கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இன்று 26 ஜனவரி இந்தியாவின் குடியரசு தினம்:

republic-day.jpg
இந்தியாவின் 60வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் புதுடெல்லியில் நடந்த விழாவில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நாஸர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக, டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படைத் தளபதிகள், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் தின அணிவகுப்பை, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பார்வையிட்டனர்.

தருமபுரத்திற்கு கிழக்கே புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 2 படகுகள் சேதம் – படைத்தரப்பு

_bort.jpgமுல்லைத் தீவில் தருமபுரத்திற்கு கிழக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகளை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று படகுகள் அழிக்கப்பட்டும் இரு படகுகள் சேதமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பு மேலும் கூறுகையில்;

கல்மடுக்குளக்கட்டைத் தகர்த்த புலிகள் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த போது அதனூடாக ஐந்து படகுகளில் தாக்குதல் நடத்த வந்ததுடன், அதற்கு வசதியாகக் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் வடக்குப் பக்கமாகப் பாய்ந்த போது கால்நடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டன. புலிகளின் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும், இதன் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை. இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிமுதல் தர்மபுரத்திற்கு தெற்கேயும் கல்மடுவுக்கு வடக்கேயும் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 1.45 மணியளவிலும் 3 மணியளவிலும் நடைபெற்ற மோதல்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதேநேரம், விசுவமடுவுக்கு மேற்கேயிருந்து முன்னேறும் 57 ஆவது படையணியினர் சனிக்கிழமை புளியம்பொக்கனைப் பகுதியிலுள்ள புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர். உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், புதுக்குடியிருப்பின் தென்பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன்

Mahinda RajapaksaPirabaharan_Eelamபுலிகளின் கோட்டையாக விளங்கிய கடைசி நகரான முல்லைத்தீவு நேற்று (ஜனவரி 25) கைப்பற்றப்பட்டதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுட்காலக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட வே பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான யுத்தம் சில மாதங்களுக்கு முன்வரை சற்றும் எதிர்பாராத புதிய திருப்பு முனையில் வந்து நிற்கின்றது. இலங்கை அரச படைகள் புலிகளின் ஒவ்வொரு கட்டுப்பாட்டுப் பகுதியையும் தம்வசப்படுத்துவதை நேரடியாக அஞ்சல் செய்து வர கிறிக்கட் ஆட்டத்தில் ஓட்டங்களை குவிக்கும் குதுகலத்தைப் போல தெற்கில் ஜனாதிபதி மகிந்தவின் ஆளும்கட்சி பட்டாசுகள் கொழுத்தி குதூகலித்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள புலியெதிர்பாளர்களும் மகிந்த அரசின் வெற்றிக் களிப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களோ பணம் கட்டிய குதிரை (புலி) பின்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்வதறியாது குழம்பிப் போயுள்ளனர்.

இதுவரை இராணுவம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடைய திசையிலேயே செல்ல வேண்டியதாயிற்று. ‘Trapped and Mistreated : LTTE Abuses Against Civilians in the Vanni’ என்ற தலைப்பில் நியுயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் வன்னி மக்களை ஆபத்தான யுத்த சூழலுக்குள் பலாத்காரமாக தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது. ‘In research conducted by Human Rights Watch in Sri Lanka from October through December 2008 — including 35 interviews with eyewitnesses and humanitarian aid workers working in the north — we found extensive evidence of ongoing LTTE forced recruitment of civilians, widespread use of abusive forced labor, and improper and unjustified restrictions on civilians’ freedom of movement.” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஜனவரி 9ல் வெளியிட்ட 21 பக்க அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஜனவரி 21ல் முல்லைத்தீவில் உள்ள தேவிபுரம் உடையார்கட்டு சுகந்திரபுரம் சுகந்திரபுரம் கொலனி சுகந்திரபுரம் மத்தி கைவேலி வடக்கு இருட்டு மடு போன்ற இடங்களை பாதுகாப்பு வலயங்களாக இலங்கை அரச படைகள் அறிவித்து இருந்தன. அடுத்த 48 மணி நேரத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விடுத்த அறிக்கையில் யுத்த பிரதேசங்களில் இருந்து தப்பி வரும் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட நலவாழ்வு நிலையங்களை சிறைக் கூடங்களை இயக்குவது போல் இலங்கை இராணுவத்தினர் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம் யுஎன் மற்றும் சர்வதேச உதிவி அமைப்புகளை வெளியேற்றியதால் யுத்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவியே கிடைப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் அடம்ஸ் தெரிவித்து உள்ளார்.

