கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம்

us_obama-003.jpgசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்த பிழையால், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு 7.35 மணிக்கு ஜான் வெள்ளை மாளிகையின் மேப் அறையில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடந்த பதவியேற்பு விழாவின்போது ‘faithfully’ என்ற வார்த்தை தவறான இடத்தில் உச்சரிக்கப்பட்டு விட்டதால், மறுபடியும் பதவிப்பிரமாணம் எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நீதிபதியின் இந்த பிழையால் ஒபாமாவின் அதிபர் பதவி சட்டப்பூர்வமானதா என்ற பிரச்சினை பின்னாளில் வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த 2வது பதவிப்பிரமாணம் நடந்துள்ளது.

ஆனால், உண்மையில், பதவிப்பிரமாணம் எடுக்காமலேயே அன்றைய தினம் ஒபாமா அதிபராகி விட்டார் (அமெரிக்க சட்டப்படி, பதவியேற்பு தினத்தன்று, பிற்பகல் 12 மணி முதல், அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானாகவே அதிபராகி விடுவார்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் 2வது பதவிப்பிரமாணம் குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர் கிரேக் கிரேக் வெளியிட்ட அறிக்கையில், பதவி்ப்பிரமாண நிகழ்ச்சி எந்தவித பிரச்சினையும் இன்றி முடிந்தது. பொருத்தமான முறையில் அதிபர் ஒபாமா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் சட்டத்திலேயே பதவிப்பிரமாணம் குறித்து தெளிவாக உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குழப்பம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த 2வது பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது. 2வது முறை நடந்த பதவிப்பிரமாணத்தையும் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸே செய்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி அமைச்சரானார்:

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராகியுள்ளார் ஹில்லாரி கிளிண்டன். ஒபாமா அதிபராகி விட்டதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி கிளிண்டனின் பெயரை செனட் சபைக்கு முன்மொழிந்தனர். அதில், 94 – 2 என்ற வாக்குகள் அடிப்படையில்,ஹில்லாரியின் நியமனம் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹில்லாரி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கைகளில் பைபிளைப் பிடித்துக் கொள்ள அதன் மேல் கை வைத்தபடி ஹில்லாரி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

வைகோ – உண்ணாவிரதப் போராட்டம்

22-vaiko.jpgஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் இஸ்ரேல் குண்டு வீசியதில் 45 பேர் கொல்லப்பட்டபோது, உலக நாடுகள் அதற்கு எதிர்ப்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தன. ஆனால் 6 கோடித் தமிழ் மக்களாகிய நாம், 20 கல் தொலைவில் கடலுக்கு அப்பால் படுகொலைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களைக் காக்கக் கதியற்றுப் போனோம்.

தற்போது நடைபெறும் தமிழ் இன அழிப்பு யுத்தத்தை, இந்தியாவின் மத்திய அரசு கொடிய நோக்கத்தோடு திட்டமிட்டு ஊக்குவித்து உதவுகிற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்கள் பதறுகின்றன. அங்கமெல்லாம் நடுங்குகிறது. ராஜபக்சே அரசு மூர்க்கத்தனமான இனக் கொலையில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரத்தைப் போக்க அனைத்து மட்டங்களிலும் ஆதரவைத் திரட்டவும் பிப்ரவரி 12ம் தேதி இந்திய நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு அருகே மதிமுக சார்பில் என் தலைமையில் உண்ணாநிலை அறப்போர் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

பொதுமக்களின் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவில் 35 ச.கி.மீ பிரதேசம் – துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு இராணுவம் அழைப்பு

safe-zone.jpgவிடுவிக்கப்படாத பிரதேசத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிக்குள் வருவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு பகுதியில் சுமார் 35 சதுர கிலோமீற்றர் பகுதியை பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு தேவிபுரத்தை மையமாகக்கொண்டு ஏ 35 பாதையில் புதுக்குடியிருப்பு- பரந்தன் பாதையையும் உடையார்கட்டு சந்தி தொடக்கம் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியையும், இருட்டுமடு முதல் தேவிபுரம் வரையிலான பகுதியையும் உள்ளடக்கியதாக 35 சதுரகிலோமீற்றர் பகுதியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் அரசு பொதுமக்கள் தங்கும் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இராணுவத்தினரே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பதால் பாதுகாப்பு வலயத்தினுள் வருமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொள்கின்றனர். விடுவிக்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் வருமாறு வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானம் மூலம் விடுவிக்கப்படாத பகுதியிலுள்ள மக்களுக்கு போடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்தார்.

