அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஐ.நா.வின் பிலிப் அல்ஸ்ரனுக்கு விளக்கம் – “விசேட குழு விபரமாக ஆராய்ந்த பின் முழுமையான பதில்

_philipalston.jpgஎதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்த கருத்துகளுக்கு விளக்கம் அளிக்குமாறு நீதி விசாரணைக்குப் புறம்பானதும் தன்னிச்சையானதுமான மரண தண்டனை விவகாரத்தைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் கோரியிருந்ததற்கு அரசாங்கம் பதிலை அனுப்பியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

பிலிப் அல்ஸ்ரனின் கடிதத்துக்கு பதில் அளிப்பதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார். விசேட அறிக்கையாளருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். அவரின் கடிதத்தின் உள்ளடக்கத்தை நாம் ஆராய்ந்து வருவதாக அவருக்கு விளக்கியுள்ளோம். அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை விசாரிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்திருப்பதாவது ஜெனரல் பொன்சேகாவின் அறிக்கைகள் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. ஆதலால் விசேட அறிக்கையாளரின் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்க அதிகாரிகளுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது. கடிதம் அரசுக்கும் மக்களுக்கும் அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கும் அதிகளவிலான மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆதலால் இந்த விவகாரங்கள் சிலவற்றுக்கு உடனடியாக எம்மால் பதிலளிக்க முடியாது. எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக முன்வைத்துள்ளோம். ஆவணத்தை குழு ஆய்வு செய்த பின்னர் வெளிவிவகார அமைச்சு பதிலை அனுப்பிவைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.ஜெனரல் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக அவரை விசாரணை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது நாட்டின் சட்டத்தை எவராவது மீறினால் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை உண்டு என்றும் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.

முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை குடும்பங்களாக மீள் இணைக்க நடவடிக்கை. சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டம்

புலி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட 144 குடும்பங்களைத் துரிதமாக மீள இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் தயாரத்னாயக்க தெரிவித்தார். பெற்றோர் வேறாகவும் பிள்ளைகள் வேறாகவும் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள் முதல் தடவையாக குடும்பமாக ஒன்றிணைக்கப்பட உள்ளதாகவும் அவர் குநிப்பிட்டார். மீளிணைக்கப்படும் குடும்பங்கள் வவுனியாவில் அமைக்கப்பட உள்ள குடும்பப் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 144 குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அவர்களின் 6 பிள்ளைகள் தமது பெற்றோருடன் தற்காலிக புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ளதோடு 11 பிள்ளைகள் தமது உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.

மேற்படி 144 குடும்பங்களில் பலர் சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லை எனவும் புலிகளின் அனுமதிப்படி மட்டுமே திருமணம் முடித்துள்ளதாகவும் ஆணையாளர் கூநினார். இவர்களுக்கு சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் 11, 544 பேரில் 1, 882 பேர் ஆண்கள், 8,667 பேர் பெண்கள், 590 பேர் சிறுவர்களாவர். இவர்களில் 4,143 பேர் திருமணமானவர்கள் எனவும், 6, 849 பேர் திருமணமாகாதவர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

இவர்களில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே பிரிந்து காணப்படும் 144 குடும்பங்களை ஒரே இடத்தில் தங்கவைத்து புனர்வாழ்வு அளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் கூறினார். அவர்களின் பிள்ளைகளையும் தமது பெற்றோருடன் தங்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘கூட்டமைப்பின் தீர்மானத்தினால் பாதிப்பு ஏற்படப் போவதில்லை’

srisena.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் கூட்டமைப்பின் தீர்மானத்தினால் எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று மூன்று குழுக்களாகப் பிரிந்து காணப்படுகின்றது. பெரும் பிளவுகள் காணப்படுகின்றன.

