கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

காங்கிரஸ் நகரச் செயலாளர் தீக்குளித்து மரணம்

ravichandran-1.jpgநாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைப்பதாக கூறி இன்று காலையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேவைபார்த்து வந்தார்.

இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார். நடுத்தெருவில் வைத்து இலங்கையில் போரை நிறுத்து….தமிழ் வாழ்க.. என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார்.

உடனே ரவிச்சந்திரன் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை தூக்கிச்சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை உயிரிழந்தார் ரவிச்சந்திரன்.  மரணவாக்கு மூலத்திலும் ரவிச்சந்திரன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்தாக கூறி உள்ளார்.

ராதா படையணி – பிரபாவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவு தலைமையகம் படைவசம்

udaya_nanayakkara_.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவான ராதா படையணியின் தலைமையகத்தை படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.57 வது படைப் பிரிவும், இராணுவத்தின் மூன்றாவது செயலணியும் இணைந்து இதனைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவின் விசுவமடுவுக்கு கிழக்கே இந்த முகாம் அமைந்திருந்தது. இராணுவத்தின் மேற்படி இரண்டு பிரிவுகளும், ராதா படைப் பிரிவு தலைமையகக் கட்டடத் தொகுதியை கைப் பற்றும் போது அங்கு புலிகளின் ஈழக்கொடி பறந்து கொண் டிருந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பிரிவாக இருந்த இந்த படையணி தலைமையகத்திலிருந்தே சகல பாதுகாப்பு மற்றும் யுத்த கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

பிரபாகரனுக்கும், அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த முக்கிய தலைவர்களுக்கும் ராதா படையணியே பாதுகாப்பு வழங்கி வந்தது. அதேநேரம், புலிகளின் விமானப் படைப் பிரிவுக்குரிய பாதுகாப்பையும் இந்த படையணியே வழங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ராதா படையணி தலைமையகம் பாரிய மண் அணைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள், இராணுவத்தினர் கட்டடத் தொகுதிக்குள் புகுவதற்கு சற்று முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளனர். படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாக். விஞ்ஞானி: வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

world-news.jpgபாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான் நாட்டின் அணுசக்தி தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரகசியமாக விற்றதால் 2004-ல் கைது செய்யப்பட்டார்.

தனது குற்றத்தைக் கான், ஒப்புக்கொண்டதால் அப்போதைய அதிபர் முஷாரப், கானுக்கு மன்னிப்பு வழங்கினார். எனினும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தார்.  அவர் நேற்று வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் இனிமேல் நாட்டின் எந்த பகுதிக்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செல்லலாம் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக, கானின் வழக்கறிஞர் இக்பால் தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அரசோ, கான் நினைத்தபடி சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அவரது பாதுகாப்பு நலன் கருதிதான் இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.

புலிகளின் பிடியிலுள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச சமூகத்தின் பணி – கோத்தாபய : செஞ்சிலுவை குழுவை நாட்டை விட்டுத் துரத்துங்கள்- விமல்

gotabhaya.jpgபுலிகளைப் பாதுகாக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு புலிகளின் பிடியிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச அமைப்புக்களினதும், தன்னார்வ நிறுவனங்களினதும் முன்னுள்ள மிக முக்கிய பணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்களை பாதுகாப்பதாக கூறி யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துகின்றனர். யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிக்கும்படி சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் கொடுப்பதுடன் அதற்கான உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மக்களை விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் எமது பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றை திசை திருப்பும் வகையிலும், அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடனும் சில சர்வதேச அமைப்புக்களும், வெளிநாட்டு ஊடக நிறுவனங்களும் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குற்றஞ்சாட்டினார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.  இதன் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியதாவது:-

புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சிப்பவர்களும், அதனை திரிவுபடுத்தி பொய்ப்பிரசாரங்கள் செய்கின்றவர்கள் எவரும் அப்பாவி பொது மக்களை புலிகள் பலாத்காரமாக பிடித்து மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருவதையோ விடுவிக்காமல் இருப்பதையோ பேசுவதில்லை.

ஆயுதங்களை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்வது எமது நோக்கமாக இருந்திருந்தால் இன்று இந்த யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். பொது மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்டதனாலேயே இந்த நடவடிக்கையை எமது படையினர் இன்று வரை நீடித்துச் செல்கின்றனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தொடர்பாக பலர் பேசுகின்றனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக புதிதாக கூற வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில், அவர்கள் சரணடைய வேண்டியது மாத்திரமே உள்ளது. இதில் எமக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.

