கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

A-9 பாதை படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் : தொகுப்பு – ஏகாந்தி

a-9-road.jpg23 வருடங்களுக்கு பின்னர்  A-9 பிரதான வீதி முழுமையாக பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த அறிவித்தலை நேற்று (09) முப்படைகளின் பிரதம தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் நேற்று (09) நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுத்தார்.

கண்டி யாழ்ப்பாணப் பாதையான A-9  சுமார் 270 கிலோமீற்றர் நீளமுடையது. கடந்த 23 ஆண்டுகளாக  A-9 பாதையில் வன்னிப் பிரதேசத்தில் இடைக்கிடையே புலிகளின் கட்டுப்பாடு நிலவியது தெரிந்ததே.

 A-9 பிரதான பாதையில் ஓமந்தை தொடக்கம் முகமாலை வரை இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போதும்கூட,  23 வருடங்களுக்கு பிறகு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

_army.jpgஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரையிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம்பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன்பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் (08) கைப்பற்றினர். அங்கிருந்து முன்னேறிய படையினர் நேற்று (09) இயக்கச்சியையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமையூடாக  A-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.

1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம்களை அமைத்தமை புலிகளுக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது. ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆணையிறவிலுள்ள தமது நிலைகளையும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள 1991 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.  ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையாற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று (09) மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
A-9  பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்பவர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகனங்களில் செல்பவர்களிடம் வரி அறவிட்டனர். சொந்த பாவனைக்காக பொருட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது. வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.

A-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.  பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். – கொழும்பு சென்றவர்கள் இனி A-9  பாதையூடாக செல்லும் வாய்ப்பை படையினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும்கூட, A-9 பாதை பொதுமக்களின் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் என்ற அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது வன்னிப் பகுதியில் தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் A-9 பாதை விரைவாக பொது மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது.

 A-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள். கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வீ. ஆனந்தசங்கரி
(கிளிநொச்சி முன்னாள் எம்.பி)

இது ஒரு பெரிய வரப்பிரசாதம். இதனையே மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தார்கள். இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் பயனாக யாழ். குடாநாட்டுக்குத் தரை வழியாக சென்று வரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இனிமேல் தரைவழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று வர போக்குவரத்து சிரமங்கள் இராது. இப்பாதையைத் திறந்ததன் மூலம் அரசாங்கம் யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாரிய உபகாரத்தைச் செய்திருக்கிறது. இது என்றும் மறக்க முடியாத உபகாரம்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடியதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அம்மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தினரின் இந் நடவடிக்கையால் யாழ். குடாநாட்டு மக்கள் வறுமைப் பிடிக்குள் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். பொருட்களின் விலைகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தன. யாழ். குடாநாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள்.

புலிகள் இயக்கத்தினர் தரைவழி பாதையை மூடிய போதிலும் அரசாங்கம் மக்களை கைவிடவில்லை. யாழ். குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களைக் கடல் வழியாக சரக்கு கப்பல்களில் அரசாங்கம் அனுப்பி வருகின்றது. இதுவும் அரசாங்கம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு செய்து வரும் மறக்கமுடியாத பேருபகாரமாகும்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடாததற்கு முன்னர் இப்பாதை வழியாகத் தினமும் 60, 70 லொறிகளில் யாழ். குடாநாட்டு உற்பத்தி பொருட்கள் தென்பகுதிக்கு வரும். அவற்றில் மரக்கறி, கிழங்கு வகைகள், மீன் வகைகள், கருவாடு, இறால், வாழைப்பழம் போன்றன அடங்கி இருக்கும். இதேபோல் 60, 70 லொறிகள் யாழ். குடாநாட்டுக்கு தென்பகுதியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும். இவற்றில் சீனி, பருப்பு உள்ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களும் அடங்கியிருக்கும்.
இவ்வாறான சூழலில் யாழ். குடா நாட்டிலும், தென்பகுதியிலும் பொருட்களின் விலைகள் நியாயமான முறையில் குறைவாக ஏற்றத்தாழ்வின்றி காணப்பட்டன. இதே நேரம் யாழ். குடாநாட்டு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்திருந்தது.
புலிகள் இயக்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காகவே A- 9 பாதையை இழுத்து மூடினர். அவர்கள் மக்களின் நலன்களை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமலேயே இவ்வாறு செய்தனர். தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இப் பாதையை மூடினர்.  இப்பாதை படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்களின் பொருளாதாரம் மீண்டும் சுபீட்சம் பெறும். பொருட்களின் விலைகள் குறையும். எதுவிதமான சிரமங்களுமின்றி தரை வழியாகச் சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

