கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது

211009proelanco.jpgபுதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது! ஒரு இலட்சம் தொகையும், சான்றிதழும் குடியரசுத்தலைவர் வழங்வுள்ளார் !

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு “இளம் அறிஞர் விருது”வை நேற்று அறிவித்துள்ளது. இவ்விருதுக்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர்மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன.சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

 முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள்(2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ்பெற்றனவாகும்.
 
சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர்.சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டுவந்தார்.சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து,இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன்.எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம்,புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம்,இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

 இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். 

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார்.இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும்.உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார்.தேசிய அளவில் 42 கட்டுரைகளும்,இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி,தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்சுதமிழ்,  தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள்,வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

 சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை,முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “பாரதிதாசன் பரம்பரை” என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர்பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் தேசம்நெற்றின் வாழ்த்துக்கள்

யூனிஸ்கானின் இராஜினாமா நிராகரிப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

141009younuskhan226.jpg2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை யூனிஸ்கான் கப்டனாக நீடிப்பார். அவரது இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

யூனிஸ்கான் இராஜினாமா விவகாரம்

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்து இருப்பதாக பாகிஸ்தான் அணி மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் சட்டசபை கமிட்டி யூனிஸ்கானிடம் விசாரணை நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த யூனிஸ்கான் கப்டன் பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் இராஜினாமா முடிவை கைவிடும்படி வற்புறுத்தினார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை யூனிஸ்கானிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர் அணித் தேர்வு மற்றும் கப்டன் பதவிக் காலம் குறித்து சில நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில் கூறியதாவது:- யூனிஸ்கான் இராஜினாமா ஏற்றுக் கெள்ளப்படவில்லை. அவரை கப்டன் பதவியில் இருந்து நீக்குவதில் எந்த நியாயமும் இல்லை.

அவரது எதிர்ப்பு நடவடிக்கையை நான் உணர்கிறேன். நான் அவரது நிலையில் இருந்து இருந்தால் அதனைத் தான் செய்து இருப்பேன். இந்த ஆண்டு ஜனவரி மாத்தில் யூனிஸ்கான் கப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் சில சமயங்களில் கப்டன் பதவிக்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது.

யூனிஸ்கான் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருந்தால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் அணி கப்டனாக நீடிப்பார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார்.

20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளார். யூனிஸ்கான் தேர்வாளர்க ளால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் தான் கப்டன் என்பது எங்களது முடிவாகும்.

அவர் கப்டன் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

IDP_Child_Carrying_Bucket_of_Waterமே 16ம் திகதிவரை வெள்ளான் முள்ளிவாய்க்காலிலிருந்து பின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் வந்துள்ள என் ஊராரையும், உறவினரையும் பார்ப்பதற்காக அண்மையில் வவுனியா சென்றேன். புறப்படுமுன் லண்டனிலிருந்து வெளிவந்த செய்திகள் எம்மை சற்று சிந்திக்க வைத்தாலும் இவையெல்லாம் உண்மைதானா என்பதை நேரே சென்று அறியவேண்டும் என்ற ஆவல் எம் பயணத்தை தொடரும்படி தூண்டியது.

விமானத்திலிருந்து வெளியேறும்போது எனக்குள்ளே சற்று தயக்கம். காரணம் பிரித்தானிய கடவுச்சீட்டு கொழும்பு விமானநிலையத்தில் விரும்பப்படாத ஒன்றென்றும், பலர் இம்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் ஊடகங்களின் விடாது தொடர்ச்சியான செய்திகளாக இருந்தன.

விமானநிலையத்தின் உள்ளே சென்றதும் swine flu வை அறியும் camera முன்னே வரிசையாக செல்லும்படியான அறிவித்தல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் செய்யப்பட்டது. அதிகாரிகள் monitor முன் இருந்து எமது உடல் வெப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று எம்மை வரவேற்பதுபோல் குடிவரவு அதிகாரிகளின் இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. கடவுச்சீட்டை கையளித்தபோது எந்த விதமான முகமாற்றமும் இல்லாது தனது கடமையை செய்துவிட்டு கடவுச்சீட்டை கையளித்தார் அந்த அதிகாரி.