சம்பந்தன் தலைமையில் ஒருசிலர் சரத் பொன்சேகாவை ஆதரித்த போதும் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கே ஆதரவுகளை வழங்குகின்றனர். இந்த நிலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

”சரத் பொன்சேகா தமிழ் மக்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்து உள்ளார்.” – ரிஎன்ஏ பொன்சேகாவிற்கு ஆதரவு – இரா சம்பந்தன்

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று நண்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் விடயத்தில், உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் அவரை ஆதரிக்கவில்லை எனக்குறிப்பிட்ட அவர், தேர்தலை பகிஷ்கரித்தால், அதன் மூலம் மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.  எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கக்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக அக்கறையுடன் பரிசீலித்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு பல தடவைகள் சந்தித்து பரிசீலித்தது.

தமிழ்ப் பேசும் மக்களின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புத்திஜீவிகள், சிரேஷ்ட பிரஜைகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் கருத்துக்களை அறிவது குறித்து அவர்களுடன் தீவிர கலந்துரையாடல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தியுள்ளது.

புராதன வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ்ப் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொண்டோம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது. ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.

இம்முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தின் செயற்பாடுகளை வைத்தும் அவருடன் நாம் நடத்திய பல கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை வைத்தும் எடுக்கப்பட்டதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டுமக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.

தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.

இரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது. அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.

தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.

அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே உதவும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு தடைவைகள் தடுக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பாரதூரமான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி அதிகார அமைப்புக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் – ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இத்துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ்ப் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.

ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

அமரர் சந்திரசேகரனுக்கு சபையில் நேற்று அனுதாபம்

chandrasekaran.jpgமலையக மக்கள் முன்னணியின் தலைவரும், காலஞ்சென்ற அமைச்சருமான சந்திரசேகரனின் மறைவையொட்டி பாராளுமன்றத்தில் நேற்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டாரவின் தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோது சபையோரின் சார்பில் சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார்.

உரிய காலத்தில் அனுதாப பிரேரணை சபைக்கு கொண்டு வரப்படும் என்றும் சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.

பொன்சேகாவின் ஆயுத ஊழல் ஆவணங்கள் சபையில் சமர்ப்பிப்பு – அவுஸ்திரேலிய நிறுவனமொன்றின் பெயரில் பதிவு செய்திருப்பது அம்பலம்

parliament.jpgசரத் பொன்சேகாவின் ஆயுதக் கொள்வனவு ஊழல் தொடர்பான ஆவணங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று இவற்றை சமர்ப்பித்தார். இது தொடர்பாக அமைச்சர்கள் ராஜித சேனாரட்ன, மஹிந்தானந்த அளுத்கமகே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. ஆகியோர் உரையாற்றினர்.

அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட “பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ்” என்ற நிறுவனம் என காண்பித்து டெக்சாசில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா போலி நிறுவனம் ஒன்றை நடத்திவந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அமைச்சர்கள் தங்களது உரையின் போது இதனை சுட்டிக்காட்டினர்.

சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த “ஹைக்கோப் இன்டர் நெஷனல்” நிறுவனமும் டெக்சாசில் பதிவு செய்யப்பட்டிருக்கும் “போனியோ டிபென்ஸ்” நிறுவனமும் ஒரே நிறுவனம் என இவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் உரையாற்றும் போது கூறியதாவது:-

ஆயுதக் கொள்வனவு தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நிறுவனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு குறைந்தது மூன்று வருடங்களாவது சென்ற பின்னரே ஆயுதக் கொள்வனவில் ஈடுபட முடியும்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ‘ஹைக்கோப் நிறுவனத்திற்கு இவ்வாறான கால வரையறை இருந்திருக்கவில்லை என்பதால் அவுஸ்தி ரேலியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமான “பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ்” நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி இருப்பதை அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரத்னவினால் இந்த அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பெயர் போலியாக பயன்படுத்தப்பட்டு டெக்ஸாசில் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. சரத் பொன்சேகாவின் “கிரீன் கார்ட்” விண்ணப்பப்பத்திரத்தின் முகவரியும், ஹைக்கோப் நிறுவனம் பதிவு செய்துள்ள முகவரியும் ஒரே முகவரியாக இருந்தமை தெரியவந்துள்ளது.

