அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பூநகரி – யாழ். குருநகர்; படகு சேவை நாளை ஆரம்பம்

பூநகரிக்கும், யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை நாளை 2ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு படகுச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற் கட்டமாக நான்கு படகுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங் களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – சங்குப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா 3ம் திகதி ஆரம்பம்: 97 வீத இந்திய கலைஞர்களின் வருகை உறுதி

iifa-awards-logo.jpgஎத்தகைய எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும், அந்திய திரையுலகைச் சேர்ந்த 97 சதவீதத்தினர் தமது வருகையை உறுதி செய்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் இம் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு, நேற்று கொழும்பில் உள்ள உல்லாசப் பயணத்துறை சபையில் இடம் பெற்றது.  இதன் போதே அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வுக்காக, சுகததாஸ உள்ளக அரங்கை 400 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்கின்றோம்.

அதே போல இத்திரைப் பட விழாவுக்காக இலங்கையைத் தயார்ப்படுத்த 4650 மில்லியன் ரூபாவை நாங்கள் செலவிடுகின்றோம். ஆனால் இத்திரைப்படவிழாவை ஸ்டார் தொலைக் காட்சியில் ஜுலை மாதம் 11 ஆம் திகதி 110 நாடுகளைச் சேர்ந்த 600 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

இதன் போது எமது நாட்டுக்கு உலகம் பூராவும் கிடைக்கவுள்ள அங்கீகாரமும் பிரபலமும் பல நூறு மடங்கு நன்மையை எமது நாட்டுக்கு தரவுள்ளது என்றார். இந் நிகழ்வில் உரையாற்றிய விஸ்கிராப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபாஷ் ஜோசப், கடந்த முறை நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் மூலம் கிடைத்த 56 மில்லியன் அமெரிக்க டொலரிலும் பார்க்கக் கூடுதலான வருமானம். இம்முறை இலங்கையில் நடைபெறும் விழாவின் மூலம் கிடைக்கும் எனத் தான் நம்புவதாகக் கூறினார். 11 ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடாத்தும் 9 ஆவது நாடு என்ற பெருமையை இலங்கை, கொரியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுப் பெற்றிருக்கின்றது என்று கூறினார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் முதல் நாளான 3 ஆம் திகதியன்று இது தொடர்பான சர்வதேச பத்திரிகையாளர் மாநாடு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இரவு இந்திய திரையுலக நட்சத்திரங்களான தியா மிர்ஸா, விவேக் ஒபரோய் ஆகியோர் தொகுத்து வழங்கும் ஃபாஷன்ஷோ இடம்பெறவிருக்கின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். இரண்டாம் நாளான ஜுன் 4 ஆம் திகதி, சர்வதேச வர்த்தக சங்க மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மதியம் இந்திய நட்சத்திரங்களும், இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பங்கு கொள்ளும் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

சுனில் செட்டி மற்றும் ஹிர்திக் ரோஷன் தலைமையிலான இந்திய நட்சத்திர அணிகள் ஒன்றுடன் போட்டியிடவுள்ளன. வெற்றி பெறும் அணி சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியுடன் மோதும் திரைப்படக் காட்சிகளும் இத் திரைப்பட விழாக் காலத்தில் இடம்பெறவுள்ளன.

இறுதி நாளான ஜுன் 5 ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. விருது வழங்கும் நிகழ்வு இடம் பெறும் சுகததாஸ உள்ளக அரங்கு, மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம் பெறும் இடங்களில் ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால், விருது வழங்கும் விழா கிரிக்கெட் போட்டி, திரைப்படக் காட்சிகள் எல்லாவற்றுக்கும் உல்லாசப் பயண சபை, இலங்கை கிரிக்கெட் சபை என்பனவற்றில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

பல்கலைக்கழகத்துக்கு 22,800 பேர் தெரிவு; வெட்டுப்புள்ளி வார இறுதியில்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதோடு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி இந்த வார இறுதியில் வெளியிடப் படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

கடந்த வருடத்தை விட இம்முறை ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தெரிவு செய்யப்பட உள்ளதாகக் கூறிய அவர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பல வருடங்களின் பின் முதற் தடவையாக யாழ். பல்கலைக்கழகத்திற்கு தென் பகுதியில் இருந்து மாணவர்கள் சென்று கல்வி பயில உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக் காரணங்களினாலும் வடக்குக்கான போக்குவரத்து தடைப் பட்டிருந்ததாலும் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு தெரிவான வேறு பகுதி மாணவர்களுக்கு அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவ பீடத்துக்கு நூறு மாணவர்களும் சட்ட பீடத்துக்கு 50 மாணவர்களும் தெரிவு செய்யப்படுகின் றனர். எதிர்வரும் காலங்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படும்.

சகல பல்கலைக்கழகங்களும் தேசிய பல்கலைக்கழகங்களாகும். இன ரீதியான பல்கலைக்கழகங்களாக எந்த பல்கலைக்கழகமும் இருக்க முடியாது. கடந்த வருடம் 21 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகினர். இம் முறை 22 ஆயிரத்து 800 பேர் தெரிவு செய்யப்பட உள்ளன.

