இலங்கையில் பயங்கரவாதத்திற்கெதிரான கடைசிகட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாக முன்னால் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஐ நா வின் உத்தியோகபூர்வ கருத்தை பிரதிபலிக்காது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மிகக்கூடுதலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கோடன் வைஸ் தெரிவித்திருக்கும் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
முன்னால் ஐ.நா. பேச்சாளர் கோடன் வைஸ் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமூகங்களுக்கிடையே சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் ஒரு சமாதானமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஐ.நா. தொடர்ந்தும் உதவி அளிக்கும் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.நா. பேச்சாளரது கூற்றுக்களை முற்றாக மறுத்துள்ள இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வைஸின் கூற்று போலியானதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும் என்பதால் அதுபற்றி யாரும் கரிசனைக் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வைஸ் புதிதாக முன்வைத்திருக்கும் இக்குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானதாகும். இதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. அவர் அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கின்றார் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.
கடைசிகட்ட போரில் சிவிலியன்கள் உயிரிழப்பு தொடர்பாக திடீரென கருத்துத் தெரிவித்திக்கும் அவரது கூற்றுக்குப் பின்னால் உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஹலுகல்ல இத்தகையதொரு கூற்றை தெரிவிக்க ஏன் எட்டு மாதங்கள் எடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்