கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

1415 சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை – புலிகளின் சூட்டில் 14 பொதுமக்கள் காயம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து தப்பி 1415 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயத்தில் வந்திருந்த 400 சிவிலியன்கள் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள உறவினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை 1015 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டை நோக்கி வந்துள்ளனர்.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சிவிலியன்களுள் ஒரு தொகுதியினரான 592 பேர் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.

புதுக்குடியிருப்பிலிருந்து சிவிலியன்கள் காட்டு வழியாக தப்பித்து வரும்வழியில் அவர்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 14 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அவர்களுள் ஒருவர் ஐ. நா. அமைப்பாளரெனவும் ஊடக நிலையம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, புதுமாத்தளனினூடாக முன்னேறி வரும் படையினர் நேற்று அங்கிருந்த 423 சிவிலியன்களை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ள 423 சிவிலியன்களும் கடற் படையினரின் உதவியுடன் ஐ. சி. ஆர். சி. யின் க்ரீன் ஓசன் எனும் கப்பல் மூலம் நேரடியாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.

புதுமாத்தளன் வைத்தியசாலையில் மருந்துவகை இல்லாமையினால் சேவைகள் இடைநிறுத்தம்

medicine.jpgபோதியளவு மருந்துவகைகள் மற்றும் அடிப்படைவசதிகள் எதுவுமில்லாத நிலையில் புதுமாத்தளன் வைத்தியசாலையின் சேவைகளை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமையேற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி ரி.வரதராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது; நேற்று அவசர நோயாளர்கள் மற்றும் அவர்களுக்கான பராமரிப்பாளர்களென 425 பேரை கப்பல் மூலம் திருமலைக்கு நாம் அனுப்பியுள்ளோம். இதில் காயப்பட்டவர்களே அதிகமானவர்கள்.

வன்னியில் புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமேயுள்ளது. இங்கு காயத்துக்கான மருந்து உட்பட ஏனைய மருந்துகள் முடியும் தருவாயிலுள்ளது. இதனால் நாம் காயத்துக்கு மருந்துகளின்றி துணிகளையே கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இது குறித்து வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு கடிதம், பக்ஸ் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் மருந்துகள் அனுப்பப்படாமையினால் வைத்திய சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 1166 சாவடிகளை நிறுவ திணைக்களம் தீர்மானம்

election_ballot_.jpgமேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி மேலதிகமாக 1166 வாக்குச்சாவடிகளை நிறுவ தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளதையடுத்தே வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திற்குமான வாக்காளர் தொகை 1500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 2459 வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை 3625 ஆக உயர்த்தப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

பரீட்சார்த்தமாகவே வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணும் பணிகளை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் முடிவு செய்ததாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமனசிறி கூறினார்.

இதேவேளை வாக்குச் சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருவதாகவும் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் திணைக்களத்துடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையாளர் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சக் கட்டம் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் வீட்டுக்காவலில்; தடைகளையும் தாண்டி ஊர்வலம்.

n8_2.jpgபாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும், முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீபும், நவாஸ் ஷெரீபின் மகனும் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு வீட்டுக் காவலில் வைப்பதற்கு பொலிஸார் பிடியாணை பெற்றுள்ளனர்.

தமது ஆட்சிக் காலத்தில் பதவியிலிருந்த உச்ச நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும், பஞ்சாப் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் தமது சகோதரரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியினர் இன்று 16ம் திகதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானின் தெரீக் இன்ஸாப் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நவாஸ் ஷெரீப் கட்சியினர் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.  இதற்கு இம்ரான்கான் கட்சியினரும், நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் செய்யத் யூஸ¤ப் ராஸா கிலானி இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதிக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கினார். அந்நாட்டு இராணுவ தளபதி கியானியும் இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியைக் கோரினார்.