எந்த மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறி ஏட்டிக்குப் போட்டியாக இந்த யுத்தத்தை நடத்துகிறார்களோ அந்த மக்கள் பற்றி இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கவனத்தில் கொள்ளவில்லை. தொடர்ச்சியான யுத்த சூழலுக்குள் 200000 – 300000 மக்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவ்வளவு மக்களும் ஒரு குறுகிய பிரதேசத்தினுள் செறிவாகிப் போயுள்ளனர். 200000 – 300000 வைத்துக் கொண்டு புலியும் – சிங்கமும் யுத்தத்தில் இறங்கி உள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் தாக்குதல்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இம்மக்கள் மத்தியில் இந்த யுத்தத்தை நடத்துவது மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

”As the LTTE has lost ground to advancing government forces, civilians have been squeezed into a shrinking conflict zone. The encroaching fighting has placed their lives increasingly in danger. Many spend their day under the constant sound of nearby small-arms fire, shelling, and bombing. Because of a near total government ban on access by humanitarian agencies and the media, the suffering of the civilian population of the Vanni receives scant attention outside Sri Lanka.” என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இம்மக்களின் வாழ்நிலையை விபரித்து உள்ளது.

இந்த 200000 – 300000 மக்கள் பற்றிய கவனத்திலும் பார்க்க இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி பற்றிய ஆராய்ச்சிகளும் கல்மடு குளக்கட்டு உடைப்பின் இராணுவ முக்கியத்துவமும் பற்றியே கவனம் உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாகப் புறப்பட்ட புலிகள், தங்களது பாதுகாப்பு அரணாக வன்னி மக்களை பயன்படுத்த முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுத்துவிட முடியாது. மக்களது இழப்புகளை அரசியலாக்கும் புலிகளின் மூன்றாம்தர அரசியல் பிரச்சாரம் ஒன்றும் புதிய விடயமல்ல. அதேசமயம் அந்த மக்கள் இலங்கை இராணுவத்தினர் மீது கொண்டுள்ள அச்சமும் கடந்தகால நிகழ்வுகளும் ‘தெரியாத பேயிலும் பார்க்க தெரிந்த பேய் மேலானது’ என்று எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும். மேலும் இந்த மக்கள் நீண்ட காலம் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ அவர்களுடன் தொடர்புபட்டவர்கள். அவர்களுடைய உறவுகள் கட்டாய இராணுவப் பயிற்சி கட்டாய உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள். இவற்றை அரசபடைகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற அச்சம் நியாயமானது.

மேலும் பரிதவிக்கும் மக்களை போரில் ஈடுபட்டு இருக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் விடுவது மனிதாபிமானமற்ற செயல். சர்வதேச உதவி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டால் அவற்றை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இராணுவக் கட்டுப்பாட்டில் மக்களுக்கான பாதுகாப்பு வலயங்கள் அமைப்பதென்பது யதார்த்தமற்றது.

எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது புலிகளும் இலங்கை இராணுவமும் உணர மறுக்கின்ற உண்மை. இன்று இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றியது விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப் புள்ளியல்ல. விடுதலைப் புலிகளால் அதன் முளையிலேயே அழிக்கப்பட்ட இயக்கங்கள் இரு சகாப்தங்களைக் கடந்தும் இன்றுவரை இயங்குகின்றன. அப்படி இருக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.

புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமான இந்த யுத்தத்தில் இலங்கை அரச படைகளை மரபுவழி இராணுவமாக புலிகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது உண்மையே. ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியவில்லை. தலிபானால் அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் யுத்தத்தை வெல்லவும் முடியவில்லை. இதுவே இலங்கைக்கும் பொருந்தும். இன்னுமொரு ஆப்கானிஸ்தானையும் இன்னுமொரு ஈராக்கையும் இலங்கையில் உருவாக்கும் இராணுவ பலம் புலிகளுக்கு நிச்சயம் உண்டு. புலிகள் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதனையே இந்த யுத்தத்தின் போக்கு காட்டுகிறது.

ரெலோ அழிக்கபட்டபோதும் சரி கருணா குழு அழிக்கப்பட்ட போதும் சரி அவ்வமைப்புகளின் வேறு  வேறு மட்டத் தலைமைகள் அழிக்கப்பட்டன. கட்டளைக் கட்டமைப்பு தகர்க்கப்பட்ட அவற்றின் உறுப்பினர்கள் சிதறி வெளியேறினர். உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் இந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத்தில் இவையெதுவுமே நடைபெறவில்லை. இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்குமான இந்த யுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயெ இடம்பெற்று உள்ளது. யுத்தத்தின் பிற்பகுதிகளில் அங்குமிங்குமாக சிறு தாக்குதல்களே இடம்பெற்று இருந்தது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக மிகவும் நிதானமாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் திட்டமிட்ட முறையில் பின்வாங்கி உள்ளனர். தமது பக்கத்தில் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளையும் தவிர்த்து உள்ளனர். குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தளபதிகள் யாரும் உயிரிழக்கவும் இல்லை. சரணடையவும் இல்லை. புலிகளின் பங்கர்களைத் தவிர ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படவும் இல்லை. புலிகளின் கட்டளை அமைப்பு சீர்குலையவும் இல்லை. நிதானமாக தங்களின் ஆயுத தளபாடங்களுடன் பின் வாங்கி உள்ளனர். இலங்கை அரசாங்கம் புலிகளிடம் இருந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை புலிகள் பின்வாங்கிச் செல்ல தன் வசப்படுத்தி உள்ளது. புலிகளின் இறுக்கமான கட்டமைப்பில் இந்த யுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கொள்ள முடியாது.

புலிகளின் மற்றுமொரு உறங்கு நிலைக் காலமாக இது அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த உறக்கம் இலங்கையின் வனப் பிரதேசங்களிலோ பணத்தால் எதனையும் வாங்கும் ஒரு நாட்டிலோ அல்லது சர்வதேச நாடுகளின் கொடிகள் பறக்கும் புலிகளின் கப்பல்களில் சர்வதேச கடலிலோ அல்லது இவை எல்லாவற்றிலுமாகவோ இருக்கலாம். இந்த உறங்கு காலத்தின் காலம் வே பிரபாகரனுக்கே வெளிச்சம். இந்த உறங்கு காலம் சில வாரங்களாகவோ அல்லது சில மாதங்களாகவோ இருக்கலாம். ஆனால் புலிகள் தங்கள் இருப்பை தெரியப்படுத்துவார்கள்.

புலிகள் தமிழ் மக்களது அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் பலத்தை என்றைக்குமே கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய வரட்டுத்தனமான இராணுவப் போக்குக்கு கிடைத்த மிகப்பெரும் அடி இந்த யுத்தம். ஆனால் இந்த இராணுவக் கண்ணோட்டத்திற்கு வெளியே வரக்கூடிய ஆற்றல் வே பிரபாகரனுக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி ஒன்று நடந்தால் அது ‘தொப்பிக்குள் இருந்து முயல்’ எடுப்பதற்கு ஒத்ததாக இருக்கும்.

