::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ராமர் கோவில் கட்டுவோம்-ராமர் பாலத்தைக் காப்போம்: பாஜக தேர்தல் அறிக்கை

03-advani.jpgபாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ராமர் பாலத்தை பாதுகாப்போம், இடிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வகை செய்யும் அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக பாஜக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது இந்துத்வா கொள்கைக்கு பாஜக புத்துயிர் கொடுத்துள்ளது.

மேலும் இன்று ராமர் நவமி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் ராமர் கோவில் கட்டப்படும், ராமர் பாலம் பாதுகாக்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானம்

u-s-flag.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. இதனை ஐநா செயலாளர் பான்.கீ.மூன் வரவேற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் வலுவான அடித்தளத்தை மனித உரிமை பேரவையில ஏற்படுத்த உள்ளது.

புஷ் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இணைவதில்லை எனத் தீர்மானித்திருந்தது. உலகில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தாது, இஸ்ரேலில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாத்திரம் விமர்சிக்கப்பட்டதால், புஷ் நிர்வாகம் அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.

இந்த நிலையில் மனித உரிமை பேரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நடவடிக்கையில் உதவியளிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூசிலாந்து பேரவையில் இருந்து விலகிய பின்னர், குறிப்பிடதக்க மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

ரஸாக் மலேசியா பிரதமராகிறார்

najib-razak.jpgகடும் எதிர்ப்புகள், அதிருப்திகளுக்கு மத்தியில், தனது பிரதமர் பதவியை முகம்மது அப்துல்லா படாவி ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதையடுத்து துணைப் பிரதமர் நஜீப் ரஸாக் பிரதமராக பதவியேற்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த மலேசியத் தேர்தலில் ஆளும் கூட்டணியான உம்னோவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சாதாரண மெஜாரிட்டியுடன்தான் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடக்குமுறை நடவடிக்கை காரணமாக அவரது கட்சிக்கு பெரும் அடி விழுந்தது. இதனால் படாவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஆரம்பத்தில் விலக முடியாது என பிடிவாதமாக கூறி வந்தார் படாவி. இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டு விரைவில் பதவி விலகுவேன், நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் என்று அறிவித்தார் படாவி. அதன்படி சமீபத்தில் அவர் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நஜீப் ரஸாக் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது பிரதமர் பதவியையும் படாவி ராஜினாமா செய்துள்ளார். இதை அந்த நாட்டு மன்னர் ஏற்றுக் கொண்டு விட்டார். இதைத் தொடர்ந்து ரஸாக் பிரதமராக வழி ஏற்பட்டுள்ளது.

1957ம் ஆண்டு முதலே உம்னோ கூட்டணிதான் மலேசியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக படாவி தலைமையிலான உம்னோ அரசுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இந்திய வம்சாவளியினர் குறித்த பிரச்சினையை படாவி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியதே அந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய அடிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. நாளை நஜீப் ரஸாக் புதிய பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் பலி

g-20-landon.jpgலண்டனில் இன்று ஆரம்பமான ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது லண்டன் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் கலந்துகொண்ட 63 ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளின் மாநாடு இன்று லண்டனில் ஆரம்பம்

g-20.jpgலண்டன், எக்ஸல் மையத்தில் இன்று ஜி20 நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ளார்.இதன் போது பிரித்தானிய ஜனாதிபதி கோடன் பிரவுணை 10 டவுனிங் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா முதன்முறையாக லண்டன் வந்துள்ளது இதுவே முதற் தடவையாகும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது. இந்தியக் குழுவில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.தனது பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார் மன்மோகன் சிங். 

‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பிரிட்டனில் வெளிநாட்டு “மாணவர் விசா” புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம்

flag_uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளின் மாணவர்களுக்கான புதிய விசா நடைமுறையொன்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடிவரவை கட்டுப்படுத்துவதும் மோசடிகளைத் தடுப்பதுமே இந்த புதிய நடைமுறைக்கான நோக்கமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புள்ளி அடிப்படையிலான விசா வழங்கும்திட்டத்தின் நான்காவது படிமுறையின் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய ஏற்பாடுகள் விசா வழங்கும் செயன்முறைகளை எளிதாக்கும் என்பதுடன் கூடுதலான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடையதாகவும் குடிவரவு முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதாகவும் அமையும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குயி சிமித் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு மாணவர்களை ஆட்திரட்டும் பிரிட்டனில் உள்ள சகல கல்வி வழங்கும் நிறுவனங்களும் ( பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) நேற்றுமுதல் பிரிட்டனின் எல்லை பாதுகாப்பு அமைப்பிடம் (UK Border Agancy) தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனுசரணையாளர்களாகுவதற்காக (Licensed Sponsors) 2,100 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும் சுயாதீன பாடசாலைகளும் கல்லூரிகளும் விண்ணப்பம் செய்திருக்கின்றன.

