கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பளை, சோரன்பற்று பிரதேசங்களிலிருந்து 53 பேர் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்வு

civillians_.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் போர் நடவடிக்கை காரணமாக பளை, சோரன்பற்று மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து 53 பேர் இடம்பெயர்ந்து நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். யாழ்.வருகைதந்துள்ளவர்கள் அனைவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பகுதியில் இருந்து வந்தவர்கள் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வள்ளங்களில் வந்த 33 பேரை கடற்படையினர் கைதுசெய்து பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். இவர்களைத் தங்க வைப்பதற்குரிய நடவடிக்கையை மாவட்ட செயலகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பளை மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்களில் நான்கு கைக்குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்வர்கள் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்க முடியாது: யாழ். எம்.பி் பத்மினி

patmini.jpgபறவைகள் சரணாலயம்’ என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள இராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்’ என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷ. ஆனால், “ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள இராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது” என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பரநாதன்.

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்தியேக பேட்டி.

ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன?

“இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்து வருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் அது புலிகளாகவே பாவிக்கிறது. யாழ்ப்பாணத்தில் முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களிடம் சோதனை நடத்தி வருகிறது. ஈழப்போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ நினைக்கும் சமூக சேவகர்களை இலங்கை இராணுவம் கடத்துகிறது. ஈழத் தமிழர்கள் `செயலற்றவர்களாக’ இருக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் ஆசை.

ஈழத்தின் வன்னிப் பகுதியில் அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் ஓலைக்கீற்றுகளால்தான் குடில் அமைத்துத் தங்க வேண்டும் என்று சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் ஷீட் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. தமிழ் அகதிகளுக்காக தமிழக அரசு உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பியதால், உலக உணவுத்திட்டம் (டபிள்யூ.எஃப்.பி) கொடுத்தனுப்பிய உணவுப் பொருள்களை இலங்கை அரசு திருப்பியனுப்பி, அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துள்ளது.

தமிழர் வாழும் பகுதிகளில் தினமும் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வீசுகிறது. அவை சில இடங்களில் முப்பதடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அதனால் நிலத்துக்கடியிலிருந்து தண்ணீர்கூட வந்து விடுகிறது. இதுபோக சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் (கொத்து) குண்டுகளையும் இலங்கைப்படை வீசுகிறது. இந்தக் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் பேர் இன்று நான்கு ஊர்களில் மிகநெருக்கமாக வாழும் நிலை உள்ளது. இதுதான் இலங்கைப் போரின் இப்போதைய நிலை.”

கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியது புலிகளுக்குப் பின்னடைவுதானே?

“அப்படிச் சொல்ல முடியாது. தங்கள் தற்காப்புக்காக புலிகளும், மக்களும் கைவிட்டுச் சென்ற இடங்களைத்தான் சிங்கள இராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றது, அவர்களின் போர்த்தந்திரமாக இருக்கலாம்.”

மக்களை கேடயமாகப் பயன்படுத்தத்தான் பிரபாகரன் அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

“அப்படியெதுவும் இல்லை. கிளிநொச்சிப் பகுதி தமிழர்களின் அடையாள அட்டையை வைத்து, அவர்களை புலிகளாகவே சிங்கள இராணுவம் பார்க்கிறது. அத்தியாவசிய மருந்துகளை வாங்க அருகிலுள்ள பகுதிகளுக்குக் கூட மக்கள் நிம்மதியாகச் சென்று வர முடியாத நிலை உள்ளது.

மன்னார் பகுதியில், சிங்கள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் கிட்டத்தட்ட இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைக்கைதிகள் போலத்தான் உள்ளனர். முள்வேலிகளுக்கு நடுவில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு சிங்கள இராணுவம் உரிய பாதுகாப்பு, சுதந்திரம் தந்தால் அவர்கள் ஏன் புலிகளுடன் செல்ல வேண்டும்?”

ஈழப்பிரச்னையில் இந்திய அரசு எந்த விதத்தில் உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

“இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இதனால்தான் அங்கே துப்பாக்கிச் சத்தம் கேட்டால், இங்குள்ள தமிழர்கள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள், ஈழ மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தந்து ஈழத் தமிழர்களின் சுய உரிமைகளையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இந்திய அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டும். அவர்களால்தான் அது முடியும்.”

`பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியிருக்கும் போது, இந்தியஅரசிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

“ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால்தான் அவர்களால் சுதந்திரமாக சுவாசிக்க, யோசிக்க, முடியும். உலக ரீதியாக சுதந்திரத்தை மதிப்பவர்கள் யாரும் ஈழ மக்களின் சுதந்திரத்தையும் மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்த்தால், ஈழ மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் வல்லமை உடைய அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்புதான். எனவே ஈழத்து மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற இந்தியாதான் உதவி புரிய வேண்டும்.”

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டார். தற்போது பிரணாப் முகர்ஜி வருவதை இலங்கை விரும்பவில்லை. இந்தநிலையில் அழையா விருந்தாளியாக அவர் எப்படி இலங்கை செல்வது என மத்திய அரசு கூறியுள்ளதே?

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எங்களது அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இலங்கை வர இருக்கிறார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகொல்லகம அறிவித்திருந்தாரே!”

தமிழர் பகுதியில் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்துக்கு புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா அமைத்துக் கொடுக்கும் வியூகமும் ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

“அப்படி நினைக்கவில்லை. ஏழை நாடான இலங்கைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி புரிகின்றன. இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்கிறது. சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசும் தொழில்நுட்ப உதவி புரிவதாகக் கூறப்படுகிறது.”

பிரபாகரனை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறதே?

“கடந்த முப்பது வருடங்களாக சுதந்திர தாகத்தோடு சிங்கள இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் போராடி வருகிறார்கள். மக்களும் அவர்களது அனுபவ தந்திரத்தால் சிங்கள இராணுவத்தின் குண்டுமழையில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குண்டுவீச்சு இலட்சக்கணக்கான தமிழர்களை இன்று ஒரே இடத்தில் குவித்துள்ளது. புலிகளின் தலைவராக உள்ள பிரபாகரனை ஒருநாளும் பிடிக்க முடியாது.”என்றார் பத்மினி சிதம்பரநாதன்.
 