கிழக்கை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான புனர்வாழ்வையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களில் சிலர் வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான நடவடிக்கையை நாங்கள் நடைமுறையில் காண்பித்துள்ளோம் என்றார்.

இலங்கையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ, அமைப்புக்கள் சிறந்த சேவைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன. இதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் இந்த நிறுவனங்களில் பணி புரியும் அதிகாரிகளோ மோசமாகவும், புலிகளுக்கு சார்பான நிலையிலும் செயற்படுகின்றனர்.

புலிகள் ஆயுதத்தை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்யவில்லை. இந்த யுத்தத்தை முன்னெடுப்பதற்கு வேறு வழிகளையும் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே தான் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தில் இருப்பவர்களும், சில சர்வதேச அமைப்புக்களும் புலிகளுக்குச் சார்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

படையினர் நடத்திய மோட்டார் தாக்குதல்களிலேயே அநேகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சிலரிடம் சூட்டுக் காயங்களும் காணப்படுகின்றன. நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபடுபவர்களுக்கே சூட்டுக் காயம் ஏற்படும். துப்பாக்கியுடன் காயமடைந்த நிலையில் இருப்பவர்களை புலி உறுப்பினர்கள் என்றும், துப்பாக்கி இல்லாத நிலையில் காயமடைந்தவர்கள் இருந்தால் அவர்கள் சிவிலியன்கள் என்றும் சொல்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அநேகமான புலிகள் சிவில் உடைகளுடன் இருந்து கொண்டே மோதல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தின் அரைவாசி பிரதேசத்திலேயே அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது. இலங்கை போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வரும் எந்த ஒரு நாடும் வழங்காத பல சந்தர்ப்பங்களை நாங்கள் பொது மக்களுக்காக வழங்கியுள்ளோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் பிடியில் நான்கரை இலட்சம் மக்கள் இருப்பதாக ஒருசிலரும், இரண்டரை இலட்சம் மக்கள் இருப்பதாக இன்னும் சிலரும் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இந்த எண்ணிக்கை புலிகளின் அழுத்தத்தினால் கூறப்பட்டவையாகும்.

இரண்டு இலட்சத்து எட்டாயிரம் பொதுமக்களே உள்ளார்கள் என்று 2002 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வசித்து வருகின்றனர். இது தவிர மலையகம் உட்பட ஏனைய பகுதிகளை நோக்கியும் பெருந்தொகையானவர்கள் சென்றுள்ளதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து இறுதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 89 ஆயிரம் சிவிலியன்களே புலிகளின் பிடியில் சிக்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம், கடந்த சில மாதங்களாக வருகை தந்த பெருந்தொகையானோர் வவுனியாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய

படையினரால் அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளும், அவர்களுக்கு சார்பானவர்களும் கூறுவது போன்று பெருந்தொகையான பொதுமக்கள் வாழ்ந்தமைக்கான எந்தவித தகவல்களும் இல்லை என்று தெரிவித்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முல்லை மாவட்டத்தில் எத்தனையோ குளக்கட்டுகள் வந்த போதிலும் அவற்றை பயன்படுத்தி மக்கள் விவசாய நடவடிக்கைகள் செய்த எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.

புலிகள் உலகளாவிய ரீதியில் பாரிய வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் பெருமளவிலானவர்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளமையும் தெரிய வருகிறதென்றும் குறிப்பிட்டார்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் இராணுவ ரீதியான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்று உறுதியாக தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவை நாட்டை விட்டுத் துரத்துங்கள்!  விமல் வீரவன்ஸ ஆவேசம்

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல்கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, போல் கஸ்ட்டெலாவையும் செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேற்றுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சித் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு: பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்து அவர்களின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்காக எமது படையினர் போராடிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாடுகள் எமது நாட்டுக்கு எதிராகச் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஒருபுறம் இணைத்தலைமை நாடுகள் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுகின்றன. மறுபுறம் சில சர்வதேச அமைப்புகள் புலிகளைக் காப்பாற்றிவிட முற்படுகின்றன.  அந்த வகையில் செஞ்சிலுவை  சர்வதேசக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல் கஸ்ட்டெலா புலிகளுக்கு ஆதரவான வகையிலும் எமது படையினருக்கு எதிரான வகையிலும் அறிக்கைகளை வெளியிடுகின்றார்.
வன்னி மக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்று அவர் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார். அவரது கூற்றில் எந்த உண்மையுமில்லை.  எமது படையினர் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றவே யுத்தம் செய்கின்றனர். அவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.