இந்த யுத்தத்தில் தீவிர ஆர்வம்காட்டும் ஜனாதிபதி மகிந்த நாட்டின் இந்நிலைக்கு காரணமான இன முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. தன்னிடம் சரணாகதி அடைந்துள்ள கிழக்கின் முதல்வரையே ஜனாதிபதியால் திருப்திப்படுத்த முடியவில்லை. அப்படி இருக்கையில் இந்த யுத்தத்தால புலிகளை வென்று தமிழ் மக்களுக்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க வைக்கப் போவதாகக் கூறும் வாய்ச்சவடால்கள் தமிழ் மக்களிடம் செல்லாது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உண்மையிலேயே வெல்வதாக இருந்தால் முதல் தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்யாத வரை அது புலிகளுக்கு விளைநிலமாகவே இருக்கும்.

Related Articles:

தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்

2008ல் சொல்ல என்ன இருக்கிறது? : த ஜெயபாலன்

யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன்

விடுதலைப் புலிகள் செலுத்தும் யுத்தத்தின் விலை : த ஜெயபாலன்

புலிகளின் யுத்த தாங்கியை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்

mi24-1301.jpgவிசுவமடு பகுதியிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் நேற்று தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப்படைக்குச் சொந்தமான எம். ஐ. 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விசுவமடு குளத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த புலிகளின் யுத்த தாங்கியொன்றை இலக்கு வைத்து விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

விமானத் தான்குதலுக்கு இலக்கான யுத்த தாங்கியை மீட்கும் நோக்கில் முன்னேறிய இராணுவத்தின் 58வது படையணிக்கு உதவியாக நேற்று நண்பகல் மீண்டும் எம். ஐ. 24 ரக விமானம் மூலம் விமானத் தாக்குதலை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

ஒபாமாவின் திட்டத்துக்கு போப் ஆண்டவர் கண்டனம்

pope_benedict.jpgஅமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் .இதன் ஒரு பகுதியாக குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அவர் தீவிரப்படுத்தி வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் கருக்கலைப்பு, செய்து கொள்ள ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கான உத்தரவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

புஷ் ஆட்சி காலத்தில் கருக்கலைப்பு செய்ய உதவும் அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இப்போது அந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஒபாமாவின் இந்த முடிவுக்கு போப் ஆண்டவர் பெனடிக்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் சார்பில் வாடிகன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இது வாழ்வு பிரச்சினை. உயிர் பிரச்சினை அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். இத் திட்டம் கத்தோலிக்க மத ஈடுபாடு உள்ளவர்களின் முதுகில் குத்துவதாகும். படைக்கப்படும் உயிர்களை முளையிலேயே கிள்ளி எறியும் இந்த படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பது வேதனை தரும் விஷயம். இவ்வாறு வாடிகன் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகரமும், படையினர் வசம்.

2501-mullaiteevu.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் கடைசித் தளமான முல்லைத்தீவு நகருக்குள் இன்று (ஜன:25) பிற்பகல் பிரிகேடிய நந்தன உடவத்த தலைமையிலான 59வது டிவிசன் படைப்பிரிவினர் உட்புகுந்துள்ளனர்  என பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இன்று காலை  நந்திக்கடல் ஏரி ஊடாக திடீர் தாக்குதல் நடத்திய 593வது பிரிகேட் படைப்பிரிவின் 7வது கெமுனு படைப்பிரிவினரே முல்லைத்தீவு நகருக்குள் உட்புகுந்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முல்லைத்தீவு நகரம்  நந்திக்கடல் ஏரிக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய நிலத்தொடராகும். 1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமை கைபற்றி இதை அவர்களின் பிரதான தளமாக பாவித்து வந்தனர்.

1996ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவைக் கைப்பற்றியுள்ளது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் படையினரின் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் இப்பகுதியை விடுவித்துள்ளதாக அறிவிக்கப்படும் என களவட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை

இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்  உத்தியோகபூர்வ அறிவிப்பு 

sarath-fonseka.jpgஇராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்  உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி (sri lanka time -6.40 PM) விடுதலைப்புலிகளின் முக்கிய தளமாகக் கருதப்பட்ட முல்லைத்தீவு நகர் சிறிலங்கா படையினரால் இன்று கைப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் நேற்று முல்லைத்தீவு நகரை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார். 13 வருடங்களுக்குப் பின்னர் முல்லைத்தீவு நகரை இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். இந்தச் செய்தியை தொலைக்காட்சிகள் ஊடாக நேற்று மாலை அவர் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:- மிக நீண்ட காலமாக சகலரும் எதிர்பார்த்திருந்த பாரிய வெற்றி தொடர்பாக மிகவும் சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கை இராணுவம், தீவிரவாதிகளின் பலமான கோட்டையாக விளங்கிய முல்லைத்தீவு நகரை  கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று (25) கைப்பற்றியுள்ளனர்.

