கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தலைவராக டி.எஸ்.டி. சில்வா தெரிவு

sl_cricket.jpgஇலங்கை கிரிக்கட் நிறுவன இடைக்கால நிருவாக சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடைக்கால நிருவாக சபையின் புதிய தலைவராக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான டி.எஸ்.டி. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால நிருவாக சபையின் செயலாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர புதிய இடைக்கால நிருவாக சபையின் உறுப்பினர்களாக சிதத் வெத்தமுனி, சுஜீவ ராஜபக்ஷ, லலித் விக்ரமசிங்க, ரனில் அபேனாயக்க மற்றும் முன்னாள் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் வைத்து வழங்கினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட இந்தியாவில் “ஹோலி” மோதல்:8-பேர் பலி;250-பேர் காயம்

holi.jpgஉத்தரப் பிரதேசம்,பிகார் மற்றும் தில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் 8-பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம்,வாராணசியில் புதன்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின்போது மசூதி சுற்றுச்சுவர் மீது வண்ணப்பொடியை தூவியதால் ஏற்பட்ட மோதல் வகுப்பு கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இருவர் கொல்லப்பட்டனர்.இதே மாநிலத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ஏற்பட்ட வகுப்பு மோதலில் 6-பேர் காயமடைந்தனர்.

காஸிபூரில் நடந்த வகுப்பு மோதலில் 16-வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.முஸாஃபர்நகர் மாவட்டத்தில் லிசாத் கிராமத்தில்,ஹோலி கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினர் குடித்துவிட்டு பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 6-வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

பிகாரிலும் “ஹோலி” கலவரங்கள் நடைபெற்றன. மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தில்லியில் தையல் வேலை செய்துவந்த இளைஞர் உறவுப் பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அவர்கள் மீது வண்ணப்பொடியை வீசினர்.இதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

ஜெய்ப்பூரில் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஹோலி கொண்டாடிய மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து இறந்தனர். மாநிலம் முழுவதும் ஹோலி மோதல்களில் 200-பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே ரயில் மீது தண்ணீர் பலூனை வீசியெறிந்ததில் பயணி ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது.

அக்குரஸ்ஸ தாக்குதல் சம்பவம் 10 தமிழ் இளைஞர்கள் கைது

akkurassa-02.jpgஅக்கு ரஸ்ஸ கொடபிட்டியவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் (சி.ஐ.டி.) பத்து தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இத்தகவலை தென்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் டீ. டபிள்யூ. பிரதாப்சிங்க தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அக்குரஸ்ஸ பகுதி தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பொலிஸார் பலரிடம் இருந்து வாக்கு மூலங்களைப்பெற்று வருகின்றனர். இந்த பத்து தமிழ் இளைஞர்களும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

லாகூர் தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பாவை குற்றஞ்சாட்டும் அமெரிக்க செனட்டர்

crc-04032009.jpgலாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் மீது அமெரிக்க செனட்டர் கிளயர் மக் காஸ்சில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், மும்பையில் நவம்பர் 26 இல் இடம்பெற்ற தாக்குதலுக்கும் லண்டனில் இடம்பெற்ற கொலைகளுக்கும் இந்த அமைப்பின் மீதே குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை டோன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. லஸ்கர் அமைப்பு இந்தப் பாரிய தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருக்கையில் அது தொடர்பாக அமெரிக்கா விசாரணை மேற்கொள்வதற்கு உதவ பாகிஸ்தான் மறுப்பதுடன் அக்குழுவை பாதுகாப்பதாகவும் மிஸோரியின் செனட்டர் கிளயர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், அவர் (கிளயர்) கூறுவது போன்று பாகிஸ்தானின் ஒத்துழைப்பு முழுமையாக இல்லையென தான் கருதவில்லையென்று அட்மிரல் பிளயர் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதலையடுத்து லஸ்கர் அமைப்பின் தலைவர்களை பாகிஸ்தான் கைதுசெய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பிளயர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பாகிஸ்தானியர் மத்தியில் லஸ்கர் அமைப்புக்கு ஆதரவாளர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களை தமது தாக்குதல்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயன்படுத்துவதாகவும் செனட்டர் கிளயர் மக் காஸ்சில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரிப்பு