புளொட்.- தர்மலிங்கம் சித்தார்த்தன்

A-9 பாதை திறக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் ஒரு தடவை சென்று வருவதற்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டிய நிலைமை நிலவியது.  அதுவும் நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியாது. அந்தளவுக்குக் கஷ்டமான காரியமாக அது இருந்தது.  இவ்வாறான காரணங்களினால் தான் இப்பாதை எப்போது திறக்கப்படும்? என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் மக்கள் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை மூடியதால் யாழ். குடாநாட்டின் விளைபொருட்கள் எதனையும் தென் பகுதிக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேநேரம் யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் பெரிதும் அதிகரித்தது. இதனால் யாழ். குடாநாட்டு மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருந்தார்கள். அந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.

இனி யாழ் குடாநாட்டுக்குத் தரை வழியாக சிரமங்களின்றி சென்று வர முடியும். அங்கு பொருட்களின் விலைகள் குறையும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பொருட்கள் தென் பகுதிக்கு வந்து சேரும். இதன் மூலம் மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக சுபீட்சம் ஏற்படும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

திருநாவுக்கரசு
ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி)

A – 9 வீதி திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விடயமாகும். வன்னி மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகள் A – 9 வீதியையே மையமாகக் கொண்டுள்ளது. இவ் வீதி இயங்கினால்தான் மக்களின் வாழ்வு உயிர்பெறும்.

பெரும் வரப்பிரசாதமாய் அமைந்த இவ் வீதி திறக்கப்பட்ட பின்னர் எவரும் குழப்பக்கூடாது. மனிதனது வாழ்வு தொடர்பான பிரச்சினையாகவே இதனை நோக்க வேண்டும். A – 9 வீதி திறப்பதால் பொருட்களின் விலைகள் குறைவதுடன், மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. சாதாரண மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. A – 9 வீதி திறப்பின் மூலம் வடக்கு, தெற்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படும்.

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்ம
சர்வதேச இந்துமத பீடம

A – 9 பாதை திறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதேநேரம் பெளத்த மக்கள் நாகதீப விகாரைகளில் வழிபடுவதற்கான வாய்ப்புக்களும் இலகுவாகிவிடும். இப்பாதை மூடப்பட்டதால் யாழ். குடாநாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் பல் வேறு தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வருகின்றார்கள். இப் பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதுடன், பொன்னான காலமும் பிறந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் போராட வேண்டியுள்ளது. அந்தவகையில் இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் அன்னியோன்ய உறவும், புரிந்துணர்வும் வளர்ச்சி அடையும். இவை இன செளஜன்யத்திற்கும் சகவாழ்வுக்கும் வழி வகுக்கும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழியாகச் செல்லுவது ஏற்கனவே மக்கள் மனங்களில் ஆச்சரியம் மிக்கதான செயலாக இருந்தது. ஆனால் இப்போது இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முழுநாட்டு மக்களுமே சந்தோஷமடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஜனாதிபதியின் உரை

presidentmahinda.jpgநேற்றைய தினம் (09) ஆணையிறவு விடுவிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சிகளினூடாக மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தொகுப்பு வருமாறு:

2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி வருடமென நான் ஏற்கனவே கூறியிருந்தேன். பரந்தனை படையினர் முழுமையாக மீட்டெடுப்பதோடு 2009 ஆம் ஆண்டு உதயமானது. ஜனவரி 2 ஆம் திகதியாகும் போது படையினர் கிளிநொச்சியை முழுமையாக மீட்டனர்.

எமது படையினர் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியொன்றை ஈட்டியுள்ளனர். ஆனையிறவு பகுதியை எமது படையினர் இன்று மாலையாகும் போது முழுமையாக மீட்டுள்ளனர்.

அதேபோல, தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையான பகுதியை மீண்டும் இணைக்கும் வகையில் A-9 வீதியை முழுமையாக புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 23 வருடங்களின் பின்னரே A-9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை எமக்கு இழக்க நேரிட்டது. இந்த மோதலில் 359 படையினர் உயிர் நீத்தனர். மேலும் 349 பேர் காணாமல் போனார்கள். 2500 பேர் காயமடைந்தனர்.  அன்று தொடக்கம் எமது படையினர் முகமாலையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற பல தடவைகள் முயன்றார்கள். இந்த முயற்சிகளினால் பெருமளவு படையினர் உயிர் நீத்தார்கள்.  இன்று 53 ஆம் 55 ஆம் படையணியினர் முகமாலையினூடாக ஆனையிறவை முழுமையாக மீட்டுள்ளனர். ஆனையிறவு வெற்றிக்காக கடந்த காலங்களில் உயிர் நீத்த சகல படையினருக்கும் நாட்டின் கெளரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கினதும் தெற்கினதும் ஒற்றுமையை வெளிக்காட்டும் பாதையாகவே A-9 வீதி குறிக்கப்படுகிறது. A-9 வீதியினூடாக பயணிக்க மக்களுக்கு சட்ட விரோத பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிய நேரிட்டது. A-9 வீதியினூடாக பயணித்த மக்களிடம் புலிகள் பல மில்லியன் ரூபா கப்பமாக பெற்றது. அந்த வரலாற்றை எமக்கு ஒருபோதும் மறக்க முடியாது.  புலிகளின் பிடியிலுள்ள இடங்களை மட்டு மன்றி வடக்கு மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தையே எமது படையினர் வென்று தந்துள்ளனர்.

