கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க சீரான முறையில் வாக்குச் சாவடிகள்

sri-lanka-elections.jpgஇடம் பெயர்ந்துள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் விதத்தில் ஒழுங்கான முறையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வதியும் பகுதிகளிலேயே வாக்களிக்க தகுதியுள்ளவர்களின் பட்டியலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் நடைமுறையில் கடந்த வாக்கெடுப்பின் போது குளறுபடிகள் நடந்ததாக தேர்தல் ஆணையாளரிடம் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்தவர்களுக்கென அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள், வாக்களித்த முறை பற்றி தான் திருப்தியடைவதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

மாற்றத்திற்காகத் தமிழர் வாக்களிக்கவில்லை : சுரேன் சுரேந்திரன் (Global Tamil Forum))

Suren Surendiranசிறீ லங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. அதில் பகிரப்பட்ட இறையாண்மை கோரப்பட்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்றும் அவர்கள் சுயநிருணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பங்கீடானது இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஓர் அலகில் சமஷ்டி முறைக் கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டமும் ஒழுங்கும்இ கல்வி, சுகாதாரம் உட்படச் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றைப் பின்வரும் நிலைமைகளிற் பார்த்தல் வேண்டும்:

“எனினும், பல ஆண்டு காலம் நீடித்து ஏழு மாதங்களுக் முன்னர் முடிவடைந்த போர்க் காலத்தில் அழிந்த தங்கள் சொந்த வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பக்கூட இன்னமும் தொடங்காத இந்த நேரத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கத் தமிழர் விரும்பவில்லை. அவர்கள் இராணுவத்தினதும் ஒட்டுப்படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் மனித உரிமைமீறல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓரு கூறென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பொதுவாக அச்சத்துடன் வாழ்கின்றனர்.” (http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes).

சனவரி 26, 2010 இல் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி நான் சனவரி 8, 2010இல் மேலே தரப்பட்டுள்ளதை எழுதியிருந்தேன். சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்அத் தேர்தலில் வாக்களித்தோரின் தேசிய சராசரி 75%ஆக இருந்தும் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் பங்குபற்றியோர் தொகை (அஞ்சல் வாக்குகள் உட்பட) 25% ஆகவே இருந்தது என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html).

இந்நிலையில் சிறீ லங்காவில் நிலைமைகள் மோசமடைகின்றன என மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய அறிக்கை சிறீலங்கா அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. சிறீலங்கா அரசோ அல்லது அதனுடன் நெருக்கமாவுள்ள ஒட்டுப்படைகளோ கேள்விமுறையற்ற கொலைகளுடனும் ஆட்காணாமற்போதலுடனும் தொடர்புடையன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் தொந்தரவு செய்யப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் போரினால் பாதிப்புற்ற பகுதிகளிலேயே ஆட்காணாமற்போதல் மிகக்கூடிய தொகையில் உள்ளதென்றும் நூற்றுக் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர் எனக் கணிக்கப்பட்டுள்ளதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில கிழமைகளுக்கு முன்தான் சீறீலங்காவில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் பெறுபேறுகள் பற்றிய வரைபடமானது  இலங்கைத் தீவு இனவாரியாக இரு துருவங்களாகப் பிளவுபட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sri_lankan_presidential_election_2010).

வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியனவும் மத்திய மாகாணத்தில் தமிழர் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் நுவரேலியா மாவட்டமும் பொன்சோகாவிற்கு வாக்களித்தன. பெரும்பான்மையான மற்றைய மாகாணங்கள் இராசபக்சவிற்கு வாக்களித்தன. இரு கொடியவர்களில் பொன்சேகா சற்றுக் குறைந்த கொடியவர் எனத் தமிழர் பொதுவாகக் கருதினாலும் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மேல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் நம்பிக்கை இழந்துவிட்டதென்பதையும் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றலோ நேர்மையோ அவருக்கில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகமும் இரு கொடியவர்களில் எவர் தாம் விரும்புகின்ற அதிதீவிர தேசியவாதி என்பதையும் இனத்துவேசம் கொண்டவர் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.

சிறீ லங்காவின் பொது ஆட்சிமுறையானது கருத்து வேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அப்படியானவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் என்பதையும் பல ஊடகவியலாளரும் அரசியல்வாதிகளும் கடத்தப்பட்டமையும் கொலை செய்யப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை இராசபக்ச சிறையிலடைக்கத் தீர்மானித்துவிட்டார் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாகி விட்டது. தனி ஒருவரோ சமூகமோ கட்சியோ பிரிவினையை ஆதரிப்பதை நாட்டின் அரசியல் யாப்பே தடைசெய்கின்றது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. 

1977 ஆம் ஆண்டில் (பிரிவினைனயை எடுத்தியம்புவதைத் தடைசெய்கின்ற அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் செய்யப்படுமுன்) இலங்கையிலுள்ள தமிழர் இலங்கைத் தீவில் தமெக்கென்ற ஒரு தனிநாடு வேண்டும் என்ற தம் வேட்கையை எவ்வளவு வலுவாக எடுத்துக் காட்டினரோ அதேபோன்று வலுவுடன் உலகெங்குமுள்ள புலம்பெயர்ந்த தமிழர் தாம் குடிகொண்ட நாடுகளில் பக்கசார்பற்ற மேற்பார்வையுடன்கூடிய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதே வேட்கையை எடுத்துக் காட்டி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. எஸ்.ஜெ. இமானுவேல் அடிகளார் அவர்கள் பரிகாரமாக அல்லாது ஒரு தந்தையின் வழிகாட்டலாகத் தமிழ் உடன்பிறப்புகளுக்கு அண்மையில் எழுதிய மடலின் ( http://globaltamilforum.org/userfiles/file/GTF_Letter_from_President_to_Tamils_10_March_2010__-_Tamil_Version_-_Final.pdf ) ஒரு பகுதியைக் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்:

“பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே  எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பொழுது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம்  இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.”

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -03 : மிகப் பெரும் மீதி முறை சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு நன்மை பயக்கத்தக்கதே – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் 6 படி முறைகளில் போனஸ் ஆசனத்தை வழங்குதல்,  குறைந்த பட்சம்  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல் போன்ற இரண்டு படி முறைகளையும்,  இந்த இரண்டு படிமுறைகளினூடாகவும் இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், கடந்தவாரம் நோக்கினோம். ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் ஏனைய முறைகள் பற்றி இன்று நோக்குவோம்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளை கணிப்பீடு செய்வதாகும். இதனையும், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட உதாரணம் மூலமாகவே விளக்குவோம். அதாவது x எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும், இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A  = 5400 வாக்குகள்
கட்சி B  = 3600 வாக்குகள்
கட்சி C  = 1410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11850
நிராகரிக்கப்பட்ட வாக்கு 150
செல்லுபடியான வாக்கு 11700

இரண்டாம் படி  முறையின் கீழ் வெட்டுப் புள்ளி வாக்கினைப் பெறாத சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

மூன்றாவது படி முறை தொடர்புடைய வாக்குகளைக கணிப்பிடுதல்.

இங்கு தொடர்புடைய வாக்குகள் எனும் போது தேர்தல் முடிவுகளின் படி ஒரு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்புடைய வாக்கினைக் குறிக்கும். அதாவது,  ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து,  5 வீதத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று நீக்கப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளையும்,  நிராகரிக்கப்பட்ட வாக்குகளையும்,  கழித்துப் பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகளாகும். 

தொடர்புடைய வாக்குகள் = அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – (நீக்கப்பட்ட வாக்குகள் +  நிராகரிக்கப்பட்ட வாக்குகள்)

எமது உதாரணப்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 11, 850 . இவ்வாக்குகளில் இருந்து நீக்கப்பட்ட வாக்குகள் 540 உம், நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 150உம் கழிக்கப்பட்டு பெறப்படுவதே தொடர்புடைய வாக்குகள் ஆகும்.

அதாவது
தொடர்புடைய வாக்குகள்  = 11850 – (540+150)  = 11160
இங்கு பயன்படுத்தப்படும் வாக்குகள் 11160 மட்டுமே.

4வது படிமுறை – முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல்

ஓர் ஆசனத்தைப் பெற குறைந்தபட்சம் ஒரு கட்சி புறைந்த பட்சம் பெற வேண்டிய வாக்கே முடிவான எண்ணாகும். அதாவது ஆசன எண்ணிக்கையில் இருந்து ஒன்றைக் கழித்து வரும் விடையினால் தொடர்புடைய வாக்குகளை வகுத்தல் வேண்டும்.

முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்/ ஆசன எண்ணிக்கை – 1

எமது உதாரணப்படி
முடிவான எண்  = 11160 /  (10-1)  =  1240

ஏற்கனவே போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமையால் இங்கு மொத்த ஆசன எண்ணிக்கையிலிருந்து 1 கழிக்கப்படும். எமது உதாரணப்படி 1240 வாக்குகளைப் பெற்ற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்,  குழுக்களும் ஓர் ஆசனத்தைப் பெற உரித்துடையதாகும்.

5வது படிமுறை – முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

போட்டியிலுள்ள ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை முடிவான எண்ணால் வகுத்து முழுமையான எண்ணுக்கமைய ஆசனங்களை வழங்குதல்.

எமது உதாரணப்படி 

A கட்சி பெற்ற வாக்குகள் 5400/ 1240 = 4
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 4 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
354 வாக்குகள் மீதியாகின்றன.

B கட்சி பெற்ற வாக்குகள் 3600/ 1240 = 2
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 2 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
903 வாக்குகள் மீதியாகின்றன.

C கட்சி பெற்ற வாக்குகள் 1410/ 1240 = 1
இங்கு  முழுமையான எண்ணுக்கமைய 1 ஆசனங்கள் முதலில் ஒதுக்கப்படும்.
137 வாக்குகள் மீதியாகின்றன.

சுயேட்சைக்குழு – 1 போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சுயேட்சைக்குழு – 2 முடிவான எண்ணைப் பெறாமையால் ஆசனத்தைப் பெறவில்லை. இருப்பினும் சுயேட்சைக்குழு 2 பெற்ற 900 வாக்குகளும் பயன்படுத்தப்படாமையால் இந்த 900 வாக்குகளும் மீதியாகின்றன.

எனவே 5ம் படிமுறை முடிவின்போது 10 ஆசனங்களைக் கொண்ட X தேர்தல் மாவட்டத்தில் ஆசனங்கள் பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும்.

           கட்சி           போனஸ்    முடிவான எண்ணுக்கமைய
கட்சி   A                         01                                    04
கட்சி B                           –                                      02
கட்சி C                           –                                       01
சுயேட்சை 1                –                                         –
சுயேட்சை 2                –                                         –

5ம் படிமுறை நிறைவில் 08 ஆசனங்களே பகிரப்பட்டிருக்கும் மீதான 2 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள 6 வது படிமுறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

6ம் படிமுறை – மிகப் பெரும் மீதி முறை

பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விகிதாசார முறையில் பிரச்சினைக்குரிய ஆசனங்களைப் பெற, கடைப்பிடிக்கப்படும் மிகப்பெரும் மீதி முறையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றதெனலாம்.

5ம் படிமுறையின் போது முடிவான எண்ணுக்கமைய ஆசனங்கள் பகிரப்பட்ட பின்பு மிகுதியாக உள்ள வாக்குகளின் பெரும்பான்மைக்கமைய பிரச்சினைக்குரிய ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இம்முறையையே மிகப்பெரும் மீதி முறை என அழைப்பர்.

எமது உதாரணப்படி மிகுதிகள் வருமாறு:

A கட்சி மீதி      354 வாக்குகள்
B கட்சி மீதி      903 வாக்குகள்
C கட்சி மீதி       137 வாக்குகள்
சுயேட்சை 2     மீதி     900 வாக்குகள்

எனவே பிரச்சினைக்குரிய 2 ஆசனங்களும் ஆகக் கூடுதலான மீதியைப் பெற்றுள்ள B கட்சிக்கு ஓர் ஆசனம் என்றும்,  இரண்டாவது மீதியைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழு 2க்கு ஓர் ஆசனம் என்றும் பகிரப்படும்.

எனவே, இறுதித்தேர்தல் முடிவானது பின்வருமாறு அமையும்.

A கட்சி  போனஸ் முறையின் கீழ் 01ஆசனத்தையும்,  முடிவான எண்ணுக்கமைய 4 ஆசனங்களையும், கொண்டதாக மொத்தம் 5 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

B  முடிவான எண்ணுக்கமைய 2 ஆசனங்களையும், மிகப் பெரும் மிகுதிக்கமைய ஒரு ஆசனத்தையும், கொண்டதாக மொத்தம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்.

C முடிவான எண்ணுக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும்.

சுயேட்சைக் குழு 2 மிகப் பெரும் மிகுதிக்கமைய 1 ஆசனத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளும். மேற்குறிப்பிட்ட அடிப்படையில் X மாவட்டத்தில் 10 ஆசனங்களும், வழங்கப்படும். 

எனவே குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட மிகப் பெரும் மிகுதி முறையின் கீழ் சுயேட்சைக்குழு 2 இனால் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

2000ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எடுத்துநோக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆசனங்களை வென்றெடுக்கவும், தேசிய ஐக்கிய முன்னணி (NUA) சில ஆசனங்களை வென்றெடுக்கவும் மிகப் பெரும் மிகுதி முறையே காரணமாக அமைந்தது. கண்டி தேர்தல் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணி ஓர் ஆசனத்தை வென்றெடுத்தமைக்குக் காரணம் இந்த மிகப்பெரும் மிகுதி முறையே.

எனவே விகிதாசார தேர்தல்முறை காரணமாக சிறுபான்மைக் கட்சிகளும், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளும் அதிக பயனைப் பெறுகின்றன என்றால் மிகையாகாது.

விருப்பு வாக்குகள்

ஆசனப்பகிர்வின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்களுக்கமைய,  வெற்றி பெற்ற கட்சியில் கூடிய விருப்பத் தெரிவினைப் பெற்ற அபேட்சகர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்.

தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் முறை பற்றி அடுத்த வாரம் நோக்குவோம்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் செல்கிறது புலம் பெயர் தமிழர்கள் முழுமையான ஆதரவு நல்க வேண்டும்! : ஐ.தி சம்பந்தன் (லண்டன்)

Sampanthar_I_T(தமிழ் தேசிய கூட்டணியும் முன்னணியின் தலைவர் திரு சம்பந்தனை ஆதரித்தும், தமிழ்தேசிய முன்னணிக்கான பிரசாரங்களில் ஈடுபடவும் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று ஈஸ்ற்காம் லண்டனில் நேற்று மாலை திரு சீனிவாசம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும் முன்னாள் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். – இக்கூட்டத்தை திரு ஜதி சம்பந்தனே ஒழுங்கு செய்திருந்தார் என்றும் அறியப்பட்டுள்ளது.)