karachci.jpgபாகிஸ்தானில் அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இராணுவம் தலையிடுவதற்கான சாத்தியமும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி அரசின் தடை உத்தரவை மீறி எதிரணி ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத்திற்குச் சென்று பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக எதிரணியினரும் சட்டத்தரணிகளும் சூளுரைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பதவிநீக்கம் செய்த நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி சர்தாரி அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் சங்கமும் வலியுறுத்தி வருகின்றனர். பதவி வகிக்கமுடியாமல் தடுக்கும் தீர்ப்பொன்றைக் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கும் அவரின் சகோதரருக்கும் வழங்கியிருந்தது. அத்துடன் இத்தீர்ப்பையடுத்து பஞ்சாப் மாகாண அரசை பாகிஸ்தான் மத்திய அரசு பதவிநீக்கியிருந்தது. இது ஜனாதிபதி சர்தாரி மீது நவாஸ் ஷெரீப்பின் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சகல நகரங்களிலுமிருந்தும் ஊர்வலமாகச் சென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக நவாஸ் ஷெரீப்பும் சட்டத்தரணிகளும் அறிவித்ததன் பிரகாரம் நேற்று நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதனால் பல இடங்களில் சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.

இதேவேளை பாகிஸ்தானின் இராணுவத் தலையீடு தொடர்பான ஊகங்கள் அதிகரித்துவரும் நிலையில், இராணுவம் நிர்வாகத்தை கைப்பற்றும் சாத்தியம் அறவே இல்லையென நவாஸ் ஷரீப் தெரிவித்திருக்கிறார். 1999 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஷெரீப் பதிவிநீக்கம் செய்யப்பட்டவராகும். நீதிபதிகள் மீண்டும் பணிக்கமர்த்தப்படும் வரை தமது நீண்ட யாத்திரை தொடரும் என்று ஷெரீப் அறிவித்திருக்கிறார். முன்னர் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் நீதிபதிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தியதன் பின்பே சர்தாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதி சர்தாரி செயற்படும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ள இராணுவத் தளபதி கயானி அரசியல் குழப்பத்துக்கு விரைவில் முடிவுகட்டுமாறு கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புஷ்ஷுக்கு காலணி வீசிய செய்தியாளருக்கு மூன்று வருட சிறை

120309.jpgஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது இராக்கில் காலணிகளை வீசியெறிந்த பத்திரிகையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது. .

வெளிநாட்டுத்தலைவர் ஒருவரை அவமதித்தமைக்காக முண்டா ஷார் அல் சைதி என்ற இந்தப் பத்திரிகையாளர் குற்றவாளியாக காணப்பட்டதாக பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் ஆத்திரத்துடன் கத்தினார்கள். அல் சைதி மேன்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை படையினரின் கட்டுப்பாட்டில்

puthu-hos.jpgபுலிகளின் பிடியிலிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை நேற்றுக் காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடுமையான மோதல்களுக்கு மத்தியில் முன்னேறிய பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் கடந்த 3 தினங்களாக ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் புலிகளுக்கு பாரிய இழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேணல் ரவிப்பிரிய ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த வைத்தியசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு அரசாங்க வைத்தியசாலையை புலிகள் தமது பிரதான பாதுகாப்பு முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டமை வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் இருந்த உபகரணங்களையும் புலிகள் வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர். கைப்பற்றப்பட்ட வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்திலும் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 37 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடிவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்பாவி பொதுமக்களை இந்த வைத்தியசாலையிலிருந்த கட்டில்களிலிருந்து அகற்றி காயமடைந்த புலிகளை அங்கு வைத்து சிகிச்சையளிக்க இந்த வைத்தியசாலையை புலிகள் பயன்படுத்தி வந்தனர். புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த படியால் அந்த வைத்தியசாலையை இராணுவத்தினர் கைப்பற்றாமல் இருப்பதற்காக படையினரை இலக்கு வைத்து இங்கிருந்து கடுமையான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டு வந்தனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இராணுவத்தினர் தாக்கியதாக புலிகளும், அவர்களுடன் தொடர்புடைய சில அமைப்புகள் சர்வதேச கவனத்தை திசை திரும்பும் வகையில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். கடந்த மூன்று தினங்களாக தாக்குதல் நடத்திய படையினர் வைத்தியசாலைக்கு எதுவித பாரிய சேதம் ஏற்படாத வண்ணமே கைப்பற்றியுள்ளனர் என்று இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வடக்கு பிரதேசத்தின் ஒரு கிலோ மீற்றர் பரப்பை நோக்கி முன்னேறிய 58வது படைப்பிரிவினர் சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமாக அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு மதில்களையும் தகர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக படையினர் நடத்திவந்த கடுமையான தாக்குதல்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

