அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா காலமானார்

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா தனது 72 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலமானார்.

1965 ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலைப் பாராளுமன்ற உறுப் பினராகத் தனது அரசியல் பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் முன்னைய அமைச்சரவையில் துணை வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

புனர்வாழ்வு பெறுவோர் விபரங்கள் – www.bcgrsrilanka.com இணையத்தில்

தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவோர் பற்றிய விபரங் களை மக்கள் அறிந்து கொள்வதற்கான இணையத்தளம் யாழ்ப்பாண செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் முகவரி www.bcgrsrilanka.com என்பதாகும். இந்த இணையத்தளம் அதிகளவு ஊடகவிய லாளர்களுக்கு பயனுடையதாக விருக்குமென கருதப்படுகிறது.

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம் – 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

tree.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை

கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும்.

மேலும் அவர்களது நிரந்தர வதிவுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்படலாமென்றும், அதுமட்டுமின்றி அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் 5 வருடங்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாதென்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை கனடாவுக்குள் அழைத்துச் செல்பவர்களுக்கும் குறைந்தபட்சம் 10 வருட காலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கனேடிய அமைச்சர் விக்டோல்ஸ்; கடந்த வருடங்களில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் கனடா வருகை அதிகரித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் அகதிகளுக்கு கனடா வழங்கிவரும் சலுகையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன.இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் ஆட்கடத்தல் காரர்களுக்கும், சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 492 இலங்கையர்கள் எம். வி. சன்.  கப்பல் மூலம் சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்து, தமக்குப் புகலிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்தே, கனடா சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.

இதன் ஒரு அங்கமாக ஆட்கடத்தல்காரர்களுக்கும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குடிவரவுச் சட்டம் நேற்று முன்தினம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பாரியளவில் ஆதரவளிக்கும் நாடாகக் கனடா உள்ளது. ஆனால் இந்தச் சலுகையை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படாது எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா நாடுகளின் தெரிவில் இலங்கைக்கு முதலிடம்.

சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவு ஒன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதியுடனான அரசியல் நிரந்தரத் தன்மை நிலவுவதே இதற்கான காரணம் என சஞ்சிகை தெரிவிக்கின்றது.

இதேவேளை நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வருடம் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என எதிர்பார்க்கப்பட்ட தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக ஆசிய பசுபிக் சுற்றுலா சங்கம் உறுதி செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

due-00000.jpgமக்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுகின்றது. இந் நிவாரணம், யுத்தத்தால் மரணமடைந்த ஒரு பிரிவினருக்கும், காயமடைந்து அங்க குறைபாடுடையவர்களுக்கு ஒரு பிரிவாகவும், யுத்தத்தால் சொத்திழப்படைந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினருக்காகவும் 100 பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக இருபத்தைந்து மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.அவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவித்து வருகின்றோம். இது வரை 4860பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்ட முகாமில் 300 பேர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்.

இவர்களுடன் தடுப்பு முகாமில் இருந்த பெண்கள் வயோதிபர்கள், சிறுவர்கள் அங்கவீனமானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்பவர்களில் 1000 பேர் வரை சட்ட நியதிக்கமைய விசாரணைக்குட்படுத்தப்படுவர் அவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் நிரபராதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவர்களும் விடுக்கப்படுவர். தடுப்பு முகாமில் இருப்பவர்களில் 10 சதவீதத்தினர் பாடசாலை செல்லாதவர்கள், எழுபது சத விகிதத்தினர் 3, 5, 8 ம் ஆண்டு வரை கற்றவர்கள். இவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியையும் கல்வியையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. வட பகுதி மக்கள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அநேகமானவராவர். 80 சத வீதமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அமைச்சு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது என்றார்.

உடன் உணவு, பானங்கள் பாடசாலைகளில் தடை

அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்கள் என்பவற்றில் இருக்கும் சிற்றுண்டிச் சாலைகளில் உடன் உணவு (Fast Food)  இனிப்பு பானங்கள் ஆகியவற்றின் விற்பனை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட சுற்று நிரூபம் உடனடியாக சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன நேற்று தெரிவித்தார். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் உடன் உணவு (Fast Food) இனிப்பு பானங்கள் என்பவற்றின் விற்பனை உடனடியாகத் தடை செய்யப்படவிருக்கின்றது.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களும், பானங்களும் மாத்திரமே பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் தொடர்பாகவும், அவற்றின் தரம் குறித்தும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார அதிகாரிகள் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் எலும்பு பலவீனம், நீரிழிவு, கண் நோய்கள், உடல் பருமன் உட்பட பல தொற்றா நோய்கள் பெரிதும் அதி கரித்துள்ளன. இது சுகாதாரத் துறையினரின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கைக்குப் பங்களிப்பு செய் யவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வேளாவேளைக்கு காலை உணவை உட்கொள்ளாமல் உடன் உணவு (Fast Food) வகைகளையும், இனிப்பு பானங்களையும் உட்கொள்வதற்கு பெரும்பாலான மாணவர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மத்தியில் போஷாக்கின்மையும், நீரிழிவும், உடல் பருமனும் பெரிதும் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போஷாக்கு மிக்க உள்ளூர் உணவுப் பொருட்களை உண்பதற்கு எமது மாணவ சமூகத்தைப் பழக்கிக்கொள்ளும் போது நோய்கள் பலவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத் துக்கொள்ள முடியுமென பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் வேண்டும்

president.jpgபொரு ளாதார அபிவிருத்திக்கான இலக்கை வெற்றிகொள்வதற்கு மக்களின் சேவகர்களாக அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மாறுவதுடன் அதற்கான சிந்தனை மாற்றம் அவர்களிடம் பிறக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சமூக ரீதியான மாற்றமொன்றிற்காக சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசிய மெனத் தெரிவித்த ஜனாதிபதி; ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அது உறுதுணையாகும் எனவும் குறிப்பிட்டார்.

பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்புள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே சிறந்த மனப்பான்மையை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தியுடன் சமூக அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :- பிரதமர் டி. எம். ஜயரட்ன பிரதமர் செயலகத்தினூடாக ஆரம்பித்துள்ள சிந்தனை மாற்றத்திற்கான இவ்வேலைத் திட்டத்தை பாராட்டுவதுடன் நாடளாவிய ரீதியில் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவத்தையும் அவரே வழங்குவதும் சிறப்பம்சமாகும்.

கொழும்பு நகரில் குப்பை கூளங்களை அழிக்க முடியுமா என்ற பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற சிந்தனை மாற்றத்தின் காரணமாக மக்கள் தற்போது வீதிகளில் குப்பை கூளங்களை போடுவதில்லை. அவர்கள் தற்போது பழக்கப்பட்டு விட்டனர். நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மதிக்காது செயற்பட இடமளிக்க முடியாது. சட்டம் சகலருக்கும் சமமானது. அதற்கான மதிப்பினை சகலரும் வழங்க வேண்டும்.

சமூக சிந்தனை மாற்றமொன்றை எம்மால் மேற்கொள்ள முடியும். முன்னர் அரச அதிகாரிகள் மக்களுக்கு அனுப்பும் கடிதத்தில் தம்மை மக்கள் சேவகராகவே இனங்காட்டி வந்தனர். இன்று அமைச்சர்களிடையோ அதிகாரிகளிடையோ அப்பழக்கம் இல்லாது அருகிவிட்டது. 12 இலட்சம் அரச ஊழியர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் நாடு முன்னேறும். தற்போது முழு நாட்டிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக்க எம்மால் முடிந்துள்ளது.

அதனை மேலும் இரண்டு மடங்குகளாக் குவதே எமது இலக்கு. சமூக ரீதியான மாற்றம் தேவை. அதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். குடும்பம், பாடசாலை மட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு

வெளி நாடுகளில் தொழில் புரியும் பல்வேறு துறைசார்ந்தவர்களையும் இணையத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்தி புலம்பெயர்ந்து தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை வரலாற்றில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த தாம் தயாராகிவருவதாக தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில்தொழில் புரியும் இலங்கையர்களை இணையத்தினூடாக ஒன்றிணைத்துப் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள தொழில் முகவர்கள் இலங்கைத் தூதரகங்கள், இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இந்தத் திட்டத்தின் மூலம் இணைய வலையமைப்புக்குள் உள்ளடக்கப்படவுள்ளன.

இந்த வலையமைப்பானது மேலும் விரிவாக்கப்பட்டு பொறுப்புக் கூறவேண்டிய சகல நிறுவனங்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற முறை ஊடாக தகவல் வழங்கவும் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளிலுள்ள தொழில் வழங்குநர் தமக்குத் தேவையான தொழிலாளி பற்றி அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவரகம் இணைய வலையமைப்பினூடாக அந்நாட்டு இலங்கை தூதரகத்திற்கு அதுபற்றி அறிவிக்கும்.

பின்னர் இலங்கைத் தூதரகம் அதுதொடர்பாக ஆராய்ந்து தொழில் அனுமதியினைப் பெற்றுக்கொடுப்பதுடன், இது பற்றிய தகவலினை இணையத்தினூடாக இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கும், இலங்கை பணியகத்திற்கும் அனுப்பி வைக்கும்.

அத்துடன் குறித்த சேவை வழங்குநரின் வருமானம், அடையாள அட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் வேலை செய்யும் வீட்டிலுள்ள குடும்பத்தின் தகவல்களையும் இணையமயப்படுத்தல் வேண்டும். இந்த முறைமூலம் தற்போது இடைத்தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தவிர்க்க முடியுமெனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சேவையை தனி அலைவரிசையாக மாற்ற நடவடிக்கை – அஸ்வர் எம்.பி. தெரிவிப்பு

aswar.jpgவானொலிக்கு வருமானத்தை அதிக மாக ஈட்டிக்கொடுக்கும் “முஸ்லிம் சேவை”யை தனி அலைவரிசையாக மாற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க விருப்பம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற கவுன்சில் உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் முஸ்லிம் இல்லங்கள் தோறும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பிரபல்யம் பெற்றுள்ளது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இந்த சேவையை விரும்பிக் கேட்கி ன்றனர். எனவே, முஸ்லிம்களுக்கென தனி அலைவரிசை உருவாக்கப்படுவது உண்மையில் வரவேற்கத்தக்கதென்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

இந்த யோசனை பற்றிய மகஜர் ஒன்றும் தலைவர் ஹட்சனிடம் கையளிக்கப்பட்டது.