இந்த வெற்றி தொடர்பாக இராணுவத் தளபதி என்ற வகையில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன். பூநகரி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, தர்மபுரம், இராமநாதபுரம் என்ற முக்கிய பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தற்போது கைப்பற்றியுள்ளனர். நாட்டின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் முல்லைத்தீவு அமைந்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள காட்டுப்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து முன்னேறிச் சென்று புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான பதுங்கு குழிகளையும், மண் அரண்களையும் கைப்பற்றி முல்லைத்தீவு நகருக்குள் பிரவேசித்தனர். முல்லைத்தீவை புலிகளிடமிருந்து விடுவிக்கும் படை நடவடிக்கைகளை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தின் 59வது படைப்பிரிவினர் ஆரம்பித்தனர். ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் 40 கிலோ மீற்றர் பரப்பைக் கைப்பற்றிய படையினர் முல்லைத்தீவு நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த வெற்றி தொடர்பாக நாங்கள் பெருமை அடைகின்றோம்.

புலிகள் தற்பொழுது 25 கிலோ மீற்றர் நீளமும் 15 கிலோ மீற்றர் அகலமும் பரப்பைக் கொண்ட மிகச் சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த பிரதேசத்தையும் வென்றெடுத்து புலிகள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ள ஒன்றரை இலட்சம் மக்களை காப்பாற்றுவேன் என்று உத்தரவாதம் வழங்குகின்றேன்.

இந்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினதும் சரியானதும், சிறப்பானதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே பிரதான காரணமாகும். அதேபோன்று இந்த நடவடிக்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்த வீரர்களையும் எமக்கு இந்த சந்தர்ப்பத்தில் மறக்க முடியாது.

முல்லைத்தீவை விடுவிப்பதற்கான ஒருவருட கால படை நடவடிக்கைகளில் தாய் நாட்டுக்காக தனது உயிர் நீத்தவர்களை இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றியுடனும், கெளரவத்துடனும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். அதேசமயம் எமது இந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான இறுதிக் கட்டத்தில் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கி படை முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய விமானப் படையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று ஆரம்பத்திலிருந்து எமக்கு மக்கள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பும் மக்களது பிரார்த்தனைகளும் இந்த வெற்றிகளுக்கு மற்றுமொரு காரணமாகும். அத்துடன் 2 வருட காலத்திற்குள் 80 ஆயிரம் வரையான இளைஞர்கள் படையில் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். நாட்டிலுள்ள சகல இளைஞர்களும் இன்னும் முன்வர வேண்டும் என்றும் இறுதி நடவடிக்கைகளில் இராணுவத்தில் இணையுமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் கூறினார்.

முல்லைத்தீவைக் கைப்பற்றியமை தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டதாவது:-

இந்தப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள இராணுவத்தின் 59வது படைப்பிரிவின் கட்ட ளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமை யிலான படையினர் தற்பொழுது முல்லைத்தீவு நகரு க்குள் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி பிரதேசத்தை பாதுகாப்புப் படையினர் கடந்த 2ம் திகதி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றி 23 நாட் களில் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியமை படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும்.