நன்றி:குமுதம்

முல்லைதீவை கைப்பற்ற 50 ஆயிரம் துருப்புக்கள். புலிகளின் சகல விநியோகப் பாதைகளும் துண்டிப்பு; – இராணுவத் தளபதி

kili-05.jpgமுல் லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும்நோக்குடன் ஒன்பது படைபிரிவுகளைச் சேர்ந்த ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் முன்னேறி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். புலிகளின் சகல விநியோக பாதைகளும்முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் படை நடவடிக் கைகளை படையினர் முன்னெடுத்துள்ளதுடன் பாரிய தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவ தாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இராணுவத்தின் 53, 55, 57, 58, 59வது படைப் பிரிவுகளும் முதலாவது இரண்டாவது முன்றாவது மற்றும் நான்காவது செயலணியினருமே முல்லைத்தீவை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முள்ளியவளைக்கு மேற்கு பகுதியை நோக்கி முன்னேறிய படையினர் சகல வசதிகளையும் கொண்ட புலிகளின் பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கோவில் காடு பகுதியிலுள்ள புலிகளின் முக்கிய கட்டளைத்தளம் ஒன்றையும் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியிலுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை நோக்கி முன்னேறிய படையினர் அங்குள்ள பாரிய பயிற்சி முகாமைக்கைப்பற்றியுள்ளனர். 11 கொங்கிரீட் பதுங்கு குழிகளை கொண்ட இந்த பாரிய முகாமில் 75 அடி நீளமும் 50 அடி அகலமுமான பிரதான மண்டபம், 35 அடி நீலம் 20 அடி அகலமான பாரிய  கொங்கிரீட் பங்கர். 200 அடி நீளம் 100 அடி அகலமான சாப்பாட்டு அறை, 35 அடி நீளம் 25 அடி அகலமுமான சமையல் அறை மற்றும் 35 அடி நீளம் 30 அடி அகலமான காரியாலய கட்டிடம் ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.

மூன்று கொங்கிரீட் பங்கர்களுடனான கட்டளைத் தளம் ஒன்றையும் கோவில்காடு பகுதியில் கைப்பற்றி யுள்ளனர். இந்த முகாமின் உட்புறத்தில் பெருந்தொகை யான வாகனங்கள் நிறுத்த வசதியான தரிப்பிடம் என்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற நிலையமொன் றும் அமையப்பெற்றுள்ளதாக பிரிகேடியர் குறிப்பிட்டார்.

ஐ.நா. தீர்மானத்தை இரு தரப்பும் நிராகரிப்பு இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது தாக்குதல்

gaza_.jpgகாஸா வில் உடனடி யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஐ.நா.வின் அழைப்பை இரு தரப்பும் நிராகரித்திருக்கும் நிலையில் காஸாவில் பாலஸ்தீன அதிகாரசபை புதிதாக கால்தடம் பதிப்பதற்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களை வர வழைப்பதற்குமான திட்டமொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இராஜதந்திரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற பாத்தா பிரிவின் தலைமையின் கீழ் அதிகாரசபை மீண்டும் அங்கு திரும்புவதற்கு இடமளிப்பது திட்டத்தின் ஓரங்கமாகும். காஸாப்பகுதியிலிருந்து 18 மாதங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பால் பாத்தா அமைப்பு வெளியேற்றப்பட்டது. அத்துடன் காஸாவுக்குள் ஆயுதக் கடத்தலை நிறுத்துவதற்கு துருக்கி மற்றும் பிரான்ஸ் கண்காணிப்பாளர்களை எகிப்துக்கான ராபாகடவை, இஸ்ரேலுக்கான கிரெம் சாலொம் கடவை உள்ளடங்கலாக காஸாவின் தெற்கு முனையில் நிறுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

காஸாப் பிராந்தியத்தில் சர்வதேச அங்கீகாரத்துடனான அரசாங்கமாக அதிகார சபை இயங்கும். 2007 ஜூனின் பின்னர் காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலிருந்து போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்படும்.

எகிப்தின் சமாதான முயற்சியின் ஓரங்கமாக இத்திட்டம் ஆராயப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸியுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் எகிப்திய ஜனாதிபதி முபாரக் இதனை அறிவித்திருக்கிறார். உடனடி யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் காஸா எகிப்து எல்லைப்பாதுகாப்பு தொடர்பாக பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் எனவும் கடவைகளை திறந்து விடவேண்டுமெனவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக இணக்கப்பாடு இல்லாததால் எகிப்தின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டு விடுமென இராஜதந்திரிகள் கூறுகின்றனர். எகிப்துடனான எல்லையில் அவதானிப்பாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு ஆனால் சர்வதேச படையினர் பிரசன்னத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஹமாஸின் 3 தலைவர்கள் பேச்சு வார்த்தைக்காக எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்கு வந்துள்ளதையும் ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.  ஆனால் எல்லைப்பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அழிக்க சர்வதேசப்படை அவசியமெனவும் இஸ்ரேல் வலியுறுத்துகிறது.

தமது எல்லைப்பகுதியில் சர்வதேசப் படையின் பிரசன்னத்தை எகிப்து விரும்பவில்லை. ஆயினும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென கெய்ரோ விரும்புகின்றது. அந்த உடன்படிக்கையின்பிரகாரம் நடமாட்டம், விநியோகம் என்பன ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இடம் பெறும். ராபா கடவையூடாக மக்கள் போக்குவரத்து கேரம் சாலெம் கடவையூடாக வாகனங்களில் போக்குவரத்துக்கு அந்த உடன்படிக்கை வழிவகுத்திருந்தது. ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்ததையடுத்து அந்த உடன்படிக்கை செயலிழந்தது. ஐ.நா.வின் யுத்த நிறுத்த யோசனைக்கு பாதுகாப்பு சபை 140 அங்கீகாரமளித்திருந்தது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் உடனடியாகவே ஐ.நா.வின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும் கடைசி நிமிடத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினமும் நேற்றும் இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியது. தனது பிரஜைகளை பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பாக தீர்மானிப்பதற்கு வெளியார் செல்வாக்கு செலுத்த இஸ்ரேல் ஒரு போதும் இணங்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட் கூறியுள்ளார். இஸ்ரேல் மட்டும் தாக்குதல்களை நடத்தவில்லை. காஸாவிலிருந்தும் டோராட், பீர்சிபா போன்ற குடியேற்றப்பகுதிகளை நோக்கி ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றன.

