::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பன்றிக் காய்ச்சல்: சர்வதேச கவலைகள் அதிகரித்துவருகின்றன

mexico_flu_.jpgபன்றிக் காய்ச்சல் மெக்ஸிகோவிலிருந்து மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது

மெக்ஸிகோவில் பெருமளவில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலின் காரணமாக நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த சர்வதேச கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தத் தொற்றின் மூலம் ஐரோபபாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மெக்ஸிகோ நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த ஒரு ஆடவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்தத் தொற்று பரவியுள்ள பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் தான் அறிவுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் ஆண்ட்ரௌலா வாஸிலோவ் கூறியுள்ளார்.

இது ஒரு அறிவுரை மட்டுமேயன்றி பயணத்தடை அல்ல என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தத் தொற்று கவலையளிக்கக் கூடிய ஒரு விடயம் என்றாலும் இதன் காரணமாக கலக்கமடைய வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளளார்.

பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியக் கடற்பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு – இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல்

india.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடலாம் என்று அந்நாட்டின் உளவுத்துறை வழங்கிய தகவலையடுத்து தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
பிரபாகரன் பாக்கு நீரினையூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லலாம் என்ற தகவலையடுத்து சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையான 650 கிலோ மீற்றர் நீளமுடைய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிஸ் அத்தியட்சகர் முகுன் கொட்னிஷ் தலைமையிலான விரைந்து செயற்படும் அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இக்கப்பல்கள் சென்னையின் தெற்கில் 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நாகபட்டினம் கரையோர பகுதியிலும் சென்னையில் வலப்பக்கமாக 300 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ராமேஸ்வரம் கரையோர பகுதியிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்தியப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

அதிகாலையில் திடீர் உண்ணாவிரதம்: தாக்குதல் நிறுத்துவதாக இலங்கை அறிவிப்பாம்?- உண்ணாவிரதத்தை பகலில் முடித்துக் கொண்டார் கருணாநிதி- ஏகாந்தி

27-karuna-fast.jpgஇலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் எற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கருணாநிதி கால வரையறையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினால் உயிர் நீத்ததாக வரலாறு என்னை பற்றி பேசட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சகோதரர்களுக்காக தாம் இந்தத் தியாகத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் அந்நாடு உறுதிமொழி தந்துள்ளதாம். இதையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் கருணாநிதி முடித்துக் கொண்டார் என இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தையடுத்து இலங்கை அரசிடம் மிகக் கடுமையான பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியதாகவும். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என நெருக்குதல் தந்ததாகவும். இதையடுத்து இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதம் நடத்தி, போரை உடனடியாக நிறுத்துவதாக மத்திய அரசுக்கு உறுதிமொழி தந்ததாகவும் இந்திய இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

இத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொலைபேசி மூலம் முதல்வர் கருணாநிதியிடம் தந்ததையடுத்து தனது முதல்வர் உண்ணாவிரதத்தை நிறுத்துவதாக அறிவித்தார். முன்னதாக இலங்கையில் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கோரி அண்ணா சமாதி அருகே இன்று காலை 5 மணிக்கு திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.

அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனது வீல் சேரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் முதல்வரின் வீட்டினருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவர் கோபாலும் விரைந்து வந்தார்.

டாக்டர்கள் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரினர். ஆனால்,  கருணாநிதி அதை சாப்பிட மறுத்து விட்டார். இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் ஓடி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க வசதியாக ஏற்பாடுகளை செய்தனர், பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன. கருணாநிதியி்ன் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.

காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வந்தார்.

உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் உண்ணாவிரத்ததை கைவிடவும் கோரினர். ஆனால், அதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் முதல்வர் கருணாநிதியை, நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி ஆகியோர் சந்தித்து, உடல் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல நடிகை விஜயகுமாரியும் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்தார்.இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார்.

உண்ணாவிரதம் உச்சகட்ட நாடகம்: வைகோ

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம். கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.

கடந்த 5 ஆண்டு காலமாக இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை.

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு

கனரக ஆயுதங்கள் மற்றும் விமானங்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக அயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களிர்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,” இராணுவ நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ளன. பொதுமக்களிற்கு உயிர் சேதங்கள் ஏற்படுத்தும் கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென எனது பாதுகாப்பு படையினரிற்கு அறிவுறுத்தியுல்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது தந்தையின் படுகொலையால் நான் கொதிப்படைந்தேன் – பிரியங்கா

23-priyanka.jpgஎனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு சில வருடங்கள் வரையில் நான் மிகவும் கொதிப்புடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி. இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளி்த்துள்ள பேட்டி..