பிரிட்டனில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசா நிபந்தனைகளுக்கு இசைவாக நடப்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு இனிமேல் இந்தக்கல்வி நிறுவனங்களினுடையதே. எந்தவொரு மாணவரும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றிடமிருந்து நிபந்தனையற்ற முறையில் தனக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனது கற்கை நெறிக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பிரிட்டனில் தங்கியிருந்து கல்விகற்கும் காலகட்டத்தில் தனது வாழ்க்கைச் செலவுக்கும் போதுமான நிதி தன்னிடம் இருப்பதை மாணவர்கள் சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பதற்கான விசாவே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலான கற்கைநெறி என்றால் அதைப் பூர்த்தி செய்வதற்கான முழுக்காலகட்டத்துக்கும் விசா வழங்கப்படும்.

பிரிட்டனில் கல்வி கற்பதற்கு செல்கின்ற வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைக் கற்பிப்பவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதை புதிய நடைமுறை உறுதிசெய்யும். பிரிட்டனில் கல்விகற்பதற்கு உண்மையில் யார் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் போலி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் புதிய விசா நடைமுறை அனுமதியளிக்கிறது என்று உள்துறை அமைச்சர் சிமித் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம்: சோனியா

sonia-gandhi.jpgஇலங்கையில் வாடும் அப்பாவித் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், கடந்த 30 வருட காலமாக இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருவதாகவும், அங்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்கு அபூர்வ ஆற்றல் இருப்பதாக கூறி அழகான பக்தைகளை கவர்ந்திழுத்து பாலியல் வல்லுறவு! லண்டன் போலிச் சாமியார் கைது

mohana-sing.jpgதனக்கு அபூர்வ மந்திர ஆற்றல் இருப்பதாகக் கூறி பெருந்தொகையான பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்து, அவர்களில் அழகிய யுவதிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் போலிச் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் வட லண்டனில் இடம்பெற்றது.

மோகன்சிங் என தன்னைக் கூறிக் கொண்ட மைக்கல் லயன்ஸ் (51 வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, லண்டனிலுள்ள வூட் கிறீன் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

மேற்படி நபர் தனக்கு திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்பிருப்பதாகவும் அதீத ஆற்றல்கள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறி, பெண் பக்தைகளை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அவர்களில் 7 பேரை கடந்த 10 வருட காலமாக அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மேற்படி பெண்களில் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், தனக்கு ஆன்மிக சக்தியை வழங்குவதாகக் கூறி சாமியார் தன்னை நிர்வாணமாக்கி தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறினார்.

மற்றொரு பெண் சாட்சியமளிக்கையில், மேற்படி சாமியார் மாடிக்குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்திற்கு தன்னை அழைத்து சென்றதாகவும் தன் மீது நறுமண தெளிப்பான் ஒன்றைத் தெளித்து புரியாத வார்த்தைகளைக் கூறி முணுமுணுத்தபடி தனது கழுத்தை நெரித்துப் பிடித்து குற்றச் செயலை புரிந்ததாகவும் தெரிவித்தார்.

வட லண்டனில் பெல்சைஸ் பார்க் எனும் இடத்தில் வசிக்கும் மைக்கல் லையன்ஸ் என்ற இந்த போலிச் சாமியார், தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில், அவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணியான பிலிப் சாட்ஸ் தெரிவித்தார்.

4பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் மீது வழக்கு

vijayakanth1.jpgசிவகங்கை மக்களவை  தொகுதியில் தேமுதிக, தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இத்தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுவதற்காக சில இடங்களில் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

ஆனால் அவர் அனுமதி வழங்கப்படாத இடங்களான மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்ட், திருப்புவனத்தில் பிள்ளையார் கோவில், திருப்பாச்சேத்தி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்தார். அவரது வேனுடன் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதற்காக மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் போலீசாரால் விஜயகாந்த் மீது 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 180 (அனுமதியின்றி பேசுதல்), 188(தேர்தல் அதிகாரி உத்தரவை மீறுதல்), 71ஏ- போலீஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.