593 படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஜயந்த குணரத்ன தலைமையிலான படையினர் நந்திகண்டல் ஏரியை ஊடறுத்து திடீர் தாக்குதல்களை நடத்தயுள்ளனர். புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களை வெற்றிகர மாக முறியடித்துக் கொண்டு 7வது கெமுனு படைய ணியின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த லமாஹேவா தலைமையிலான படையினர் நகரை நேற்று கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை விசுவமடு நகரை நேற்று முன்தினம் கைப்பற்றிய 58வது படைப்பிரிவினர் அங்கிருந்து தொடர்ந்தும் முன்னேறுவதற்கான நடவடிக்கை களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். முல்லைத்தீவை கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வரும் படையினரின் நடவடிக்கைகளுக்கு விமானப் படை விமானங்கள் நேற்றும் கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவின் கிழக்கு பகுதியையும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்க வேண்டும் -அரச அதிபர் ஐ.சி.ஆர்.சி.யிடம் கோரிக்கை

mulli-ga.gifமுல் லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குப் பகுதியில் 50 வீதமான இடம்பெயர்ந்தவர்கள் உள்ளதனால் அப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் அங்குள்ளவர்களை பாதுகாக்க முடியுமென முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் உப தலைவியான வலேரியா பெட்டியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு அரச அதிபர் வெள்ளிக்கிழமை மாலை வவுனியா செஞ்சிலுவைச் சங்கப் பிராந்திய அலுவலகத்தில் வைத்து அவரை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மேற்குப் பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியான அம்பவன்பொக்கன், முள்ளிவாய்க்கால், மாத்தளன் மற்றும் வளையார்மடம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்தவர்களில் 50 வீதமானவர்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியையும் பாதுகாப்பு வலயமாக்குவதன் மூலம் இங்கு இடம்பெயர்ந்து தங்கியிருப்போரை பாதுகாக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் நெருக்கமாகவுள்ளதாலும் வெள்ளப்பாதிப்பு காரணமாகவும் முக்கியமாக குடிநீர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததுடன் மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் புதுக்குடியிருப்பு உணவு களஞ்சியசாலையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இதனை பாதுகாப்பு வலயப்பகுதியில் நிறுவுதல் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். மேலும் உணவுத் தொடரணி செல்லும் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் இருசாராரும் மோதலில் ஈடுபடுவதால் இருதரப்பின் உத்தரவாதத்துடன் உணவு தொடரணி எடுத்துச் செல்வது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்
 

காஸாவில் பொஸ்பரஸ் குண்டு பற்றி விசாரணைக்கு உத்தரவு

gaa-sa.jpgயுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து  தற்போது காஸாவில் இஸ்ரேல் இராணுவம் இல்லை. காஸா மக்கள் தங்களது சொந்தங்கள் சொத்துக்களைத் தேடி அலைகின்ற வேளையில் இடி பாடுகளுக்கிடையில் சிக்குண்ட சடலங்களையும் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.  நாட்கள் கடந்த நிலையில் மீட்டெடுக்கப்படும் சடலங்கள் உருக்குலைந்து அழுகியுள்ளன. இதனால் பிரேதங்களை அடையாளம் காண முடியாதுள்ளது. இடிந்த வீடுகள், தொழிற்சாலைகளைக் கண்ட மக்கள் தலையில் அடித்து கதறி அழுதனர். இதுவரையான கணக்கெடுப்பின்படி காஸாவில் 1284 பேர் பலியானதாகவும் இவற்றில் 894 பேர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் 280 பேர் குழந்தைகள் எனவும் மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

இஸ்ரேல் தாக்குதலின் போது பொஸ்பரஸ் கலந்த இரசாயனக் குண்டுகளைப் பாவித்ததாகவும் இதனால் ஏராளமான காஸா மக்கள் எரி காயங்களால் அவதிப்படுவது பற்றியும் தகவல்கள் கசிந்துள்ளதால் சர்வதேசத்தின் கண்டனங்களுக்கு இஸ்ரேலியத் தலைவர்கள் உள்ளாகியுள்ளனர். மருத்துவர்கள், மீட்புப் பணியாளர்கள் பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளதை நிரூபித்துள்ளனர். இதனால் குழப்பமுற்ற இஸ்ரேல் அரசு இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அப்பாவிகள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. சுமார் 500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதுடன் ஏராளமான சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டதாகக் கூறும் இஸ்ரேல் இடிபாடுகளைத் துப்புரவு செய்யும் ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் காட்டியது.