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

வன்னியில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு நல்கி தமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மே மாதம் 18ம் திகதியுடன் ஆயதப் போரராட்டம் மௌனமாகியது அதன்பின்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் அரசியலை ஜனநாயக வழிகளில் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் போராட்ட வீழ்ச்சியின் பின் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஹிட்லர் போன்ற சர்வாதிகார மகிந்த ராஜபக்ஸ ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அரசுக் கெதிராகக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல், வெள்ளை வான் கடத்தல், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரச படைகளின் துணையுடன் ஆயதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டமை, பயரங்கரவாத் தடைச்சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் பயன்படுத்தி தமிழ்மக்களை அடக்கியொடுக்கும் அரசியல் நிலையை புலம்பெயர் தமிழர்கள் நன்கு அறிவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிக்கு செல்ல முடியாதளவு உயிர் அச்சறுத்தலும். பாதுகாப்பின்மையும் இருந்து வந்ததை யாவரும் அறிவர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரன் செல்வராசா, திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு ஜெயானந்த மூர்த்தி, திரு.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அங்கு வாழ முடியாது என்று நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். ஆனால் தலைவர் திரு. சம்பந்தன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியையும் பொருட்படுத்தாது நாட்டிலிருந்து தம்மால் செய்யக்கூடிய கடமைகளை ஆற்றிவந்தனர். வன்னிப்போராட்டம் முடிவடையும் வரை விடுலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு நல்கி அவ்வியக்கத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டு நடந்துவந்ததையும் அணைவரும் அறிவர்.

மக்களால்தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்ப விடுதலைப் புலிகளின் ஊதுகுழல் என்று மகிந்த அரசாங்கம் பலவழிகளில் அவர்களைப் பழிவாங்கி வந்ததை அனைவரும் அறிவர். இந்தச் சூழலில் முள்ளிவாய்கால் வீழ்ச்சியின் பின் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்மைப்பின் மீது சுமத்தப்பட்டது இந்தப் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சூழ் நிலையைக் கருத்தில்கொண்டு ராஜந்திரமாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

25 வருட ஆயுதப்போராட்டம் வீழ்ச்சியடைந்ததால் அதிலிருந்து தமிழர்களை மீட்சிபெற வைத்து தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ள த.தே.கூட்டமைப்பு தமிழர்களின் வலுவான கட்சியாக வளரவேண்டுமென்பதில் புலம்பெயர் தமிழர்களிடையே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இலங்கையிலுள்ள பயங்கரமான சூழ்நிலையில் தமிழர்தாயகத்தில் வாழும் மக்களின் அவலநிலை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், உயர்பாதுகாப்பு வலயத்திருந்து இராணுவத்தை அகற்றல், வன்னிப்பிரதேசத்தில் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தல், போன்ற அதிமுக்கியமான பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவற்றை எவ்வாறு அணுகுவது என்பதைத் தமிழ்த்தேசிய கூட்டடைமப்பு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இந்தியாவின் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் த.தே. கூட்டமைப்புக்கு உண்டு. அதையும் அவர்கள் ராஜதந்திரமாக மேற்கொள்வார்கள் என தமிழ்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் உதவி அவசியமாக இருக்கிறது. அதே வேளை சர்வதேச நாடுகளின் ஆதரவும் தேவை. முதலில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவேண்டியது அவசியம். அதற்காக இந்தியாவிடம் சரணடையக் கூடாது, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகக் குரல் எழுப்பப்படுகிறது. அதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்.

அந்தவகையில் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் நல்லுறவைப்பேணி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு ராஜதந்திரமாக த.தே. கூட்டமைப்பு செயற்பட வேண்டும் இதைப்புரிந்து கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் சிலர் திரு. இரா. சம்பந்தன், திரு.பிரேமச்சந்திரன் ஆகியோர் சோனியா காந்தியின் வலையில் சிக்கிவிட்டதாக கோசம் எழுப்புகின்றார்கள். இலங்கையின் களநிலைமைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் கோசத்தை எழுப்பி குழப்பி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டணியன் தலைவர் திரு. இரா சம்பந்தன் அவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மிகக் கசப்பான விடயம்.

ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாக தலைநிமிர்ந்து ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாகக் கூறுபவர்கள் இந்தப்பிளவு எத்தகையது என்பதை ஆராயவோ, யதார்த்தமாக சிந்திக்கவோ மறுக்கின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு பலகட்சிகளை உள்ளடக்கிய ஒரு கட்டுப்பாடான அமைப்பு. பல கருத்துக்களைக்கொண்ட கட்சிகள் இங்கு அங்கம் வகுக்கின்றனர். முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. வன்னித் தலைமை இருக்கும் வரை கட்டுப்பாடாக விருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் வீழ்சியின் பின் தன்னிச்சையாக கருத்துக் கூற முற்பட்டுள்ளனர். தலைமைக்கு மதிப்புக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல அரசியல் அனுபமிக்க ஒருவர் கிடைத்தது பாராட்டத்தக்கது. அன்று இந்திரா காந்தியைச் சந்தித்த முத்தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திரு சம்பந்தன் அவர்களாகும்.

1952ல் திருகோணமலைத் தொகுதியின் பிரதிநிதியாக தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவர் திரு.இராசவரோதயம் அவர்கள். திரு சம்பந்தன் தமிழர் தாயத்தின் தலைநகரான திருமலையை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருபவர்கள். தமிழர்தாயக உணர்வுமிக்க அரசியல் பரம்பரையில் வந்தவர் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை திரு சம்பந்தன். இவரைப் புலம்யெயர் தமிழர் சிலர் மிக மோசமாக விமர்சிப்பதுதான் வேதனைக்குரியது.

எனினும் எந்தக் குறைபாடுகளையும், கண்டனங்களையும் பொருட்படுத்தாது த.தே. கூட்டணித் தலைமை அரசியல் நகர்வுகளைச் சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது. பிரபாகரன் அவர்களினால் நியமிக்கப்பட இரு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா அரசிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மகிந்தாவின் சிந்தனையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பற்றி புலம்பெயர் தமிழர்களோ, ஊடகங்களோ பெரிதாக கூறுவதில்லை.

ஐனாதிபதி தேர்தலின்போது திரு சிறீகாந்தா, திரு சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டைமீறி தனிவழி மேற்கொண்டனர். இவர்கள் பற்றி புலம்பெயர் ஊடகங்கள் அவ்வளவாக எழுதுவதில்லை.
இப்படியானவர்களை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொள்ளமுடியுமா? அவர்கள் பிளவு தலைமையால் ஏற்பட்டது என்ற பிரசாரம் செய்பவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.

திரு கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் செல்வராசா ஆகியோரை தமிழத்தேசிய கூட்டமைப்பு வெளியேற விட்டிருக்கக்கூடாது. அரசியல் விவேகமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மூவரையும் த.தே கூட்டணி வேட்பாளர் பட்டியில் கட்டாயம் சேர்த்திருக்க வேணடும். அவ்வாறு செய்யாததற்கான காரணங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான விளக்கத்தை தலைமை வெளியீடும் என எதிர்பார்க்கின்றோம். என்ன விளக்கத்தை கொடுத்தாலும் எமது பார்வையில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளாதது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எது எப்படியென்றாலும் த.தே. கூட்டமைப்பு என்ற ஒரு தமிழ் அரசியல்கட்சிதான் தமிழர் தாயகத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே புலம்பெயர் தமிழர்கள் அவர்களது பூரண ஆதரவை நல்க வேண்டியது அவசியமாகும்.

முஸ்லிம் மார்க்க அறிஞர் தந்தாவி ரியாத்தில் காலமானார்

எகிப்து அல் – அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தரும், முன்னணி முஸ்லிம் மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் முஹம்மத் அல் தந்தாவி தனது 81 ஆவது வயதில் நேற்று (10) ரியாத்தில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம் பெற்றது.

மாரடைப்பு காரணமாக இவர் ரியாதில் வைத்து மரணமடைந்தார். பிரபல மார்க்க அறிஞரான இவர் பல முக்கிய மார்க்கத் தீர்ப்புகளை (பத்வா) வழங்கியுள்ளார். இவர் உலக முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் அறிஞர்களில் ஒருவருமாவார்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 02 : போனஸ் ஆசன முறை சிறுபான்மையினருக்கான விமோசனம் அல்ல – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்படுவதினால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தினைவிட,  விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமாக சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்தகவு அதிகமானது என்பதைக் கடந்த வாரம் நோக்கினோம்.

பெரும்பான்மை தேர்தல் முறையினையும்,  விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய ஏனைய தலைப்புக்களை இன்று நோக்குவோம்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்முறை

முதலாம் குடியரசு அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின்படி தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும்,  நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் மூலமாகவோ, சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த முறையின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை இருந்தாலும் கூட,  மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல் கட்சியொன்றினூடாக சிறுபான்மை வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக் குறியே.

ஏனெனில்,  தேர்தல் தொகுதியொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் ஒரு வேட்பாளரை மாத்திரமே அபேட்சகராக நிறுத்தமுடியும். எனவே,  சிறுபான்மை இனத்தவர்கள் செறிவாக வாழும் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் – குறிப்பாக பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் தொகுதிகளில் பிரதான கட்சிகள் இச்சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டாது. (பல அங்கத்துவ,  இரட்டை அங்கத்துவ தொகுதிகள் நீங்கலாக)  இதனால் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானதை அடுத்து இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளால் வடக்கு,  கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எந்தவொரு பிரதிநிதியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.
யதார்த்த பூர்வமாக நோக்குமிடத்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுற்றியே வாக்காளர்களின் விருப்புக்கள் அமைவதினால் சுயேட்சையாகவோ,  அன்றேல் ஒரு சிறுபான்மைக் கட்சியின் மூலமாகவோ போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமான காரியமே.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல்

1978 யாப்பின் கீழ் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 ம் குடியரசு அரசியலமைப்பைப் போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.

யாப்பின்படி பட்டியலைத் தாக்கல் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும்போது தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவாகவுள்ள அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேட்சைக் குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கமைய பட்டியலைத் தயாரித்தல் வேண்டும். 12+03 = 15 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது பிரதான கட்சிகள் அத்தேர்தல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மைச் சமூகங்களினது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள விழைவதினால் பட்டியலில் சிறுபான்மை சமூக வேட்பாளர்களுக்கும் இடம் வழங்குதல். எனவே,  பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறையில் கிடைக்காத வாய்ப்பு இங்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தினால் கிடைக்கிறது.

வாக்களிக்கும் முறை

1972ம் ஆண்டு குடியரசு யாப்பின் கீழ் வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதி ரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடியாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். எனவே,  பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

2ம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும்.

1. தான் விரும்பும் கட்சிக்கு சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு.
2. விருப்புத் தெரிவு வாக்கு

விகிதாசார முறையின் கீழ் வாக்களிக்கும் விளக்கங்கள் 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் சிங்கள அகரவரிசைக்கமைய வரிசைப்படுத்தப்பட்டு,  அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது 3 அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.

விருப்புத் தெரிவு வாக்குமுறை வேட்பாளர் மத்தியில் போட்டி நிலையையும்,  குரோதங்களையும் ஏற்படுத்துவதால்,  விருப்புத் தெரிவு முறை பற்றி பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட சிறுபான்மையினத்தவர்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கும் நிலை சாத்தியப்படுவதை நிராகரித்து விடமுடியாது.

உதாரணமாக 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 முஸ்லிம் பிரதிநிதிகளும்,  தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மொத்தம் 3 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் விகிதாசார தேர்தல் முறையில் விருப்புத் தெரிவு வாக்குமுறையும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது.  மாறாக பெரும்பான்மைத் தேர்தல்முறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாக முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும்முறை

பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதி ரீதியாக நடைபெறும் தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் நேரடியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக x எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட A, B, C  ஆகிய வேட்பாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்.

A – 18.332
B – 16.218
C – 573

இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் A ஆவார். இதன்படி X எனும் தேர்தல் தொகுதிக்கு A என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.
1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் ஆசனங்களைப் பகிர்ந்தளிக்க பின்வரும் 6 படிமுறைகள் கையாளப்படும்.

1ம் படிமுறை : போனஸ் ஆசனத்தினை வழங்குதல்
2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள்
    குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்
3ம் படிமுறை : தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல்
4ம் படிமுறை : முடிவான எண்ணைக் கணித்தல்
5ம் படிமுறை : முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்
6ம் படிமுறை : மிகுதிப் பெரும்பான்மை முறைக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

மேற்குறித்த 6 படிமுறைகளுக்கமையவே தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகளைத் தீர்மானிப்பர். இப்படிமுறைகளினால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்புக்களும் உள்ளன. நன்மைகளும் உள்ளன. இதனைப் பின்வரும் உதாரணத்துக்கமைய ஆராய முடியும்.

உதாரண எடுகோள்

X எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும்,  இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A = 5,400 வாக்குகள்
கட்சி B = 3,600 வாக்குகள்
கட்சி C = 1,410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
மொத்தமாக செல்லுபடியான வாக்குகள் 11700

1 ம்படிமுறை – போனஸ் ஆசனத்தினை வழங்குதல்

விகிதாசார தேர்தல் முறையில் ஆசனங்களைப் பதிவு செய்யும்போது பேணப்படும் 1வது படிமுறை போனஸ் ஆசனத்தை வழங்குவதாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுள் எந்தக் கட்சி அல்லது குழு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அந்தக் கட்சி அல்லது குழுவிற்கு வழங்கப்படும் அன்பளிப்பு ஆசனத்தையே போனஸ் பிரதிநிதித்துவ ஆசனம் என அழைக்கின்றோம்.

எனவே, எமது உதாரண எடுகோளின்படி அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கட்சி A ஆகும். எனவே A கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படும்.
போனஸ் ஆசன முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு எனப்பொருள் கொள்ள முடியாது. பெரும்பாலும் இதன் மூலம் பிரதானக் கட்சிகளுக்கே வாய்ப்பு அதிகம். இலங்கையில் இதுகால வரை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போனஸ் ஆசனங்கள் பெற்ற கட்சிகளைப் பின்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம்.; வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் நன்மை பெற்றுள்ளன.