ஆனால், போல் கஸ்ட்டெலா ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை படையினர் மீது சுமத்துகின்றார். அவர் புலிகளுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றார். அவ்வாறான ஒருவரை நாட்டில் வைத்திருக்கக்கூடாது. அரசு அவரை உடனடியாக நாட்டிலிருந்து அனுப்பவேண்டும். அத்தோடு செஞ்சிலுவை சர்வதேசக் குழுவையும் இங்கிருந்து விரட்டிவிடவேண்டும். எமது மக்களுக்கு எமது அரசு போதுமான உதவிகளைச் செய்துவருகிறது  என்றார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இலங்கை அரசும் குற்றச்சாட்டு

red-cr.jpgஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்கள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதற்றத்தை தூண்டியதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் பயப்பிராந்தியை ஏற்படுத்தும் வகையில், மோதல் பகுதிகளின் தேவைகளுக்கென முப்பத்தையாயிரம் பிரேதப் பைகளை வாங்க செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழமை போன்று தாம் பிரேதப் பைகளை வாங்கியதாக கூறுகின்ற செஞ்சிலுவைச் சங்கம், ஆனால், தாம் வாங்கிய பைகளின் எண்ணிக்கைக்கும், அரசாங்கம் கூறும் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கூறியுள்ளது.

கொழும்பில் உள்ள தமது அலுவலகம் ஆர்பாட்டக்காரர்களால் கல் வீசித்தாக்கப்பட்டதாகவும், தமது அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

12 வயது சிறுமியை பயன்படுத்தி புலிகள் தற்கொலைத் தாக்குதல்

udaya_nanayakkara_.jpgஉடம்பு முழுவதிலும் குண்டைக் கட்டி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாதுகாப்புப் படையினரை நோக்கி அனுப்பிய புலிகள் அந்தக் குண்டை வெடிக்கச் செய்த தில் அந்தச் சிறுமியின் உடல் வெடித்துச் சிதறி சின்னா பின்னமாகிய கோரத்தை கள முனையில் நேரில் கண்ட பாதுகாப்பு படைவீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரிடம் சரணடையும் சிவிலியன்கள் போன்று கைகளை உயர்த்தியவாறு அந்தச் சிறுமி சாலையின் வடக்கே படையினரை நோக்கி வந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு இராணுவத்தினர் அந்தச் சிறுமியை அண்மித்தபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

புலிகளின் இறுதி கடற்புலி தளமாக விளங்கிய சாலையை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்த அகோர காட்சியை கண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமியை நோக்கிச் சென்ற இரண்டு இராணுவ வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சிறார்களை யுத்தத்தில் பலாத்காரமாக ஈடுபடுத்திய புலிகள் தற்பொழுது அவர்களை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளமை தெளிவாக விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கட் அணி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

indian_cricket.jpgஇந்திய கிரிக்கட் அணி வீரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடடியுள்ளனர்.  கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டு தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி வீரர்கள் (04) அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.

இந்த கிரிக்கட் சுற்றுலாவின்போது இரு அணிகளுக்குமிடையில் 5 ஒரு நாள் சர்வதேச போட்டிகளும் ஒரு ருவன்டி-20 போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தீர்வுத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படுமா? – ஏகாந்தி

Wanni Child2009ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாக காணப்படுமென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய வடமாகாண யுத்தம் மனிதாபிமான நெருக்கடியை மிகப் பாரியளவு தோற்றுவித்துள்ள நிலையில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான கருத்துக்களும் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியைக் கொடுத்துவருவதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடானது, இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்ததாகுமென்று தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் கூறியுள்ள ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கையில் சிவிலியன்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஐ. நா. வும் இந்தியாவும் கூட்டாக செயற்பட்டு வருவதாகவும் “ரைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“பாரிய மனிதாபிமானப் பிரச்சினை எழுவதைத் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா. வும் ஏனைய அமைப்புகளும் இதனைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொள்கின்றன” என்று தெரிவித்த பான் கீ மூன், இறுதிக் கட்டமாக, அரசியல் தீர்வொன்று எட்டப்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கை விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் தீர்வு என்ற விடயம் இலங்கை அரசுக்கு மிகவும் கட்டாயப்பாடான நிலையென்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இதுகாலவரை இது விடயமாக காட்டிவந்த அசமந்தப் போக்கை இனியும் காட்ட முடியாது என்பதே இலங்கை அரசும் உணர்ந்திருப்பதை அரசு சார்பில் முன்வைக்கப்படக் கூடிய சில கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் –

இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபை முறைமையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்க வில்லையென்றும், சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முழுமையான அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு வரைவினையே தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தத் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

தீர்வு வரைவின் இறுதிப்பகுதி தொடர்பாக தற்போது கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அமைச்சர் திஸ்ஸவிதாரண “தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு முன்பு 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் மாகாண சபை நிர்வாக முறைமையை நாம் முன்மொழியப் போவதில்லை. முற்றிலும் புதியதொரு அதிகாரப் பகிர்வினை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரித்து வருகிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.

குழுவின் கூட்டங்களை நிறைவு செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறிய அமைச்சர், அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறினார். இந்தக் கட்சிகளின் கருத்துகளையும் உள்ளடக்கி தீர்வு வரைவினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 100 இற்கும் மேற்பட்ட தடவை கூடி மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்க உள்ளதாகவும் அதிகாரப் பகிர்வு எதுவும் கிடையாதென்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். இங்கு அமைச்சரின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் பூரணமாக நடைமுறைப்படுத்துவதை அவர் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும்கூட,  எதிர்நோக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்திருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு மேலாக வேறொன்றை வழங்கக் கூடாதென்று சில அரசியல் கட்சிகள் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மறுபுறமாக பொலிஸ் அதிகாரம், காணிப் பகிர்வு அதிகாரம் போன்வற்றை வழங்கப்போவதில்லை என அரசாங்கத் தரப்பில் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திஸ்ஸவிதாரண குழுவினரால் முன்வைக்கப்படவுள்ள இறுதித் தீர்வுத் திட்டம் எத்தகையதாக இருக்கும் என்ற வினா பொதுவாக எழுந்துள்ளது.

மறுபுறமாக தற்போதைய யுத்த வெற்றிகளின் பின்னணியில் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறக்கூடிய நிகழ்தகவு இருப்பதையும் காணமுடிகின்றது. இது தொடர்பாக ‘ராவய” பத்திரிகை எதிர்வுகூறுகையில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் பாராளுமன்றம்  கலைக்கப்படலாமென கூறியுள்ளது. இன்னும் சில ஊடகங்களின் கருத்துப்படி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றுக்காக வேண்டி மக்கள் தீர்ப்பும் பெறப்படுமென கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும்,  இந்த நிலையைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வுத் திட்டம் என்ன என்பது மக்கள் மத்தியிலுள்ள பொதுவான கேள்வியாகும். இந்த சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இன்னும் இன்னும் காலத்தை வீணடிக்காமல் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான தெளிவானதும்,  நிலையானதுமான கருத்தொன்றை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இலங்கை இராணுவம் கொத்தனிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை! வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மறுப்பு

palitha_koahana.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தனிக் குண்டுகளை இலங்கை இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்

பாதுகாப்புப் படையினா; புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடாபாக சீ.என்.என். செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார் அப்பேட்டியில் வெளிவிவகார அமைச்சின் செயலாளா மேலும் குறிப்பிடுகையில்

இலங்கை இதுவரை காலமும் கொத்தனிக் குண்டுகளைக் கொள்வனவு செய்யவோ தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ இல்லை. இந்நிலையில் அரசாங்கத்தினால் பராமிக்கப்படும் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தும் தேவை அரசுக்கு கிடையாது.

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மாத்திரம் இயங்கவில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இன்னும் பல வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அரசாங்க வைத்தியசாலைகள். அங்கு அரச உத்தியோகத்தர்களே பணி புரிகின்றனர் அப்பிரதேசங்களில் வசிப்பவர்கள் இந்நாட்டு மக்கள். எனவே அவர்கள் மீது தாக்குதல் நடத்த எந்தத் தேவையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது பாதுகாப்புப் படையினா கொத்தனிக் குண்டுகளைப் போட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கொடூரமான பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மனித குலத்தின் அழிவுக்கு வித்திடும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயக வழிக்கு வருவோரை ஏற்க அரசு தயார்

