அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எதிர்கால சவாலை வெற்றிக்கொள்ள இத்தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம் – பிரதமர் மேதினச் செய்தி

deemu.jpgமூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்திலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரமானதும் அடிமையற்றதுமான நாட்டில் கொண்டாடப்படும் இந்த உலகத் தொழிலாளர் தினத்தை, எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான திடசங்கற்பத்தை உழைக்கும் மக்களின் மனங்களில் பதியச் செய்யும் தினமாகக் கருதுவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன விடுத்துள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சாலையிலும் விவசாய மண்ணிலும் மற்றம் கடலிலும் உழைத்து வியர்வை சிந்தும் சகல ஊழியர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்கும் சவாலே இன்று எம்முன் உள்ளது.

இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களுடன் பங்களிப்புச் செய்வது எனது எதிர்பார்ப்பாகும். நமது நாடு நெருக்கடியைச் சந்தித்த சகல சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியும், சகல இடையூறுகளையும் சகித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் உலகுக்கு வெளிப்படுத்திய முன்மாதிரிக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்”, என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், உழைக்கும் மக்களின் ஆதரவு முன்னரைவிட தற்போது கூடுதலாக அவசியமாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளைஞர் விவகார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் குழுத் தலைவருமான டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில், மேதினத்தில் உள்ள வரலாற்றைப் போன்று சமூக, அரசியல் முக்கியத்துவமான மே முத லாந்திகதியொன்று இலங்கை மக்களுக்குக் கிட்டியுள்ளதென்றும் 30 வருடங்களின் பின்னர் முழு இலங்கையிலும் உழைக்கும் வர்க்கம் இந்தத் தடவையே உண்மையான கெளரவத்துடன் அனுஷ்டிக்கிறார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க அடுத்தகட்ட நடவடிக்கை – ஆணையிறவில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்

gotabaya.jpgபுலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரனின் கொள்கையை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கை ஆணையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை ராஜதந்திர மட்டத்தில் முறியடிக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்காக முயற்சி மற்றும் உலகத் தமிழர் பேரவை, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு என்பவற்றின் ஊடாகத்தான் பிரபாகரனின் நிலைப்பாட்டை முன்னெடுக்க ஒரு சிறிய குழு முயற்சித்து வருகிறது.

புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் இந்த வலையமைப்பை முறியடித்து இல்லாதொழிப்பதற்கும் எமது வெளிநாட்டமைச்சுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது. எனவே, வெளிநாட்டமைச்சின் ஊடாகவும்,  இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேஷிய நாட்டுடன் நாம் புலனாய்வுத்துறையுடனும்,  இராஜதந்திர உறவின் ஊடாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாகத்தான் அந்த நாட்டிலிருந்து சில பயங்கரவாதிகளை கைது செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தார். இராஜதந்திர மட்டத்தில் தமிழ் மக்களுக்கு பொய்ப்பிரசாரம் தொடர்பாக முறியடித்து வரும் பட்சத்தில்தான் புலம்பெயர்ந்தவர்கள் இன்று இலங்கையில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளனர். இது எமக்கு நல்ல உதாரணமாகக் கொள்ள முடிகிறது.

சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் எமக்கு வெற்றியை தருகிறது. இதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் புலனாய்வுத்துறையை பலப்படுத்தி இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலங்களிலும் சிறுசிறு குழுக்களாக அமைப்புகளாக ஆரம்பித்துத்தான் புலிகள் பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்தனர். அதுபோன்ற ஒருநிலையை மீண்டும் ஏற்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை தொழில் உரிமையை பாதுகாக்கவும் ஏற்பாடு – அமைச்சர் லொக்குகே

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.  தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.  அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று மே தினம்; பொலிஸ், அதிரடிப்படை பாதுகாப்பு கொழும்பில் 11 கூட்டங்கள்; 6 ஊர்வலங்கள்;