பயங்கரவாதமில்லாத இலங்கையொன்றை உருவாக்கும் மனிதாபிமானப் போராட்டமே இன்று முன்னெடுக்கப்படுகிறது. முழு நாடுமே படையினரின் வெற்றிகளுக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. ஆனால் அந்த வெற்றிகளை இழிவுபடுத்தவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உள்நாட்டு வெளிநாடடு சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இந்த வெற்றிகளுக்கு முன்னின்று உழைக்கும் இராணுவத் தளபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் அதனூடாக நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுத்தவும் சதி முன்னெடுக்கப்படகிறது.

நத்தார் தினத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஆலயமொன்றினுள் வைத்து சுடப்பட்டார். இதன் மூலம் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. சர்வதேச ஊடக தினத்தில் உதயன் பத்திரிகை மீது தாக்கல் நடத்தப்பட்டது.  தொப்பிகல மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆங்கில பத்திரிகயொன்றின் ஊடகவியலாளர் கடத்தி தாக்கப்பட்டார். பல வருடங்களின் பின் பயங்கரவாதிகளுக்கு பலத்த தோல்வியை ஏற்படுத்தி விடத்தல்தீவை மீட்ட மறு தினம் வவுனியாவிலுள்ள முகாமொன்றின் மீது தீ வைக்கப்பட்டது.  தி. மகேஸ்வரன் கொல்லப்பட்ட போது அரசின் மீதே குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால், புலிகளே இந்தக் கொலையை செய்தனர் என பின்பு உறுதியானது.  கிளிநொச்சி வெற்றியின் சூடு தனிய முன்னர் ஊடக நிலையமொன்று தாக்கப்பட்டது. அதன் பின்னர் நாமறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  இந்த சகல சம்பவங்களினாலும் வெற்றி கிடைப்பது யாருக்கு? இந்த சதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளோம்.  இது எனக்கோ அரசுக்கோ எதிரான சதிகளல்ல. இது முழு நாட்டுக்கும் எதிரான சதியாகும். படையினரின் வெற்றியை கண்டு பீதியடைந்தவர்களே இந்த சதிகளின் பின்னால் உள்ளனர்.

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் உறுதியுடனே நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறினேன். தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள எமக்கு சிறிய குழுவின் சதிகளைத் தோற்கடிப்பது இலகுவான விடயமாகும்.  நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் உயிரூட்டி வருகிறோம். ஜனநாயகத்துக்கு உயிரூட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதென்பது சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் உயிரூட்டும் நடவடிக்கையேயாகும்.
பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே மக்கள் ஒற்று மையாக வாழும் நிலையை நிச்சயமாக உருவாக்கு வோம். அந்த வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.

இவ்வாறு ஜனாதிபதி உரையாற்றினார்.

புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்

bharathiraja.jpgவிடு தலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் கொதித்துப் போன பாரதிராஜா, நான் பணம் வாங்கியதாக எந்த அரசியல் தலைவராவது நிரூபிக்க முடி்யுமா? இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன். முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

தேவையற்ற விதத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்

tajmahal-hotel27112008.jpgபாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மும்பாய் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான துர்ரானியை பிரதமர் யூசுப் ராசா ஹிலானி பதவி நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் பொழுது உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் கருத்து வெளியிட்டமைக்காகவே மெஹ்மூட் அலியைப் பணி நீக்கம் செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மும்பைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென இந்தியா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா கையளித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லவெனவும் தெரிவித்து வருகின்றது.  இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவித்த சில மணித்தியாலங்களின் பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் செர்றி ரகுமானும் அறிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவிக்கையில்;

மும்பைத் தாக்குலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அஜ்மல் பற்றி பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஒகரா மாவட்டத்திலுள்ள பரித்கோட் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அமீர் கசா இலாகி.