நாகர்கோயிலும் படை வசமானது

SL_Army_in_Killinochieவட மராட்சி கிழக்கில் நாகர்கோயில் பகுதியையும் கிளிநொச்சியில் வட்டக்கச்சி கிழக்குப் பகுதியையும் படையினர் தம்வசம் கொண்டு வந்துள்ளனர் என்று படைத்தரப்பு நேற்றுத் தெரிவித்தது. வட்டக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளில் கடும் மோதல்கள்  இடம்பெற்று வருகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
 
 

இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது. நாங்கள் அரசியல் தீர்வினையே விரும்புகின்றோம். – பா. நடேசன்

nadesan.jpgஎமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம் என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரதான பத்திரிகைகளுள் ஒன்றான தினமணியின் கேள்விகளுக்கு நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி விபரம் வருமாறு:

கேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை இராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்?

பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற நேரங்களிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்திய உடையோடு, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, இடம்பெயர்ந்த வரலாறு பல உண்டு. வன்னி நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கையை எங்கள் மக்கள் சந்திப்பதும் இது முதல் தடவையல்ல. இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் சிங்களப் படையினர் எத்தகைய சித்திரவதைகள், படுகொலைகள், கற்பழிப்புகள் செய்வார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இராணுவம் எப்போது வரும்? எவ்வாறு வரும்? என்பதை எங்கள் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கேற்ப இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிரு நாட்களுக்குள்ளேயே முழு உடைமைகளுடனும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த சகல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

logo.gifகேள்வி: அவர்கள் காடுகளில் தங்கியுள்ளதாகவும், உடல் நிலை மோசமாகி தினமும் பலர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் என எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம். இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்றுநோய்கள் என எல்லா கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடில்களில் வசிக்கிறார்களா? வெட்ட வெளியில் உள்ளார்களா? அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வாறு அளித்து வருகிறீர்கள்?

பதில்:  ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது குடிசைகளிலும், தாற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்குகளிலும், காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர். தற்காலிக கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்து பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்தமட்டில், ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர். பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்.

கேள்வி: கிளிநொச்சியில் தற்போது கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. மின்சாரம், குடிநீர் விநியோகம் எதுவும் இல்லை. கிளிநொச்சியை காலி செய்யும் முன் நீங்களே அழித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறதே. இது உண்மையா?

பதில்:  இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்களாலும், ஷெல் (பீரங்கிக் குண்டு) வீச்சுக்களாலும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

கேள்வி: தமிழ் மக்கள் கிளிநொச்சியை விட்டு முன்னரே வெளியேறி விட்டார்கள் என்றால், தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாருக்கு போய்ச் சேர்ந்தது?

பதில்:  முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சியை ஒட்டிய பிரதேசங்களில், மக்கள் இடம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற இடங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எமது பிரதேசத்தில் இயங்குகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அந்நியோன்னியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எளிதாக விநியோகிக்க முடிகிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் விரைவில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன?

பதில்:  அவர் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்களே இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கேள்வி: இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி வருவதாகக் கூறப்படுவது உண்மையா?

பதில்:  பல ஊடகங்கள், குறிப்பாக கொழும்பு ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேள்வி: கிளிநொச்சியை மீண்டும் மீட்போம் எனக் கூறுகிறீர்கள். கிளிநொச்சியிலிருந்து இலங்கை இராணுவத்தை விரட்டுவது அவ்வளவு எளிதானதா?

பதில்: இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

கேள்வி: இலங்கை இனப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்:  எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அரசியல் மாறுபாடுகளை மறந்து, குரல் கொடுப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கின்றது.

கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தங்கள் கருத்தென்ன?

பதில்:  இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர் யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்தான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நண்பன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு நம்பிக்கைக்குகந்த நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூறமுடியும்.

கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை முறிய விடுதலைப் புலிகளே காரணம் என இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது உண்மையா?

பதில்:  போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்ததற்கு இலங்கை அரசே காரணம். போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அவர்கள்தான் முதலில் அறிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. இப்போதும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று உருவானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை எட்ட முடியும் என நம்புகிறீர்கள்? அதற்குத் தங்களிடம் எத்தகைய திட்டம் உள்ளது?

பதில்:  எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் வழியாகவே இனப் பிரச்னைக்கான தீர்வை காண முடியும் என கூறி வரும் நேரத்தில், இலங்கை அரசு எங்கள் மீது தடை விதித்துள்ளது. இலங்கை அரசு இராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது சிங்கள அரசின் அப்பட்டமான தமிழின விரோதப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.என்றார் நடேசன்.

நன்றி: தினமணி

ஊடக சுதந்திரம் -பகுதி 1 – சேனன்

writing.gifமுன்குறிப்பு
‘ஜனநாயகம்’ மற்றும் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பதங்கள் இன்று உலகெங்கும் அதிகாரம் சார்ந்த பொது அர்த்தத்திலேயே பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் சிறுபான்மை அதிகார கும்பலின் ஜனநாயகமாகவும,; சிறுபான்மை அதிகாரத்தின் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்வது ஊடக சுதந்திரமாகவும் அர்த்தப்பட்டு வருகிறது. இந்த அர்த்தப்படுத்தலில் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். உலகின் பெரும்பான்மை ஊடகங்கள் மிகச்சிறுபான்மை பணக்காரர்களின் கைகளில் முடக்கப்பட்டு வருவதால் அவை பெரும்பான்மையினர் நலன்களில் இருந்து விலத்துவது தவிர்க்க முடியாததாகிறது. ஊதிப்பெருத்த பெரும் ஊடகங்கள் சிறு சிறு ஊடகங்களை விழுங்கி மிகச்சிறுபான்மை நலனை பிரதிபலிக்கும் பிரமாண்டமான ஊடக நிறுவனங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த ‘பொது’ ஊடகங்களில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பு மிக மிக குறைந்தளவிலேயே இருக்கிறது. விக்டோரியன் காலத்தின்பின் மிககூடிய அளவில் ஊடகங்கள் மக்களிள் இருந்து தனிமைப்பட்டு போயுள்ளன என்பது மிகையான கருத்தல்ல. இன்று ஊடகங்கள் மேல் விழுந்துள்ள பொருளாதார-அரசியல் ஆதிக்கத்துக்கு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே மக்கள் பங்களிப்பை – மக்களின் நலன் பிரதிபலிக்கும் பொது ஊடகத்தை உருவாக்க முடியும். இந்த சாத்தியத்தை இணைய ஊடகங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளன. ஜனநாயகத்தின் எல்லைகளை அகலப்படுத்துவதிலும் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் அதிக பங்களிப்பை வழங்கி வருபவை இணைய ஊடகங்களே.

