அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சந்தர்ப்பத்திற்கேற்றவாறு முடிவெடுக்கத் தெரியாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திண்டாடுகிறது

வட,கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கிருந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்குமே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதனைப் பேரம் பேசும் சக்தியாக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கட்டிக்காத்தார். எனினும் இப்போது அது திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுக்கத் தெரியாத நிலையில், அக்கட்சி திண்டாடுகின்றது. மர்ஹும் அஷ்ரப்பின் தலைமைத்துவத்திற்குப் பின் அதன் போக்கே மாறியுள்ளது.

இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் வீடமைப்பு அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். மக்கள் தோட்ட முகாமைத்துவப் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.அம்ஜித் தலைமையில் மருதமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீடமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.உவைஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய ஆலோசகர் இசட், ஏ.எச்.ரஹ்மான், முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா, முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பேரியல்; யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திய பின்னரும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமூகத்தைக் காட்டிக் கொடுத்து சுயநலம் கருதிய நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

79 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று விடுதலை; அடுத்த வாரம் மேலும் 200 பேர் விடுதலையாவர்

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரத்திற்குள் மேலும் 200 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 பேரில் 17 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளதுடன் 13 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேர் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 200 பேரை அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சும், சட்டமா அதிபர் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் வவுனியா, தெல்லிப்பழை, வெலிக்கந்த ஆகிய இடங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 11 ஆயிரம் பேரில் 700 பேர் அண்மையில் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றங்கள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை தொடர்பாக ஆராயவென சட்டமா அதிபர் திணைக்களம் 10 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்குவது என்றாலும் கூட நன்கு ஆராய்ந்தே விடுதலைப் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். யுத்த காலப் பகுதிகளில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டார்கள். இவ்விடயத்தில் அமைச்சு மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்த பின்னரும் கூட வெறுமனே தடுத்து வைத்திருப்பதில் பலனில்லை. எவ்விதத்திலேயேனும் அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சரணடைந்தவர்கள் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை வெறுமனே வெளி யில் விடாமல் அவர்களது பெற்றோருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்கவும், சுயதொழில் செய்வதற்கு தேவையான உதவிகளையும் பெற்றோரிடம் கலந்தா லோசித்து பெற்றுக் கொடுக்கவுள்ளோம். எனவே இவ்விடயத்தில் எவரும் அரசியல் இலாபம் தேடக்கூடாது. அரசாங்கமும் அமைச்சும் இளைஞர்களின் விடுதலை தொடர்பான தேவையான சகல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க ஏற்பாடு

தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள், அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணை க்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

இடம்பெயர்ந்தவர்கள் உட்பட சகலருக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பு -தபால் மாஅதிபர் அறிவிப்பு

election_box.jpgஇடம் பெயர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நேற்று (21) வரை 93% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தபால் மாஅதிபர் எம். கே. பி. திசாநாயக்க தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு ள்ளதாகக் கூறிய தபால் மா அதிபர், முகவரி தவறின் காரணமாக வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று தபால் மாஅதிபர் கூறினார்.

2008ஆம் ஆண்டில் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறவில்லையாயின் அதற்கு தபால் திணைக்களம் பொறுப்பல்ல. அது வாக்காளர்களின் தவறாகும். வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கிடைக்கப்பெற்ற அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படும் என்றும் தபால் மாஅதிபர் கூறினார்.

அதேவேளை வட மாகாணத்திற்கு வாக்காளர் அட்டைகள் தாமதமாகக் கிடைக்கப்பெற்றதால், அவற்றை விநியோகிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக வட மாகாண பிரதித் தபால் மாஅதிபர் வி. குமரகுரு தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. நிவாரணக் கிராமங்களில் தபாலகங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் குமரகுரு தெரிவித்தார். அதேநேரம் மக்கள் மீளக்குடியேறியுள்ள பகுதிகளிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கிறிஸ்மஸ்தீவில் 11 இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமான கிறிஸ்மஸ் தீவில் குழப்பம் விளைவித்ததாக 11 இலங்கை அகதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் 21க்கும் 36க்கும் இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுத கையாளல், குழப்பம் விளைவித்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு அகதிகள் பராமரிப்பு குழுமத்தின் உறுப்பினரான இயன் ரின்டோல் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மோதலில் முகாமுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஸ்ஜிதுகளை வாக்கு கேட்கும் மேடைகளாக்க வேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpg‘மஸ்ஜி துகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என  நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட. ‘மஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இன்று ஹைட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgநில நடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட ஹைட்டி தீவில், இன்று 6.1 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இன்று மாலை 4.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி காலை 6.03) தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் இருந்து வடமேற்கே 35 மைல் தொலைவில், பூமிக்கடியில் 13.7 கி.மீ ஆழத்தில் பின்அதிர்வு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