எனது தந்தை கொல்லப்பட்டபோது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது நான் கோபமடைந்தேன். அந்தக் கோபம் என்னிடம் சில ஆண்டுகள் வரை இருந்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கூட கோபமாகவே இருந்தது. நான் இளம் வயதினளாக அப்போது இருந்ததால் அந்தக் கோபம் இருந்திருக்கலாம் என நினைக்கிறன். ஆனால் படிப்படியாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டேன். கோபமும் படிப்படியாக குறைந்து போனது.

தமிழ் மக்கள் புத்திசாலிகள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தமிழ் தேசியவாதத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்கான முறை தவறு. ஒரு மனிதராக, இன்னொருவரை கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது பாட்டியும், தந்தையும் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர். அதேபோல எனது தாயும் கொல்லப்படுவாரோ என்று நான் 2004ம் ஆண்டு பயந்தேன்.

அந்த ஆண்டில் நான் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அதே வேகத்தில், எனது சகோதரரின் அறைக்குள் புகுந்து, இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ஆதங்கத்துடன் கூறினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். எனது தாயாரைப் பற்றியோ, சகோதரரின் பாதுகாப்பு பற்றியோ தினசரி நான் கவலைப்படத் தேவையில்லை என்றார் பிரியங்கா.

இன்று மன்மோகன் சிங்கை நோக்கி ஷூவை வீச முயற்சி – குஜராத்தில் பரபரப்பு

manmohan1.jpgகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி ஒரு நபர் ஷூவை வீச முயன்றார். ஆனால் போலீஸார் பாய்ந்து சென்று அந்த ஷூவை மடக்கிப் பிடித்து விட்டனர். அந்த நபரும் கைது செய்யப்பட்டார். அகமதாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ஷூவை எடுத்து அவரை நோக்கி வீச முயன்றார்.

ஆனால் இதைப் பார்த்து விட்ட போலீஸார் பாய்ந்து சென்று அந்த நபரை மடக்கினர். இதனால் ஷூ பாதியிலேயே விழுந்து விட்டது. பின்னர் அந்த நபரை குண்டுக்கட்டாக அங்கிருந்து கொண்டு சென்றனர். ஷூ வீசிய நபருக்கு 25 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர், என்ன பெயர், எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்துத் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த மாதத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஷூ வீசினார். இதுதான் இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த முதல் பரபரப்பு ஷூ வீச்சு சம்பவம். இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜின்டால், அன்வர் உசேன் ஆகியோர் மீதும், அத்வானி மீது செருப்பும் வீசப்பட்டது. இந்த நிலையில் பிரதமரை நோக்கி ஷூ வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் – லாரி மோதல் – அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்

neduma2.jpg இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார்.பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் பயணித்த கார் சேந்தன்குடி என்ற இடத்தில் வந்தபோது, எதிரே காஸ் நிரப்பிக் கொண்டு வந்த டேங்கர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் நெடுமாறன் உள்பட காரில் இருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

விரைந்து வந்த சீர்காழி போலீஸார், லாரியை ஓட்டி வந்த முசிறியைச் சேர்ந்த கணபதி என்பவரைக் கைது செய்தனர்.

பிரபாகரனுக்கு இன்னும் 20வருடம் போராடக்கூடிய சக்தி இருக்கிறது: ராமதாஸ்

india-election.jpg பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. சைதாப்பேட்டை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.  அப்போது அவர், தெர்டர்ந்து பேசியதாவது:-

’’இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை.  ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு சவப்பெட்டிகளை செய்து அனுப்புகிறது. அங்கே கொத்து கொத்தாக குண்டுகளை போட்டு இலங்கை தமிழர்களை கொல்கிறார்கள்.

தமிழர்களை வேகமாக கொல்லுங்கள் என்று சொல்வதற்காக தான் இந்திய மந்திரியும், அதிகாரிகளும் இலங்கைக்கு சென்றிருக்கின்றனர். ஏழைகளை ஒழித்து விட்டால் வறுமை இருக்காது என்று சொல்லும் கூட்டத்தை போல தமிழர்களை ஒழித்து விட்டால் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கூட இன்றும், போரை நிறுத்து என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஆனால் இனவெறி ஆட்சியை நடத்தி வரும் ராஜபக்சே யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லை.

பிரபாகரனை பிடித்து விடுவார்கள், பிரபாகரனை கொன்று விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போல் பல முறை சொல்லி பிரபாகரனை சாகடித்து இருக்கின்றனர். பிரபாகரனை யாராலும் பிடிக்க முடியாது. பிரபாகரனுக்கு இப்போது வயது 54. இன்னும் 20 ஆண்டுகாலம் போராடக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது.