எனினும் அவுஸ்திரேலியாவின் போனியோ டிபென்ஸ் நிறுவனம் தொடர்பான பெயர் போலியாக பயன்படு த்தப்பட்டிருந்தது. சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலக்கரத்னவினால் பதிவு செய்யப்பட்டிருந்த போலி நிறுவனம் சரத் பொன்சேகாவின் மகளான கப்சராவின் தோழி ஒருவரின் முகவரியை பயன்படுத்தி இருந்தமை தொடர்பான ஆவணங்கள் சபையில் முன் வைக்கப்பட்டன.

பற்றுச் சீட்டுக்கள், ஆவணங்கள் ஆயுதக் கொள்வனவுக்கான இலக்கங்கள், வங்கிக் கணக்குகளின் விபரங்கள் என்பனவற்றையும் சபையில் காண்பித்து அமைச்சர்கள் உரை நிகழ்த்தினர்.

நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் கிளிநொச்சியில் வாக்களிக்க ஏற்பாடு

election_box.jpgஇடம் பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்களும், சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேறியவர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மீளக் குடியேறிய மக்களும் நிவாரணக் கிராம மக்களும் ஒரே இடத்தில் வாக்களிப்பதற்கு வசதியாக 95 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும். இதில் கொத்தணி வாக்குச் சாவடிகளும் உள்ளடங்குகின்றன. நிவாரணக் கிராமங்களுக்கென 70 கொத்தணி வாக்களிப்புச் சாவடிகள் அமைக்கப்படும். பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி ஆகிய இடங்களிலேயே வாக்குச்சாவடிகள் நிறுவப்படுகின்றன.

ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்!!!

Sobasakthyதனது எழுத்துக்களால் ஊடகங்களில் அறியப்பட்ட ஐரோப்பிய எழுத்தாளர் சோபாசக்தி தற்போது முற்றிலும் வேறுபட்ட காரணத்திற்காக ஊடகங்களில் இடம்பிடித்துள்ளார். தனுஷ்கோடியில் ‘செங்கடல்’ ஆவணப் படம் எடுக்கும் குழுவினரிடையே நடந்த தகராறு தொடர்பாக கதாசிரியர் சோபாசக்தியை அப்பகுதிப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய எழுத்துலகில் நன்கு அறிமுகமான சோபா சக்தி தமிழக எழுத்துலகிலும் அறியப்பட்டவர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸை வாழ்விடமாகக் கொண்ட இவர் கமராமென் தீபக் என்பவரைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டார். விசாரணைகளைத் தொடர்ந்து இவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இது பற்றித் தெரியவருவதாவது, கடந்த 20 நாட்களாக இலங்கை அகதிகள் சம்பந்தபட்ட செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் இடம்பெற்று வந்தது. ஜனவரி 2 இரவு செங்கடல் படத்தின் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகியோரிடம் உதவி கெமிராமேன்கள் தீபக், கனி, வெங்கட் உட்பட 3 கெமிராமேன்கள் ஊதியம் கேட்டதாகவும் ஊதியம் வழங்காமல் அவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. அதனால் ஆத்திரமடைந்த உதவி கெமராமன்கள் கனி, வெங்கட் ஆகியோர் படம் பதிவு செய்யப்பட்ட கேசட்டை எடுத்துக்கொண்டு சென்னை சென்றுவிட்டார்கள். இதையடுத்து மானேஜர்கள் வெங்கட், தனுஷ், கதாசிரியர் சோபாசக்தி ஆகியோர் தீபக்கை தாக்கி கேசட்டை கேட்டதாக கூறபடுகிறது.

இச்சம்பவம் குறித்து ஜனவரி 3 மதியம் ராமேசுவரம் கோவில் பொலீஸ் நிலையத்தில் தீபக் புகார் செய்தார். இப்புகார் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட பொலீசாரிடம் படத்தின் டைரக்டர் லீனா மணிமேகலை தகராறு செய்ததாகவும் அதை போலீஸ்காரர் நாகராஜ் என்பவர் செல்போன் மூலம் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அடைந்த லீனா மணிமேகலை போலீஸ்காரர் கையில் இருந்த செல்போனை பிடுங்கியதாக கூறபடுகிறது.