பெரும்பாலானோர் சுரங்க இடிபாடுகளைத் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடுவதே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இஸ்ரேலின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளை பக்கச் சார்பின்றி முன்னெடுக்க ஐ. நா.வும் ஒத்துழைப்பு வழங்குவுள்ளதாக அறவித்துள்ளது.  சட்ட ரீதியான ஆயுதங்களையே தாம் பயன் படுத்தியதாக இஸ்ரேல் கூறுவதை அனேக நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இவ்வாறான நிலையில் வெளிநாட்டமைச்சர் சிபிலிவின் சர்வதேச நாடுகளிடம் ஹமாஸின் ஆயுதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தனக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

ஐ.சி.ஆர்.சி.யின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு வலயத்திற்கு வன்னி மக்களை அனுப்புவதற்கு நடவடிக்கை

red_cross.jpgவன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களை அரசு புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தினுள் அனுப்பி வைப்பதற்குரிய ஒத்துழைப்பை பெற்று கொள்வது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா பிரதிநிதியுடன் வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய பேச்சுகள் நடத்தியுள்ளார். கடந்த புதன் கிழமை வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா அலுவலகத் தலைமையதிகாரி வலரி பெட்டிட்டியருக்கும் வன்னி இராணுவத் தளபதிக்கும் இடையிலான இந்தச் சந்திந்திப்பின்போது, அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துவது, விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது முல்லைதீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றைத் தருமாறு வன்னிப்பிராந்திய இராணுவத் தளபதி சர்வதேச செஞ்சிலுவைக்குழு அதிகாரியிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, வன்னிப் பிரதேசத்திற்கான உணவு மற்றும் அத்தியாவசிய உணவு விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து உலக உணவுத்திட்ட அதிகாரியுடனும், வன்னிப் பகுதியில் உள்ள மக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து வவுனியாவில் உள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியுடன் பேச்சுகள் நடத்தியதுடன் போர்ப்பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்து வருவது குறித்தும், வன்னிப்பிராந்திய இராணுவத்தளபதி பேச்சுகள் நடத்தியுள்ளார்.

ஒபாமாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தானிடம் சாதகமான அணுகுமுறையை கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்க உறவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் நிதி உதவி வேண்டுமானால், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில் தான் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா தன் வெளிநாட்டுக் கொள்கையில் அறிவித்தார். இது வெளியானதும் பாகிஸ்தான், ஒபாமா மீது பாயத்தொடங்கி உள்ளது.

ஒபாமா தேர்தல் பிரசாரத்தின்போதே அல்கொய்தாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அரசு அல்கொய்தா இலக்குகளைத் தாக்கி அழிக்காவிட்டால் பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா இலக்குகளை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என்றும் எச்சரித்து இருந்தார். இதனால் புஷ் மாதிரி ஒபாமா இருக்க மாட்டார் என்பது பாகிஸ்தானுக்கு புரிந்துபோனது. இதனால் தான் அவர் பதவி ஏற்றபோது போட்ட கையெழுத்தின் மை கூட காய்வதற்கு முன்பு அவர் மீது தன் கோபத்தை காட்ட பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி பாகிஸ்தானில் உள்ள ஜியோ டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களில் ஒபாமா பொறுமையை கடைப்பிடிப்பார் என்று பாகிஸ்தான் நம்புகிறது.  பாகிஸ்தானுடன் சாதகமான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்காவிட்டால், அமெரிக்காவுடனான உறவு குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்போம். புஷ் பாகிஸ் தானுக்கு சாதகமாக இருந்தார். இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை பாகிஸ்தான் முப்படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் தாரிக் மஜீத் கூறுகையில், இதுபோன்ற எதற்கும் உதவாத போக்குகளை ஒபாமா கைவிடவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தன் நேர்மையை அமெரிக்காவிடம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.