உலகளாவிய பாரிய நிறுவனங்கள் பல சரிந்து பெரும் பொருளாதார சிக்கலுக்குள்ளாகியுள்ள இத்தருணத்தில் அரசியலில் தமது பங்களிப்பின் அவசியத்தை பெரும்பான்மை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். தேர்தல்களிள் மக்களின் நலனை பிரதிபலிக்கும் சந்தர்ப்பம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. போட்டியிடும் ‘பெரும்பான்மை’ கட்சிகள் யாவும் சிறுபான்மை அதிகார வர்க்கத்தினர் நலன்சார்ந்தே இயங்குவதால் மக்கள் நலன் ஜனநாயக தேர்வுக்கு வருவதே இல்லை. அதனால் பல்வேறு நவீன முறைகளிள் மக்கள் தங்கள் அரசியற் பங்களிப்புகளை செய்யும் புதிய காலத்தில் நாம் நுளைந்துள்ளோம். அதிகாரவர்கத்தின் தான் தோன்றி தனமான முடிவுகளை எதிர்க்க வேண்டிய தேவையும் அரசியல் முடிவுகளிள் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டிய அவசியமும் இன்று உலகெங்கும் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் பங்களிப்பை உள்வாங்குவது மக்கள் சார்ந்து இயங்கும் எந்த ஊடகத்தினதும் பெரும் சவாலாக இருக்கிறது.

வரலாற்று பின்னனி
18ம் நூற்றான்டு காலகட்ட தொழிற்புரட்சி பல்வேறு சமூக பொருளாதார விஞ்ஞான மாற்றங்களை கொண்டு வந்தது. இக்காலகட்டத்தில் அச்சுத் துறையில் ஏற்பட்ட வேகமான மாற்றம் மிக முக்கியமானது. 19ம் நூற்றான்டின் மத்திய காலத்தில் பத்திரிகைகள் மில்லியன் கணக்கான பிரதிகளை அச்சிடும் அளவுக்கு அச்சுதுறை தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சி கண்டது. பெரும்பான்மை மக்களை குறிவைத்து பத்திரிகைகள் அச்சிடப்பட்டாலும் அவை பெரும்பான்மையினரின் நலன்சார்ந்து இயங்கவில்லை. பத்திரிகை துறையை அதன் ஆரம்பகாலம் தொட்டு அதிகார வர்க்கம் தனது கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளது. பொது அறிவில் செல்வாக்கு செலுத்தல் – தகவல்களை கட்டுப்படுத்தல் முதலானவையை அதிகாரம் தனது இருத்தலை உறுதிப்படுத்தும் இயல்பான நடவடிக்கையாக கொண்டிந்தமையால் இதற்கு சிறந்த வசதி ஏற்படுத்தி கொடுத்த அச்சுதுறையை அதிகாரம் உடனடியாக தமது கட்டுபாட்டில் கொண்டுவந்தது ஆச்சரியமானதல்ல. பெரும்பான்மையர் சுயமாக பணம்கொடுத்து வாங்கும் பத்திரிகை மிக சிறுபான்மை நலன்சார்ந்து அச்சிடப்பட்டது விரைவில் முரண்பாடுகளை தோற்றுவித்தது. இந்த முரண்பாடு தோற்றுவித்த அதிருப்தியை மக்கள் சார்ந்து சிந்தித்த ‘மொழி வல்லுமையாளர்’ பலர் தமது வெளிப்பாடுகளில் பிரதிபலித்து வந்துள்ளனர். பெரும்பான்மையரின் எதிர்ப்பு இவர்களுக்கூடாவகவே சிறிய அளவில் பதியப்பட்டது. இவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பாவித்து ‘பேச்சு சதந்திரம்’ என்ற கருத்தை முன்தள்ளினர்.

பெரும்பான்மை மக்களின் பல்வேறுபட்ட குரலை உள்நுளைப்பதானால் முரணான பல கருத்துக்களை-ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை அனுமதித்தாக வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகியது. பேச்சு சுதந்திரம் என்ற உரிமை ஒவ்வொருவரினதும் தனி உரிமை ஆக்கப்பட்டால் மக்களின் குரல் வெளிப்படுவதற்கான அதிகாரத்தின் தடை தளர்த்தப்படும் என்பது உணரப்பட்டது.

பேச்சுரிமை ஒவ்வொரு மனிதனிதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நிலைநாட்டுவது, மக்களின் பேச்சு பொதுவில் வளரவிட அதிகாரத்தை நிர்பந்திக்கும் உத்தியானது. அதிகாரம் சார்-எதிர் என்ற சார்நிலைகளுக்கும் அப்பால் ‘பேசும் உரிமை’ என்பதை மனித உரிமையாக பார்க்கும் போக்கு அதிகார வர்க்கத்துக்கு பெரும் சிக்கல்களை தோற்றுவித்தது. பேச்சு உரிமை அதிகாரத்துக்கு எதிரான நலன் கொண்டது என்பதை அதன் ஆரம்பகாலங்களிலேயே அதிகாரம் தெட்டத் தெளிவாக புரிந்து கொண்டது. தமக்கு எதிரான கருத்துக்களையும் ‘உரிமை’ அடிப்படையில் அதிகாரம் ஏற்றுகொள்ள வைப்பது என்பது மக்கள் சார்ந்து கருத்து வைத்த அன்றய புத்திஜீவிகளின் பெரிய சவாலானது. பிரெஞ்சு புத்திஜீவி வால்டேரின் புகழ்பெற்ற கூற்றை இந்த அடிப்படையிலேயே பார்க்கவேண்டும். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதை சொல்ல இருக்கும் உனது உரிமையை காக்க நான் எனது உயிரையும் கொடுப்பேன்.’ என்று வால்டேர் வலியுறுத்தியதன் அரசியற் பின்னணி இதுதான். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்ற பகுதி அதிகாரத்தை நோக்கி பேசியதாகவும் அதிகாரம் உடன்படாத கருத்து வெளிப்பாட்டின் குறியீடாகவும் பார்க்கபட வேண்டும். ஆனால் அதிகாரம் ‘தத்துவ’ கோரிக்கைகளுக்கு மசியவில்லை. அதிகாரத்தை மசியவைக்க மக்கள் உரிமை போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது.

