::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தக் கோரி பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

uk-050309.jpgஇலங்கையில் போர்நிறுத்தம் வந்து அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இலண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

லண்டனில் வாழுகின்ற சில நூறு தமிழர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினார்கள்.

பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக்குழுவின் மாநாடு இங்கு நடைபெறும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு அலுவலக்த்துக்கு முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பு செய்திருந்தது.

தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களை சந்திப்பதனாலேயே, அவர்களுக்காக குரல் கொடுக்க தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கின்ற இந்த பொதுநலவாய அமைச்சர்கள்மட்ட செயலணிக்குழு உறுப்பினர்கள், பொதுநலவாய நாடுகள் எங்கிலும் மனித உரிமை நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்று என்பீல்ட் வடக்கு பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் ரையன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் தொண்டர் தீக்குளித்து சாவு

srithar.jpgசென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்து இறந்தார். அவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் குடும்பச் சண்டை காரணமாக அவர் தீக்குளித்தார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளை கே.எம்.கார்டனைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழும்பூர் பகுதி அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு லட்சுமி (21) என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். தமிழ் மீது அதிக பற்று கொண்ட இவர் தனது குழந்தைகளுக்கு தமிழ்செல்வன், ஈழச்செல்வன் என பெயரிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த `நாம் தமிழர்’ நடைப் பயணத்தில் பங்கேற்று விட்டு நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் இன்னும் சமையல் செய்யவில்லை என்று கூறி லட்சுமி சாப்பாடு வாங்குவதாக கூறிவிட்டு கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதர் வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதற்கிடையில் கடைக்கு சென்ற மனைவி லட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்தார். கணவன் உடல் தீப்பற்றி எரிவதைப் பார்த்த லட்சுமி கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்து ஸ்ரீதரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து நிருபர்களிடம் கூறும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஸ்ரீதர் எழும்பூர் பகுதி அமைப்பாளராக இருந்து வருகிறார். இன்று பெரம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நாம் தமிழர் நடைபயணத்தில் பங்கேற்ற அவர் சோகமாக காணப்பட்டார். இடையில் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாத போது ஸ்ரீதர் இலங்கை தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார் என்றார். ஆனால் இதை மறுத்த போலீஸார், மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பசண்டை காரணமாகத்தான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் போரை நிறுத்த இங்கிலாந்துக்கு மனு:பழ.நெடுமாறன், வைகோ, திருமா

br-embassy-india.jpg சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதர் மைக்கார்னை, பழ.நெடு மாறன் தலைமையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சந்தித்தனர். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த இங்கிலாந்து தலையிட கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது இலங்கைப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உடன் இருந்தனர். இந்த மனுவை அளித்த பின்னர் நிருபர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது :

இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்து முன் வரவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.  அவசியம் உரிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளதாக கூறியதைத்தொடர்ந்து பேசிய வைகோ, 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையெழுத்து போடுகிறார்கள். அமெரிக்க அதிபர், ஐ.நா.பொது செயலாளர், ரஷ்ய அதிபர் ஆகியோருக்கு கையெழுத்துக்களை அனுப்புவோம். கட்சி எல்லைகளை கடந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. எனவே அரசியல் கூட்டணிக்கும், இலங்கை தமிழர்களை காக்க போராடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து போராடுவோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உரிய நேரத்தில் கூடி முடிவு செய்வோம் என்றார்.

முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலம்

bush.jpgஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியு. புஷ் பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டம் என்ற போர்வையில் முன்னெடுத்த போரின் கொடுமைகள்,அநீதிகள், பாரபட்சங்கள் என்பன தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அமெரிக்க நீதித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலிருந்து இவை அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் முதல்முறையாக இவை வெளிச்சத்துக்கு விடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் போர் உபாயங்கள் அனைத்தும் முரண்பாடுகளை உண்டாக்கியதுடன்  மனித உரிமைகளை மீறும் செயல்களாக அமைந்திருந்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பராக் ஒபாமா தனது போர்த் திட்டங்களை மாற்றி அப்பாவிகள் தண்டிக்கப்படுவதையும் அமெரிக்காவுக்கெதிராக உலகளவில் வியாபித்து வரும் எதிர்ப்புக்கள்ää வெறுப்புக்களை துடைத்தெறியவும் முயற்சிக்கவுள்ளார்.