விசாரணை அதிகாரிகளிடம் அஜ்மலின் பெற்றோர் கூறும் போது, தங்கள் மகன் அஜ்மல் 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும் அதற்குப் பிறகு இடைப்பட்ட காலங்களில் சில தடவைகள் அவர் தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மும்பைத் தாக்குதலின் போது ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் அவரைத் தங்கள் மகன்தான் என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் அஜ்மலின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.

இந்த விசாரணை அறிக்கையின் நகல்கள் உள்துறை அமைச்சகத்திடமும் பிரதமர் கிலானியிடமும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆரம்ப கட்ட விசாரணையில் மும்பையில் தீவிரவாதிகள் தங்களாகவே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புக்கும் அவர்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளதென தெரிவித்தார்.

இதேவேளை, அஜ்மல்கஸாப் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்பதை பாதுகாப்பு அமைப்புகள் தனக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக துர்ரானி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநாட்டில் இலங்கைப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமரும் கலைஞரும் மௌனம்

singh.jpgசென் னையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலினால் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலைதெரிவித்தபோதும் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவர் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.  இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி மௌனம் சாதித்தார்.

நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டுவாழ் இந்தியர் விழாவை முறைப்படி ஆரம்பித்துவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காஸா பகுதியில் பாலஸ்தீன அப்பாவிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார். பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார். எனினும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. அதே போல முன்னதாக உரையாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியும் இலங்கை பிரச்சினை பற்றி குறிப்பிடவில்லை.

கிளேமோர் குண்டுத் தாக்குதல் 7 பேர் பலி

morawawa_.jpg
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா நெலுவ பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும்  விமானப்படையின் டிரக் வண்டி ஒன்றை இலக்குவைத்தே இக்கிளேமோர் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பளை வீழ்ந்தது

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான பளை பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் பளை பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான படையினரும், 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினருமே பளை நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் மத்தியில் அமைந்துள்ள பளை பிரதேசம் ஒரு பாரிய நகரமாகும். முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள புலிகளுக்கான பிரதான விநியோக பாதையாகவும், புலிகளின் ஆட்டிலறி தளமாகவும் பளை விளங்கியதாக தெரிவித்த பிரிகேடியர், தற்பொழுது அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டுள்ளதன் மூலம் படையினருக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

படையினரின் கடுமையான தாக்குதல்களை அடுத்து புலிகள் தொடர்ந்தும் பின்வாங்கி வருவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பளையிலிருந்து ஆனையிறவை நோக்கிய படை முன்னகர்வுக்கு 14 கிலோ மீற்றர் தூரமே எஞ்சியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து 280 வது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை, முகமாலைக்கும், ஆனையிறவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய பிரதேசமாகும். தென்னை செய்கைக்கு பெயர்போன பிரதேசமாகவும் இது விளங்கியுள்ளது. ஏ-9 யாழ். – கண்டி பிரதான வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள பளை பிரதேசத்தில் ஆனையிறவுக்கும் கொடிகாமத்திற்கும் இடையிலான ரயில் நிலையம் ஏற்கனவே இருந்தது. பளை பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் பாதுகாப்பு படையினர் சோரண்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

இதேவேளை, யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி எந்தவேளையிலும் படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதியின் ஒவ்வொரு பகுதிகள் மாத்திரம் இதுவரை காலமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

‘காஸா தாக்குதல்’ பதவியேற்கமுன் ஒபாமா இஸ்ரேலுக்கு அளித்துள்ள பரிசு. – சவாஹிரி

israeli-aircraft.jpgஅமெ ரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேலின் நண்பரென்றும் காஸா மீதான தாக்குதலை நிறுத்த முயற்சிக்கமாட்டாரெனவும் அல்-கைதாவின் இரண்டாம் மட்டத்தலைவர் அய்மன் அல்ஸவாஹிரி தெரிவித்துள்ளார். இவரின் உரையடங்கிய ஒலிநாடா அல் கைதாவின் இணையத்தளத்தில் வெளியானது. காஸா மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அல்-கைதாவால் வெளியிடப்பட்ட முதல் ஒலி நாடா இதுவாகும்.

அல்-கைதாவின் இரண்டாம் மட்டத் தலைவர் அய்மன் ஸவாஹிரி இதில் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த ஒலி நாடாவில் தெரிவிக்கப்பட்டதாவது :- பராக் ஒபாமா அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றுவார். முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பெல்லாம் போலியானது. ஒபாமா எப்போதும் இஸ்ரேலின் நண்பர். காஸா தாக்குதல் அவர் இஸ்ரேலுக்குக் வழங்கியுள்ள பரிசு.