இப் பாதுகாப்பு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்குரிய பகுதிகளையும் இராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துண்டுப்பிரசுரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உள்நுழையும் பகுதிகள் வருமாறு:- வன்னிப் பிரதேசம் ஏ-35 புதுக்குடியிருப்பு, பரந்தன் பாதையில் உடையார்கட்டு சந்தி மற்றும் மஞ்சள் பாலம் வரையில் 4 கி.மீ தூரத்தில் உள்ள இருட்டுமடு மற்றும் பிரதேசம் (09 23 17.20 வ மற்றும் 080 36 25.70 கி) இருட்டுமடு கிழக்கில் இருந்து தேவிபுரம் வரையில் (09 23 17.40 மற்றும் 080 40 53.60 கி) பிரதேசம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நிமித்தம் பாதுகாப்பு வலயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் மஞ்சள் பாலம் (09 20 21.80 வ மற்றும் 080 39 15.20 கி) பிரதேச ஏ-35 பிரதான பாதை எல்லையாகும்.

வவுனியாவில் நான்கு ஏக்கரில் 3 தற்காலிக பாடசாலைகள்
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கென சுமார் 4 ஏக்கர் நிலப் பரப்பில் மூன்று தற்காலிக பாடசாலைகள் கட்டப்படவுள்ளன. வவுனியா மெனிக் பாம் பகுதியில் தலா 150 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இம்முகாமில் தங்கவைக்கப்படும் பொதுமக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காகவே மூன்று பாடசாலைகள் அமைக்கப்படுவதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளவர்களுள் சுமார் 200 ஆசிரியர்களையும் மேற்படி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக்கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளன. வன்னியில் சுமார் 55,000 மாணவர்களும் 2500 ஆசிரிய ர்களும் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வவுனியா அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் பட்சத்தில் மேற்படி பாடசாலைகளிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்படி மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைகள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார வவுனியா வலய கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதுடன் தேவையான பாடநூல்கள் அப்பியாசப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் அனைத்துமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெனிக்பாம் பகுதியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களை தற்காலிகமாக குடியமர்த்தும் பகுதிகளிலேயே மேற்படி பாடசாலைகளும் அமைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சு இவர்களுக்கான சகல நிதி உதவிகளையும் வழங்கி வருவதாக அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

க.பொ.த (சா/த) பரீட்சை: வன்னி மாணவர்களுக்கென வவுனியாவில் பரீட்சை நிலையம்

க. பொ. த. சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான கணிதப் பாட இரண்டாம் பகுதி பரீட்சைக்குத் தோற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா செட்டிக்குளம் மற்றும் நெலுக்குளம் பகுதியில் இரண்டு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 மாணவர்களுக்குரிய வினாத்தாள்கள், பரீட்சை அனுமதி அட்டைகளும் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கல்வி வலய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வன்னியில் இப்பரீட்சை நடைபெறாது என்பதால் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு பரீட்சைகளை நடத்த கல்வி அமைச்சு பணிப்புரை வழங்கியுள்ளது. இதற்கமைய வலயப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வல்ட் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வன்னியிலிருந்து வெளியேறியோருக்காக இராமநாதன், அருணாசலம், கதிர்காமர் பெயரில் குடியேற்றக் கிராமங்கள் – அரசாங்கம் அறிவிப்பு