விமான நிலையத்திலிருந்து hotel சென்றபோது இரவு 11 மணி இடையிடையே இராணுவமும் பொலிசும் எம்மை நிறுத்தி சோதனை செய்தார்கள். எந்த இடையுறுமில்லாது நடந்து கொண்டார்கள்.

மறுநாள் காலை வவுனியா செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றோம். காலை 5.45 மணிக்கு யாழ்தேவி புகையிரதம் கோட்டையிலிருந்து புறப்பட்டது. புறப்படுமுன் அத்தனை அறிவிப்புகளும் சிங்கள மொழியிலேயே செய்தார்கள் எனக்கு எதுவுமே புரியவில்லை. புகையிரதம் மதவாச்சியை அடைந்தபோது அனைவரையும் அவரவர் பொதிகளுடன் வெளியே வருமாறு கேட்கப்பட்டோம். அத்தனை பொதிகளையும் சோதனை செய்தபின் என்னை அந்த அதிகாரி ‘வவுனியா போகமுடியாது’ என்று கூறிவிட்டார். ‘வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு MOD (ministry of Defence) அனுமதி வேண்டும்’ என்றார். அந்த அதிகாரியின் கடமை உணர்வை புரிந்துகொண்டு கடவுச்சீட்டுக்குள்ளே வைத்துக் கொடுத்தேன் என்னை வவுனியா செல்வதற்கு அனுமதித்தார்.

1985 ம் ஆண்டு லண்டன் செல்வதற்காக வவுனியா புகையிரத நிலையத்தில் நின்றபோது என் நண்பர் கொக்காவில் இராணுவமுகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. புகைவண்டி வவுனியாவை அடைந்தபோது அந்த ஆண்டு என் கண்முன்னே வந்து போனது. 25 ஆண்டுகால நகர்வு ஓர் சினிமாவை பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தது.

புகையிரத நிலையத்திலிருந்து வீடுசென்ற போது இது வவுனியாவோ இல்லை யாழ்ப்பாணமோ என்ற குழப்பம் எனக்குள்ளே. பார்க்குமிடமெல்லாம் பசுமையான வயல்களும் குளங்களுமாக வேலிகளேயில்லாமல் இருந்த வவுனியா நகர்ப்புறம் இன்று வயல்களும் குளங்களும் மண்ணால் நிரப்பப்பட்டு மேட்டு நிலங்களாகவும் நான்கு பக்கமும் கிடுகுகளால் மூடி அடைக்கப்பட்ட வேலிகளாலும், ஒலிபெருக்கி மூலம் இரவுபகலாக ஓலமிடும் இந்துக் கோயில்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.

வவுனியாவை யாழ்ப்பாண இந்து மயமாக்கும் திட்டமிட்ட செயல்பாடோ இதுவென்று என்மனம் என்னையே கேட்டது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வாழ்ந்த காலப்பகுதிக்கு வவுனியா தள்ளப்பட்டு விட்டதென்று முணுமுணுத்தார் என்னை கூட்டிச்சென்ற நண்பர்.

சில நாட்களே வவுனியாவில் தங்கிநிற்கக் கூடிய நிலையிருந்ததால் கிடைக்கின்ற பொழுதெல்லாம் அவர்களிடமிருந்து தகவல்களைப்பெறும் நோக்கில் அவர்களோடு பேசிக்கொண்டேன்.

“எம்மை யாருமே காப்பாற்றவில்லை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று  ஆரம்பித்தார்கள். நடந்தவற்றை அறியும் ஆவலில் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டேன்.

மன்னாரில் நடந்த போரில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ”கிளிநொச்சியை இராணுவம் அண்மித்ததும் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள்  பலாத்காரத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

”எதற்காக பொதுமக்கள் மீது பலாத்காரத்தை செலுத்தினார்கள்” என்று கேட்டபோது ”இழந்த பிரதேசங்கள் இராணுவத்திடம் பறிபோகுமென்று அவர்கள் என்றுமே எண்ணியதில்லை, பறிபோனதால் அவர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்” என்றனர். தளபதி திலீபனிடம் ”எதற்காக மக்கள்மீது இப்படி பலாத்காரம் செய்கிறீர்கள்” என்று கேட்க ”இது மேலிடத்து உத்தரவு” என்றாராம்.