1776ல் இருந்து 1800 வரையான காலப்பகுதியை ‘புரட்சிகளின் காலம்’ என்று பல வரலாற்றாசிரியர்கள் வர்னிப்பர். ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கான கிளர்ச்சி பாரிய அளவில் வெடித்த காலப்பகுதியிது. ஆரம்பகால முதலாளித்துவத்தின் ‘கருத்துநிலையை’ தீர்மானித்த காலப்பகுதியிது. 1776 யூலை 4ல் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் ‘மனித உரிமைகளை’ தோமஸ் ஜெபர்சன் அறிமுகப்படுத்தியது மறுமலர்ச்சி காலகட்டத்தின் உச்சக்கட்ட நடவடிக்கை. இதன்பின் 1789 பிரெஞ்சு புரட்சியின்போது உருவான பல்வேறு கோசங்களில் ‘மனிதரின் உரிமைகள் பிரகடனம்’ முக்கிய செல்வாக்கு செலுத்தியது. தோமஸ் பெயினின் ‘மனிதரின் உரிமை’ புத்தகம் உரிமை கோரிக்கைகளின் சின்னமானது மட்டுமின்றி அக்கால புரட்சியாளர் பலருக்காக வாதாடவும் உதவியது. இக்கருத்துகள்மேல் அன்று அதிகாரத்துக்கு இருந்த அச்சத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. தோமஸ் பெயினுக்கு இங்கிலாந்து ஆழும் வர்க்கம் மரண தண்டனை வளங்கியது ஆச்சரியமானதல்ல. அவர் பிரான்சுக்கு தப்பியோடித்தான் தூக்கில்; இருந்து தப்பினார்.

1791ல் அமெரிக்காவில் அமுலுக்கு வந்த உரிமை சட்டமும் அதில் முதலாவது சேர்ப்பாக (First Amendment to the Bill of rights) பேச்சு சுதந்திரமும் மனித குல வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்கள். பேச்சுரிமையையோ அல்லது ஊடகத்தையோ பாதிக்கும் எந்த சட்டத்தையும் காங்கிரஸ் கொண்டுவரகூடாது என்று தடுத்தது இச்சட்டம்.

இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களின் உரிமைகளை சூறையாடிக் கொண்டுதான் இருந்தனர். வளங்களையும் ஊடகங்களையும் தொடர்ந்தும் அவர்கள் தமது கட்டுபாட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால் அதிகாரத்துக்கும் ஊடகத்துக்குமான உறவு பற்றி மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். யோன் ஸ்டுவர்ட் மில் தனது ‘ஊடக சுதந்திரமும் அவதூறு சட்டமும் ‘‘Law of Libel and Liberty of press’ (1825) என்ற கட்டுரையில் இதுபற்றிய முக்கியமான அவதானத்தை ஏற்படுத்துகிறார். அதிகாரம் எப்பொழுதும் பெரும்பான்மை ஒடுக்கப்படுபவர்களின் சுதந்திரத்தை நசுக்குவதாகவே இருக்கும் என்பதை மில் சுட்டிகாட்டுகிறார். பொது உரையாடல் மூலமாகவும், பிழை-கூடாது-தவிர்க்கப்படவேண்டியது என்று கருதப்படுகிற கருத்துக்களை அனுமதிப்பதன் மூலமாகவுமே சுதந்திரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றார் அவர்.

‘எதிர்’ கருத்து எவ்வகைப்பட்டதாக இருப்பினும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதோடு தொடர்ந்தும் பின்னி பிணைந்திருப்பதை நாம் இங்கு அவதானிக்கவேண்டும்.

இதன்பிறகு முதலாளித்துவம் முதிர்ச்சியடைய தொடங்கிய கால கட்டத்தில் உருவான புது ஒடுக்குமுறைகள் புது ஒடுக்குதல்களை தோற்றுவித்தது. அதற்கெதிரான போராட்டமும் வலுப்பெற்றது. இரஸ்ய புரட்சி பேச்சு சுதந்திரத்தின் எல்லைகளை வரலாறுகாணாத வகையில் அகட்டியது. மார்க்சிய புரட்சியாளர் ஊடகத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவை முதல் முதலாக உடைத்தனர். தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்குமான ஊடகத்தை உருவாக்கும் முயற்சியில் முதன் முதலாக இறங்கினர் இரஸ்ய புரட்சியாளர்கள். அதிகாரத்தை தகர்த்து ஒடுக்கப்படும் மக்களுக்கான தொழிலாளர் ஜனநாயகத்தை உருவாக்கியதன் மூலம் புதிய அரசியல் -பொருளாதார உறவுமுறைகளுக்கு வழியேற்படுத்தினர். மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒடுக்கப்படும் அனைத்து மக்கள் சார்பிலும் இயங்கும் பதிய சமுக ஒழுங்கு உருவாக்கப்பட்டது.

புரட்சி நடந்த ஒரு மாதத்திற்குள் நவம்பர் 1917ல் போல்சிவிக் கட்சி பத்திரிகை பிரவ்டா லெனினின் பின்வரும் கோரிக்கையை பிரசுரித்தது.

‘ தோழர்களே! தொழிலாளர்களே! இனி நீங்கள்தான் அரசின் தலைமைத்துவத்தில் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்துகொள்ளுங்கள். நீங்களாக ஒன்றினைந்து உங்கள் அரச கருமங்களை உங்கள் கையில் நீங்கள் எடுப்பதற்கு வேறு யாரும் உதவப்போவதில்லை. உங்கள் வேலையில் இறங்குங்கள். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பியுங்கள். யாருக்காகவும் தாமதிக்காதீர்கள்.’