அமெரிக்க நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தாக்கப்பட்டதிலிருந்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து வரும் அட்டூழியங்கள்ää அத்துமீறல்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க காங்கிரஸ் வழங்காத அதிகாரங்களை ஜோர்ஜ் புஷ் தன்னிச்சையாகப் பெற்றுக்கொண்டு போரை நடத்திய முறை தனிமனித சுதந்திரத்தை சீரழித்துள்ளதுடன் புஷ்ஷை ஒரு சர்வாதிகாரியாக்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம், 2002ஆம்,2003ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான இராணுவ சித்திரவதைகள், கைதுகள், தாக்குதல்கள், மற்றும் அபுகுரைப், குவான்தனாமோ சிறைகளின் துன்பங்கள்,  கொடுமைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டியுள்ளதுடன் அவை அனைத்தும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள பிரபல சட்டவல்லுனர்கள், நீதிபதிகள், குற்றவியல் நிபுணர்கள் இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவிக்கு வந்ததும் போர் உத்திகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நீதித் திணைக்களத்தின் அறிக்கை ஒபாமாவின் போர்க் கொள்கையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்த வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் தொடர்பாடலுக்கான யூதர்கள் நிலையத்தில் பேசிய ஹோல்டர், பயங்கரவாதத்துக்கெதிரான போரில் நடந்தேறிய கொடுமைகளை என்னால் ஏற்கமுடியாது. சரிப்படுத்த இயலாது. நியாயப்படுத்தவும் முடியாது என்றார்.

குவான்தனாமோ சிறைச் சாலையிலுள்ள கைதிகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் அச்சிறைச்சாலை மூடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னர் கூறியிருந்தார். சுமார் 800 சிறைக்கைதிகள் ஒபாமா பதவியேற்றபின்னர் விடுதலை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்டமாக மக்களவைத் தேர்தல்

election_ballot_.jpg இந்தியாவில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் 5 கட்டமாக நடக்கவுள்ளது. மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 16ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 23ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 30ம் தேதியும், 4வது கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும் நடக்கவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 5 கட்டமாகவும், பிகாரில் 4 கட்டமாகவும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் 3 கட்டமாகவும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2 கட்டமாகவும் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற 15 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

இந்த அறிவிப்புகளை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி டெல்லியி்ல் வெளியிட்டார்.

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவில் 124 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 23ம் தேதி 141 தொகுதிகளுக்கும், ஏபரல் 30ம் தேதி 107 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 85 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கோபால்சாமி அறிவித்தார். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 71.40 கோடியாகும். இது கடந்த தேர்தலைவிட 4.3 கோடி அதிகமாகும்.

மொத்தம் 40 லட்சம் அரசு ஊழியர்கள், 21 லட்சம் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நாடு முழுவதும் மொத்தம் 8,28,804 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும். தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த மக்களவை ஜூன் 2ம் தேதிக்குள் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதிகள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் அதிகமாகும். அதேபோல பழங்குடியினருக்கான தொகுதிகள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலை விட 6 தொகுதிகள் அதிகமாகும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியின் பதவி்க் காலம் ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராவார்.

இதனால் முதல் கட்ட தேர்தலையடுத்து கோபால்சாமி விலகிவிடுவார். அடுத்த 4 கட்டத் தேர்தல்கள் சாவ்லாயின் தலைமையில்தான் நடைபெறும்.

ஈழப்பிரச்சினைக்கான போராட்டமா? திமுக ஆட்சிக்கெதிரான போராட்டமா-கருணாநிதி

karunanithi.jpgஉச்ச நீதிமன்றம் விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ள சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் பொறுமை காக்கக் கூடாதா என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அறப்போர் என்று வழக்கறிஞர்கள் தொடங்கினர். பிறகு நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் முட்டை வீசியதாக வழக்கு அந்த வழக்கின் விஸ்வரூபமாக காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் என வன்முறைகள் நடைபெற்று, இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை இப்பிரச்னை சென்றுள்ளது.

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உதறித் தள்ளிவிட்டது. சில காவல்துறை அதிகாரிகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையிலிருந்து வேறு ஊர்களுக்கு இந்த அரசு மாற்றிவிட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஸ்ணா தலைமையில் விசாரணைக் கமிட்டியையும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த கமிட்டியின் முடிவை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது. வழக்கறிஞர்கள் மட்டும் பொறுமை காட்டலாகாதா? குறிப்பிடப்படும் இழப்பீடு தருவதற்கும், அதனை இருசாராரும் பெறுவதற்கும் அரசு தொகையும் ஒதுக்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

அதேபோல் உச்ச நீதிமன்ற கருத்தை ஏற்று வழக்கறிஞர்கள் அனைவரும் மார்ச் 2-ம் தேதி நீதி மன்றங்களுக்கு செல்வதுதானே முறையாகும். இல்லையெனில், இது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான போராட்டமல்ல இங்குள்ள தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றுதான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என கருணாநிதி கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரம் அவசியம் – அப்துல் கலாம்

abdhulkalam.jpgதீவிர வாதத்துக்கு எதிராக தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தெரிவித்தார். மங்களூரில் பள்ளி மாணவர்களிடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலாம் கலந்து கொண்டார். அப்போது “நானும் எனது இந்தியாவும்” என்ற தலைப்பில் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