2010-may-day.jpgஉழைக்கும் வர்க்கத்தினரைக் கெளரவிக்கும் மே தினம் இன்றாகும். இதனையிட்டு நாடு முழுவதும் ஊர்வலங்களும், கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளின் பின்பு நாட்டில் மிகவும் அமைதியான சூழலில் நடைபெறும் இந்த மே தினக் கொண்டாட்டங்களையிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு மாநகரில் 11 கூட்டங்களும், ஆறு மே தின ஊர்வலங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் ஐ. ம. சு. மு.வின் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை திடலில் நடைபெறுகிறது.  ”வேலைத் தளத்துக்கு பலம், தொழில்சாலைக்கு சுறுசுறுப்பு, தாய்நாட்டுக்கு சமாதானம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இவ்வருட மே தினம் அமைகிறது என இளைஞர் விவகார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பல மே தின கூட்டங்கள் நடைபெறுகின்றன. பல தொழில் சங்கங்கள் பங்குபற்றும் இந்த கூட்டங்களில் பெருமளவு மக்கள் கூட்டம் திரளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி முன்னணி சங்கங்கள் நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கிருலப்பன பொது விளையாட்டு மைதானத்துக்கு வந்து அங்கு கூட்டம் நடத்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி இம்முறையும் மேதின கூட்டம் எதனையும் நடத்தப் போவதில்லை. அதற்கு பதிலாக கடந்த வருடங்களைப் போன்று சமய நிழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்க அமைப்பான ஜாதிக சேவக சங்கமய சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் தலைமையகம் அறிவித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் மேதினக் கூட்டத்தை இம்முறை தலவாக்கலையில் நடத்துகிறது. இக்கூட்டத்துக்கு இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை வகிப்பார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை பொரள்ள கெம்பல் பூங்காவில் நடைபெறுகிறது. இலங்கை தொழில் சங்கம், கெசல்வத்தையில் உள்ள ஏ. ஈ. குணசிங்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய சோஷலிச கட்சி கொடவத்தையில் அதன் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறது. ஜுலை 1980 வேலை நிறுத்தக்காரர்கள் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மே தின கூட்டத்தை நடத்துகிறது.
 

பதுளையில் கடும் மழை

lightning-01.jpgபதுளை மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ரணுகொல்ல ஆறு பெருக்கெடுத்ததால் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் சிக்கிய மேலும் ஆறுபேர் காப்பாற்றப்பட்டனர். பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்

இந்திய, பாக்., பங்களாதேஷ் பிரதமர்களுடன் ஜனாதிபதி மஹிந்த பேச்சுவார்த்தை

m-r.jpgஇந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவியதாகவும் இதனால் கிடைத்த முன்னேற்றம் தெற்காசிய வலயத்துக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்துக்கும் முன்மாதிரியாகுமென்றும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் கூறினர்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை ஜனாதிபதி பெற்ற அமோக வெற்றி தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சார்க் வலய பாராளுமன்றமொன்றை அமைக்கும் நடவடிக்கை அடுத்த வருடத்துக்குள் செயற்படுத்தப்பட வேண்டுமென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு சுட்டிக்காட்டினார். அதற்காக பாகிஸ்தான் – இலங்கை மற்றும் பங்களாதேஷ் – இலங்கை என கூட்டு ஆணைக் குழுக்களை ஏற்படுத்துதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தாகும். அதேபோன்று இந்த நாடுகளுக்கிடையே விமான சேவைகளை மேலும் அபிவிருத்தி செய்யவும் பேச்சு இடம்பெற்றது.

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவுக்கு மிஹின் எயார் விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதியுடன் ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் எதிர்காலத்தில் பணியாற்ற பாகிஸ்தானிய மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

சிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்

mervyn2.jpgஊடகத் துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார். தகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாகக் கையேற்றார்.

அந் நிகழ்வில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த “கேக்”கை அவர் ஊடகவியலாளர்களை அழைத்து வெட்ட வைத்ததுடன் அவர்களுக்கு “கேக்” ஊட்டியும் மகிழ்வித்தார்.

கடந்த காலங்களில் சில ஊடக நிறுவனங்களுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அத்தகைய கசப்பான சம்பவங்களை மறந்து சகோதரத்துவத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் “சிரச” ஊடகவியலாளரைக் குறிப்பிட்டு “கேக்” வெட்ட அழைத்தார். அவ்வாறு வெட்டப்பட்ட “கேக்”கை சிரச ஊடகவியலாளர் அமைச்சருக்கு ஊட்ட அமைச்சரும் அவ்வூடகவியலாளருக்கு திருப்பி ஊட்டினார். அத்துடன் “திவயின” ஊடகவியலாளருக்கும் அமைச்சர் ஊட்டினார். இதன் போது ஊடகவியலாளர்கள் கரங்களைத் தட்டி ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா அடுத்த வாரம் செய்தியாளரை சந்திப்பார்- விஜித ஹேரத்

sarath_.jpgபாராளு மன்றம் அடுத்த வாரம் கூடும்போது அமர்வுகளில் பங்கேற்கவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளார். இதனை ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. விஜித ஹேரத் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற முதலாவது கூட்டத்தின் போது ஜெனரல் பொன்சேகாவை ஊடகவியலாளர் சந்திக்க முடியவில்லை. அத்துடன், அவருடைய உரையை சில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருந்தன. இப்போது அவருக்குக் கிடைத்திருக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் பிரகாரம் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்துவார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேவேளை, அவசர சபைச்சட்ட நீடிப்புத் தொடர்பான விவாதம் மே மாதம் 4,5,6 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற விருப்பதாகவும் அந்த விவாதத்தில் எதிரணியின் பிரதான பேச்சாளராகப் பொன்சேகா உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜித ஹேரத் கூறினார்.