பிரபாகரனை தீவிரவாதி என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். பகத்சிங்கை கூட அப்படித்தான் சொன்னார்கள். சுபாஸ் சந்திரபோசை அப்படித்தான் சொன்னார்கள். விடுதலைக்காக போராடக்கூடியவர்களை அப்படித்தான் சொல்வார்கள்’’ என்று பேசினார்.

தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ்ஈழம் மட்டுமே. தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் – ஜெயலலிதா

jayalalitha.jpgஇலங்கைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு ஏற்பட, தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ் ஈழம் அமைப்பது மட்டுமே. அதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் இந்த தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா இவ்வாறு அறிவித்தார்.

ஜெயலலிதாவின் உரை…

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.  இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.  எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, ரவிசங்கர் அவர்கள் என்னை சந்தித்தார்.

sri_sri_ravisangar_.jpgஅப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எனக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது
தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது. அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது. நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள். இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றவாளிகளா?… இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?…குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் – தடுப்பு வதை முகாம்களை நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த – ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.  இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை – மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை – இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர்.

வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், “எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்” என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது. இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. “முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,” என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, “இப்போதைக்கு அது முடியாது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

“இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்” என்று கேட்டதற்கு, “அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், “அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்” என்றும், “எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்” என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?… அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?… சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?…

இலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் – அடிமைகளைப் போல் – அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?… இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?… எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.  இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

உண்ணாவிரதத்தை முடித்த பெண்கள் – தேர்தல் பிரசாரத்தில்….

womens-fast-ends.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக சென்னையில் பெண்கள் கூட்டமைப்பு நடத்தி வந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பேர் கடந்த 13-ந் தேதி முதல் மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். பேராசிரியை சரஸ்வதி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 5 பெண்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை மற்றும் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுவதாக போராட்டக் குழு தலைவர் பேராசிரியை சரஸ்வதி அறிவித்தார்.

இதுகுறித்து சரஸ்வதி கூறுகையில், சோனியாவே போரை நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நாங்கள் நடத்திய இந்த போராட்டத்தை சோனியா காந்தி தாயுள்ளத்தோடு செவி சாய்ப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவரிடம் இருந்து எந்த அசைவோ, சலனமோ இல்லை என்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழக காங்கிரசின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம எங்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இன்னும் 2 நாட்களில் சோனியாவிடம் இருந்து உரிய பதிலை பெற்றுத் தருவதாக கூறியதை ஏற்று 5 நாட்கள் வரை காத்திருந்தும் பதில் ஏதும் வரவில்லை. எனவே தமிழினத்தின் மீதான படுகொலையை தடுப்பதில் அவருக்கு எந்த கவலையும் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டோம்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தைத் தேர்தலை நோக்கி முழுமையாக திருப்பிய நிலையில் நாங்கள் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகத்தின் கவனத்தை தமிழின அழிப்புக்கு எதிராக திருப்பி இருப்பது எங்களுக்கு நிறைவை தருகிறது. கலை உலகமும், பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினையில் களம் இறங்கியுள்ள நிலையில், நீதிபதி கிருஷ்ணய்யர், மேதா பட்கர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழின படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வது, தொடர் உண்ணாவிரதம், தேசிய அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் பிரசாரம் ஆகியவற்றை செய்ய இருக்கிறோம்.எங்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இடம் தந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு நன்றி கூறுகிறோம் என்றார் அவர்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகி மீனா கிருஷ்ணசாமி, உண்ணாவிரதம் இருந்த 15 பெண்களுக்கும் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்தியாவுக்குள் 31 தீவிரவாதிகள் ஊடுருவல்

india.jpgபாகிஸ் தானில் இருந்து,  இந்தியாவுக்குள் 100-ல் இருந்து 120 பேர் வரை கொண்ட ஒரு கூட்டத்தினர் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதி வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.

இவர்களில் 31 பேர் தீவிரவாதிகள். மற்றவர்கள், அவர்களுக்கு வேண்டிய வெடிபொருள், ஆயுதங்கள், உணவுப்பொருள் போன்றவற்றை சுமந்து செல்லும் போர்ட்டர்கள் மற்றும் வழிகாட்டிகள். இந்த தகவலை, இந்திய ராணுவ பிரிகேடியர் குர்மீத் சிங் ஸ்ரீநகரில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இந்திய பகுதிக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினர் 18 நாள் முதல் 90 நாள் வரை பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள்.

குரேஸ் பகுதியில் இப்போது அதிக அளவில் பனிக்கட்டிகள் உருவாகி உள்ளன. எனவே, எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு விட்டன.இதை பயன்படுத்தி, தீவிரவாதிகள் அந்த வழியாக இந்தியாவுக்குள் வந்து விட்டனர்” என்றார்.