1989/ 1994 /2000/ 2001/ 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற அதிகமான வாக்குகளைக் கொண்டு போனஸ் ஆசனம் பகிரப்பட்ட முறை. மேற்குறிப்பிட்ட ஆண்டு ஒழுங்கில் மாவட்டத்தில் வெற்றியடைந்த கட்சிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம் : 1989/1994/ 2000/ 2001 / 2004
1. கொழும்பு : ஐ.தே.க / பொ.ஜ.மு /ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.  
2. கம்பஹா:  ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
3. களுத்துறை: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
4. கண்டி: ஐ.தே.க /ஐ.தே.க /பொ.ஜ.மு / ஐ.தே.க/ ஐ.தே.க.
5. மாத்தளை : ஐ.தே.க/பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
6. நுவரெலியா : ஐ.தே.க/ ஐ.தே.க / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
7. காலி : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
8. மாத்தறை : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
9. ஹம்பாந்தோட்டை:  ஐ.தே.க / பொ.ஜ.மு / ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஜ.மு. 
10. யாழ்ப்பாணம்: சுயேட்சை/ சுயேட்சை/ ஈ.பி.டி.பி/ த.ஐ.வி.மு/  இ.த.அ.க
11. வன்னி : த.வி.கூ/ புளொட் / டெலோ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
12. மட்டக்களப்பு:த.வி.கூ/ த.வி.கூ / த.வி.கூ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
13. திகாமடுல்லை: ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஐ.மு/ ஸ்ரீ.ல.மு.க /பொ.ஜ.மு. 
14. திருகோணமலை: ஸ்ரீ.சு.க/ ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க /  இ.த.அ.க
15. குருநாகலை : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
16. புத்தளம்: ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
17. அநுராதபுரம்:  ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு
18. பொலன்னறுவை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஜ.தே.க / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
19. பதுளை: ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
20. மொனராகலை: ஐ.தே.க / பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / பொ.ஐ.மு /  பொ.ஜ.மு. 
21. இரத்தினபுரி : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
22. கேகாலை: ஐ.தே.க / ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போனஸ் ஆசன முறையால் ஆளும்கட்சிக்குத் தன் பலத்தை ஓரளவேனும் அதிகரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இம்முறை காணப்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் இதுவரை நடைபெற்ற 5 பாராளுமன்ற தேர்தல்களின் போதும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.க.கட்சியும், பொ.ஐ. முன்னணியுமே முன்னணியில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1/20 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல். வெட்டுப்புள்ளி வாக்குக் கணிப்பு, சிறுபான்மைக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , சிறிய கட்சிகளின் வளர்ச்சிக்கும், பெரிதும் தடையாகும். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்த வெட்டுப்புள்ளி 1/8 பங்கு (அதாவது 12.5 % ஆகக் காணப்பட்டது. 1988ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பிரகாரமே 1/20 பங்காக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உதாரண எடுகோளை எடுத்து நோக்கும்போது வெட்டுப்புள்ளிக் கணிப்பு பின்வருமாறு அமையும். வெட்டுப்புள்ளி வாக்கு = செல்லுபடியான வாக்கு X 1/20 எமது உதாரணத்தின்படி =11700X1/20 =    585

எனவே 585 வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத கட்சிகள், குழுக்கள் நீக்குதல் வேண்டும். இதன்படி 540 வாக்குகளைப் பெற்ற சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும்,  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும், 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த கால அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து இம்முறை போட்டியிடக்கூடிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறாமல் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய முறைப்பற்றியும, சிறுபான்மைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைப் பற்றியும் தொடர்ந்தும் இடம்பெறும்.

(தொடரும்…….)

புலம்பெயர்ந்த சமூகத்திலும் தொடரும் குடும்ப வன்முறைகள்! லண்டனில் கைவிடப்பட்ட ஒரு கிராமத்துப் பெண்ணின் பதிவு

Domestic_Violence._._._._._. 

 மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராவும் விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பெண் விடுதலையை பறைசாற்றும் இந்நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டமோ அல்லது மேற்கு நோக்கிய புலம்பெயர்வோ தமிழ் ஆணாதிக்கச் சிந்தனை முறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இப்பெண்ணுடைய பதிவு வெளிப்படுத்துகின்றது. சம்பந்தப்பட்ட நபர்களுடைய பெயர் மற்றும் விபரங்கள் நீக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னமும் தொடர்கின்றது. இப்பெண் இலங்கையில் இருந்த சமயம் ஐரோப்பிய பெண்ணிலைவாதி ஒருவர் இலங்கை சென்ற சமயம் அவரைச் சந்தித்து உதவி நாடியுள்ளார். அப்பெண்ணிலைவாதியுடன் தொடர்புகொண்டு லண்டன் குரல் இதனை உறுதிசெய்துள்ளது. தான் ஏதும் நடவடிக்கைகள் எடுத்தால் அது ஊரில் உள்ள பெண்ணுக்கும் அவரது உறவினர்களுக்கும் கூட ஆபத்தாக அமையும் என்பதால் எதனையும் மேற்கொண்டு செய்யவில்லையென அப்பெண்ணிலைவாதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

._._._._._. 

”அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். சித்திரவதைகளால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.”

._._._._._. 

நான் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எனக்கும் லண்டனில் வசிக்கும் என் மாமாவின் மகனுக்கும் 1994ல் அவரின் வீட்டாரின் அவரின் விருப்பத்தின் பேரில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தாரின் பல தொல்லைகள் இன்னல்களுக்கு மத்தியில் மூன்று வருடங்கள் கழித்து 11/6/1997ல் இந்தியாவில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு மூன்று வருடங்களுக்க முன்னரே வீடு கட்டச் சொன்னார்கள். தாலி கூறை பாஸ்போட் எடுக்கச் சொன்னார்கள். சீதனமாக ஜந்து லட்சம் வாங்கினார்கள். கலியாணச் செலவு போக்குவரத்துச் செலவையும் (அவரது அண்ணாவுக்கும் சேர்த்து) எடுக்கச் சொன்னார்கள். எனது அப்பா இறந்துவிட்டார். பல கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்பட்டு என்னுடைய அம்மா சகோதரங்கள் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

திருமணம் நடந்த அன்று ஒருநாள் மட்டுமே என்னைத் தன்னுடன் தங்கவைத்தார். அவர் அவரது சகோதரருடன் தனி வீட்டிலும் என்னை என் சகோதரியுடன் வேறு ஒரு வீட்டிலும் தங்கச் செய்தார். திருமணம் முடித்த ஏழாவது நாள் 19/06/1997 அன்று என்னைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பிவிட்டு அவரும் அவரது அண்ணாவும் 25ம் திகதிவரை தங்கியிருந்துவிட்டு லண்டன் திரும்பினார்.

லண்டன் திரும்பியதும் மன்னிப்புக் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவசரப்பட்டு யோசிக்காமல் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிட்டேன் நாங்கள் ஒரு மாதம் வரையாவது தங்கியிருக்கலாம் என்று போனிலும் மன்னிப்புக் கேட்டார். அதன்பின்னர் ஒரு வருடம்வரை ஒருசில கடிதங்கள் போட்டார். ஒரு சில தடவைகள் போனிலும் பேசினார். அத்தோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். அதனால் நான் பல வழிகளிலும் அவரது சகோதரங்களாலும் அவர்களது நண்பர்களாலும் அவமானங்களையும் பல துன்பங்களையும் அடைந்தேன்.

அதனால் 2000 ஆண்டு அவரிடம் விவாகரத்துக் கேட்டு கடிதம் போட்டேன். அதற்கு அவர் நாங்கள் இந்தியாவிற்குப் போய்ப் பேசித் தீர்ப்போம் என்றார். அதன் பின்னர் எதுவித தொடர்பும் இல்லை. 2002ல் தன்னை மன்னிக்கும்படியும் நான் திருந்திவிட்டேன் இனிமேல் இப்படியான பிழைகளைச் செய்ய மாட்டேன் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்றார்.

அவரால் பல தடவைகள் ஏமாந்ததாலும் அவரின் சகோதரங்களால் துன்பங்களை அடைந்ததாலும் நான் மறுத்தேன். அதனால் லண்டனில் இருக்கும் அவரது சகோதரர் அண்ணி நண்பர்கள் மூலம் என் குடும்பத்தாருடன் பேசவைத்து எனக்கு பல வாக்குறுதிகளைத் தந்தார். உங்களை நான் கடைசிவரைக்கும் கைவிட மாட்டேன். சந்தோஷமாக வைத்திருப்பேன். ஊரில் என் குடும்பத்தாரால் நீங்கள் நேரடியாகவே நிறையவே பாதிக்கப் பட்டதனால் அவர்களுடன் நட்புக்கொள்ளத் தேவையில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்கவைத்து 21/06/2003ல் அவர் இலங்கை வந்து 05/07/2003 என்னை லண்டன் அழைத்து வந்தார்.

ஆனால் ஒரேயொரு வாரம்தான் நாங்கள் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டோம். அதன் பின்னர் அவர் என்னைப் பலவழிகளிலும் புறக்கணித்து காயப்படுத்தி மட்டம் தட்டினார். என்னை எங்கும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. அவரது சகோதரர் வீட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்வார். வேறு எங்கு செல்வதானாலும் அவர் தனியாக என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்.

நான் எனது நண்பர்கள் உறவினர்களுடன் போனிலும் பேச அனுமதியில்லை. அவரது அண்ணா வீட்டாருடன் மட்டுமே கதைக்க வேண்டும். போன் நம்பரையும் அடிக்கடி மாற்றுவார். நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், கனடா, கொலண்ட், சிங்கப்பூர், துபாய் என்று பல நாடுகளிலும் உள்ள நண்பர்களைப் பார்க்க அடிக்கடி செல்வார். நானும் வருவதாகக் கேட்டால் எனக்கு விசா எடுப்பது கஷ்ரம் என்று ஒவ்வொரு தடவையும் மறுத்துவிடுவார். அதனால் நான் மிகவும் நொந்து போனேன். வீட்டிற்குள்ளேயே அநாதையான தனிமையான பயந்த சிறை வாழ்க்கையே வாழ்ந்தேன்.

நான் எங்கள் நாட்டு கலை கலாச்சாரப் பண்பாடுகள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்ததால் அவரை பூரணமாக நம்பி கடவுளாக மதித்து அவருக்காகவே வாழ்ந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை. அவரது அன்பு, ஆறுதல், ஆதரவு, அரவணைப்பு, பாதுகாப்பு எதுவுமே இல்லாது அநாதையாகவே வாழ்ந்தேன்.

அவர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்பவர். வெளியில் எல்லோரிடமும் நல்லவர் மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் வீட்டில் ஒரு ஊத்தைப் பெண்ணை பல வருடங்களாக வைத்திருந்தார். அவளை நான் சொல்லித்தான் அனுப்பினார். அதுமட்டுமல்ல மட்டமான கிளப்புகள் மட்டமான தொடர்புகளும் உள்ளவர். அப்படியெல்லாம் அவர் மோசமான ஆளாக இருந்தாலும் நான் அவரை அதிகமாக ஆழமாக நேசித்தேன்.

அதுமட்டுமல்ல அவர் என்னுடன் அதிகமாகப் பேசவும் மாட்டார். இரண்டொரு வார்த்தைகளே பேசுவார். சில சமயங்களில் அதுகூட பேசமாட்டார். ஆனால் நண்பர்கள் உறவினர்களுடன் மணிக்கணக்காகப் பேசுவார். எனக்கு அவர் விரும்பும் ஆடைகள் அணியவும் அவர் விரும்பும் சிலருடனேயே பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிப்பார். ஆனால் நண்பர்களிடம் நான் அழகாக இல்லை. நாகரீகமாக இல்லை ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் விமர்சிப்பார். என்னுடன் பெயரளவிற்கே வாழ்க்கை நடாத்தி எனக்கு எதுவுமே தெரியாமல் ஆக்கி புறக்கணித்து ஒதுக்கியே வைத்தார். நான் அவருக்காக என் குடும்பம், வேலை, என்னுடைய மேல்படிப்பு இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். எனக்கு லண்டனில் எதுவும் தெரியாது. அவரையே உலகமாக நினைத்து வாழ்ந்தேன். ஆனால் அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் 16 வருடங்களாக என் வாழ்க்கையை நாசம் பண்ணி விட்டார்கள்.

25/12/2004ல் என்னை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அவரின் நடவடிக்கைகளால் லண்டன் வர மறுத்தேன். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது நாங்கள் ஒரு புதுவாழ்க்கை வாழலாம் என்று அவரின் தாயின் படத்தின்மீது சத்தியம் செய்து என்னை அழைத்து வந்தார். ஆனால் அவர் எள்ளளவும் திருந்தவில்லை. 2006 ஜனவரி அவரின் நண்பரின் கல்யாணம் என்று என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சென்றதும் அவர் என்னை திருமணத்திற்கு அழைத்துப் போக செல்ல விரும்பவில்லை. அவரது கொழும்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு என்னை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் சென்றனர்.

லண்டன் திரும்பியதும் காரணமே இல்லாமல் என்னுடன் அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். செத்துத் தொலை என்று சொல்லுவார். எங்களுக்குப் பிள்ளைக்கான எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். இப்படியான சித்திரவதைகளால் மனதளவில் பெரும் பாதிப்படைந்த நான் அவரது கொலை மிரட்டல்களுக்கும் பயந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அவர் நீ செத்தால் சா ஆனால் எனக்குப் பாதுகாப்புத் தேவை என்று சொல்லி பொலிசாரை வரவழைத்தார். அவர்கள் வந்து எங்களைச் சமாதானம் செய்து தைரியம் சொல்லிவிட்டுச் சென்றனர்.

அவருக்கு உயிரணுக்கள் குறைபாடு இருந்தது. அதனை என்னிடமும் மற்றவர்களிடமும் மறைப்பதற்காகவும் என்னை இந்தியாவில் கைவிடுவதென்று அவரும் அவரது சகோதரர்களும் நண்பர்களும் முடிவெடுத்திருந்தனர். நானும் இது தெரியாமல் அவருடன் இந்தியா சென்றேன். இதெல்லாம் பின்னர்தான் தெரிய வந்தது.

அவருக்கு மருத்துவ விசா எனக்கு சுற்றுப்பயண விசாவும் எடுத்திருந்தார். ஏன் என்று கேட்டதற்கு அது தவறுதலாக நடந்தது என்றார். 21/06/2006ல் இந்தியா சென்று சிகிச்சை ஆரம்பித்தோம். சிகிச்சை கடினமானதாகவும் நீண்டகாலம் எடுக்கும் என்றும் கூறி என்னை இந்தியாவில் அவரது நோர்வேயில் வசிக்கும் நண்பரின் வீட்டில் தங்கவைத்தார். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதென்றால் பொலிஸ் பதிவு தேவை. 10 நாட்கள் தங்கிச் செல்லும் அவருக்கு எடுத்தார் ஆனால் தங்கியிருக்கும் எனக்கு எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் உங்களுக்குத் தேவையில்லை என்ன செய்வதென்று எனக்குத் தெரியும் என்றார்.

பொலிஸ்பதிவு இல்லாததால் நான் பல சிரமங்களை அனுபவித்தேன். அவர் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் என்னுடன் தங்குவதற்கோ மருத்துவமனைக்கு வருவதற்கோ விரும்புவதில்லை. வரச் சொன்னால் சண்டைபோட்டு அடிப்பார். கழுத்தை நெரிப்பார். அவரின் இவ்வாறான நடவடிக்கைகளாலும் கடுமையான தொடர்ச்சியான சிகிச்சை முறைகளாலும் உதவிக்கு ஆள் இல்லாததாலும் உடல் உள ரீதியாக அதிகமாகப் பாதிக்கப்பட்டேன். அதனால் சிகிச்சை 4 தடவைகள் தோல்வியாகவே முடிவடைந்தது. ஜந்தாவது தடவை சரிவந்தது. நான் உதவிக்காக எனது தாயை அழைக்கச் சொன்னேன். அவர் மறுத்தார். எனது சகோதரியே செலவுசெய்து எனது தாயை இந்தியா அனுப்பினார்.