பலாத்காரமாக பிள்ளைகளைப் பிடிக்க வரும்போது பெற்றோர் அவர்களை எதிர்த்தால் அவர்களை அவ்விடத்திலேயே சுட்டுவிட்டு பிள்ளையை பிடித்துச்சென்ற சம்பவங்களை சிலர் கூறினார்கள். பிள்ளை மறுத்தால் பெற்றோருக்கு முன் பிள்ளையை சுட்டுவிட்டு இப்போ என்ன செய்வீர்கள் என்று கேட்டுவிட்டுப் போவார்களாம் போராளிகள்.

”பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட போராளிகளே தோல்வியின் முதல்காரணி” என்றார்கள். ஒருவாரகால  ஆயதப் பயிற்சியோடு களம் இறக்கி விடுவார்களாம். அவர்கள் எப்போதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் தப்பிச் செல்லவே விருப்பம் கொண்டிருந்தார்களாம்.

தளபதி தீபன் இறப்பதற்கு முன்னதாக மிகப்பாரிய இராணுவ ஊடறுப்பொன்றை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் சென்றதாகவும், சென்ற வழியில் இராணுவத்தினர் முன்கூட்டியே நிலையெடுத்திருந்ததால் அதில் 450 க்கும் மேற்பட்ட போராளிகளையும், சொர்ணம் தனது காலையும் இழந்ததாக குறிப்பிட்டார்கள்.

நெஞ்சின் தோள்பகுதியில் குண்டுபட்ட தீபன் இரண்டு நாட்களாக களத்தில் நின்று போராடி மூன்றாம் நாள் எறிகணை பட்டு இறந்ததாகவும், பங்கர் வாசலிலே படுத்திருந்த விடுதலைப் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி மீது செல் விழுந்து வெடித்து அவர் மரணித்துள்ளார்.

இறந்த உடல்கள் ஆங்காங்கே நாட்கணக்கில் துர்நாற்றம் வீசியபடி கிடந்த காட்சியையும், காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி ஆங்காங்கே கிடந்ததாகவும்; துர்நாற்றமெடுத்து ஈ மொய்க்கின்ற காட்சி சர்வசாதாரணமாக இருந்தது என்றார்கள்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பிவர முனைந்த பலர் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை சிலர் விபரித்தனர்.

இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை கொடுத்து இரண்டு தேங்காய் வாங்கிய கதையை கூறிய அதேவேளை ஓரு இலட்சம் வரையான நெல் மூட்டைகளை விடுதலைப் புலிகள் அப்படியே இராணுவத்திடம் கைவிட்டு வந்ததாக கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார்கள்.

ஓவ்வொரு இடப்பெயர்வின் போதும் கைவிட்டுச்சென்ற தமது உடைமைகளையும் இழந்த உறவுகளையும் எண்ணி கண்ணீர் வடித்தார்கள்.  பார்க்குமிடமெல்லாம் பிணங்களும், கேட்பதெல்லாம் மரணஓலங்களுமாக பல வாரங்கள் கழிந்தன என்று தேம்பித் தேம்பி அழுதார்கள்.

பங்கருக்குள் இருந்தபோது விடுதலைப் புலிகளின் ஆலோசகர் திருநாவுக்கரசு கடந்த இரு வருடங்களாக பிரபாகரனுக்கு சித்த சுவாதீனம் பிடித்து விட்டதென்று கூற அங்கிருந்த மற்றய விடுதலைப் புலிகளின் விசிறிகள் அவரோடு கைகலப்பிற்கு சென்று விட்டார்களென்று ஒருவர் தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது எப்படி இராணுவம் நடந்து கொண்டது என்று விடுதலைப் புலிகளின் மிகவும் நெருக்கமானவரிடம் கேட்க ”என் மனச்சாட்சியை தொட்டுச் சொல்கிறேன் மனிதர்களைப்போல் நடந்துகொண்டார்கள்” என்றார்.

அடுத்தநாள் வவுனியா நகரைப் பார்ப்பதற்காக சென்றோம். 25 ஆண்டுகால போரின் அழிவுகளை மக்கள் முகங்கள் மட்டுமல்ல வவுனியா நகரும் காட்டிக் கொடுத்தது.

