தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.
புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் சீமான் பங்கேற்று பேசினார்..
இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. 7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.
உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.
கூட்டத்தில் பேசிய சீமான், ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.
உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந்தேதி சந்தித்த டைரக்டர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார். சீமானை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.