காஸா மக்களையும், குழந்தைகளையும் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அவர் முன்வரமாட்டார். இஹ்வால் முஸ்லிம்களை அடக்கியாள நினைக்கும் எகிப்திய ஜனாதிபதி முஸ்லிம்களின் ஒட்டு மொத்த துரோகி இஸ்ரேலின் கொலைகளுக்கான விளைவுகளை டெல்அவிவ் விரைவில் எதிர்கொள்ளுமெனவும் அவ்வுரை யிலே ஸவாஹிரி கூறியுள்ளார். அரபு ஆட்சியாளர்களையும் அல்-கைதா சாடியுள்ளது. பலஸ்தீனச் சிறுவர்கள், குழந்தைகள் முதியோர்கள் கொல்லப்படுவதானது உலகெங்குமுள்ள யூதர்களைக் கொலை செய்யப்படவுள்ளதை நியாயப்படுத்தியுள்ளதாக காஸாவை ஆளும் ஹமாஸ் தெரிவித்துள்ளதும் தெரிந்தது.

பளையை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேற்றம் -தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

army.jpgமுகமாலையில் புலிகளின் முன்னரங்கு பாதுகாப்பு நிலைகளைக் கைப்பற்றியுள்ள படையினர் தொடர்ந்தும் தெற்குநோக்கி கடும் தாக்குதல்களைத் தொடுத்தவாறு முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. முகமாலையில் 600 மீற்றர் தூரத்தைக் கைப்பற்றிய படையினர் பளையை நோக்கி தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.

யாழ் – கண்டி ஏ – 9 வீதியில் தெற்கு நோக்கி முன்னேறும் படையினர் இந்த வீதியை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் தூர பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தையிலிருந்து கிளி நொச்சி ஆனையிறவு தெற்குப் பிரதேசம் வரை ஏ-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்நிலையில் வடமுனையிலிருந்து ஆனையிறவு நோக்கி இராணுவத்தின் 53 ஆம், 58ஆம் படைப்பிரிவினர் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையும், மாலையும் இடம்பெற்ற மோதல்களில் புலிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் மூன்று சடலங்களையும் கைப்பற்றியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இதில் இராணுவத்திற்குச் சிறு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.  

புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் – இராணுவத் தளபதி கூறுகிறார்

sarath-fonseka.jpg
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்குமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கிய விஷேட பேட்டியியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்; “புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்த போது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது “மரணத்தின் முத்தம்’ என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியன் பகல் கனவென புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியையும் பிடித்திருக்கிறோம். எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்லென கூற முடியும்.

பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது தான் பகல் கனவாக இருக்குமென நான் நம்புகிறேன். இதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டில் யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கில் ஏனைய 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் உயிரிழந்திருக்கின்றனர். பெரியதொரு கெரிலா இயக்கத்துடன் யுத்தம் புரியும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளை பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றியாகும் என்று கூறினார்.

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: பிரதமர் மன்மோகன் சிங்

singh.jpgமும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளின் தொடர்பு நிச்சயம் உள்ளது. அவர்களின் உதவி இல்லாமல் தீவிரவாதிகளால் இந்த செயலை செய்திருக்க முடியாது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் (06) உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதில் பிரதமர் பேசுகையில், சில பாகிஸ்தான் அமைப்புகள், அதிகாரிகளின் உதவி இல்லாமல் மும்பைத் தாக்குதல் நடந்திருக்க முடியாது. மும்பைத் தாக்குதல் நடந்த விதம், அதில் ஈடுபட்டோர் செயல்பட்ட விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நிச்சயம் சில பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதில் தொடர்பு இருப்பது நிரூபணமாகிகிறது.

தீவிரவாதத்தை ஒரு கொள்கையாகவே பாகிஸ்தான் வைத்துள்ளது. தீவிரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது பாகிஸ்தான். அதேபோல வடகிழக்கில் ஊடுறுவும் தீவிரவாதிகள் நமக்கு அருகாமையில் உள்ள இன்னொரு நாட்டிலிருந்துதான் (வங்கதேசம்) வருகின்றனர். அந்த நாடு, தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து புகலிடமாக திகழ்கிறது.

நமது அண்டை நாடுகளில் தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலை நிலவுகிறது. சில நாடுகளில் நிலைமை சரியில்லை. தீவிரவாதிகளை அவர்கள் கட்டுப்படுத்துவதில்லை. மும்பை போன்ற தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு நிரந்தரமான நெருக்கடி நிலை நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. நமது புலனாய்வு அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் அவசியமானது, முக்கியமானதாகும் என்றார் மன்மோகன் சிங்.