமுடிந்தது எனவும் அமைச்சர் டியூ சுட்டிக்காட்டினார்.

கைதிகள் தினத்தையொட்டிய நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எமது பிரதி அமைச்சர் மற்றும் நானும் மக்களின் நன்மைக்காக சிறைக் கைதிகளாக இருந்துள்ளோம். அதன் காரணமாக சிறையில் நடக்கும் அனைத்து விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். தவறு இழைத்தவர்களுக்கு சட்டரீதியாக நீதிமன்றமே தண்டனை வழங்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் கைதி களை அதிகாரிகள் தண்டிக்க முயற்சி செய்யக் கூடாது. சிறை அதிகாரிகளின் நடத்தைகளை சிறையில் கண்டுள்ளேன்.

யுத்த காலத்தில் பலாத்காரமாக புலிகள் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப் பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. கட்டம் கட்டமாக இவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்து வருகிறோம். நான்காயிரம் பேர்வரை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 7 ஆயிரத்து 500 பேர் புனர்வாழ்வு நிலை யங்களில் உள்ளனர்.

இவர்களில் 708 பேர் நேரடியாக புலிகளின் தலைமைகளுடன் செயல்பட்ட உயர்மட்ட உறுப்பினர்கள். இவர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படுகிறது. அண்மையில் 570 பேருக்கு புனர்வாழ்வு வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தோம். கூடிய விரைவில் மேலும் 2700 பேரை விடுதலை செய்யவுள்ளோம். முப்பது வருட கால யுத்தத்தில் எமது படை வீரர்களும் இன்னல்களை அனுபவித்தனர்.

அதேபோன்று கைதிகள் விடயத்திலும் மிகவும் வேகமாக செயல்படுகிறோம். கைதிகள் தொடர்ந்தும் தவறு செய்து சிறைக்கு வருவதை தடுக்க வேண்டும். சிறை வாழ்வில் மாற்றம் பெற வேண்டும். அரசியல் ரீதியாக செயல்படாது சமூக நலனோடு நாம் செயல்பட்டு வருகிறோம். இவ் விடயத்தில் ஜனாதிபதி பெரும் உதவி செய்து வருகிறார். கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு தேவை. சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கைதிகள் மத்தியில் சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நல்ல முறையில் செயல்படுகிறது.

கனடா சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் திருட்டு

copy.gifகடந்த மாதம் எம்.வி. சன். சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த அகதிகளின் விபரங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளை ரொரன்டோ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தில் இருந்த கணனி ஒன்றும் களவாடப்பட்ட நிலையிலேயே எம்.வி. சன். சீ கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் 492 இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக அப்பேரவை குற்றஞ்சாட்டி உள்ளது. இத்திருட்டு சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது என்றும் இத்தமிழர்கள் குறித்த ஆவணங்கள் மாத்திரமே திருடப்பட்டிருக்கின்றன என்றும் இது ஒரு திட்டமிட்ட திருட்டு வேலை என்றும் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள்வி

இலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தின் போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறையிடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரிட்டனின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.

ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு

unp_logo.jpgஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், சுயாதீனக் குழுவாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் பலர் இணைவரென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தலைவர் தொடர்ந்தும் பிடிவாதமாக இருப்பாரேயானால் மேலும் பல எம்.பிகள் எம்முடன் இணைவர். ஒரு கட்சி என்ற வகையில் இதே நிலைமை மேலும் தொடர முடியாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் யாப்பு சீர்திருத்தம் நடைபெறும் வரை கட்சித் தலைமைக்கு அப்பால் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித்தாய் குத்திக் கொலை; லுணுகலயில் நள்ளிரவில் கொடூரம்

கர்ப்பிணித் தாயொருவரை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பசறை லுணுகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பசறை பங்குவத்தை என்ற இடத்தில் வசித்த ஒரு பிள்ளையின் தாயான எச். என். டி. பியதர்ஷனி வயது (25) என்ற கர்ப்பிணித்தாயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவம் கடந்த சனி இரவு பசறை லுணுகல சூரியகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் லுணுகல பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் லுணுகல சூரியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி வை. எம். நெலும்தெனிய முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது: குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் சேவையாற்றி வருகிறார். சம்பவத்துக்கு முதல் நாள் நண்பர் ஒருவரின் திருமணத்துக்காக விடுமுறையில் வந்து தனது மனைவி பிள்ளைகளுடன் நண்பரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளவென பசறை லுணுகல சூரியகொட பகுதியில் அமைந்து இருந்த நண்பனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இரவு அங்கு இடம்பெற்ற திருமண விருந்து உபசாரத்திலும் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அன்றிரவு திடீரென மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளது. இந்த வேளையில் குறித்த நபர் சமையலறைக்கு தனது கையடக்க தொலைபேசியின் வெளிச்சத்தில் சென்று அங்கிருந்த கத்தியொன்றை எடுத்து வந்து மனைவி உறங்கிகொண்டு இருந்த அறைக்குள் நுழைந்து மனைவியை குத்திப் படுகாயமடைய செய்துள்ளார்.

அதனையடுத்து சற்று நேரத்தில் மீண்டும் மின்சார இணைப்பு கிடைத்தவுடன் அங்கு படுக்கையில் இருந்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக பெண்ணை லுணுகல வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்டப்போது அவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணைகளை மேற்கொள்ள சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு (12) திகதி மாலை எடுத்துவரப்பட்டு மரண பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின் சடலம் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லுணுகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரபல பாடகி சொர்ணலதா காலமானார்

suwarna-latha.jpgஇந்தியா வின் பிரபல பாடகி சொர்ணலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா (37)  சிகிச்சைப் பலனின்றி  சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ணலதா 25 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார்.

இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும். 1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய ‘எவனோ ஒருவன்”, பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய ‘உசிலம் பட்டி பெண்குட்டி’ காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கருத்தம்மா’ படத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘போறாளே பொன்னுத்தாயி….’ எனும் பாடாலை பாடியதற்காக சொர்ணலதா தேசிய விருதும் பெற்றார். இவர் ஏறத்தாழ 7500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

‘தளபதி’ பாடத்தில் ‘ராக்கம்மா கையைத் தட்டு…’, ‘சத்திரியன்’ படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, ‘சின்னத்தம்பி’ படத்தில் ‘போவோமா ஊர்கோலம்’, ‘நீ எங்கே…’, ‘என் ராசவின் மனசிலே’ படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…’, ‘காதலன்’ படத்தில் ‘முக்காலா…’, ‘அலை பாயுதே’ படத்தில் ‘எவனோ ஒருவன்…’, ‘பம்பாய்’ படத்தில் ‘குச்சி குச்சி ராக்கம்மா…’, ‘இந்தியன்’ படத்தில் ‘மாயா மச்சிந்ரா…’ போன்றன. இவர் பாடிய பாடல்களுள் பிரபலமானவை.