அவர் சிகிச்சைக்கு வந்து லண்டன் திரும்பியவர் 5 மாதங்கள் கழித்து 03/12/2007ல் இந்தியா வந்தார். 05/12/2007 அன்று பிள்ளையை வெளியில் எடுத்தால்தான் நீங்கள் பிழைப்பீர்கள் என்று (பிள்ளை ஆரோக்கியமாக இருந்தது) வைத்தியர்கள் சொன்னார்கள். நான் இறந்தாலும் பரவாயில்லை பிள்ளை வேண்டும் என்றேன்.என் கணவர் மறுத்து விட்டார். என் கணவரால்தான் பின்னர் ஜந்தாவது மாதத்தில் பிள்ளையை சாகடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. எல்லாம் முடிந்து 4 மாதத்திற்குப் பின்னரே அங்கு வேலை செய்பவர்கள் மூலம் அறிந்தேன்.

அவர் 16/12/2007 லண்டன் திரும்பிவிட்டார். என்னை 2 மாதங்கள் கழித்து கூட்டிப் போவதாகச் சொன்னார். ஆனால் போனவர் வரவேயில்லை. ஒவ்வொரு மாதமாக நேரம் இல்லை என்று நாட்களைக் கடத்திக் கொண்டே போனார். அவர் 8, 9 தடவைகள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, கொலன்ட் என்று அவரது நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கச் சென்றார். 21/06/2008 இருந்து எனக்குப் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார்.

எனது அம்மாதான் என்னுடன் இருந்தா. அவர் லண்டன் கூட்டிப்போக மாட்டார் என்று 16/06/2008ல் அம்மா இலங்கை சென்றுவிட்டார். அவரது நோர்வே நண்பன் (வீடு அவருடையது) சகோதரியை (இந்தியாவில் வசிப்பவர்) என்னுடன் தங்கவைத்து அவர்மூலம் என்னை பலமுறை கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். காஸ்சினை திறந்துவிடுவா. வெளியில்விட்டு கேற்றைப் பூட்டுவா. பின்னர் ஒரு மாதம் சாப்பாடு இல்லாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்தா. வெறும் பிஸ்கட் தண்ணியுடனேயே ஒரு மாதம் வாழ்ந்தேன். அதுவும் வேலைக்காரி வீட்டுக்காரிக்குத் தெரியாமல் வாங்கிவந்து தருவா.

20/09/2008 இரவு 7 மணியளவில் வீட்டைவிட்டுத் துரத்தினார்கள். எங்கு செல்வது என் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கையில் பணமும் இல்லாது தவித்தேன். அந்த நேரம் இந்தியாவில் வசிக்கும் என்னுடன் படித்த நண்பி என்னை அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து அவர் போன் செய்வதையும் நிறுத்திவிட்டார். நான்தான் அவருக்குப் போன் செய்வேன். ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு கட்பண்ணி விடுவார். 27/10/2008 லண்டன் வரும்வரை நகைகளை விற்றே சாப்பிட்டேன்.

நான் இந்தியாவில் இருக்கும்போது சிங்கப்பூரில் அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து 06/06/2008 அவருக்கு மறுமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்தவிடயம் எனக்குத் தெரிந்ததும் நான் லண்டன் திரும்ப பணம் கேட்டேன் தர மறுத்துவிட்டார்.

அவரது லண்டனில் வசிக்கும் நணபர் ஒருவரும் எனது நண்பி என் சகோதரங்கள் அம்மா எல்லோரும் சேர்ந்தே எனக்கு பணஉதவி செய்துள்ளார்கள். பொலிஸ் பதிவு இல்லாததால் எனக்கு உடனே வர இரண்டரை லட்சம் இந்தியன் பணம் தேவைப்பட்டது. எனது PRஜ கான்சல் பண்ணுவதற்காகத்தான் அவர் 2 வருடங்கள் 4 மாதங்கள் வேண்டுமென்றே என்னை இந்தியாவில் தங்க வைத்தார்.

அத்தனை சிரமங்களையும் அனுபவித்து லண்டன் வந்த என்னை ஈவு இரக்கம் மனச்சாட்சி எதுவுமே இல்லாமல் கதவை திறக்காமல் அறைக்குள் இருந்துகொண்டு 2.30 தொடக்கம் இரவு 8.30 வரைக்கும் கதவடியிலேயே தங்க வைத்தார். உடல் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நான் கௌரிவிரதத்தோடும் காச்சலோடும் மிகவும் சிரமப்பட்டேன். அவரது நண்பர் ஒருவரை (எனக்கு 3 வருடங்களாகத் தெரியும் 3 வருடங்கள் அவனுக்கு சாப்பாடு கொடுத்திருக்கன்றேன்.) தற்செயலாக சந்திக்க வைப்பதுபோல் சந்திக்க வைத்து என்னை அவனது வீட்டிற்கு போகச் செய்தார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நான் எனது கணவரின் லண்டனில் வசிக்கும் அண்ணாவிடம் உதவி கேட்டேன். காலையில் பார்க்கலாம் இப்போ அந்த நண்பருடன் செல்லுங்கள் என்றார். நானும் அவனுடன் சென்றேன். அவனிடம் என்னைக் கொலை செய்யச் சொல்லி இருக்கின்றார்கள். அவன் என்னை அடைத்து வைத்திருந்தான். நான் அங்கிருந்து தப்பி குயின்ஸ்வேய்க்கு வந்து பொலிசாரின் உதவியை நாடினேன். அவர்கள் உதவிசெய்ய மறுத்து விட்டார்கள். வுமன் சென்ரருக்கு போகச் சொன்னார்கள். காவல்காரனும் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. என் கணவர் அப்படி எழுதிக் கொடுத்திருக்கின்றார்.

நான் எனது கணவரின் அண்ணாவிடம் மறுபடியும் உதவி கேட்டேன். அவர் மறுத்து விட்டார். அவரது வீட்டிற்கு வரவேண்டாம் என்றார். ஊருக்குப் போங்கள் இல்லையென்றால் எங்காவது ஒரு மூலையில் போய் தங்குங்கோ என்றார். அழுதுகொண்டே வீதியில் 5 மணித்தியாலங்களாக குளிரில் உறைந்து போயிருந்தேன். அதன் பின்னர் எனது நண்பியின் அக்கா வந்து என்னை அழைத்துக்கொண்டு போனார்.

திட்டம் போட்டே என்னிடம் டிவோஸ் எடுத்து ஊருக்குப் போய் திருமணம் 09/2009ல் செய்துகொண்டு வந்து மனச்சாட்சி இல்லாமல் குடும்பம் நடத்துகின்றார். மில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கின்றார். (இயக்கக் காசுகளும் எக்கச்சக்கமாக அவரிடம் மாட்டியுள்ளது.) எல்லோரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கின்றார். சொந்தமாக குயின்ஸ்வேயில் 2பெட்ரூம் 1 லிவிங் ரூம் பிளாட் இருக்கிறது. கொலின்டேலில் 4 பெட்ரூம் வீடு உள்ளது. (அதனை அண்ணாவின் மகளின் பெயருக்கு மாற்றியிருக்கின்றார்.). 6 மணி ரான்ஸ்பர் கடை 3 கார் வைத்திருக்கின்றார். ஒரு கார் அண்ணாவுக்கும் இன்னொரு நணபருக்கும் கொடுத்திருக்கின்றார்.

எனக்கு எதுவுமே தர மாட்டாராம் என்னைக் கொலை செய்தே தீருவாராம். அவர் பணத்தினால் எனது வக்கீல் உட்பட அனைவரையும் விலைகொடுத்து வாங்கி விட்டாராம். என்னால் எதுவுமே பண்ண முடியாதாம். எலும்புத் துண்டை நாய்க்கு வீசுவது போல வீசிக் கொண்டிருக்கிறாராம். அதனால் எல்லோரும் தன் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றார்களாம்.

சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) – புன்னியாமீன்

international-womens-day.jpgஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும்,  அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னன் வாக்களித்தான். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தான். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும்  கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள்  இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று  தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் ‘விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக்குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தான். அந்த நாள் மார்ச் 8. 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, “மகளிர் தின”மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!

1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜெர்மனில் The Vote for Women  மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னன் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8 ஐ, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுஸ்டிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.

ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ
கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945-ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது..

1975- ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977-ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம்இ உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை  (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் Feminism என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

முதலாளித்துவ வாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY)  சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS)  பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE)  மானுடவியல் (ANTHOROPOLOGY)  உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள்  மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே. சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை… இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்…. வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.

பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

இவ்விடத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில்  ‘அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.

பழி நாணுவார் : ஷோபாசக்தி

Shoba_Sakthiஇந்தக் கட்டுரை இரு பகுதிகளாலானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி, உருவாகிவரும் ‘செங்கடல்’ திரைப்படம் குறித்தும் நான் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்றும் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியான செய்திகளின் / விமர்சனங்களின் யோக்கியதையை ஆராய்வது. முதற்பகுதி, எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இப்போது இணையத்தளங்களில் என்மீதும் எனது தோழர்கள் மீதும் படுதீவிரமாகச் செய்துவரும் சேறடிப்புகளிற்கான எதிர்வினை.

கட்டுரையின் முதற் பகுதியான யமுனா ராஜேந்திரன் மீதான எதிர்வினையைப் படிக்கும்போது “என்ன இவன் எப்போது பார்த்தாலும் யமுனாவோடு மல்லுக்கு நிற்கிறானே” என்று நீங்கள் சலிப்படையக் கூடும். எனக்கும் கூட யமுனாவின சேறடிப்புகளிற்கும் அவதூறுகளிற்கும் பதிலளித்து பதிலளித்துச் சலித்துத்தான் போய்விட்டது. “நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன்: காலனிய எதிர்ப்பு இந்துத்துவமும், மேற்கத்திய மற்றும் மார்க்சிய எதிர்ப்பு அரசியல் இஸ்லாமும், நரேந்திர மோடியும் பின்லாடனும் பின்நவீனத்துவ உற்பத்திகள்தான் “ என்றெல்லாம் திட்டவட்டமாகக் கிறுக்குத்தனமாக எழுதிக் கொண்டிருப்பவரிடம் நான் எதைத்தான் அரசியல்ரீதியாக விவாதிக்க முடியும்? ‘குமிஞ்சான்’, ‘குடிகாரன்’ என்றெல்லாம் கட்டுரைகளில் ‘பட்டம் தெளிச்சு’ சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருப்பவரிடம் நான் எதைத்தான் ஆரோக்கியமாக விவாதிப்பது?

இந்த அவதூறுகள் வெறும் தனிமனிதத் தூஷணைகள் என்றளவில் நின்றிருந்தால் அவை என்னைச் சிறிதளவேனும் வருத்தும் வல்லமையற்றவை. அதாவது இப்போது இணையத்தளங்களின் பின்னூட்டப் பகுதிகளில் பல்லி, பூரான் என்று சில சல்லிப் பயல்கள் வந்து எழுதுவதுபோல அவை தனிமனித தூஷணைகள் என்றளவில் நின்றுவிட்டால் எனக்கு அவற்றால் எந்தச் சலனமோ வருத்தமோ பிரச்சினையோ கிடையாது. “பொதுக் காரியங்களில் இருப்பவன் மானம் பார்க்கக் கூடாது” என்ற தந்தை பெரியாரின் வார்த்தை எனக்கு வழிகாட்டி. நாய் கடித்தால் பதிலிற்குத் திருப்பி நாயைக் கடிப்பதும் நமது மரபல்ல.

ஆனால் யமுனா ராஜேந்திரனின் சேறடிப்புகளும் அவதூறுகளும் வெறும் தனிநபர் தூஷணை என்ற வகைக்குள் அடங்கிவிடுவன அல்ல. நாங்கள் வரித்திருக்கும் பாஸிச எதிர்ப்பு அரசியலையும் சாதியொழிப்பு அரசியலையும் நாங்கள் முன்னிறுத்திய விளம்புநிலை அரசியற் சிந்தனைகளையும் தனது கருத்துப் பலத்தால் அல்லாமல் வெறும் அவதூறுகளின் மூலம் சுரண்டிப் பார்க்க யமுனா இடையறாது முயற்சிக்கும்போது, சலிப்பையும் அலுப்பையும் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு நானும் யமுனா ராஜேந்திரனுக்கு எதிர்வினை செய்தே ஆகவேண்டியிருக்கிறது.

1.

தோழர் அ.மார்க்ஸ் இதுவரை எத்தனையோ உண்மை அறியும் குழுக்களிற்குத் தலைமை தங்கிச் சென்று ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் சந்திக்காத அவதூறுகளை அவர் அண்மையில் வெளிப்படுத்திய ஓர் உண்மையால் அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அவர் தனது அண்மைய நூலொன்றின் முன்னுரையில் யமுனா ராஜேந்திரன் ‘மூடத்தனமானவர்’ என்ற உண்மையை வெளியிட்டுள்ளதாலேயே புதிய அவதூறுகளை அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இவ்வளவிற்கும் இந்த உண்மையை அ. மார்க்ஸ்தான் முதன் முதலில் கண்டுபிடித்துள்ளார் என்று நாம் கருதினால் அது வரலாற்று வழு. ஏற்கனவே பேராசிரியர்கள் சிவசேகரம், நுஃமான், தோழர் எஸ்.வி.ராஜதுரை போன்ற பல அறிஞர்கள் கண்டெடுத்துத் தங்கள் எழுத்துகளில் நிறுவிக்காட்டிய உண்மையொன்றையே அ. மார்க்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்று மட்டுமே நாம் சொல்லிக் கொள்ளலாம். இந்த உண்மையை அ.மார்க்ஸ் எழுதியதால் ‘கீற்று’ இணையத்தளத்தில் யமுனா ராஜேந்திரன், அ.மார்க்ஸை இலக்கு வைத்து ‘அரசன் அம்மணமாக வருகிறான்’ என்று ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

யமுனா ராஜேந்திரனுடன் வாதிடுவது, கருத்துப் போர் புரிவதெல்லாம் மிகவும் துன்பமானது. அந்தத் துன்பத்தை தந்தை பெரியாரின் சொற்களில் ” நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது” என்று விளக்கலாம். ஒவ்வொரு தடவையும் பதினைந்து வருடங்களிற்கு முன்பே பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட கேள்விகளோடு மறுபடியும் மறுபடியும் யமுனா வருவார். பத்து வருடங்களுக்கு முன்னமே அவரின் பதில்களின் குளறுபடிகளை நாம் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டியிருந்தபோதும் அதே பதில்களுடனும் வருவார். கேள்வியும் ரீமிக்ஸ், பதிலும் ரீமிக்ஸ். ஆனால் உயிர்மை, கீற்று, தேசம், இனியொரு என்று புதுப் புதுத் தியேட்டர்கள்.