பெளத்தத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுக்கவும் சட்டம்

dm.jpgஎதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் கடந்த முறை கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெளத்தம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முன்னணி பெளத்த பிக்குகள் அடங்கிய சங்க சபையொன்றை அமைப்பது தொடர்பாகவும் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலவந்த மத மாற்றத்தை தடுத்தல் மற்றும் பெளத்தம் தொடர்பான புதிய நடைமுறைகள் பற்றி மத வட்டாரங்களிடையிலான கலந்துரையாடல் நடத்துவது பற்றியும் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

மேற்படி சட்டப் பிரேரணைகளுடன் கிராமப்புற விகாரைகளின் உட்கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு நிதி வழங்குதல், விகாரைகளுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் ஆகியவையும் இடம்பெறுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் – கப்பல்கள், விமானம் மூலம் மருந்துகள் வருகை

drage.jpgஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு அடுத்துவரும் ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இனிமேலும் மருந்துப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வாராவாரம் கூடி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர், மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமித்த குழுவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் நிறுவனங்களுக்கிடையில் ஒழுங்கு முறையான தொடர்பாடலும், இணைப்பும் இல்லாததே மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு முக்கியமாகப் பங்களித்ததாக மருந்து பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு சுட்டிக்காட்டி இருந்தது.

இதனடிப்படையில், அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும், அரச மருந்துப் பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனமும், ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டிருந்தார். இதேவேளை, அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை துரிதமாக நீக்குவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தடிப்படையில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு பணிப்பாளர் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், திறைசேரியின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய விசேட குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்து இலங்கைக்குக் கொண்டு வரவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் கட்டம், கட்டமாக கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் இந்திய விநியோகஸ்தர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களுக்கு இனிமேல் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்கு தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் தற்போதைய மருந்துப் பொருள் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலயம் மக்கள் பிரதிநிதிகளிடம் – இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் விளக்கம்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மக்களின் குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலய நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும். அதுவரை ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாக இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபையே ஆலயத்தை நிர்வகித்து வருமென இந்துசமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் தவறான கருத்தாகுமென இந்து சமய இந்து கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு – யாழ். ஏ-9 பாதையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுறிகண்டியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானின் ஆலய நிர்வாகம் தொடர்பாக தவறான கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. உண்மை நிலையை விளக்கும் பொருட்டு இந்து சமய இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த வருடம் யுத்தம் முடிவுற்ற பின்னர் ஏ-9 பாதை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து ஆரம்பமானவுடன் திருமுறிகண்டி ஆலயத்தை பொதுமக்கள் தரிசித்துச் செல்லவேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவ்வாலயத்துக்கென குருக்கள் ஒருவரை நியமித்து முறையான பூஜைகளை நடத்தும் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

அதற்கமைவாகவே குருக்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு வழமையான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சூழலை முகாமை செய்து கொள்வதற்காக திணைக்களத்தின் மூலம் முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

குவைத்திலிருந்து 36 பணிப்பெண்கள் நேற்றும் நாடு திரும்பினர்

house-maid-1.jpgவிசா காலாவதி காரணமாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 36 பணிப் பெண்கள் நேற்றும் நாடு திரும்பியுள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

நேற்று காலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் சிலர் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக பணியகத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்ற இவர்கள் பல்வேறு காரணங்களினால் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தீர்மானித்துள்ள துடன் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கியுள்ளனர். இந் நிலையில் இவர்களின் விசா காலாவதியாகியுள்ள தெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையினால் இவர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்ற 150 பேருக்கு இன்று நிரந்தர தொழில் நியமனம் – ‘தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு இரத்மலானையிலுள்ள தங்களது ட்றை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென நேற்று முன்தினம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இது சம்பந்தமாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ. குணசேகர, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தொழில் அமைச்சர் காமினி லொக்குகே உட்பட தொழில்வாய்ப்பு பெறும் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் ஆகக் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ட்றை ஸ்டார் ஆடைத்தொழில் நிறுவனம் நாடளாவிய ரீதியில் 16 ஆடைத் தொழிற்சாலைகளை கொண்டிருப்பதுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையில் அமர்த்தி அவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்கி வருகின்றது.

IIFA திட்டமிட்டபடி கொழும்பில் இடம்பெறும் ஏற்பாட்டாளர் அறிவிப்பு

iifa-awards-logo.jpgசர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வைபவத்திற்கான இடம்மாற்றப்படமாட்டாது என்று விழாவின் ஏற்பாட்டாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் எதிர்வரும் ஜூன் 3-5 இல் திரைப்பட விருதுவிழா இடம்பெறவுள்ளது. இலங்கையின் தலைநகரில் விழா நடத்தப்படவுள்ள நிலையில் இடத்தை மாற்றுமாறு தமிழ் திரைப்படத்துறையினர் அதிகளவு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையிலேயே இடம்மாற்றப்படாது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச்சேவை குறிப்பிட்டது.

எமக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. இடம்மாற்றப்படமாட்டாது.திட்டமிட்டபடி நடவடிக்கையை முன்னெடுப்போம் என்று இந்த விழாவினை ஏற்பாட்டு செய்துள்ள விஷ்சிரா விட்டின் பணிப்பாளர்களில் ஒருவரான சபாஷ் ஜோசப் ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்று விளையாட முடியுமென்றால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வந்து ரி20 போட்டிகளில் விளையாடமுடியுமென்றால் நாங்கள் ஏன் அங்கு போகமுடியாது. இது பிணைப்பை ஏற்படுத்துவதற்கான மற்றொரு வழிமுறையாகும் என்றும் ஜோசப் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் சந்திரன் ரட்ணம் கைது – 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான சந்திரன் ரட்ணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மிரிஹான பொலிஸார் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவரை ஆஜர் செய்ததாகவும் இவரை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதலாவது ஒழுங்கை, வாகொடை வீதி, நுகேகொடையிலுள்ள சந்திரன் ரட்ணத்தின் வீட்டிலிருந்து கடந்த 26 ஆம் திகதி வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்திரன் ரட்ணம் ‘ஆணையிறவுக்கான பாதை’ என்ற சிங்களத் திரைப்படத்தை தயாரித்தவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.