நகருக்கு அண்மையில் உள்ள சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்தில் போராளிகளை மட்டும் வைத்து பராமரிக்கிறார்கள். வெறும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட வேலிக்குள் அவர்கள் மிகவும் லாவகமாக நடமாடுகிறார்கள்.

உறவினர்கள் முட்கம்பிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டகைகளுக்குள் ஏதோ வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.

முகாமிலிருந்து சில நாட்களுக்கு முன் வெளியேறிய சிலருடன் பேசியபோது முகாமுக்குள் பல குழந்தைகள் திடீர் திடீரென இறந்து போவதாகவும், இந்த இறப்புக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலித்தீன் கூரைகளே காரணம் என்று வைத்தியர்கள் சந்தேகப்படுவதாக கூறினர்.

மேலும் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு யாழ்தேவி மூலம் கொழும்பை வந்தடைந்தோம். மறுநாள் லண்டன் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றபோது உள்ளேயும் வெளியேயும் விமானப்படை அதிகாரிகள் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட முறை என்னை 2005 ம் ஆண்டு புலிகளின் புளியங்குள விசா காரியாலயத்தோடு ஒப்பிட வைத்தது.

2005ம் ஆண்டு யாழ் செல்வதற்காக தரைவழியாக புளியங்குளம் சென்றோம். வாகனத்தை விட்டு இறங்கியதும் “அ” க்கு போங்கள் “இ” க்கு போங்கள் “பு” க்கு போங்கள் என்று பயணிகளையும் வாகன உரிமையாளர்களையும் மந்தைகள் போல் நடாத்திய காட்சி என் கண்முன்னே வந்துபோனது.

கிளிநொச்சியிலுள்ள விசா காரியாலயத்துக்கு சென்றபோது அந்த இளம் அதிகாரி ”லண்டனிலே விடுதலைப் புலிகளிற்கு பணம்கொடுத்த ரசீது இருக்கிறதா?” என்றார். ”இல்லை” என்றேன். ”அப்படியென்றால் விசா கிடைக்காது” என்றார். ”விசா எடுக்க வேண்டும் என்ற நோக்கில் எவரும் பணம் கொடுப்பதில்லை” என்றேன்.

”அப்படி அறிவதாயின் உங்கள் area  பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அறியுங்கள்” என்றேன். என்னை கூட்டிச் சென்றவரின் முகமாற்றம் என்னை தொடர்ந்து பேசவிடாது தடுத்தது.  அப்போது எம் நீண்ட இருக்கையின் மூலையில் ஒருவர் காத்திருந்தார், அவரைக் காட்டிய அந்த அதிகாரி ”அதோ பாருங்கள் அந்த நபர் லண்டனிலிருந்து வந்தவர். இரு வாரங்களாக இங்கே வந்து போகிறார். இவர் லண்டனில்  விடுதலைப் புலிகளிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். அதனால் அவருக்கு தண்டனை இது” என்று சொன்னார்.

”சுனாமி அடித்தபோது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தானே பணம் பெற்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இப்படி நடாத்துகிறீர்கள்?” என்று கேட்டேன். ”தமிழீழத்துக்கு உல்லாசப் பயணியாக எந்தத் தமிழனும் வரத்தேவையில்லை” என்றார் இறுமாப்போடு. ”அப்படி உல்லாசப் பயணிகள் தேவையென்றால் நாம் ஐரோப்பியரை அழைப்போம் இங்கே” என்றார்.

நடந்தவற்றை  அன்று பல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதை அன்று அவர்கள் விடுதலைப் புலிகளின் வளர்சியாகவே பார்த்தார்கள். மே18 வரை அதே நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.

அதனால்தான் அவர்களால் இன்றுள்ள உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்தும் புனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட வண்ணம் உள்ளனர்.