இப்படியாகத்தான் சரியாக இரண்டு வருடங்களிற்கு முன் ‘ தேசம் நெற்’றில் ஷோபாசக்தியை அம்பலப்படுத்துகிறேன், அலங்கோலப்படுத்துகிறேன் என்றொரு பிரகடனத்துடன் யமுனா பத்துப் பக்கங்களிற்கு ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். வழமைபோலவே என்னோடு சேர்த்து சுகனுக்கும், அ. மார்க்ஸுக்கும் யமுனா பழிப்புக் காட்டியிருந்தார். நானும் சுகனும் உடனேயே மிகுந்த பொறுப்புணர்வுடன் பதிலுக்கு ஆளுக்குப் பத்துப் பத்துப் பக்கங்களில் தனித் தனியாக மறுத்தான் கட்டுரைகளை எழுதி ‘சத்தியக் கடதாசி’யில் வெளியிட்டோம். எங்களது கட்டுரைகளுக்குப் பத்து நாட்களில் பதில் தருவதாகத் தேசம் நெற்றில் அறிவித்தார் யமுனா. பத்து, இருபது, முப்பது நாட்கள் பொறுத்தோம். நாற்பதாவது நாளாகியும் பதில் வராததால் ‘யமுனா ராஜேந்திரனைக் காணவில்லை’ என்று விளம்பரம் வேறு வெளியிட்டுப் பார்த்தோம். அந்தக் கட்டுரைகளில் நாங்கள் எழுப்பிய கேள்விகளிற்கு இன்றுவரைக்கும் பதில்கள் வந்தபாடில்லை. யமுனாவின் கட்டுரையில் இருந்ததெல்லாம் பொய்களும் அவதூறுகளுமே என்று நாங்கள் சான்றாதாரங்களோடு நிறுவியும் அவை குறித்து இதுவரை எந்த விளக்கமோ வருத்தமோ யமுனாவிடமிருந்து வெளியாகவில்லை. நாங்களும் பதிலோ, விளக்கமோ வருமெனக் காத்திருந்தோம். குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம். அந்த விவாதத்தை அப்படியே போட்டுவிட்டு அந்த விவாதத்தில் தான் எழுதிய பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் வெவ்வேறு வடிங்களில் வெவ்வேறு இணையத்தளங்களிற்குத் தாவித் தாவி யமுனா திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டேயிருக்கிறார்.

யமுனாவின் இந்த மாயப் போரின் கடைசி ‘அட்டாக்’ தான் அந்தக் கீற்றுக் கட்டுரை. அ.மார்க்ஸை இலக்கு வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் வழமைபோலவே என்னையும், சுகன், ஆதவன் தீட்சண்யா, பௌசர், சுகுணா திவாகர் போன்ற தோழர்களையும் இணைத்தே அவர் பழித்திருக்கிறார். இம்முறை தோழர். எஸ்.வி. ராஜதுரையையும் தனது அவதூறு வளையத்திற்குள் கொண்டுவர யமுனா முயற்சித்துள்ளார். “எஸ்.வி.ஆருடையதும் அ.மார்க்ஸினதும் தற்போதைய ஈழம் குறித்த அரசியல் பார்வைகள் தமிழ்த் துவேஷ சிங்கள இனவாத மார்க்ஸியர்களின் பார்வையை ஒத்தது” என்கிறார் யமுனா. “இவர்களது மனித உரிமைப் பிரகடனங்கள் ஈழத்தைப் பொறுத்தவரை பசப்பலானவை” என்றும் சொல்கிறார் யமுனா.

கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் ‘புலம்பெயர்ந்த இலங்கையர்களிற்கான சர்வதேச ஒன்றியம்’ (அய்.என்.எஸ்.டி) நடத்திய கருத்தரங்கில் எஸ்.வி.ஆர். கலந்து கொண்டதே யமுனாவின் குற்றச்சாட்டின் அடிப்படை. நான் அறிந்தளவிற்கு அய்.என். எஸ்.டி. குறித்து முதலில் சொல்லிவிடுகிறேன்: புலம் பெயர்ந்த இலங்கையர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து செயற்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் சுனந்த தேசப்பிரிய, சனத் பாலசூரிய, மஞ்சுள வெடிவர்த்தன எழுபதுகளில் ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினராயிருந்த ரஞ்சித், ந.சுசீந்திரன், ‘உயிர்நிழல்’ லஷ்மி, ‘சரிநிகர்’ சரவணன், சிவராசன், கிருஷ்ணா போன்றவர்கள் இந்த அமைப்பை வழிநடத்திச் செல்பவர்களில் முதன்மையானவர்கள். கறாரான அரசியல் வேலைத்திட்டங்கள் இவர்களிடம் இல்லாத போதும் இலங்கையில் அனைத்து மக்களிற்குமான சனநாயக உரிமைகளும் ஊடகச் சுதந்திரமும் உறுதி செய்யப்படவேண்டும் என்ற முன்னோக்கில் இவர்கள் சர்வதேச நாடுகளில் கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். அரசின் மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி அறிக்கைகளையும் பிரசுரங்களையும் வெளியிடுகிறார்கள். குறிப்பாக இவர்கள் மகிந்த ராஜபக்ஷவின் அரசைக் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருப்பவர்கள். ‘சனல் 4′ல் வெளியாகிய இலங்கை அரசபடைகளின் படுகொலைகள் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டவர்கள் அய்.என்.எஸ்.டி என்றே இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது. குறிப்பாக தோழர் ரஞ்சித்தை அரசு குற்றஞ்சாட்டியது. இதனால் இவர்கள் முன்பு புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் இப்போது அய்க்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். தங்களது அமைப்பிற்கு அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்பவர்கள்.

இந்த அமைப்பினர்தான் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் – சிங்கள – முஸ்லிம் அரசியற் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து திருவனந்தபுரத்தில் இலங்கை அரசியல் பிரச்சினைப்பாடுகள் குறித்த கருத்தரங்கொன்றை நடத்தினார்கள். இவர்கள் நடத்திய இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியதால் எஸ்.வி.ஆர். தமிழ் துவேஷியாகவும் சிங்கள இனவாதத்தன்மையுடையவராகவும் மாறிவிடுவாரா? இப்படிச் சொல்வதற்கு எஸ்.வி.ஆரின் எழுத்துகளிலிருந்தோ பேச்சுகளிலிருந்தோ ஏதாவது ஆதாரம் காட்ட யமுனா தயாரா? மூடனுக்கும் புரியக் கூடியவகையில் நான் திரும்பவும் நிதானமாகக் கேட்கிறேன்: சிங்கள இனவாதத்திற்கு ஆதரவான பேச்சையோ தமிழ் மக்களிற்கு எதிரான துவேஷப் பேச்சையோ எஸ்.வி.ஆர் எங்காவது பேசியுள்ளாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்தத் தீராத பழியை யமுனா எஸ்.வி.ஆர். மீது சுமத்துகிறார். எஸ்.வி.ஆரின் மனித உரிமை கோரிய பேச்சுகள் பசப்பலென்று யமுனா எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறார்? கட்டுரையில் ஒரேயொரு மேற்கோளைத் தன்னும் ஒரேயொரு ஆதாரத்தைக் கூட யமுனா எழுதவில்லையே. ஏனிந்த அவதூறுப் பிழைப்பு?

“‘உயிர் எழுத்து’ இதழில் ரஞ்சித்தைக் குறித்து மனித உரிமைக் காவலர் என்று பச்சைப் பொய்யை எழுதியுள்ளார் எஸ்.வி.ஆர்.” என்று அடுத்த விசக் கத்தியைச் சொருகுகிறார் யமுனா. யமுனாவுக்கு ரஞ்சித்தைக் குறித்து எதுவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ரஞ்சித் ஜே.வி.பியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவர். 1971 கிளர்ச்சியை நடத்திய தலைவர்களில் ஒருவர். ரோகண விஜேவீர சிறைப்பட்டு யாழ் டச்சுக்கோட்டையில் அடைக்கப்பட்டிருந்தபோது ரோகணவை மீட்க ஜே.வி.பியினர் கோட்டையின் மீது நடத்திய தாக்குதலைத் தலைமைதாங்கி வந்தவர்களில் ஒருவர். தோல்வியில் முடிந்த அந்தச் சிறையுடைப்பு நடவடிக்கையில் கைதாகி ஊறாத்துறைக் கடற்கோட்டையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டவர். 1977ல் விடுதலையாகி ஜெர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர். தனது போராட்ட அனுபவங்களை ‘ஏப்ரல் கண்ணீர்’ என்ற நூலாக எழுதி வெளியிட்டவர். ஜே.வி.பி.மீது விமர்சனங்களை வைத்து அந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்.அந்த முன்னாள் ஜே.வி.பி தோழர் இன்று இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்வதில் ஓய்வொழிச்சலற்ற மனிதவுரிமைப் போராளி.

தோழர் ரஞ்சித் இலங்கை அரசிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார் என்பது மாவீரன் யமுனாவின் குற்ச்சாட்டு. இலங்கையிலிருந்த ரஞ்சித்தின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கை அரசால் குறிவைக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கும் அந்த ஒளிநாடாவுக்கும் தொடர்பில்லை என ரஞ்சித் இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். வீரியம் பெரிதல்ல காரியமே பெரிது என்பதைக் களப்போராளிகள் புரிந்துகொள்வார்கள். சிங்களத்திலேயே எனக்குப் பிடிக்காத வார்த்தை ‘சமாவெயன்’ என்று ரஞ்சித் சொல்ல இதுவொன்றும் ‘ரமணா’ திரைப்படமல்ல, ரத்தமும் சதையுமான உயிர்களும் வாழ்க்கையும். ரஞ்சித்தை மனிதவுரிமைப் போராளி இல்லையென்று நிறுவவதன் மூலம் யமுனா என்ன சாதிக்க நினைக்கிறார். ரஞ்சித்தின் குடும்பம் இலங்கை அரசிடம் சிக்கிச் சீரழிய வேண்டுமென்றா யமுனா கருதுகிறார். விளக்கம் தேவை.

இனி அ.மார்க்ஸிடம் வருவோம். தமிழகத்தில் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளின் அரசியலையும் மனிதவுரிமை மீறல்களையும் விமர்சிக்கத் தயங்கிய காலத்திலேயே புலிகளை விமர்சித்து எழுந்த மிகச் சில குரல்களில் அ.மார்க்ஸுடைய குரல் முதன்மையானதும் வலுவானதும். இதனாலேயே அவர்மீது இலங்கை அரசின் ஆதரவாளர் என்று தமிழ்த் தேசியவாதிகள் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறதே அல்லாமல் அ.மார்க்ஸின் எழுத்துகளிலிருந்து ஒரு சொல்லைத் தன்னும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ இந்திய அரசுக்கு ஆதராவாகவோ இவர்களால் காட்ட முடிவதில்லை. புலிகளை எவ்வளவுக்கு விமர்சித்தாரோ அதைவிடப் பன்மடங்கு இந்திய – இலங்கை அரசுகளை ஈழப் பிரச்சினையில் மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகளிலும் எதிர்த்து நிற்பவர் அவர். எழுத்தோடு நின்றுவிடாமல் இடையறாத அரசியற் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருப்பவர். அவரையெல்லாம் தமிழ் துவேஷியென்றும் சிங்கள இனவாதத்தைப் பேசுகிறவரென்றும் பசப்பலாக மனித உரிமைகள் குறித்துப் பேசுபவரென்றும் யமுனா எழுதுவதற்கு எதாவது பொருளிருக்கிறதா? யோக்கியமிருக்கிறதா?

அ.மார்க்ஸ் ஒன்றும் விமர்சிக்கப்படக் கூடாதவரல்ல. அவரும் தன்மீதான விமர்சனங்களிற்கு கரிசனையுடன் ஓய்வொழிச்சலில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருப்பவர்தான். ஆனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் வெறுமனே காழ்ப்புணர்வுடன் யமுனா பழிப்பும் நெளிப்பும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால் அவரால் மட்டுமல்ல வேறுயாரால்தான் என்ன செய்ய முடியும். இந்த பழிப்புக்கெல்லாம் எப்படிப் பதில் சொல்வது? இந்தப் புளிப்புக்கெல்லாம் ‘மூடத்தனம்’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறென்ன பதிலிருக்கிறது?

யமுனா சில மாதங்களிற்கு முன்பு ‘உயிரோசை’யில் எழுதிய ‘விடுதலைப் புலிகளின் சாதி: அ.மார்க்ஸ், ரவிக்குமார், ஷோபாசக்தி’ என்ற கட்டுரையிலும் இதே கரைச்சல்தான். பலதடவைகள் நானே பல்வேறு இடங்களில் பதில் சொல்லித் தீர்த்த, விளக்கம் சொல்லி வெறுத்துப்போன கேள்விகளையும் பிரச்சினைகளையும் அப்படி ஒரு விவாதமே எக்காலத்திலும் எங்கேயும் நடவாதது போன்ற பாவனையுடன் அந்த ‘உயிரோசை’க் கட்டுரையில் யமுனா எழுதியிருப்பார். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்திலிருந்து இசுலாமியர்களைப் புலிகள் கட்டிய துணியுடன் விரட்டியடித்ததற்குக் காரணத்தைச் சில இஸ்லாமியர்கள் இராணுவத்திற்கு உளவு சொன்ன கதையில் ஆரம்பித்திருக்கிறார் யமுனா. நடந்தது இனச் சுத்திகரிப்பே தவிர வேறல்ல என்பது எங்களது கருத்து. அந்த வெளியேற்றம் புலிகள் இந்துமத நோக்கிலிருந்து நடத்தியதல்ல எனகிறார் யமுனா. தமிழ்த் தேசியத்திற்கும் இந்துமதத்திற்கும் உள்ள உறவுகள் குறித்து மறுபடியும் நாமொருமுறை விளக்க வேண்டிவரும். புலிகள் இயக்கத்திற்குள் சாதி பார்ப்பதில்லை என்பார் யமுனா. அது எங்களிற்கும் தெரியும் எங்களின் விமர்சனமெல்லாம் புலிகள் சாதியொழிப்பை வீரியமாக முன்னெடுக்கவில்லை என்பதும் சாதியொழிப்புப் போராட்ட அமைப்புகளைத் தடைசெய்தார்கள் என்பதுமே என்போம் நாம். அதிபர் இராசதுரையின் கொலையை சாதியப் படுகொலையாகப் பார்க்கக் கூடாது என்பார் யமுனா. அதிபரின் கொலை வெறுமனே சனநாயக மறுப்பு மட்டுமல்ல அங்கே கொல்லப்பட்டது ஒரு தலித் அறிவுஜீவியும் போராளியும் என்போம் நாம். மறுபடியும் இரண்டுமாதம் கழித்து இதே பிரச்சினைகளை வேறு இணையத்தளத்தில் வேறு தலைப்பில் எழுதுவார் யமுனா. தலைப்பிலும் பெரிய மாறுதல்கள் இருக்காது. இந்தக்கட்டுரையில் ‘அ.மார்க்ஸ், ஷோபாசக்தி’ என்றிருந்தால் அடுத்த கட்டுரையில் ‘ ஷோபாசக்தி, அ.மார்க்ஸ்’ என்றிருக்கும்.

