இலங்கையில் போர்நிறுத்தம் வந்து அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இலண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
லண்டனில் வாழுகின்ற சில நூறு தமிழர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினார்கள்.
பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக்குழுவின் மாநாடு இங்கு நடைபெறும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு அலுவலக்த்துக்கு முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பு செய்திருந்தது.
தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களை சந்திப்பதனாலேயே, அவர்களுக்காக குரல் கொடுக்க தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கின்ற இந்த பொதுநலவாய அமைச்சர்கள்மட்ட செயலணிக்குழு உறுப்பினர்கள், பொதுநலவாய நாடுகள் எங்கிலும் மனித உரிமை நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்று என்பீல்ட் வடக்கு பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் ரையன் கூறினார்.