இறுதியில் பொலிசார் தீபக்கை தாக்கியது தொடர்பில் கதாசிரியர் ஷோபாசக்தியை கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கெமராமேனை தாக்கியதாக கூறபடும் மானேஜர்கள் வெங்கட், தனுஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொலிஸாரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அல்லது ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகள் தொடர்பாக கதாசிரியர் எழுத்தாளர் சோபாசக்தி எவ்வித கருத்தையும் தனது இணையத்தில் பதிவு செய்யவில்லை. அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசு அவசரகால சட்டத்தை நீடிக்காது – சபையில் நேற்று பிரதமர் அறிவிப்பு

pm.jpgகுறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசர கால சட்டத்தை நீடிக்கமாட்டாது. அவ்வாறான தேவைகள் அரசுக்கு இல்லை என்று பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரத்னசிறி விக்ரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதம் வலுப்பெற வேண்டுமென விரும்புகின்றவர்கள் மட்டுமே அவசர கால சட்டத்தை எதிர்ப்பார்கள். உள்நாட்டு வெளிநாட்டு சதிகளின் சதிவேலைக்கு பதிலளிக்க அவசர கால சட்டம் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக் காலை கூடியபோது, அவசரகால சட்ட நீடிப்புக்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-2005 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி அமர்வின் போதும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஒருவர் பயணம் ஒன்றை ஆரம்பிப்பதை விட அதனை முடிப்பது தான் மிக முக்கியமானது. முடிவில் தான் பெறுபேறு தங்கியுள்ளது. எமது அரசாங்கம் அன்று அடிப்படை நோக்கம் ஒன்றை வைத்துத் தான் எமது பணிகளை ஆரம்பித்தது. அது தான் பயங்கரவாதத்திற்கு முற்றிப்புள்ளி வைத்து மக்களுக்கு மீண்டும் சமாதானத்தை பெற்றுக் கொடுப்பதாகும். இன்று அது நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் தற்பொழுது நிம் மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்ல தென்பகுதி மக்களும் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஏ-9 வீதி ஊடாக தடைகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வீதி ஊடாக தற்பொழுது சென்று வருகின்றனர். மீனவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அந்த மக்களின் வாழ்வாதாரம் சிறந்த முறையில் காணப்படுகின்றது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தற்பொழுது மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர். புனர்வாழ்வும் புத்துணர்ச்சியும் நிறைந்த வருடமாக இந்த வருடம் உருவாகியுள்ளது. எமது நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நாம் இன்னும் முழுமையாக அடையவில்லை.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அழுத்தங்கள் காணப்படுகின்றது. அவசர கால சட்டம் நீடிப்பானது நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற வெற்றிக்கு காரணமாகவும் அமைந்திருந்தது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தப்போவதுமில்லை. அதற்காக நீடிக்கவும் மாட்டோம். அவ்வாறான தேவைகள் எமக்கு இல்லை.

பாதுகாப்புப் படையினர் மீட்டெடுக்க ப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் மீட்டெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆயுதம் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் படையினர் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 3 சதாப்தங்களுக்கு பின்னர் மக்களுக்கு விடிவு கிடைத்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டம் 79  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  அதனை எதிர்த்து 18 வாக்குகள் அளிக்கப்பட்டன.
 
ஆளும்கட்சிக்கு ஆதரவாக 97  வாக்குகள் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் எதிர்த்து வாக்களித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து  79  மேலதிக வாக்குகளால் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த வாக்காளர் விபரங்களை வழங்க ஆணையர் முடிவு

Commissioner of Elections Dayananda Dissanayakeமுகாம்களில் உள்ள இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களின் விபரங்களை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களுக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் நேற்று சந்தித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் பிரசார கட்அவுட் போஸ்டர் மற்றும் பதாகைகை அகற்றுவதற்கு நாளை வியாழக்கிழமை வரை காலக்கெடு விதிப்பதென்றும் இக்கூட்டத்தில் முடிவாகியது. இதற்கு முன்னர் இவற்றை அகற்றுவதற்கு காலக்கெடு விதித்திருந்தபோதும் பொலிஸாரால் அவற்றை முற்றாக அகற்ற முடியாமற்போனமை குறிப்பிடத்தக்கது.