இந்தக் கலையை கற்றுக் கொடுத்தவர்கள் நம்முடைய TULF என்பது அனைவரும் அறிந்ததே. 1977 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என்றார்கள். ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்னதடை’ என்றார்கள். இவ்வாறே என் மனம் அங்குமிங்கும் போய்வர விமானம் லண்டனை வந்தடைந்தது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமிய மதரஸாக்களில் ஆங்கில மொழிக் கல்வி

000181009.jpgஇந்தியா வின் மேற்கு வங்க மாநிலத்தின் இஸ்லாமிய மதப் பள்ளிக்கூடங்களான மதரசாக்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கு ஆங்கிலத்தை முக்கிய மொழியாக பயன்படுத்த ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 மதரசாக்கள் இந்த முயற்சியை இந்தக் கல்வியாண்டின் தற்போதை தவணையில் ஆரம்பிக்கும் என்று சிறுபான்மையின விவகார அமைச்சர் அப்துஸ் சத்தார் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 566 மதரசாக்களும் இந்தத் திட்டத்தை இன்னும் சில வருடங்களில் ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆங்கிலத்தின் பயன்பாடு இல்லாமல் மாணவர்கள் மிகத் தரமான கல்வியைப் பெற முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் மதம் சார பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்

171009gaza.jpgஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியோர் மீது போர்க்குற்றம் சுமத்தும், ”காசா மீதான இந்த வருட இஸ்ரேலிய தாக்குதல் குறித்த அறிக்கை” ஒன்றை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வாக்களித்துள்ளது.

இந்த அறிக்கையை தென்னாபிரிக்க நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தயாரித்துள்ளார்.

அந்த சம்பவங்கள் குறித்து இரு தரப்பும் நம்பத்தகுந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறுகின்ற அந்த அறிக்கை, அவ்வாறு செய்யா விட்டால் இரு தரப்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையின் மீது மாத்திரமல்லாமல், இந்த விடயத்தில் ஹமாஸை அல்லாமல் இஸ்ரேலை மாத்திரம் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று கோருகின்ற பாலத்தீன ஆதரவு தீர்மானத்தின் மீது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் பிரத்தியேகமாக இஸ்ரேலை மாத்திரம் இலக்கு வைத்தமை தன்னை துக்கமடையச் செய்துள்ளதாக கோல்ட்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாவேயில் சுவாங்கிராய் கட்சியின் மூத்த உறுப்பினர் ராய் பென்னெட் விடுதலை

181009aptsvangiriai_.jpgஜிம்பா ப்வேயில் பிரதமர் மோர்கன் சுவாங்கிராய்யின் கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான கட்சியுடைய மூத்த உறுப்பினரான ராய் பென்னெட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராய் பென்னெட் கைதானதை அடுத்து அரசாங்கத்தில் தங்களோடு கூட்டணி சேர்ந்துள்ள ஸானு பி.எஃப். கட்யுடன் ஒத்துழைப்பதை சாங்கிராய் நிறுத்திக்கொண்டுள்ளார்.

ராய் பென்னெட் சிறையில் இருக்கும் வரை தனது கட்சி அமைச்ச்சரவைக் கூட்டங்களிலோ அரசாங்க நடவடிக்கைகளிலோ பங்குகொள்ளாது என சாங்கிராய் தெரிவித்திருந்தார்.

ஜிம்பாப்வேயின் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயத்துறை துஅனி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த பென்னெட், சென்ற வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் மீதது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) – புன்னியாமீன்

171009.jpgஉலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் மிகவும் வறுமைக்கோட்டின் மிகவும் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள். இவர்களின் நாள் வருமானம் 1.25 டொலர் ஆகும்.

சர்வதேச ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்,  வறுமை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும்,  பசிக்கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்புத் தினத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ‘வறுமைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வேண்டுகோள்”,  2009 ஆம் ஆண்டின் சர்வதேச வறுமை ஒழிப்பு நாளின் தலைப்பாகும்.

இந்நாள் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி,  வறுமை,  வன்முறை,  பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வகையில் சுமார் பத்தாயிரம் மக்கள் ‘டொர்கேட்ரோ’வின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினர். இவர்கள் உலகளாவிய ரீதியில் வறுமை நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தினை முன்வைத்தனர்.

வறுமை நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என வரைவிலக்கணப்படுத்தலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகின்றது. தீவிர வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25  டாலர்களுக்கும் குறைவான தொகையில் ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். பொதுவாக வறுமை நிலை உணவு,  சுத்தமான நீர்,  உடை, உறையுள்,  கல்வி,  சுகாதாரம்,  சமூக வாய்ப்புக்கள்,  மனித அரசியல் உரிமைகள்,  பிற சமூகங்களுடன் தொடர்புகள் அற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலையைக் குறிக்கின்றது.