puthu-hos.jpg

ஐ.தே.க, த.தே.கூ, ஜேவியி சர்வகட்சிக்குழுவில் இணையத்தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படும் – திஸ்ஸவிதாரண

this_vitharana_.jpgசர்வ கட்சிக்குழுவின் அழைப்பையேற்று ஐ.தே.க மக்கள் விடுதலை முன்னணி, த.தே.கூ ஆகியன தமது தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கவேண்டும் அவ்வாறு செய்யாதுவிடின் ஏற்கனவே குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்வுத்திட்டத்தினை தயாரித்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளிக்கும் என சர்வ கட்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். 

சர்வகட்சிக்குழுவின் தற்போதய செயற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிக்குழு தீர்வுத்திட்டத்தினைத் தயாரிப்பதற்கு இதுவரையில் 107 தடைவைகள் கூடி ஆராய்ந்துள்ளன. இதில் 13 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

சர்வகட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது தீர்வுத்திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு வெளியிலுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றோம். அவை தம்மை இதில் இணைத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா இல்லாமலேயே ஈரானிலிருந்து குழாய் வழி எரிவாயு – பாகிஸ்தான்

ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இந்தியாவை விட்டுவிட்டு மேற் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொள்வதாக முன்னர் முடிவு செய்யப்பட்டது.

7500 கோடி டாலர் மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா குழாய்ப் பாதை திட்டம் (ஐ.பி.ஐ) என பெயரிடப்பட்டது. மூன்று நாடுகளும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் ஆஸிப் அலி ஜர்தாரி, முதல் முறையாக ஈரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரான் புறப்படுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்திட்டத்துக்கு இந்தியா ஒத்து ழைக்கவில்லை எனில் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார், சுமார் 2600 கி.மீ தொலைவு குழாய்வழி எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான 1994 ஆம்ஆண்டு முன்மொழியப்பட்டது.

ஆனால் மூன்று நாடுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள், எரி வாயு விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாதது. எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டண நிர்ணயம் (டிரான்ஸிட் ஃபீஸ்) உள்ளிட்டவை காரணமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவது காலதாமதமானது.

தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அத்தகைய உறுதியையும் ஈரான் அளிக்கவில்லை இதனாலும் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தனது பயணத்தின் போது இத்திட்டத்தை நிறைவேற் றுவது குறித்து ஈரான் அதிகாரிகளுடன் விவாதிக்கப் போவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அகமதி நிஜாத்துடன் பேசுவதோடு இரு நாடுகளிடையேயான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் போவ தாகக் கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினை குறித்து விவாதிக்கப் போவதாக குறிப்பிட்ட அவர் ஈரானில் நடைபெறும் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ப போவதாகக் கூறினார்.

இரு நாடுகளும் பயனடையும் வகையில் பலதரப்பு விஷயங்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியுடன் விவாதிக்கப் போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார். இம் மாநாட்டுக்கு முன்னதாக சுற்றுச் சூழல் மாநாடும் நடைபெறும்.

இம்மாநாட்டில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஜனாதிபதிகள் பங்கேற்கின்றனர். இதை அடுத்து நடைபெறும் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்படும். இம் மாநாட்டில் அஜர்பெய்ஜான், தஜகிஸ்தான், துருக்கி அதிபர்கள் மட்டுமன்றி இப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு.

election-commissioner.jpgமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (13.03.2009) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கூட்டம் இது எனத் தெரிவித்துள்ள செயலகம் இதன்போது தேர்தல் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தேர்தல்கள் நடைபெறவுள்ள விதம் தொடர்பாக பேசப்படும் எனத் தெரிவித்துள்ளது.