தீவிரவாதம் நமது நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதை வேருடன் அழிக்க வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அளவில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்தில் சில இளைஞர்கள் ஈடுபட வறுமை, வேலையின்மையும் ஒரு காரணமாகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் அரசியல் நோக்கத்தோடு தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதத்துக்கு எதிராக தனிப்படையை ஏற்படுத்த வேண்டும். எங்கு தீவிரவாதம் தலைதூக்கினாலும் அங்கு ஐ.நா. சபை அனுப்பிவைக்கப்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதற்கு இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். விவசாயம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் கலாம்.

பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும்- நாஞ்சில் சம்பத்

naagil.jpgஇலங்கை தமிழர் இனப்படுகொலையை கண்டித்து மதி.மு.க. சார்பில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றும் சரியான தீர்வாக இருக்க முடியாது. உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசவே மறுக்கிறார். போரை நிறுத்து மாறு மத்திய அரசை நிர்பந்திக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அடிக்கடி புலம்புகிறார். நாங்களோ (ம.தி.மு.க.), அல்லது பா.ம.க., கம்யூனிஸ்டுகள் நினைத்தாலோ தி.மு.க. அரசை கவிழ்க்க முடியாது. காங்கிரஸ் நினைத்தால் மட்டும்தான் முடியும். அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான் தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை.

மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்றவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவன் செய்த தவறுக்காக ஒரு இயக்கத்திற்கு தடை விதிப்பது சரியல்ல என நினைத்த அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க அரும்பாடுபட்டார். அதே போல் விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்க இன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சி எடுப்பாரா? அங்கே ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இருப்பவர்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்கிறீர்கள். ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் அடுத்து விநாடியே அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுவிடுவார்கள். விரைவில் இலங்கையில் தனி நாடு பிறக்கும். அதன் பெயர் தமிழ் ஈழமாக இருக்கும். தமிழின தலைவனாக பிரபாகரன் இருப்பார். தமிழ் ஈழம் வெல்லட்டும் என்று பேசினார்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

houses-of-parliament-london-uk.jpgபிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.  லண்டன் நகர மத்தியில் பாராளுமன்ற சதுக்கத்தில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விடத்தில் ஈழத்தமிழர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களில் ஒருவர் திடீரெனத் தனது உடலில் பெற்றோலை ஊற்றி விட்டு நெருப்பைப் பற்ற வைத்துள்ளார்.

எனினும் , அவ்விடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைந்து செயற்பட்டு அவரைக் கீழே தள்ளி விழுத்தி நிலத்தில் உருட்டி அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவ்விடத்தில் பொலிஸாரும் நின்றிருந்தனர்.

அவர்களும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற அந்தத் தமிழ் இளைஞனை உடனடியாகத் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டதால், அவர் பாரதூரமான காயங்களுக்குள்ளாக வில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அந்தப் பகுதி மக்களும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தனர்.

கடந்த 14 ஆம் திகதி லண்டன் டவுணிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் வீட்டின் முன்பாக ஈழத்தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஒருவர் தீக்குளிக்க முனைந்தார். இதே கோரிக்கையை முன்வைத்து அண்மையில் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் முன்பாக இலங்கைத் தமிழ் இளைஞரொருவர் தீக்குளித்து உயிர் துறந்திருந்தார்.

அந்த இடத்திலிருந்து ஜெனீவா பொலிஸார் 5 பக்கக் கடிதமொன்றையும் எடுத்திருந்தனர். ஈழத்தமிழர்களது துயர் குறித்து அதில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே தற்போது மேற்கு நாடுகளில் ஈழத்தமிழர்கள் தீக்குளிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அதிகாரம் பிரதமர் இல்லத்தில் இல்லை சோனியாவின் இல்லத்தில்: அத்வானி

advani.jpgஇந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இந்தியாவின் கருத்தை இலங்கை அரசு செவிமடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எல்.கே அத்வானி தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்ய முடியாவில்லை என ஊடகவியலாளரிடம் பேசும் போது குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் தவறான வெளியுறவு கொள்கை காரணமாக இலங்கை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் கருத்தை இலங்கை ஏற்று மதித்து வந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகாரம் முழுவதுமே பிரதமர் இல்லத்தில் இல்லை. சோனியா வசிக்கும் இல்லத்தில் தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.