pm-srianka.jpgபுலி கள் இயக்கத்தின் சிலர் ஆயுதங்களை கீழே வைத்து அரசிடம் சரணடையப் போவதாக தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே அது புத்தி சாலித்தனமான தீர்மானம். ஆயுதங்களைக் கீழே வைத்து ஜனநாயக வழிக்குத் திரும்பும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள எமது அரசு ஆயத்தமாக இருக்கிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத் திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசும்போதே பிரதமர் மேற் கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்தும் பேசும்போது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் கருணையையும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். எந்தவொரு அழுத்தம் வந்தபோதும் மனிதாபிமான நடவடிக்கை நிறுத் தப்படமாட்டாது. புலிகள் இன்று போக்கிடமின்றி இருக்கிறார்கள். தங்களது உறுப்பினர்களையே கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் நாம் தான் என புலிகள் உலகத்துக்கு கூறினார்கள். ஆனால் தமிழ் மக்களினாலேயே ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் காடுகளில் ஒளிந்துகொண்டு இருக்கிறார்கள். மக்களை கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். புலிகளின் சிலர் அரசிடம் சரணடையப் போவதாக ஊடகங்களினூடாக தெரிவித்திருக்கின்றனர். காலம்கடந்தாவது யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளமையும், புத்திசாலித்தனமாக செயல் என அரசு கருதுகிறது.

நாம் ஆரம்பத்திலிருந்து கூறியது போன்று ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயக வழிக்கு திரும்பும் எவரையும் ஏற்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம். நாட்டின் வளங்களை, சொத்துக்களை அழிக்கின்ற, மக்களின் உயிர்களை பலி கொள்கின்ற யுத்தத்திற்குச் செல்லாமல் ஜனநாயக ரீதியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே புலிகள் இன்று செய்ய வேண்டியுள்ளது.

மூன்று தசாப்தங்களின் பின்னராவது யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு புலிகளின் சிலர் முன்வந்திருப்பது மக்களின் நன்மைக்காகவே. அவ்வாறு யதார்த்தத்தை புரிந்துகொள்ளத் தவறும் பட்சத்தில் எந்தவொரு அழுத்தத்திற்காகவும் மனிதாபிமான நடவடிக்கையை அரசு நிறுத்தப்போவதில்லை.

எந்த சக்திக்கும் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட முடியாது.

எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனத் தன்மை இருக்கிறது. உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். இதற்கு பங்காளியாக மற்றுமொரு தரப்பினரின் உதவியை நாடவும் முடியும். அன்று சுதந்திரத்திற்காக போராடியபோதும் ஆசிய நாடுகள் ஒற்றுமையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டன. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற நேரிட்டது. இன்றும் அதே நிலைமைதான்.

உலகத்திலேயே திறமையான படை எங்களுடையதென மார்தட்டிக்கொண்ட புலிகள் இன்று காட்டுக்குள் ஒழிந்துகொண்டுள்ளார்கள். படையினருக்கு பாடம் புகட்டுவோம் என்று கூறிய புலிகள் மக்களை கேடயங்களாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் எமது படை வீரர்களே.

களத்தில் நிற்கின்ற படையினருக்கும், உயிர்நீத்த, படுகாயமடைந்து இன்று ஊனமுற்ற படையினருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எந்நேரமும் நன்றியுணர்வுடன் அவர்களை நினைவுகூரவும் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாவற்றுக்கும் மக்களின் ஆதரவே பக்கபலமாக எமக்கும் படையினருக்கும் அமைந்துள்ளது. படையினரின் ஒவ்வொரு வெற்றிக்கும் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவே பக்கபலமாக அமைந்துள்ளது.

இ.கம்யூ செயலாளர் தா.பாண்டியன் கார் எரிப்பு

pandian.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சினை போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் காரை சிலர் நேற்று இரவு தீவைத்து எரித்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் தா.பாண்டியனின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியனின் காரை, சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அவரது கார் பெருமளவில் சேதமடைந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களில் ஒருவர் தா.பாண்டியன். ஆரம்பத்திலிருந்தே இலங்கை விவகாரத்தில் மத்திய அரசையும், காங்கிரஸையும் கடுமையாக சாடி வருகிறார்.

மேலும், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இனப்படுகொலை வழக்கு தொடரப்படும் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் பாண்டியன் என்பது நினைவிருக்கலாம்.சம்பவம் நடந்த போது பாண்டியன் வீட்டில் இல்லை.