இந்த எல்லாத் துன்பங்களையும் சகித்துக்கொண்டாலும் ‘கீற்று’ இணையத் தளத்தில் யமுனா தன்னை “நானொன்றும் விடுதலைப் புலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை” என்று சொல்வதைத்தான் நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. புலிகளின் வீழ்ச்சி உறுதியாகத் தெரியும்வரைக்கும் யமுனா எங்கே எப்போது புலிகளை விமர்சித்தார்? புலிகளின் வீழ்ச்சி உறுதியானவுடன் தவித்த முயல் அடிக்கும் தந்திரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பட்டும்படாமலும் அவர் இப்போது புலிகளை விமர்சிக்கிறாரே தவிர விடுதலைப் புலிகளின் எழுச்சிக்காலத்தில் அவர்கள் ஈழத்திலும் புகலிடத்திலும் வகைதொகையற்ற மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் நடத்தியபோது அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? அவர் அப்போது புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’விலும் புலிகளின் வானொலியான IBCயிலும் கூலிக்கு மாரடித்துக் கொண்டிருந்தார்.

சபாலிங்கம் படுகொலை, அதிபர் இராசதுரை படுகொலை, வெருகல் படுகொலைகள் போன்ற எண்ணற்ற கொலைகள் நடந்த போதெல்லாம் யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது? பள்ளிவாசல் படுகொலைகள் குறித்து யமுனா எங்கே தன் விமர்சனத்தையோ கண்டனத்தையோ வைத்திருக்கிறார்? புலம் பெயர் தேசங்களிலே மாற்றுக் கருத்தாளர்கள் புலிகளால் வதைக்கப்பட்டபோது யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே ஒளிந்திருந்தது? அப்போது அது வாரம் 500 பிராங்குகளிற்கு புலிகளின் ‘ஈழமுரசு’ பத்திரிகையில் அடகு வைக்கப்பட்டிருந்ததுதானே உண்மை. புலிகள் கம்யூனிஸ்டுகளை, தலித் தலைவர்களை, தொழிற்சங்கவாதிகளை, எழுத்தாளர்களைக் கொல்வதிலும் கட்டாயப் பிள்ளை பிடிப்பிலும் மும்மூரமாக இருந்தபோது யமுனா ராஜேந்திரனின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது. அந்தக் குரல் அப்போது புலிகளிள் IBC வானொலியில பொறுக்கித் தின்றுகொண்டிருந்தது. இதுதானே உண்மை! இதுதானே யமுனா ராஜேந்திரன் புலிகளை விமர்சனத்துடன் ஆதரித்த இலட்சணம். பொறுக்கும் வரை புலிகளிடம் பொறுக்கிவிட்டு எல்லாம் முடிந்தவுடன் வெளியே வந்து ‘புலிகள் மீதும் எனக்கு விமர்சனமிருக்கிறது’ என்று சொல்வதைத்தான் பசப்பலான மனிதவுரிமைப் பேச்சு என்பது.

நான் விடுதலைபுலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை என்று யமுனா சொல்வதின் மறுவளமான அர்த்தம் அவர் விமர்சனபூர்வமான புலிகளின் ஆதரவாளர் என்பதுதானே! அவரே சொல்லிக்கொள்ளும் அவருடைய மார்க்ஸியப் பகுப்பாய்வு முறைமையில் எதற்காக அவர் புலிகளை ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். அவர்களின் ஒட்டுமொத்த சனநாயக மறுப்பிற்காகவா, அவர்கள் இஸ்லாமிய இனச் சுத்திகரிப்புச் செய்ததாலா, சிங்கள் அப்பாவி மக்களைக் கொன்றதாலா, அவர்கள் புகலிடங்களில் இந்துக் கோயில்களைக் கட்டியதாலா, அவர்கள் சிறுவர்களை கட்டாயமாகப் படையில் சேர்த்ததாலா, அவர்கள் ராஜினி- கோவிந்தன் – செல்வி போன்றவர்களைக் கொன்றதாலா, கம்யூனிஸ்ட் அமைப்புகளை ஈழத்தில் தடை செய்ததாலா, இல்லை இறுதியில் மூன்று இலட்சம் மக்களை மனிதத் தடுப்பரண்களாகக் கட்டாயமாக நிறுத்தி வைத்ததாலா அல்லது இவை எல்லாவற்றுக்காகவுமா எதற்காக எந்தப் புள்ளியில் யமுனா புலிகளை விமர்சனத்துடன் ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்கி வைக்க வேண்டும் என்பது எனது ஆர்வம். ஆனால் இந்தக் கேள்விகளைக் கேள்விகளாகவே விட்டுவிட்டு அவர் கொப்புத் தாவி விடுவார் என்பது எனது அனுபவம்.

யமுனா ராஜேந்திரன் பொதுவாகவே இவ்வாறான தனது அவதூறுக் கட்டுரைகளின் முடிவில் ஒரு வழக்கமான முடிவுரையை வழங்குவதுண்டு. ‘ஷோபாசக்தி பேசும் எதிர்ப்பு அரசியலும் விளிம்புநிலை அரசியலும் போலியானவை, ஷோபாசக்தியின் அடையாளத்தைத் தக்க வைப்பதற்கே அவர் தனது போலி அரசியலை உபயோகப்படுத்துகிறார்’ என்பதாக அந்த முடிவுரை அமையும். கட்டுரைக்குத் தக்கவாறு அவ்வப்போது என்னுடன் இணைத்து சுகனோ, தலித் மேம்பாட்டு முன்னணியினரோ யமுனாவால் வசைபாடப்படுவார்கள். அதை அண்மைய ‘கீற்று’ மற்றும் ‘உயிரோசைக்’ கட்டுரைகளிலும் அவர் செய்திருக்கிறார்.

எங்களுடைய ஈழப் போராட்டம் குறித்த பார்வையும் எழுத்தும் செயற்பாடுகளும் போதாமைகளைக் கொண்டிருக்கலாம். நாங்கள் ஈழப் போராட்டத்தில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பாத்தியதை கோரும் தைரியமும் எங்களிற்குக் கிடையாது. நாங்கள் தொட்டது எதுவுமே துலங்காதது மட்டுமல்ல அவை காலப்போக்கில் பாஸிச அதிகார மையங்களாகவும் மாறியிருந்த நிலையில் நாங்கள் ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்திலிருந்து விலகிச் சென்றோம். ஈழப்போராட்டத்திற்காக அந்த இந்தத் தியாகங்களைச் செய்தோம் என்றும் நாங்கள் எந்த உரிமையையோ அனுதாபத்தையோ கோருவதுமில்லை. ஆனால் ஈழப் போராட்டத்தையோ ஈழப் போரில் விழுந்த கொலைகளையோ யுத்தத்தத்தால் அகதிகளாகச் சிதறிச் சென்ற மக்களையோ நானோ எனது தோழர்களோ எங்களது சுய இலாபத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது.

ஆனால் நீங்கள் எப்படி யமுனா? ஈழத்தில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களின் பெயராலும் அகதிகளாக உலகெங்கும் அலையும் ஈழத்து ஏதிலிகளின் பெயராலும் உங்கள் இருப்பைக் காப்பாற்றியவரல்லாவா நீங்கள். ஈழத்தையே இன்றுவரை நீங்கள் கண்ணால் கண்டிராதபோதும் ஈழத்திலிருந்து துன்பமும் துயரமும் அடைந்தேன் என்று பொய்யுரைத்து அந்த யுத்தத்தையும் இரத்தத்தையும் கண்ணீரையும் சாட்சிகளாக்கி நோகாமல் ‘ஈழத்து அகதி’ என்று கள்ள ‘சேர்ட்டிபிகட்’ முடித்து இலண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றவரல்லவா நீங்கள்! நீங்களா எங்களைப் பார்த்து போலிகள் என்றும் இருப்புக்காக அலைபவர்களென்றும் தூற்றுவது? நீங்களா எங்களைப் பார்த்து புலி எதிர்ப்பு அரசியலால் பிழைப்பவர்கள் என்று எழுதுவது? உங்களிற்கு கடுகளவேனும் மனச்சாட்சியிருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள். எப்போதும் போலவே தொடர்ந்து விவாதிப்பேன். அந்தத் துன்பியல் அனுபவத்திற்கு நான் தயாராகவேயிருக்கிறேன்

2.

அந்தக் ‘கீற்று’க் கட்டுரையில் யமுனா அடிக்கடி ‘ராமேஸ்வரம் வன்முறை’ என்றொரு சிலேடை காட்டியிருப்பார். ஏற்கனவே இந்த இராமேஸ்வரம் பிரச்சனை குறித்து இனியொரு, தேசம், வினவு, தமிழக அரசியல், நம் தேசம் போன்ற இணையத்தளங்களும் வேறு சில சப்புச் சவர் இணையத்தளங்களும் ஏராளமாகவே எழுதியிருந்தன. மறுபிரசுரங்களும் நிகழ்ந்தன. தொடர்ந்தும் இராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்ததால் அதுகுறித்து என் தரப்பிலிருந்து எதுவும் எழுத வேண்டாம், பேச வேண்டாம் என்று எனக்குப் படப்பிடிப்புக் குழுவினர் அறிவுறுத்தியிருந்தனர். நேற்றோடு படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

சரி, இராமேஸ்வரத்தில் ‘செங்கடல்’ படப்பிடிப்பில் அப்படி என்னதான் நடந்தது? நானும் இயக்குனர் லீனா மணிமேகலையும் தொழிலாளர்களைத் தாக்கினோம், சம்பளம் கொடுக்க மறுத்தோம், நான் உதவி இயக்குனர் தீபக்கைத் தாக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன் என்றெல்லாம் இவர்கள் செய்திகளை வெளியிட்டார்கள். அந்தச் செய்திகளின் அடிப்படையில் கீற்றில் பா. செயப்பிரகாசமும் என்னை ‘தொழிலாளர் விரோதி’ என்று தீர்ப்பிட்டு எழுதினார். யமுனாவின் சிலேடைக்கும் அவையே ஆதாரம். இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரம் ‘தினத்தந்தி’யில் வெளியான செய்தி. ‘சதக் சதக் கத்திக்குத்து செத்த பிணம் பத்து’ என்று செய்தி வெளியிடும் பாரம்பரியம் கொண்ட தினத்தந்தியின் செய்திக் குறிப்பையெல்லாம் நம்பி நமது எழுத்தாளர்கள் மேட்டரை டெவலப் செய்திருக்கிறார்கள். அவ்வளவுக்குப் பரபரப்புக்கும் பழிதீர்க்கவும் ஆர்வம்.

சரி தினத்தந்திக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது? நடந்த சம்பவத்தைப் புலனாய்வு நடத்தியா அவர்கள் எழுதிக் கிழித்தார்கள்? இராமேஸ்வரம் கீழவாசல் பொலிஸ் நியைத்தில் என் கண்முன்னாலேயே சப் இன்ஸ்பெக்டர் சிலைமணி தினத்தந்தி நிருபர் சேதுவிற்கு ‘நியூஸ்’ கொடுத்தார். அதைச் சேது ‘தினத்தந்தி’ தர்மப்படி பரபரப்பாக உப்புப் புளி சேர்த்துப் பிரசுரித்தார். அதனடிப்படையில் மற்றைய பத்திரிகைகளும் சன் டிவியும் செய்திகளைக் கொடுத்தன. தினமணியும் நக்கீரனும் சன் டிவியும் செய்தியோடு நிறுத்திக்கொண்டன. ஆனால் இனியொருவும், வினவு இணையத்தளமும் தினத்தந்தி செய்தியையே திரிக்கவும் அதனை டெவலப் செய்யவும் தயங்கவில்லை. தினத்தந்தியிலேயே இல்லாத செய்தியாக அவர்கள் என்னோடு சேர்ந்து லீனாவும் தொழிலாளர்களைத் தாக்கினார் என்றெல்லாம் எழுதினார்கள்.

தினத்தந்தி போன்ற பரபரப்புக்காக நடத்தப்படும் ஒரு வணிகப் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் விவாதிப்பதை விட்டுவிட்டு என்மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த தீபக் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். சம்பவம் நடந்த சில நாட்களிற்குப் பின்பாக அவர் இரண்டு ஊடகங்களிற்கு விரிவான நேர்காணல்களைக் கொடுத்தார். நடந்தது குறித்து நம் தேசம் இணையத்தில் தீபக் சொல்லியிருப்பது இது:

லீனா என்னை அவர் தங்கியிருந்த இடத்திற்கு வரச் சொன்னார். அப்போது இரவு மணி 11 இருக்கும். லீனாவின் ஆட்கள் என்னை அழைத்துச் சென்றனர். அங்கே லீனாவோடு, சோபாசக்தியும் இருந்தார். எல்லாருமே குடி போதையில் இருந்தார்கள். நான் பேசுவதற்குமுன்பே, சோபாசக்தி என்னை அடிக்கத் தொடங்கிவிட்டார். லீனாவின் மேலாளர்கள் இருவரும் என் கைகளை விரித்துப் பிடித்துக் கொண்டனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஓரிரு நாட்கள் இடைவெளியில் தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் தீபக் சொல்லியிருப்பது இது:

“ஷோபா சக்தி. மீட்டிங் என்று ப்ரொடக்ஷன் டீம் தங்கியிருக்கும் வேர்க்கோடு மஹாலுக்குக் கூட்டிப் போனார். அங்கே லீனா மணிமேகலையின் மேனேஜர்கள் தனுஷ், வெங்கட் இருவரும் இருந்தனர். ‘பேட்டா கொடுக்கலேன்னு நீதான் அவங்கக்கிட்ட ஃபுட்டேஜைக் கொடுத்து அனுப்பிட்டியாமே?’ என்றபடியே ஷோபா சக்தியும் அவர்களும் என்னை ரூமுக்குள் போட்டு கடுமையாகத் தாக்கினர். என் தலையில் அடித்த ஷோபா சக்தி, அதோடு மர ஸ்டூலைத் தூக்கி என்னைத் தாக்க முயற்சித்தார். கூச்சல் போட்டு வெளியே ஓடிவந்த நான் அந்த நள்ளிரவிலும், லீனா தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் போய் அவரிடம் முறையிட்டேன்.

இவை தினத்தந்திச் செய்தியோ, பொலிஸ் ‘நியூஸோ’ கிடையாது. இவை தீபக்கின் நேரடியான வாக்குமூலங்கள். தீபக்கின் இரண்டு வாக்குமூலங்களிற்கும் இடையேயான முரண்களைக் கவனித்திருப்பீர்கள். தீபக் பேசுவது உண்மை கிடையாது அவர் இடத்திற்கு ஒருமாதிரிப் பேசுகிறார் என்பதில் உங்களிற்கு இனியும் சந்தேகம் இருக்காது. நடந்ததை நான் சொல்கிறேன்:

தயாராகிக்கொண்டிருக்கும் ‘செங்கடல்’ திரைப்படத்திற்கு நான் எழுத்தாளர். லீனா மணிமேகலை இயக்குனர். படத்தை முதலில் இயக்குநர் சமுத்திரக்கனி தயாரித்தார். படப்பிடிப்புத் தொடங்கிய எட்டு நாட்களிலேயே அவர் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகிவிட இப்போது வேறொருவர் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதாலும் எனக்குப் படத்தின் மீதுள்ள ஈடுபாட்டாலும் நான் இதுவரை ஊதியமே பெறாமல்தான் அந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன். தீபக் இந்தப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். தவிரவும் அவர் ஏற்கனவே லீனா மணிமேகலையோடு ஆவணப் படங்களில் பணியாற்றியவர்.

முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி முடிவடைந்தது. அன்றிரவு படப்பிடிப்புக் குழுவிலுள்ளவர்களில் ஒருபகுதியினர் இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பத் தொடங்கிவிட்டார்கள். நான் அடுத்தநாள் சென்னை திரும்புவதாக ஏற்பாடு. 2ம் தேதி இரவு பத்தரை மணியளவில் கமெரா உதவியாளர்கள் மூவரும் இரண்டு நாட்கள் ஒளிப்பதிவு செய்த ஃபுட்டேஜ்களுடன் கமெராவை எடுத்துக்கொண்டு இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிப் போய்விட்டதாக எனக்குச் செய்தி வந்தது. அவர்கள் இரண்டு நாட்கள் படம் பிடித்ததை எடுத்துக்கொண்டு போவது தீபக்கிற்குத் தெரியும். ஏனெனில் அன்றாடம் படம் பிடிக்கப்படும் ஃபுட்டேஜ்களைத் இரவே தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது உதவி இயக்குனர் தீபக்கின் வேலை. கடைசி இரண்டு நாட்களும் ஈழத்து அகதிகளையும் தனுஷ்கோடி மீனவர்களையும் இணைந்து நடிக்க வைத்துப் படம் பிடித்து வைத்திருந்தோம். நூற்றுக்கு மேற்பட்ட நடிகர்களும் நாற்பது பேர்கள் கொண்ட படப்பிடிப்புக் குழுவுமாகக் கடுமையாக உழைத்து எடுத்திருந்த காட்சிகள் கைவிட்டுப் போய்விட்டன என்றறிந்தவுடன் நான் அதிர்ந்துபோனேன். எப்படி இந்தத் தவறு நடந்தது, எதற்காக நடந்தது என்று எதுவுமே புரியவில்லை. படப்பிடிப்புக் குழுவினர் எல்லோரும் கலங்கிப்போனோம். ஃபுட்டேஜை எடுத்துச் செல்பவர்கள் அவற்றை அழித்தவிட்டாலோ அல்லது காட்சிகளை வெளியே கசிய விட்டாலோ என்ன செய்வது என்ற பதற்றம்வேறு தொற்றிக்கொண்டது. கமெராவை படப்பிடிப்பிற்கு வாடகைக்குத் தந்திருந்த முதலாளியின் தொலைபேசிக்குப் படப் பிடிப்புக் குழுவின் மனேஜர் போன் செய்திருக்கிறார். மறுமுனை அணைக்கப்பட்டிருந்தது.

இயக்குனர், ஒளிப்பதிவாளர், சவுண்ட் என்ஜினியர் தவிர படப்பிடிப்புக் குழுவிலுள்ள மற்றவர்கள் அனைவரும் எங்களது இராமேஸ்வர அலுவலகலத்தில் நள்ளிரவில் கூடிவிட்டோம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை தீபக் உதவி இயக்குனராக இருந்தாலும் அவர் ஒரு பயிற்சி ஒளிப்பதிவாளரும்கூட. கமெரா யூனிட்டுக்கும் இயக்குனர் யூனிட்டுக்கும் தொடர்பாளாராக அவர்தான் செயற்பட்டுக்கொண்டிருந்தார். நான் தீபக்கிடம் “இரண்டு நாட்களாகப் படம் பிடித்ததை எதற்குத் தரவிறக்கம் செய்து வைக்கவில்லை?” என்று கேட்டேன். அவர் அது தனது வேலையல்ல என்றார். “சரி போகட்டும் கமெராவோடு கிளம்பிப் போனவர்களோடு பேசி ஃபுட்டேஜ்களை உடனே திரும்பப் பெறுவதற்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களைத் தாருங்கள்” என்றேன். அந்த இலக்கங்கள் தன்னிடமில்லை என்றார் தீபக். படப் பிடிப்புக் குழுவிலுள்ள மற்றவர்களும் கேட்டுப் பார்த்தார்கள். அவர் தன்னிடம் அந்தத் தொடர்பிலக்கங்கள் இல்லையெனச் சாதித்தார். அவர் சொல்வது பொய்யென எனக்குத் தெரியும். கமெரா யூனிட் குறித்த அனைத்துத் தொடர்பு இலக்கங்களும் அவரிடமிருக்கும். அவரின் கையில் கைத்தொலைபேசி இருந்தது. எப்படியாவது ஃ புட்டேஜைக் காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்திலிருந்த நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு அவரின் கைத்தொலைபேசியைப் பிடுங்கிவிட்டேன். அதற்குப் பின்பு ஓடிப்போனவர்களோடு பேசி காலையில் ஃபுட்டேஜ் சென்னையில் திரும்பப் பெறப்பட்டது.

இரவு கமெராவைச் சென்னைக்கு எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கத் தாமதித்தால் கமெராவை படப்பிடிப்பிற்கு வாடகைக்குக் கொடுத்திருந்த முதலாளியின் உத்தரவின் பேரில்தான் அந்தக் கமெரா உதவியாளர்கள் ஃபுட்டேஜுடன் கமெராவை எடுத்துச் சென்றார்கள் என்பது எங்களுக்குப் பின்பு தெரியவந்தது. எங்கள் நூற்று நாற்பது பேர்களின் உழைப்போடு ஒரு கமெரா முதலாளி விளையாடிப் பார்த்த வேலையது. இதைத் தவிர வினவு கட்டுரையாளர் எழுதியது போலவோ இனியொரு இட்டுக்கட்டியது போலவோ இது ஊதியம் கொடுக்க மறுத்ததால் நிகழ்ந்த பிரச்சினையல்ல. பா. செயப்பிரகாசம் கற்பனை செய்வது போல இது நான் கூலி கேட்ட தொழிலாளர்களை அறையில் போட்டு அடித்ததுமல்ல. பா. செயப்பிரகாசத்தின் மொழியில் சொன்னால் நான் தாக்கியது ஒரு தொழிலாளியையல்ல. நான் தாக்கியது ஒரு கருங்காலியை. இதில் சிறப்பாக இனியொரு. கொம் “கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இதுவரையும் தொழிலாளர்களிற்குச் சம்பளம் வழங்கப்படவே இல்லையாம்” என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல எழுதியிருந்தது. நடத்துங்க ராசா!

நள்ளிரவில் நடந்த சம்பவத்திற்கு ஆற அமர ஆலோசனை செய்து இல்லாத பேட்டா, சம்பளப் பிரச்சினைகளை உருவகித்து அடுத்தநாள் மாலை 4 மணியளவில் காவல் நிலையத்தில் தீபக் என்மீது முறைப்பாடு கொடுக்க பொலிசார் என்னை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். வந்த பொலிஸாரோடு ” அரஸ்ட் வாரண்ட் இருக்கிறதா? அப்படி அழைத்துச் செல்லச் சட்டமிருக்கிறதா?” என்று இயக்குனர் வாதிட பொலிசாரோடு நடுத்தெருவில் தகராறு ஆகிப்போனாது. இராமேஸ்வரம் கீழவாசல் காவல் நிலையத்தில் தீபக்கைத் தாக்கியதாக என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி மாதம் 28ம் தேதி வழக்கு இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நான் தீபக்கைத் தாக்கியதை ஒப்புக்கொண்டேன். எனக்குத் தண்டப் பணமாக ரூபா 1700 விதிக்கப்பட்டது. இனியொரு இணையத்தளம் எழுதியது போல மேலிடத்து சிபாரிசுகளின் அடிப்படையில் நான் காப்பாற்றப்படவில்லை. எல்லாம் ‘சட்டப்படி’ தான் நடந்து முடிந்தன.

இந்த இராமேஸ்வரப் பிரச்சினையைக் கடும் ஓவராக எழுதியவர் ‘வினவு’ கட்டுரையாளர்தான். அவர் கடுமையான ஆய்வெல்லாம் நடத்தி ‘செங்கடல்’ புலிகளிற்கு எதிரான படம் என்று ஒரு ஊகத்தை வெளியிட்டார். அதே வாரத்தில் இதே பொருள்பட செங்கடல் புலி எதிர்ப்புப் படமென்று ஜுனியர் விகடனும் ஒரு செய்தியை வெளியிட்டது. வெளியே வராத ஒரு படத்தைப் பற்றி இவர்கள் எதன் அடிப்படையில் ஊகங்களைக் கொட்டுகிறார்கள்?

அதுவும் வினவு கட்டுரையாளர் ஒருபடி மேலே போய் தமிழக மீனவர்களிற்கு புலிகளால்தான் பிரச்சினை என்று நாங்கள் படமெடுக்கிறோம் என்றும் சமுத்திரக்கனி ஒரு கோடி ரூபா கொடுத்தார் என்றும் வதந்திகளை அள்ளி வீசினார். உடனே பின்னூட்டப் பகுதியில் ஒரு அறிவாளி பலபடி கீழிறங்கி ‘ஒரு ஆவணப் படத்திற்கு ஒரு கோடி ரூபா என்பது மோசடி’ என்று உளறினார். நாங்கள் எடுத்துக்கொண்டிருப்பது ஆவணப் படமா அல்லது கதைப்படமா என்று கூடத் தெரியாத நிலையில் கதையைப் பற்றியும் பட்ஜெட்டைப் பற்றியும் பேசுபவர்களை என்னவென்று அழைப்பது! அவர்களைக் கேட்டால் புரட்சியாளர்கள் என அழைக்கச் சொல்வார்கள்.

வினவு கட்டுரையாளர் ‘செங்கடல்’ குறித்து எழுதியது அவர் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்து எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதியா அல்லது ‘செங்கடல்’ குறித்த அவரது விமர்சனத்தில் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்த விமர்சனம் ஒரு பகுதியா என்பதில் ஒரு குழப்பம் இருந்தபோதிலும் அந்தக் கட்டுரை முழுவதும் வக்கிரமான ஆணாதிக்க மொழியில் எழுதப்பட்ட கட்டுரை என்பதில் ஒரு குழப்பமும் கிடையாது. அந்தக் கட்டுரை முழுவதும் வெளிப்பட்டது ஒரு கலாச்சார அடிப்படைவாதியின் குரல். லீனா மணிமேகலை மற்றும் பெண் கவிஞர்களின் உடலரசியல் குறித்த கவிதைகள் ‘சரோஜாதேவி’ வகைப்பட்ட எழுத்துகளென்றும் வெறும் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் எழுத்துகள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதைச் சொல்வதற்கு மார்க்ஸியமும் லெனினியமும் கற்ற இவரெதற்கு? இத்தகையை மதிப்பீட்டைத்தானே சில வருடங்களிற்கு முன்பு சினிமாக் கவிஞர்கள் பழனி பாரதியும் சிநேகிதனும் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமானும் வைத்தார்கள். இத்தகைய கவிதை எழுதும் பெண்களை நடுத்தெருவில் நிறுத்தி அடிக்க வேண்டும் என்றார்கள். அவர்களின் வசவுக்கும் வினவு கட்டுரையாளரின் வசவுக்கும் என்ன வித்தியாசம்? வசவுகளிலெல்லாம் புரட்சிகர வசவு எனத் தனியாக ஒரு வகை கிடையாது.

லீனாவின் ‘காதலற்ற முத்தமும் லெனினும்’ என்ற கவிதை வினவு கட்டுரையாளர் இன்னொருவரை கடுமையாகவே சினமுற வைத்திருக்கிறது. அவர் அதற்கு வினவு இணையத்தில் ஒரு வக்கிரமான எசப்பாட்டையும் பாடியிருந்தார். கவித்துவமும் வக்கிரமும் எங்கே வித்தியாசப்படுகிறது எனபதற்கு லீனாவின் கவிதையும் வினவு கட்டுரையாளரின் எசப்பாட்டுட்டும் சிறந்த எடுத்துக்காட்டுகள். லீனாவின் மொழி பாலியல் விடுதலை கோரிய மொழியென்றால் வினவு கட்டுரையாளரின் மொழி பாலியல் உறுப்புகளையும் பாலியல் செயற்பாடுகளையும் உபயோகித்து எதிராளியை வசைபாடும் மொழி.

‘காதலற்ற முத்தமும் லெனினும்’ என்ற கவிதையை அதன் சரியான வீச்சில் விளங்கிக்கொள்ள ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாடு’ குறித்து முதலில் வினவு கட்டுரையாளர்களிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு கவிதையை வாசிப்பதற்கான தகுதி / தராதரம் என்றெல்லாம் எழுதி மிரட்டுகிறேன் என்று தயவு செய்து எண்ணிவிடக் கூடாது. கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதையை அதன் முழுவீச்சில் உணர்ந்துகொள்வதற்கு கோணேஸ்வரிக்கு நடந்தது என்னவென்பதைத் தெரிந்திருப்பதும் ஈழத்து அரசியல் குறித்த அடிப்படை அறிவும் அவசியமல்லவா. அதே போன்றதுதான் இதுவும்.

ருஷ்ய மார்க்ஸியரும் பெண்ணியவாதியுமான அலக்ஸ்சாந்ரா கொலொன்ராய் (1857- 1933) ‘கம்யூனிச சமூக அமைப்பில் பாலியல் என்பது ஒரு கோப்பை நீர் அருந்துவதுபோல இலகுவாயிருக்க வேண்டும்’ என்றார். இது மார்க்ஸிய விரோதக் கருத்து எனக் கடுமையாகச் சாடிய லெனின் ஒரு கோப்பை நீரில் பல இதழ்கள் வாய் வைத்துக் குடிக்கலாகாது ( The Emancipation Of Woman) என் றெழுதினார். இதுகுறித்து லெனினைக் கடுமையாக விமர்சித்து இன்னொரு மார்க்ஸியப் பெண்ணியவாதியான கிளாரா செட்கின் (Lenin on the woman’s question) குரலெழுப்பினார். இந்த நிகழ்வுகளின் பகைப்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது லீனாவின் கவிதை. கவிதையின் முதல்வரியே ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை லெனின் சொன்னார் ‘ என்பதாக இருக்கும். இந்தக் கவிதையைப் பொறுத்தவரை வினவு கட்டுரையாளர் இயல்பாக லெனின் மீதுதான் கோபமுற வேண்டும். ஆனால் கோபம் லெனினின் மீது கேள்வியெழுப்பியவரை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பாலியல் ஒழுக்கம், சமூக கலாச்சார ஒழுங்குகள் எல்லாவற்றையும் இந்த வரட்டுச் சித்தாந்தவாதிகள் கட்டிக்கொண்டு அழப்போகிறார்கள காதல் விருப்புகளையும் இயல்பான பாலியல் வேட்கைகளையும் கட்டிப்போட்டு வைக்க இந்த உலகில் எந்தத் தத்துவம் வல்லமை பெற்றது? அலெக்ஸாந்திராவையும் கிளாரா செட்கினையும் அறியாவிட்டால் கூட “கற்பு விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததாகும். ஜீவ சுபாவங்களுக்கு இவ்விரண்டு வாரத்தைகளும் பொருத்தமற்றதேயாகும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளைக் கூட இவர்கள் அறியமாட்டார்களா?