சர்வாதிகாரி என்று பூர்சுவாக்கள் புறங்கூறும் லெனினின் மக்கள் நோக்கிய கோரிக்கை இது. சோவியத் துரித கதியில் மாற்றத்துக்குள்ளானது. உலகெங்கும் உள்ள அதிகார வர்கத்துக்கு அதிர்வலைகளை சோவியத் மக்கள் அனுப்பினர். பல்வேறு நாடுகளில் உரிமைபோரில் மக்கள் இறங்க இது ஊக்கமளித்தது. இருப்பினும் புரட்சியின் வெற்றி தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறு அதிகார வர்க்கம் அரசை கைப்பற்றி தொழிலாளர் நலனை நசுக்க தொடங்கியது. ஸ்டாலினுடன் பிராவ்டாவின் இணை ஆசிரியர்களில் ஒருவரான காமினேவ் புரட்சிக்கு சில மாதங்களின் முன் லெனின் எழுதிய ஏப்பிரல் தீசிஸ்க்கு எதிராக ஆசிரியர் தலையங்கம் எழுதி விமர்சிக்ககூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் நிலை தலைகீழாக மாறியது. பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது ஸ்டாலினிஸ்டுகளின் முக்கிய பணியானது. மக்கள் அபிப்பிராயத்தை காவல்காத்து வழிநடத்துவதல்ல ஒரு உண்மையான புரட்சிகர தொழிலாளர் அரசின் பணி. மாறாக முதலாளித்துவ கட்டுபாட்டில் இருந்து மக்கள் கருத்தை விடுவிப்பதே அவர்கள் பணியாக இருக்கவேண்டும் என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டி காட்டினார். தகவல் உற்பத்தியையும் மக்கள் மயப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதை சாதிக்கலாம் என்று ட்ரொட்ஸ்கி கூறியது மக்கள் நலனில் இயங்காத ஸ்டாலினிஸ்ட் அதிகாரத்துக்கு துரோகமாக பட்டதில் ஆச்சரியமில்லை.

இதை தொடர்ந்த பனி யுத்தத்தில் ‘தகவல் கட்டுப்பாடு’ மிக முக்கிய பங்குவகித்தது. தேசிய இறையான்மை – பாதுகாப்பு காரனங்கள் என்ற பம்மாத்துகள் காட்டி அதிகாரம் தகவல் சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் தமது கைக்குள் இறுக்கி வைத்துக்கொண்டிருக்கின்றன. பனியுத்த காலத்திலும் அதற்கு பிறகும் ஊடக சுதந்திரத்துக்கான பல போராட்டங்களை நாம் பார்த்துவிட்டோம். அமெரிக்காவில் 60களில் சிவில் ரைட் இயக்கம் முன்தள்ளிய போராட்டம் இவற்றில் முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பேச்சு சுதந்திர இயக்கம் உலகெங்கும் பலமான செல்வாக்கு செலுத்தியது நாமறிவோம்.

ஒரு ஏக்கர் கானிக்குள் அடைத்துவைக்கக்கூடிய தொகை பணக்காரர் பூமிப்பந்தின் மொத்த வளங்களையும் சொந்தம் கொண்டாடி மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியாலும் நோயாலும் தினமும் சாவதை பார்த்துகொண்டிருக்கும் மிகவும் சமமற்ற உலகில் இன்று நாம் வாழ்கிறோம். இந்நிலையில் மக்கள் குரலை வலுப்படுத்துவதும் அதற்கான முன்னெடுப்புகளை செய்வதும் மிக முக்கியமானது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஜோன் ஸ்டுவர்ட் மில் ஏற்படுத்தின தெளிவுகூட இன்று பலருக்கு இல்லை. சுதந்திர உரையாடலுக்கு எதிரான கருத்து எவ்வாறு உருவாகிறது என்பதை அவர் அன்றே சுட்டிகாட்டியிருந்தார். ‘ சரியான கருத்தை உருவாக்கி கொள்ள முடியாத படியால்தான் ஒரு தவறான கருத்து உருவாகிறது. சுதந்திர உரையாடலை தொடர்வதுதான இதை மாற்ற ஒரே வழி;. சுதந்திர உரையாடல் உருவாக்கும் தவறான கருத்துக்களை தவிர்க்க-மாற்ற சுதந்திர உரையாடலை தொடர்வதுதான் ஒரே வழி. சுதந்திர உரையாடலில் ஏற்படும் அறிதலே தவறான கருத்துகள் உருவாகும் அறிவின்மை சூழலை தவிர்க்க உதவும்’ என்று மில் கூறியது இன்றும் பலருக்கு புதினமாக படலாம். பேச்சு சதந்திரத்தை எதற்காகவும் விட்டு குடுக்க முடியாது என்று கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தாலும் இன்றும் அது அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே இந்தநிலை.

இதை நிரந்தரமாக மாற்ற இன்றுள்ள இணைய சுதந்திரத்தை நாம் எமது போராட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுப்பட பாவிக்கவேண்டும்.

A-9 பாதை படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் : தொகுப்பு – ஏகாந்தி

a-9-road.jpg23 வருடங்களுக்கு பின்னர்  A-9 பிரதான வீதி முழுமையாக பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த அறிவித்தலை நேற்று (09) முப்படைகளின் பிரதம தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் நேற்று (09) நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுத்தார்.

கண்டி யாழ்ப்பாணப் பாதையான A-9  சுமார் 270 கிலோமீற்றர் நீளமுடையது. கடந்த 23 ஆண்டுகளாக  A-9 பாதையில் வன்னிப் பிரதேசத்தில் இடைக்கிடையே புலிகளின் கட்டுப்பாடு நிலவியது தெரிந்ததே.

 A-9 பிரதான பாதையில் ஓமந்தை தொடக்கம் முகமாலை வரை இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போதும்கூட,  23 வருடங்களுக்கு பிறகு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

_army.jpgஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரையிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம்பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன்பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் (08) கைப்பற்றினர். அங்கிருந்து முன்னேறிய படையினர் நேற்று (09) இயக்கச்சியையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமையூடாக  A-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.

1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம்களை அமைத்தமை புலிகளுக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது. ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆணையிறவிலுள்ள தமது நிலைகளையும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள 1991 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.  ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையாற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று (09) மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
A-9  பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்பவர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகனங்களில் செல்பவர்களிடம் வரி அறவிட்டனர். சொந்த பாவனைக்காக பொருட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது. வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.

A-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.  பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். – கொழும்பு சென்றவர்கள் இனி A-9  பாதையூடாக செல்லும் வாய்ப்பை படையினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும்கூட, A-9 பாதை பொதுமக்களின் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் என்ற அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது வன்னிப் பகுதியில் தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் A-9 பாதை விரைவாக பொது மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது.