நாட்டிலுள்ள மனித உரிமைகள் துஷ்பிரயோகம் குறித்து பொன்சேகா பேசுவார். தனிப்பட்ட முறையில் இப்பிரச்சினைகளை பொன்சேகா எதிர்கொண்டுள்ளார் என்றும் விஜித ஹேரத் தெரிவித்தார். அதேவேளை, எதிர்காலத் தேர்தல்களில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணத்தின் கீழேயே ஜே.வி.பி. போட்டியிடுமெனவும் ஹேரத் கூறியுள்ளார்

“மலையக மக்களுக்கு பயன்தராத அமைச்சை இ.தொ.கா. ஏற்காது”

மலையக மக்களுக்குசேவையாற்றக்கூடிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே அதனை ஏற்றுக்கொள்வதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டம் கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பேச்சாளர் ஏ.பி.சக்திவேல் கருத்துத் தெரிவிக்கையில்;

நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்ட மூவர் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். எமக்கு ஒரு பிரதியமைச்சுப் பதவியும் அமைச்சுப்பதவியும் வழங்க அரசு முன்வந்தது. பிரதியமைச்சுப் பதவியை எமது கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் ஏற்றுள்ளார். கால்நடை அபிவிருத்தி அமைச்சை அரசு வழங்க முன்வந்த நிலையில் அதனை நாம் ஏற்கவில்லை.

கால்நடை அமைச்சை வைத்துக்கொண்டு மலையக மக்களுக்கு பணியாற்ற முடியாது என்பதால் எமது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் அதனை ஏற்கவில்லை. மலையகத்துக்குச் சேவை செய்யக்கூடிய சமூக அபிவிருத்தி மற்றும் மனித வளத்தையும் இணைத்துத் தருமாறு நாம் கோரியுள்ளோம். இதன் மூலமே உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்.

மலையகத்தில் வீடு, குடிநீர் உட்பட பல அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதால் கால்நடையுடன் இணைந்த அமைச்சுப் பதவியை நாம் கோரினோம். இந்நிலையில், அரசாங்கம் மலையகத்தக்குச் சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவியை வழங்க இணங்கியுள்ளது. ஜனாதிபதியின் பூட்டான் விஜயத்துக்குப் பின்னர் எம்மால் பணியாற்றக்கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஏற்போம் இல்லாவிட்டால் நிராகரிப்பதெனத் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சி, தொழிற்சங்கத்துக்கு அப்பால் சமூக ரீதியான சிந்தனை வலுப்பட்டு வருகின்றது. இதனாலேயே மாற்றுக் கட்சியின் மத்தியில் பொதுத் தேர்தலில் எமது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை மலையக மக்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர். பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கவும் மலையக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளைப்பெற்றுக்கொடுக்கவும் எமக்கு சக்தியளிக்கும் பொருட்டு கொட்டகலை நகரில் நாம் நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தில் பேதங்களை மறந்து அணிதிரளுமாறு கோருகின்றேன் என்றார்.

மே தினத்தையிட்டு ஊர்வலங்கள், கூட்டங்கள்

2010-may-day.jpgபயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதையடுத்து மே தினம் உழைக்கும் வர்க்கத்தினால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையிட்டு கொழும்பு உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளும் தொழிற் சங்கங்களும் ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

ஐ. ம. சு. முன்னணியின் பிரதான மேதினக் கூட்டம் கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெறுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு தலைமைதாங்குவார். பெருமளவிலான தொழிலாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப் படுகிறது. ஐ. தே. க. இம்முறை சமய நிகழ்வுகளை மாத்திரமே ஏற்பாடு செய்துள்ளது.

இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இடதுசாரி முன்னணி ஆகியன நாரஹென் பிட்டி சாலிகா மைதானத்தில் நடைபெறும். இ. தொ. கா. அதன், மே தினக் கூட்டத்தை தலவாக்கலையில் நடத்துகிறது. ஜே. வி. பி. பொரள்ள கம்பல் பூங்காவில் அதன் கூட்டத்தை நடத்துகிறது.