உலகளாவிய ரீதியில் வறுமை சடுதியாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் (2009) எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை,  வறிய நாடுகளுக்கான உதவிகளை செல்வந்த நாடுகள் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் 185 உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட நிதி மற்றும் வளர்ச்சித் துறை மாநாட்டில் நிதி நெருக்கடி நீண்டகாலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில் உலக வங்கிக்கான வளங்களை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இற்குள் வறுமையை ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. வின் இலக்குகளை இந்நிதி நெருக்கடி தடம்புரளச் செய்து விடுமெனவும் இதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தமை இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும்.

மனிதப் பேரழிவைத் தடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் (2009) ரொபேர்ட் ஷோலிக் ஐ.நா.வின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளான வறுமை,  பட்டினி,  கல்வி,  சமத்துவம்,  தொற்றுநோய் மற்றும் சிசுமரணம் போன்றவற்றில் பெரும்பாலானவையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடியால் வறிய நாடுகளிலுள்ள சமூகங்களுக்கு செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்துள்ள ஷோலிக் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடனை 100 பில்லியன் வரை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் அங்கீகரிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

அத்துடன்,  பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு அது வறுமையை எவ்வாறு பாதிக்குமென்பதில் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். ஷோலிக் தென் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது சுகாதாரம்,  கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்யக் கூடாதெனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வறுமை ஒழிப்பு,  உணவு பாதுகாப்பு உள்ளிட்ட புத்தாயிரம் ஆண்டின் மேம்பாட்டு இலக்கை (Millennium Development Goals – MDG) திட்டமிட்டபடி திட்டமிட்டபடி எட்டுவதற்கான முயற்சிகளை பலப்படுத்துவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்,  ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனும் ஒப்புக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதற்குப் பின்னர்,  2009 மார்ச்சில் முதல் முறையாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனை ஐ.நா. அவை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய போதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பட்டது. 2000ஆவது ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் உணவுப் பஞ்சம்,  பிணி,  வறுமை,  வேலையின்மை ஆகியவற்றை ஒழிக்க அபிவிருத்தியடைந்த நாடுகள் வழங்க ஒப்புக் கொண்டுள்ள நிதி உதவிகளை நிறுத்தக் கூடாது என்றும்,  உறுதியளிக்கப்பட்ட உதவிகளை தொடர்வதன் மூலமாக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது,  புவி வெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் உலகில் தற்பொழுது நிலவும் பொருளாதார பின்னடைவின் காரணமாக முன்னேறிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சூழல் புத்தாயிரம் முன்னேற்ற இலக்குகளை எட்டவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பொருளாதார பின்னடைவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உச்சக்கட்டத்தை சந்திக்கப்போகும் 2009ஆம் ஆண்டில் ஒன்று ‘செய் அல்லது விடு’ என்ற உறுதிப்பாட்டுடன் சிக்கலை எதிர்நோக்கிச் செயல்படப் போவதாக ஒபாமா அரைகூவல் விடுத்தமையையும் இவ்விடத்தில் நினைவு கூரல் வேண்டும். 

இவ்வாறாக திட்டங்கள் தீட்டப்பட்டாலும் கூட, அரைகூவல்கள் விடுக்கப்பட்டாலும் கூட வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கு மேல் என சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் இராணுவ தளவாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால் கூட உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்து விடலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் அனைவருக்கும் கல்வி என்பது உலகளாவிய ரீதியில் இன்று வரை கனவாகவே உள்ளது.

வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி வரவர அதிகரித்துக்கொண்டே வருகிறது. அபிவிருத்தியடையாத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.

ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. வரிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும்,  ஒப்பந்தங்களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க வறுமையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. வறுமையும்,  ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில்,  வன்முறையையும்,  குற்றங்களையும் தவிர்க்க முடியாது.

உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை கூடிய நாடான சீனாவில் வறுமை ஒழிப்பு சாதனை,  உலகின் வறுமை ஒழிப்பு முன்னேற்றப் போக்கைத் தூண்டி,  உலக வறுமை ஒழிப்புப் பணிக்குப் பெரிய பங்காற்றியது. என  சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழுவின் அலுவலகத் தலைவர் Fan Xiaojian  அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளில்,  வறிய மக்கள் தொகையைப் பாதியாகக் குறைப்பது என்ற இலக்கை முன்கூட்டியே நனவாக்க முனையும் ஒரு நாடாகவே சீனா உள்ளது.