வினவு இணையத்தளத்தில் நானும் லீனாவும் லண்டனில் கார்ல் மார்க்ஸின் கல்லறை முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருப்பார்கள். அந்தப் புகைப்படத்தைச் சற்றுப் பெரிதாக்கிப் பார்த்தால் அந்தக் கல்லறையில் கார்ல் மார்க்ஸ், ஜென்னி மட்டுமல்லாமல் ஹெலன் டெமூத்தும் புதைக்கப்பட்டிருப்பது தெரியும். ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டடார். வினவு கட்டுரையாளரே நீங்கள் கார்ல் மார்க்ஸை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? பாலியல் ஒழுக்கத்தை மீறிய சீரழிவுவாதி என்பீர்களா? அல்லது கார்ல் மார்க்ஸ் மீது வசவு சொல்லி ஒரு எசப்பாட்டுப் பாடுவீர்களா? இல்லைப் போரூர் ஏரியில் தள்ளிக் கொல்வீர்களா? என்னைப் பொறுத்தவரை கேடுகெட்ட சமூக ஒழுங்குகளிற்கும் மரபுகளிற்கும் – ஒருவேளை கட்சியின் விதிகளிற்கும் – கட்டுப்பட்டுத் தன் காதலை மறைத்து வைத்து மருகிக்கொண்டிருந்த பரிதாபத்திற்குரியவராகத்தான் இந்த விடயத்தில் கார்ல் மார்க்ஸை மதிப்பிட முடியும். மார்க்ஸை விட ஆயிரம்மடங்கு பரிதாபத்திற்குரியவர் சமூக ஒழுக்கங்களின் பெயரால் மார்க்ஸால் வஞ்சிக்கப்பட்ட ஹெலன் டெமூத்.

பெண்கள் மீது திணிக்கப்பட்ட மதம் சார்ந்த ஒழுக்கங்களையும் ஆணாதிக்கக் கலாச்சார அடிப்படை வாதத்தையும் பாலியல் சுதந்திரமின்மையும் தன் எழுத்துகள் மூலம் பெண் கேள்விக்குள்ளாக்கினால் உங்களால் பொறுக்க முடிவதில்லை. மலினமான பாலியல் எழுத்து, விபச்சாரம் அது இதுவென்று எழுதுகிறீர்கள். அதைத் தொட்டு அவர்களின் அந்தரங்கமான குடும்ப வெளிகளிற்குள்ளும் நுழைந்து பழிப்புக் காட்டுகிறீர்கள். பெண் கவிஞர்களின் படுக்கையறைகளிற்குள் கமெரா பொருத்தும் அதிகாரம் உங்கள் வசம் வந்தால் நீங்கள் அதையும் செய்வீர்கள் என்பற்கான தடயம் மட்டுமே உங்களது அந்த விமர்சனப் பிரதியில் எஞ்சிக் கிடக்கிறது. தோழர்களே! ‘காடு விளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்’ என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளைக் கவிதை கடந்து செல்லாதென்றா கருதுகின்றீர்கள்? ‘மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம் /அழிக்கப்படாத காடுகளைப் போல் / கம்பீரம் வீசுகிறது’ என்பது சுகிர்தராணியின் வரிகள்.

வினவு கட்டுரையாளரே! ‘செங்கடல்’ குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன். சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லாத லீனாவை அவரும் சேர்ந்து தொழிலாளர்களைத் தாக்கினார் என்று எழுதினீர்கள். படத்திற்காக அவர் சமுத்திரக்கனியிடம் கோடி ரூபா பெற்று ஆட்டையைப் போட்டார் என்று கிசுகிசு எழுதினீர்கள். பேட்டா, ஊதியப் பிரச்சினை என்று இல்லாதவற்றை எழுதி அவதூறு செய்தீர்கள். தமிழக மீனவர்களிற்குப் புலிகளால்தான் பிரச்சினை என்ற அடிப்படையில் ‘செங்கடல்’ எடுக்கப்பட்டு வருகிறது எனக் கலப்பில்லாத முழு வதந்தியைப் பரப்பினீர்கள். யமுனா ராஜந்திரன் போன்றவர்களுக்குத்தான் அவதூறு அரசியல் பிழைப்பென்றால் உங்களுக்கும் அதுவா பிழைப்பு? நீங்கள் பரப்பிய இத்தகைய அவதூறுகள் குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? திணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் என்பது வள்ளுவனின் வாக்கு. இந்தக் குறள் உறைக்க வேண்டும் உங்களிற்கு.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 01 : ஏப்ரல் 8ல் நடைபெறப் போவது விகிதாசார முறையின் இறுதித் தேர்தலா? – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgஇலங்கையில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சி வெற்றி பெறுமிடத்து, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினை முதலில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், விகிதாசார முறையின் கீழ் இலங்கையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக இது அமையுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

விகிதாசார தேர்தல் முறை அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இம்முறையின் கீழ் சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற உறுப்புரிமை அதிகரித்திருப்பதைப் போல பழையபடி பெரும்பான்மை முறையை அல்லது பெரும்பான்மை முறையையும்,  விகிதாசாரமுறையையும் இணைத்த ஒரு புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படுமிடத்து சிறுபான்மையினரினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவம்,  பெருமளவிற்கு பாதிப்படையலாம், என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு இல்லாமலே,  ஜனாதிபதி வெற்றி பெற்றதினால் பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்டே ஆட்சி,  அதிகாரங்களைக் கைப்பற்றலாம் என்ற புதிய நிலையொன்று தோன்றியுள்ள இந்நிலையில், விகிதாசாரத் தேர்தல் முறை பற்றி முன்வைக்கப்படும் வாதப்பிரதி வாதங்கள் அழுத்தமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன்,  தொடர்புபடுத்தி இப்பாராளுமன்றத் தேர்தலை அணுகுமிடத்து,  சுமார் 140 ஆசனங்களுக்கு மேல் ஆளுங்கட்சியால் வெற்றி பெறக்கூடிய நிகழ்தகவு உண்டு. எனவே ஆளுங்கட்சியினரின் மூன்றில் இரண்டு என்ற இலக்கு சாத்தியப்பாடுமிக்கதல்ல என்று உதாசினப்படுத்த முடியாது. அவ்வாறு மூன்றில் இரண்டு பாராளுமன்றப்பலம் கிடைக்குமிடத்து விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து, ஆளும் கட்சியைச் சார்ந்த,  சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள் என்பது மறுப்பதற்கு இயலாது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இலங்கையில் தேர்தல் முறைகள் பற்றி சற்று விரிவாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?
நவீன உலகில்,  ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில்,  மக்கள் தம்பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் உரிமையே ஜனநாயக உரிமையாகக் கொள்ளப்படுகின்றது. இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகளில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக யாப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

1. பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறை.
2. விகிதாசார பிரதிநிதித்துவமுறை என்பவையே அவை.

1910ம் ஆண்டில் குருமெக்கலம் அரசியலமைப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1977ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாரளுமன்றப் பொதுத்தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும்,  பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறைக்கமையவே நடைபெற்றன. (தேர்தல்) தொகுதிவாரியாக,  மக்கள் தம் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிந்து கொள்வர். ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையே பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படும்.

உதாரணமாக : X எனும் தேர்தல்; தொகுதியில்  போட்டியிட்ட A,B,C,D என்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு அமைந்தன எனக் கொள்வோம்.

A = 15,833
B = 12,217
C  = 2,893
D  = 518
இம்முடிவின்படி ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற A என்பவர் X தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவர் பெற்ற மேலதிக வாக்குகள் 3616 ஆகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?
1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு (இலங்கையின் 8வது அரசியலமைப்பு) அமுல்படுத்தப்பட்டதையடுத்து இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. 1850களில் டியுனிஸ் அரசியல்வாதியான ஸி.ஸி.ஜி. அந்திரேயும், பிரித்தானியாவைச் சேர்ந்த பாரிஸ்டர் தோமஸ் குரேயும் விகிதாசாரத் தேர்தல் முறையினை அறிமுகப்படுத்திய போதிலும் கூட, உலகளாவிய ரீதியில் இத்தேர்தல் முறை பிரபல்யம் அடையக் காரணமாக இருந்தவர் “ஜோன் ஸ்டுவார்ட் மில்” என்பவராவார்.

விகிதாசாரத் தேர்தல் முறை எனும் போது ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய (பட்டியல்) ஒரு குழுவிற்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக்கும் முறையே விகிதாசார முறை எனப்படும்.

இந்த விகிதாசார முறையானது இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும். அவை:

1. தனிமாற்று வாக்குரிமை
2. பட்டியல் முறை
தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் நடைபெறும். இத்தகையத் தேர்தல் 1982,1988,  1994,  1999, 2005,  2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டியல் முறையின் கீழ் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாகாண சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் (மாநகர, நகரசபை, பிரதேச சபை) என்பன நடைபெறும். இம்முறைக்கமைய 1989,  1994,  2000,  2002, 2004ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே இத்தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கும் போது சிறுபான்மை இனத்திற்கு எத்தேர்தல் முறை நன்மை பயக்கும் என்பதை இனங் காட்டக்கூடியதாக இருக்கும்.

எனவே பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறைமையும், 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசாரத் தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் தலைப்புக்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானதாக அமையும்.

1. தேர்தல் தொகுதிகள் பிரிக்கும் முறை.
2. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் முறை.
3. வாக்களிக்கும் முறை.
4. ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறை.
5. வெற்றிடமேற்படும் போது மீள்நிரப்பப்படும் முறை

தேர்தல் தொகுதி பிரிக்கப்படும் முறையினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பெரும்பான்மைத் தேர்தல்முறை இடம்பெற்ற முதலாம் குடியரசு யாப்பில் ( 1972ம் ஆண்டு யாப்பு) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் யாப்பின் 77 முதல் 81 வரையுள்ள உறுப்புரைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி 78(2) உறுப்புரையின் பிரகாரம் இலங்கையில் 75, 000 மக்களுக்கு (மக்கள் தொகை) ஒரு பிரதிநிதியென்றும், 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதியென்றும், வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தடவையும் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவரைக் கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்றை,  ஜனாதிபதி அமைத்தல் வேண்டும் என்றும் யாப்பின் 77(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 1974ம் ஆண்டில் திரு. நோயல் தித்தவெல (முதலாம் குடியரசு யாப்பு நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர்) என்பவரின் தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய தேசிய அரசுப் பேரவையினால் (பாராளுமன்றத்தால்) 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், 1ம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தமாக 78(2) உறுப்புரையில் 90, 000 மக்களுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது.

திரு. நோயல் தித்தவெல ஆணைக்குழுவின் அறிக்கை 1976ம் ஆண்டில் ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவை மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது உறுப்பினர் எண்ணிக்கையும், தொகுதிகளும் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது.

1 சனத்தொகை அடிப்படையில் மொத்த சனத்தொகை 90, 000 ஆல் வகுக்கப்பட்டு 143 அங்கத்தவர்களும்.

2 பரப்பளவின் அடிப்படையில் இலங்கையின் மொத்தப் பரப்பளவான 25, 332 சதுரமைல்கள் 1000ஆல் வகுக்கப்பட்டு 25 அங்கத்தவர்களுமாக மொத்தம் 168 பிரதிநிதிகள் தேசிய அரசுப் பேரவையில் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 168 பிரதிநிதிகளும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகவே அமைவர். (நியமன அங்கத்துவம் இங்கு நீக்கப்பட்டது) இந்த 168 பிரதிநிதிகளும் இலங்கையில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த 160 தொகுதிகளினூடாக தெரிவு செய்யப்படல் வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.

1947ம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பில் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் காப்பீடு ஏற்பாடாக பல அங்கத்துவத் தேர்தல் தொகுதி முறை அல்லது இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தேர்தல் தொகுதியில் பெரும்பான்மை,  சிறுபான்மை இனங்கள் அண்ணளவாக சமமாக வாழ்ந்தால் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  அல்லது ஒரு தேர்தல் தொகுதியில் இரண்டு சிறுபான்மை இனத்தவர்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  இத்தகைய பல அங்கத்துவ தேர்தல் தொகுதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி கொழும்பு மத்தி, நுவரெலிய,  மஸ்கெலியா (மூன்று அங்கத்துவத் தொகுதிகளாகவும்) பேருவளை,  ஹாரிஸ்பத்துவ,  பொத்துவில்,  மட்டக்களப்பு என்பன இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும் வகுக்கப்பட்டன.

இதன்படி பல அங்கத்துவர் தொகுதி 6இல் இருந்தும் 14 பிரதிநிதிகளும், தனி அங்கத்துவர் தொகுதிகள் 154இல் இருந்தும், 154 பிரதிநிதிகளுமாக 160 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 168 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படல்.

விகிதாசார தேர்தல் தொகுதியின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே வரையறை செய்யப்படுகின்றன. 2ம் குடியரசு யாப்பின் 96ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை  இருபதுக்குக் குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.’

அரசியலமைப்பின் 95ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவுக்கமைய 1978– 11– 29ம் திகதி திரு ஜீ.பீ.ஏ சில்வா என்பவரின் தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவினை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அமைத்தார். இவ்வாணைக் குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது. இலங்கையில் விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.

சுதந்திர இலங்கையின் செயற்பட்ட சோல்பரி அரசியலமைப்பிலோ, 1ம் குடியரசு அரசியலமைப்பிலோ பாராளுமன்ற அங்கத்துவர் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. (நெகிழும் அங்கத்துவத்தைக் கொண்டதாகவே அங்கத்துவ எண்ணிக்கை அமைந்திருந்தது) ஆனால் 2ம் குடியரசு யாப்பில் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்துவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ‘அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.’ அதே நேரம் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்துக்கிணங்க (1988ல்) இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுவர்.

1 இலங்கையின் முழு வாக்காளர் தொகையையும்,  கருத்திற் கொண்டு 160  உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாகத் தெரிவுசெய்யப்படுதல்.

2.  ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும்,  36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.(ஆக மேற்படி 196 உறுப்பினர்களும், 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுவர்)

தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு அமைய மீதமான 29 பிரதிநிதிகளும் தேசியப் பட்டியல் மூலம் இடம்பெறுவர்.

தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படக்கூடிய முறையினை நோக்குமிடத்து பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஏனென்றால் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தினர் சிதறியே வாழ்ந்து வருகின்றனர். எனவே தொகுதி ரீதியாக அமையும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானதொன்றாகும். ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்டமாக வரையறை செய்யப்படுவதினால் மாவட்டத்தில் சிதறிவாழும் சிறுபான்மையினருக்கு ஓரிரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். எனவே பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக வாய்ப்புண்டு என்பது மறுக்க முடியாததாகும்.

ஏனைய நடைமுறைகளை அவதானிக்கும் போதும் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தலாம்.

(தொடரும்…….)