haitibuidling-pd.jpgஅதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இதனால் பீதியடைந்து தெருக்கள், சமவெளிப் பகுதிகளுக்கு வந்ததாகவும், பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹைட்டியில் உயிரிழந்தனர். உலகளவில் 2வது மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்ததுடன், தங்கள் நாட்டு மீட்புக்குழுவினரை ஹைட்டி அனுப்பியுள்ள நிலையில் சக்தி வாய்ந்த பின்அதிர்வு இன்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன் – ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

sampanthar.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

election_box.jpgஎதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களுக்கு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கின்றார்.இந்தத் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு மிக நீளமானதாகிக் காணப்படலாம். வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவசரப்படாமல் வாக்குச்சீட்டை நன்கு வாசித்த பின்னர் தாம் தெரிவு செய்யும் வேட்பாளருக்குத் தமது புள்ளடியை அல்லது ஒன்று (1) இலக்கமிடலாம். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு அவசியமெனக் கருதுமிடத்து இரண்டாவது, மூன்றாவது தெரிவையும் அடையாளமிட முடியும்.

ஒருவரை மட்டும் தெரிவு செய்வதானால் X புள்ளடியை இடமுடியும்.

மூவருக்கு அடையாளமிட விரும்பினால் முதலாவது தெரிவுக்கு (1) என்று அடையாளமிட்ட பின்னர் இரண்டாவது, மூன்றாவது தெரிவுகளுக்கு முறையே 2,3 என அடையாளமிடமுடியும்.ஒரு வாக்குச்சீட்டில் ஒருவரைத் தெரிவு செய்து X புள்ளடி அல்லது (1) ஒன்று என அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு செல்லுபடியானதாகும்.

முதலாவது தெரிவைத் தேர்ந்தெடுக்காமல் 2,3 என மட்டும் அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டொன்றை அடையாளமிட வேண்டிய நடைமுறை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

3:1) “1” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் ஒரு வேட்பாளருக்குத் தமது வாக்கை அளிக்க முடியும்.

3:2 )”2”என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது இரண்டாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

3:3 ) “3” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது மூன்றாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

04: வாக்காளர் ஒருவர் தமது வாக்கை ஒரு வேட்பாளருக்கு மட்டும் அளிக்க விரும்பினால். “1”  என்பதற்குப் பதிலாக “புள்ளடி X இடப்பட்டிருந்தாலும் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியாகும்.

04:1 முதலாவது தெரிவுக்குப் பின்னர் 2,3 அடையாளமிட்டு இரண்டாம், மூன்றாம் தெரிவை அடையாளமிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

04:2 எவருக்கும் வாக்களிக்கப்படாத வாக்குச்சீட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட X புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டும் முதலாவது தெரிவில்லாத 2 ஆம் 3 ஆம் தெரிவை அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டும் முற்றாக நிராகரிக்கப்படும்.

எனவே வாக்காளர்கள் முதலாவது தெரிவை அறிவித்த பின்னர் தாம் விரும்பினால் 2 ஆம், 3 ஆம் தெரிவை அடையாளமிடமுடியும். அது கட்டாயமாக 2,3 என்று குறிப்பிடப்படவேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

ஓஷியானிக் கப்பல் அகதிகள்; 13 இலங்கையரை ஏற்க நியூசிலாந்து இணக்கம்

இந்தோனேசியாவின் தனஜங் பினாங் துறைமுகத்தில் ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 78 பேரில் 13 பேரை ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து குடியேற்ற அமைச்சர் ஜொனாத்தன் கோலமனின் செயலகம் இதை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓஷியானிக் வைக்கிங் கப்பலை இந்தோனேசியா வழிமறித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 78 இலங்கை தமிழ் அகதிகளில் 28 பேரை அமெரிக்காவும், 13 பேரை கனடாவும் 3 பேரை நோர்வேயும் ஏற்பதற்கு இணங்கியிருந்தன. அவுஸ்திரேலியா 22 பேரை அகதிகளாக தமது நாட்டில் குடியமர அனுமதிக்கவுள்ளது. இந்த நிலையில் எஞ்சியிருந்த 13 பேரையும் ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

இன்று இந்த 13 பேரும் நியூசிலாந்தில் குடியேறுவது பற்றிய விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் புறப்படவுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.