 A-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள். கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வீ. ஆனந்தசங்கரி
(கிளிநொச்சி முன்னாள் எம்.பி)

இது ஒரு பெரிய வரப்பிரசாதம். இதனையே மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தார்கள். இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் பயனாக யாழ். குடாநாட்டுக்குத் தரை வழியாக சென்று வரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இனிமேல் தரைவழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று வர போக்குவரத்து சிரமங்கள் இராது. இப்பாதையைத் திறந்ததன் மூலம் அரசாங்கம் யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாரிய உபகாரத்தைச் செய்திருக்கிறது. இது என்றும் மறக்க முடியாத உபகாரம்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடியதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அம்மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தினரின் இந் நடவடிக்கையால் யாழ். குடாநாட்டு மக்கள் வறுமைப் பிடிக்குள் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். பொருட்களின் விலைகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தன. யாழ். குடாநாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள்.

புலிகள் இயக்கத்தினர் தரைவழி பாதையை மூடிய போதிலும் அரசாங்கம் மக்களை கைவிடவில்லை. யாழ். குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களைக் கடல் வழியாக சரக்கு கப்பல்களில் அரசாங்கம் அனுப்பி வருகின்றது. இதுவும் அரசாங்கம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு செய்து வரும் மறக்கமுடியாத பேருபகாரமாகும்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடாததற்கு முன்னர் இப்பாதை வழியாகத் தினமும் 60, 70 லொறிகளில் யாழ். குடாநாட்டு உற்பத்தி பொருட்கள் தென்பகுதிக்கு வரும். அவற்றில் மரக்கறி, கிழங்கு வகைகள், மீன் வகைகள், கருவாடு, இறால், வாழைப்பழம் போன்றன அடங்கி இருக்கும். இதேபோல் 60, 70 லொறிகள் யாழ். குடாநாட்டுக்கு தென்பகுதியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும். இவற்றில் சீனி, பருப்பு உள்ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களும் அடங்கியிருக்கும்.
இவ்வாறான சூழலில் யாழ். குடா நாட்டிலும், தென்பகுதியிலும் பொருட்களின் விலைகள் நியாயமான முறையில் குறைவாக ஏற்றத்தாழ்வின்றி காணப்பட்டன. இதே நேரம் யாழ். குடாநாட்டு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்திருந்தது.
புலிகள் இயக்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காகவே A- 9 பாதையை இழுத்து மூடினர். அவர்கள் மக்களின் நலன்களை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமலேயே இவ்வாறு செய்தனர். தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இப் பாதையை மூடினர்.  இப்பாதை படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்களின் பொருளாதாரம் மீண்டும் சுபீட்சம் பெறும். பொருட்களின் விலைகள் குறையும். எதுவிதமான சிரமங்களுமின்றி தரை வழியாகச் சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

புளொட்.- தர்மலிங்கம் சித்தார்த்தன்

A-9 பாதை திறக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் ஒரு தடவை சென்று வருவதற்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டிய நிலைமை நிலவியது.  அதுவும் நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியாது. அந்தளவுக்குக் கஷ்டமான காரியமாக அது இருந்தது.  இவ்வாறான காரணங்களினால் தான் இப்பாதை எப்போது திறக்கப்படும்? என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் மக்கள் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை மூடியதால் யாழ். குடாநாட்டின் விளைபொருட்கள் எதனையும் தென் பகுதிக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேநேரம் யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் பெரிதும் அதிகரித்தது. இதனால் யாழ். குடாநாட்டு மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருந்தார்கள். அந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.

இனி யாழ் குடாநாட்டுக்குத் தரை வழியாக சிரமங்களின்றி சென்று வர முடியும். அங்கு பொருட்களின் விலைகள் குறையும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பொருட்கள் தென் பகுதிக்கு வந்து சேரும். இதன் மூலம் மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக சுபீட்சம் ஏற்படும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

திருநாவுக்கரசு
ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி)

A – 9 வீதி திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விடயமாகும். வன்னி மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகள் A – 9 வீதியையே மையமாகக் கொண்டுள்ளது. இவ் வீதி இயங்கினால்தான் மக்களின் வாழ்வு உயிர்பெறும்.

பெரும் வரப்பிரசாதமாய் அமைந்த இவ் வீதி திறக்கப்பட்ட பின்னர் எவரும் குழப்பக்கூடாது. மனிதனது வாழ்வு தொடர்பான பிரச்சினையாகவே இதனை நோக்க வேண்டும். A – 9 வீதி திறப்பதால் பொருட்களின் விலைகள் குறைவதுடன், மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. சாதாரண மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. A – 9 வீதி திறப்பின் மூலம் வடக்கு, தெற்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படும்.

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்ம
சர்வதேச இந்துமத பீடம

A – 9 பாதை திறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதேநேரம் பெளத்த மக்கள் நாகதீப விகாரைகளில் வழிபடுவதற்கான வாய்ப்புக்களும் இலகுவாகிவிடும். இப்பாதை மூடப்பட்டதால் யாழ். குடாநாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் பல் வேறு தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வருகின்றார்கள். இப் பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதுடன், பொன்னான காலமும் பிறந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் போராட வேண்டியுள்ளது. அந்தவகையில் இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் அன்னியோன்ய உறவும், புரிந்துணர்வும் வளர்ச்சி அடையும். இவை இன செளஜன்யத்திற்கும் சகவாழ்வுக்கும் வழி வகுக்கும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழியாகச் செல்லுவது ஏற்கனவே மக்கள் மனங்களில் ஆச்சரியம் மிக்கதான செயலாக இருந்தது. ஆனால் இப்போது இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முழுநாட்டு மக்களுமே சந்தோஷமடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஜனாதிபதியின் உரை

presidentmahinda.jpgநேற்றைய தினம் (09) ஆணையிறவு விடுவிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சிகளினூடாக மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தொகுப்பு வருமாறு:

2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி வருடமென நான் ஏற்கனவே கூறியிருந்தேன். பரந்தனை படையினர் முழுமையாக மீட்டெடுப்பதோடு 2009 ஆம் ஆண்டு உதயமானது. ஜனவரி 2 ஆம் திகதியாகும் போது படையினர் கிளிநொச்சியை முழுமையாக மீட்டனர்.

எமது படையினர் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியொன்றை ஈட்டியுள்ளனர். ஆனையிறவு பகுதியை எமது படையினர் இன்று மாலையாகும் போது முழுமையாக மீட்டுள்ளனர்.