வன்னியிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள தமிழ் மக்களுக்காக மூன்று குடியேற்றக் கிராமங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மெனிக் பார்ம், மெனிக் பார்ம் 2, ஓமந்தை ஆகிய பகுதிகளில் இதற்காக 750 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று இடங்களிலும் வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அங்கு அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரையும் குடியமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இப்பகுதியில் அகதி முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது. மெனிக்பார்மில் 150 ஏக்கரும் மெனிக் பார்ம் 2 இல் 450 ஏக்கரும் ஓமந்தையில் 150 ஏக்கரும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட முழு வன்னிப் பிரதேசமும் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதிலும் அங்கு சொந்த இடங்களுக்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல கணிசமான காலமெடுக்கும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு அந்த மக்களை இந்த குடியேற்றக் கிராமங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குடியேற்றக் கிராமங்களுக்கு மறைந்த தமிழ்த் தலைவர்களின் பெயர்களே சூட்டப்படவிருக்கின்றன. பொன்.இராமநாதன் விடுதலைபுரம், பொன்.அருணாசலம் விடுதலைபுரம், கதிர்காமர் எழுச்சி நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளன. இங்கு குடியமர்த்தப்படுவோருக்கு சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும். சமைத்த உணவு, உலர் உணவுகள், விளையாட்டு வசதி, தொலைபேசி வசதி, தொலைக்காட்சி, வானொலி என்பனவும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் வரை ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் நூறு ரூபா கைச்செலவுக்காக வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் பேருக்கு முதற் கட்டமாக இந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இம்மாத இறுதியில் இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்படும். இத்திட்டத்துக்கான சகல பொறுப்புகளும் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை:ஒபாமாவின் தேர்தல் பிரச்சார புத்தகம்

obama-2001.jpg
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற பராக் ஒபாமா ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வின்போது பேசிய ஆங்கில பேச்சுக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ஜப்பானில் விற்கப்படுகிறது. புத்தக கடைகளில் இந்த புத்தகம்தான் அதிகமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 95 பக்கங்கள் கொண்ட அதன் விலை 550 ரூபாய். கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இந்த புத்தகத்துக்கு ஜப்பானிய மொழி பெயர்ப்பும் விற்பனைக்கு இருக்கிறது.

ஜப்பானில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள்கூட ஆண்டுக்கு 10 லட்சம் பிரதிகள்தான் விற்பனை ஆகும். ஆனால், அவற்றை மிஞ்சும் வகையில் ஒபாமா புத்தக விற்பனை சக்கை போடு போடுகிறது. இதற்கு முன் அதிபராக இருந்த புஷ் பேச்சு அடங்கிய புத்தகம்கூட இந்த அளவு விற்பனை ஆகவில்லை. ஜப்பான் அரசியல்வாதிகள்கூட ஒபாமா புத்தகத்தை வாங்கி படிக்கிறார்கள்.

விஸ்வமடு விமானத் தாக்குதல்

mi24-1301.jpgகிளிநொச்சி மாவட்டம் பிரமண்டான் குளம், விஸ்வமடு பகுதிகளில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட கடும் விமானத்தாக்குதல்கள் வெற்றியளித்திருப்பதாக விமானப் படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ.24 ஜெட் விமானங்களே இனங்காணப்பட்ட புலிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

தாக்குதல்களால் புலிகளின் இடைத்தங்கல் முகாமொன்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் சந்திக்கும் ஸ்தலமொன்றும் அழிக்கப்பட்டிருப்பதாக விங் கமாண்டர் தெரிவித்தார். பிரமண்டான்குளத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் ஸ்தலமொன்றை இலக்கு வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. விஸ்வமடுவிலிருந்து ஒரு கிலோமீற்றர் தென்கிழக்காக அமைந்துள்ள புலிகளின் இடைத்தங்கல் முகாமை இலக்கு வைத்து பி.ப. 2.05 மணிக்கு எம்.ஐ. 24 விமானம் கடும் தாக்குதலை நடத்தியது.

அப்பகுதி நோக்கி முன்னேறி வரும் முன்றாம் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் கூறினார்.

மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்கள்

wanni.jpgமுல் லைத்தீவில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்கள் யுத்த சூனியப் பிரதேசமாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதன் மூலம் யுத்தத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியுமாக இருக்கும். ஆயினும் புலிகள் தங்களால் மனிதக் கேடயங்களாக குறித்த மக்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் இடம்பெயர அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும். முல்லைத்தீவு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை குறித்த வலயங்களுக்கு செல்லுமாறு படைத்தரப்பு அறிவித்துள்ளது

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி

obama.jpgவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து …

நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.

பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.

நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.

புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.

நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.

நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.

நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.

கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒபாமா வாழ்க்கை குறிப்பு:

முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.

குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.

ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.

பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.

ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.

us_obama.jpg

us_obama002-2001.jpg

obama-20-01.jpg

us_obama-003.jpg

us_obama-04.jpg

படகுகள் மீது தாக்குதல்

_bort.jpg முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தற்கொலைப் படகு உள்ளிட்ட நான்கு படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டி. கே.பி. தஸநாயக்க கூறினார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலையடுத்து இரண்டு கடற்புலிகளின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரையோரமாக கடற்புலிகளின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த இலங்கை கடற்படையினர் அப்படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு படகுகளில் நான்கு படகுகள் முற்றாக எரிந்துள்ளன. இதில் ஒன்று தற்கொலைப் படகென கடற்படை பேச்சாளர் கூறினார். ஏனைய நான்கு படகுகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளன. கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே சில நிமிடங்கள் இடம் பெற்ற மோதல்களால் கடற்படையின் படகொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே நேரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது:
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கோடி தெற்காசியருக்கு இதய நோய் பரம்பரை வியாதி

surgery.jpgமரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர்.

தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். “இப்போது இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே இப்போது இதனைக் கண்டுபிடிக்க முடியும்’ என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மரபணு ரீதியான சோதனையின் மூலம் இந்தப் பாதிப்புக்களை இளம் பராயத்திலேயே தற்போது இனங் கண்டுகொள்ள முடியும். காலப்போக்கில் இதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் உலகில் 1 கோடி 75 இலட்சம் பேர் இதயநோயால் மரணிக்கின்றனர். இதேவேளை, உலகில் இதய நோயால் பீடிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் இந்தியர்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 2,085 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியாவிலுள்ள தெற்காசிய வம்சாவளியினருக்கே இந்த பரம்பரை அலகால் இதயநோயின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடரலாம் அந்த நாட்டின் பலவீனமே மும்பைத் தாக்குதல் – அமெரிக்க நிபுணர்கள்

world_news.jpgஇந்தி யாவில் மும்பைத் தாக்குதல் போன்ற மேலும் பல தாக்குதல்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைத் தாக்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளெக்வில் உள்ளிட்ட நிபுணர்கள் நடத்திய ஆய்வொன்றைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிபுணர் குழுவால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியாவின் வர்த்தக மற்றும் உல்லாச மையமாக மும்பை திகழ்கிறது. அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தாக்குதல் அம்சங்களை வைத்து பார்க்கும்போது இரக்கமற்ற கொலைகள் மட்டுமன்றி அதற்கான திட்டமிடலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அதிகமான மக்களை கொல்வது மட்டுமன்றி சில குறிப்பிட்ட நாட்டினரை குறிவைத்து தாக்குவதும் தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதன்மூலம் அவர்களின் வியூகம் புலப்படுகிறது.தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியாவின் பலவீனத்தையே இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது.

மும்பை தாக்குதலை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள வேறு சில தீவிரவாத அமைப்புகள் அதேபாணியில் இந்தியா மீது நிறைய தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல்கள் நடக்கும். இந்த அபாயத்தை இந்தியாவோ அமெரிக்கவோ குறைக்க முடியாது.

இந்தியாவும்,பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகள். எனவே ஏதாவது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தியா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அது இந்தியாவின் உறுதி இன்மையை காட்டுவதாக அமைந்து விடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.