அதே நேரம் இந்தியாவும் வறுமை ஒழிப்புக்காக வேண்டி பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. வறுமையில் வாடும் குடும்பங்களை ஒரே தேவையுள்ள குழுக்களாக (Common Interest Groups – CIG)  ஒன்றிணைத்து அவர்களின் முழுமையான  மேம்பாட்டிற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும் மாவட்ட வறுமை ஒழிப்புப் திட்டத்தை உலக வங்கியின் ஆலோசனையின் பேரி்ல் 2000வது ஆண்டு முதல் மத்திய பிரதேச அரசு செயல்படுத்தி வருகின்றது. மத்தியப் பிரதேசத்தின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 2, 900 கிராமங்களில் வாழும் 3, 25, 000 மக்களை 52, 000 குழுக்களாக ஒன்றிணைத்து உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. வறுமை கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் வருவாய் 65 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும், விவசாய  உற்பத்தி 149 விகிதமாக உயர்ந்துள்ளது என்றும்,   விவசாயத்திற்கான பாசனப் பரப்பு 27 விகிதமாக அதிகரித்துள்ளது என்றும் சில புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதே அடிப்படையில் மாவட்ட வறுமை ஒழிப்புத் திட்டம் – 2 என்ற பெயரில் 5000 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே உலக வங்கியின் தனி நபர் மேம்பாட்டு கணக்குத் திட்டத்தின் கீழ் (Individual Development Account – IDA) 100 மில்லியன் டாலர் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளதாக உலக வங்கியின் இந்தியக் கிளையின் இயக்குனர் ராபர்ட்டோ ஜாகா மும்பையில் அண்மையில்  தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு சுய உதவிக் குழுக்களைப் போல கூட்டுத் தொழில் செய்யவும் இக்குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பல குழுக்கள் செய்து பலன் பெற்றும் உள்ளன என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

 மக்களை பசிக்கொடுமையிலிருந்து வெளிக்கொண்டுவர வளர்முக நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் அக்ஸன் எய்ட் நிறுவனம் 2009 இறுதிப்பகுதியில் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால் அந்த அறிக்கை பிரேசிலையும் சீனாவையும் பாராட்டியிருந்தது.

உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா அமைந்திருந்தாலும்,  தொண்ணூறுகளின் மையப்பகுதியிலிருந்து நாட்டில் போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை 3 கோடியால் அதிகரித்துள்ளது என்று அக்ஷன் எய்ட் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரேசில் அரசாங்கத்தை, அதன் நிலச் சீர்திருத்த திட்டங்களுக்காகவும்,  ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டங்களுக்காகவும் இந்த அறிக்கை பாராட்டியுள்ளது. சீனா தனது விவசாயிகளுக்கு உதவித் திட்டங்களை அறிவித்து 5 கோடியே 80 லட்சம் பேரை பசிக் கொடுமையிலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னைய நிலைகளுடன் ஒப்பு நோக்கும் போது ஆசியாவின் வறுமை ஒழிப்பு ஓரளவு முன்னேற்றம் இருந்த போதிலும் கூட ஆபிரிக்க நாடுகளில் நிலமை மிகமிக மோசமாகவே இன்று வரை காணப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் “உலக நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படலாம்” என்று அச்சம் தெரிவித்திருந்தது.

தற்போது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ. நா.,  உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.

“வறுமையை ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார். 2015-ற்குள் வறுமையை ஒழிப்பதாக ஐ. நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்த கருத்தை இவ்விடத்தில் மீட்டுப்பார்ப்பது பொறுத்தமாக இருக்கும்.

தேர்வுக் குழுவினரின் எதிர்ப்பையும் மீறி ஒபாமாவுக்கு நோபல் பரிசு – நோர்வே பத்திரிகை தகவல்

Alfred_Nobelதேர்வுக் குழுவின் பெரும்பான்மை எதிர்ப்பையும் மீறி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக நோர்வே பத்திரிகை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

2009ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடந்த வாரம் வழங்குவதாக நோபல் பரிசு குழு அறிவித்தது. நோர்வே பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு நோபல் பரிசுக்கு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது.