அதேபோல, தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையான பகுதியை மீண்டும் இணைக்கும் வகையில் A-9 வீதியை முழுமையாக புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 23 வருடங்களின் பின்னரே A-9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை எமக்கு இழக்க நேரிட்டது. இந்த மோதலில் 359 படையினர் உயிர் நீத்தனர். மேலும் 349 பேர் காணாமல் போனார்கள். 2500 பேர் காயமடைந்தனர்.  அன்று தொடக்கம் எமது படையினர் முகமாலையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற பல தடவைகள் முயன்றார்கள். இந்த முயற்சிகளினால் பெருமளவு படையினர் உயிர் நீத்தார்கள்.  இன்று 53 ஆம் 55 ஆம் படையணியினர் முகமாலையினூடாக ஆனையிறவை முழுமையாக மீட்டுள்ளனர். ஆனையிறவு வெற்றிக்காக கடந்த காலங்களில் உயிர் நீத்த சகல படையினருக்கும் நாட்டின் கெளரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கினதும் தெற்கினதும் ஒற்றுமையை வெளிக்காட்டும் பாதையாகவே A-9 வீதி குறிக்கப்படுகிறது. A-9 வீதியினூடாக பயணிக்க மக்களுக்கு சட்ட விரோத பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிய நேரிட்டது. A-9 வீதியினூடாக பயணித்த மக்களிடம் புலிகள் பல மில்லியன் ரூபா கப்பமாக பெற்றது. அந்த வரலாற்றை எமக்கு ஒருபோதும் மறக்க முடியாது.  புலிகளின் பிடியிலுள்ள இடங்களை மட்டு மன்றி வடக்கு மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தையே எமது படையினர் வென்று தந்துள்ளனர்.

பயங்கரவாதமில்லாத இலங்கையொன்றை உருவாக்கும் மனிதாபிமானப் போராட்டமே இன்று முன்னெடுக்கப்படுகிறது. முழு நாடுமே படையினரின் வெற்றிகளுக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. ஆனால் அந்த வெற்றிகளை இழிவுபடுத்தவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உள்நாட்டு வெளிநாடடு சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இந்த வெற்றிகளுக்கு முன்னின்று உழைக்கும் இராணுவத் தளபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் அதனூடாக நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுத்தவும் சதி முன்னெடுக்கப்படகிறது.

நத்தார் தினத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஆலயமொன்றினுள் வைத்து சுடப்பட்டார். இதன் மூலம் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. சர்வதேச ஊடக தினத்தில் உதயன் பத்திரிகை மீது தாக்கல் நடத்தப்பட்டது.  தொப்பிகல மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆங்கில பத்திரிகயொன்றின் ஊடகவியலாளர் கடத்தி தாக்கப்பட்டார். பல வருடங்களின் பின் பயங்கரவாதிகளுக்கு பலத்த தோல்வியை ஏற்படுத்தி விடத்தல்தீவை மீட்ட மறு தினம் வவுனியாவிலுள்ள முகாமொன்றின் மீது தீ வைக்கப்பட்டது.  தி. மகேஸ்வரன் கொல்லப்பட்ட போது அரசின் மீதே குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால், புலிகளே இந்தக் கொலையை செய்தனர் என பின்பு உறுதியானது.  கிளிநொச்சி வெற்றியின் சூடு தனிய முன்னர் ஊடக நிலையமொன்று தாக்கப்பட்டது. அதன் பின்னர் நாமறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  இந்த சகல சம்பவங்களினாலும் வெற்றி கிடைப்பது யாருக்கு? இந்த சதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளோம்.  இது எனக்கோ அரசுக்கோ எதிரான சதிகளல்ல. இது முழு நாட்டுக்கும் எதிரான சதியாகும். படையினரின் வெற்றியை கண்டு பீதியடைந்தவர்களே இந்த சதிகளின் பின்னால் உள்ளனர்.

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் உறுதியுடனே நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறினேன். தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள எமக்கு சிறிய குழுவின் சதிகளைத் தோற்கடிப்பது இலகுவான விடயமாகும்.  நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் உயிரூட்டி வருகிறோம். ஜனநாயகத்துக்கு உயிரூட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதென்பது சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் உயிரூட்டும் நடவடிக்கையேயாகும்.
பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே மக்கள் ஒற்று மையாக வாழும் நிலையை நிச்சயமாக உருவாக்கு வோம். அந்த வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.

இவ்வாறு ஜனாதிபதி உரையாற்றினார்.

புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்

bharathiraja.jpgவிடு தலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் கொதித்துப் போன பாரதிராஜா, நான் பணம் வாங்கியதாக எந்த அரசியல் தலைவராவது நிரூபிக்க முடி்யுமா? இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன். முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

தேவையற்ற விதத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்

tajmahal-hotel27112008.jpgபாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மும்பாய் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான துர்ரானியை பிரதமர் யூசுப் ராசா ஹிலானி பதவி நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் பொழுது உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் கருத்து வெளியிட்டமைக்காகவே மெஹ்மூட் அலியைப் பணி நீக்கம் செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மும்பைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென இந்தியா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா கையளித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லவெனவும் தெரிவித்து வருகின்றது.  இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவித்த சில மணித்தியாலங்களின் பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் செர்றி ரகுமானும் அறிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவிக்கையில்;

மும்பைத் தாக்குலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அஜ்மல் பற்றி பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஒகரா மாவட்டத்திலுள்ள பரித்கோட் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அமீர் கசா இலாகி.

விசாரணை அதிகாரிகளிடம் அஜ்மலின் பெற்றோர் கூறும் போது, தங்கள் மகன் அஜ்மல் 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும் அதற்குப் பிறகு இடைப்பட்ட காலங்களில் சில தடவைகள் அவர் தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மும்பைத் தாக்குதலின் போது ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் அவரைத் தங்கள் மகன்தான் என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் அஜ்மலின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

இந்த விசாரணை அறிக்கையின் நகல்கள் உள்துறை அமைச்சகத்திடமும் பிரதமர் கிலானியிடமும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆரம்ப கட்ட விசாரணையில் மும்பையில் தீவிரவாதிகள் தங்களாகவே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புக்கும் அவர்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளதென தெரிவித்தார்.

இதேவேளை, அஜ்மல்கஸாப் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்பதை பாதுகாப்பு அமைப்புகள் தனக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக துர்ரானி தெரிவித்துள்ளார்.