நோபல் பரிசுக்கு, ஒபாமாவின் தேர்வு ஒரு மனதான முடிவு என்று தேர்வுக்குழுவின் செயலாளர் கெர் லுன்டெஸ்டாட் அப் போது கூறினார். எனினும், ஜனாதிபதி பதவி ஏற்று 9 மாதங்கள் கூட முழுமை யடையாத நிலையில் ஒபாமா நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது, சர்ச்சையை உருவாக்கியது. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நோபல் பரிசு குழு வின் பெரும்பான்மை உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி ஒபாமாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நோர்வேயில் இருந்து வெளிவரும் வெர்டென்ஸ் காங்க் என்னும் பத்திரிகை இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது, நோபல் பரிசு தேர்வுக்குழு (ஐவர் குழு) உறுப்பினர்கள் பெரும்பான்மையானோரிடம் வெர்டென்ஸ் காங்க் தொடர்பு கொண்டு கருத்து கேட்டது. இந்த உறுப்பனர்கள் முதலில் உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஒபா மாவை தேர்வு செய்வதை விரும்பவில்லை.

தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னேற்ற கட்சி என்ற இடது சாரி கட் சியை சேர்ந்த இங்கெர்-மேரி யெட்டர்ஹார்ன் என்ற பெண் தலைவர்தான் முதன் முதலில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கக் கூடாது என்று எதிர்த்தவர்.  ஒபாமா, தான் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றினாரா? என்பதை தெரிந்து கொள்ளும் முன்பாகவே நோபல் பரிசு வழங்குவது குறித்து அவர் கேள்வி எழுப்பியும் இருக்கிறார்.

எனினும், நோபல் பரிசு தேர்வுக்குழுவின் தலைவர் தோர்ப்ஜோயர்ன் ஜாக்லாண்ட், சிஸெல் ரோயன் பெக் இருவரும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தீவிரமாக சிபாரிசு செய்தனர். இவர்கள் இருவரும் தொழிலாளர் கட்சியின் பிரதிநிதிகள் ஆவர். தேர்வுக் குழுவின் தலைவரே தீவிர ஆதரவு தெரிவித்ததால் முடிவில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்குவதென தீர்மா னிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காசா மீதான இஸ்ரேலிய படை நடவடிக்கை: ஐ.நா. மனித உரிமை சபையில் மீண்டும் விசாரணை

171009gaza.jpgகாசாவில் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது  மத்தியகிழக்கிலுள்ள காசா பகுதி மீது இந்த வருடத்தின் முற்பகுதியில் நடைபெற்ற இஸ்ரேலிய படை நடவடிக்கை குறித்த தனது விவாதத்தை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் துவக்கியுள்ளது.

இது குறித்த விசாரணைகள் தென் ஆப்பிரிக்க நீதிபதி ரிச்சரட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அகிய இரண்டுமே போர்க் குற்றங்களை புரிந்ததாக குற்றம்சாட்டி, இருதரப்பும் நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவ்விசாரணைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல் விவாதம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தபோது, இப்பிரச்சினை தொடர்பான தனது பதில் நடவடிக்கைகளை ஆறு மாதங்கள் காலம் தாழ்த்துவது என மனித உரிமை கவுன்சில் முடிவெடுத்தது.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக முதலில் இதற்கு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் பாலத்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இது தொடர்பான விவாதம் உடனே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

ஊழலுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்

181009strike_july.jpgபல தென்னாப்பிரிக்க நகரங்களில், தமக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றும், ஊழல் புரியும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்றும் கோரி மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் செய்துள்ளனர்.

குறிப்பாக சாக்ஹைல் என்ற இடத்தில் அவசரகாலநிலை போன்ற ஒரு சூழல் நிலவுவதாக பிபிசி நிருபர் ஒருவர் கூறுகிறார்.

மூன்று வாரங்களாக நடக்கும் இந்த போராட்டத்தில் பல சாலைகள் மறிக்கப்பட்டன. முனிசிபல் கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன.இரண்டு அமைச்சர்களும் பல மூத்த அதிகாரிகளும் அந்தப் பகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.