இதேநேரம் இந்நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூட்டாக சமரசத் திட்டமொன்றை முன்வைத்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கிலாரி கிளிங்டன் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடனும், நவாஸ் ஷெரீபுடனும் தொலைபேசி ஊடாகத் தனித் தனியாகத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாகிஸ்தான் ஜனாதிபதியையும் நவாஸ் ஷெரீபையும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி சர்தாரி, நவாஸ் ஷெரீப் கட்சியினரின் போராட்டத்திற்குத் தடை விதித்த தோடு, போராட்டத்தையும், ஊர்வலத்தையும் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்திற்கும், பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டுள்ளனர். நேற்று நண்பகல் வரையும் 1200 தொண்டர்களும் 30 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் கைது செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையும் மீறி நவாஸ் ஷெரீப் கட்சி ஆதரவாளர்களும், தொண்டர்களும், சட்டத்தரணிகளும் பல்வேறு நகரங்களிலிருந்து இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளனர். நவாஸ் ஷெரீபின் சகோதரர் தனது ஆதரவாளர்களுடன் ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளார். இம்ரான்கானும் ஏற்கனவே இஸ்லாமாபாத் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.

இதேநேரம் நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத் நோக்கி லாஹரிலிருந்து நேற்று ஊர்வலமாகச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் நவாஸ் ஷெரீபை இராணுவத்தினரும், அவரது சகோதரரையும், மகனையும், இம்ரான்கானையும் பொலிஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் சட்டத்தரணிகளும் பல்வேறு நகர்களிலிருந்தும் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லுவதாகவும் அவர்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் இஸ்லாமாபாத் நகருக்குள் எவருமே நுழைய முடியாதபடி சகல வீதிகளிலும் கொள்கலன்கள் குறுக்காக நிறுத்தப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி அனேநகர் நகருக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பாராளுமன்றத்திற்கு அருகே எவரும் வர முடியாதபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருப்பதோடு அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

437 வன்னி நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து ஒரு வார காலத்தின் பின்பு யுத்தத்தில் காயமடைந்தவர்கள்,நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கலாக 10 வது தொகுதியினர் நேற்று சனிக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படடனர்.

18 சிறுவர்கள் உட்பட 437 பேர் இந்த தடவை அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் முல்லைத்தீவிலிருந்து இப்படி அழைத்து வரப்படும் நோயாளர்களை திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் நேரடியாக புல்மோட்டை மற்றும் பதவியா தள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பது என சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தாலும், பதவியா வைத்தியசாலை புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாகவே 10 வது தொகுதியினர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் பெண் மந்திரி ஷெர்ரி “திடீர்” ராஜினாமா

sherry_rehman.jpgபாகிஸ்தான் மந்திரி சபையில் மூத்த மந்திரியாக இருந்தவர் ஷெர்ரி ரகுமான் தகவல் தொடர்பு இலாகாவை கவனித்து வந்தார். இவருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் மூத்த தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் ரகுமான் திடீரென்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.ராஜினாமா கடிதத்தை உடனடியாக பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் அரசின் தகவல் ஒலிபரப்பு கொள்கை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே ராஜினாமாவுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. நவாஸ்செரீப் நடத்திய வக்கீல்கள் பேரணியை அரசு அடக்க நினைத்தது. ஆனால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் பின் வாங்கியது.

இது தொடர்பாக அதிபர் சர்தாரி,பிரதமர் கிலானி ஆகியோரது சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒளிபரப்புவது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.எதிர்க்கட்சிகள் போராட்டம், வக்கீல்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவதால் அதிபர் சர்தாரி அதிருப்தி அடைந்தார்.இதையடுத்து ரகுமான் ராஜினாமா செய்தார்.

பத்திரிகையாளரான ரகுமான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு பகுதியில் மோதல்; 58 சிவிலியன்கள் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg
புதுக்குடியிருப்பு பகுதியில் பலத்த மோதல்களில் ஈடுபட்டுள்ள படையினர் தப்பிவந்த 58 பொதுமக்களை மீட்டுள்ளனர். அத்துடன் மேலும் 250 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 58ஆவது படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டுள்ளதுடன் புலிகளுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியவாறு முன்னேறிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மோதலில் பலியான புலிகளின் சடலங்கள், 17 ரி-56 ரக துப்பாக்கிகள், 81 ரக இயந்திரத் துப்பாக்கி இரண்டு, தொலைத்தொடர்பு கருவிகள் போன்றவையும் புதுக்குடியிருப்பு இரணப்பாள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

மோதல்கள் நடந்த பகுதியில் படையினரால் மீட்கப்பட்ட 58 பொதுமக்களுள் புலிகளின் மக்கள் படையின் உறுப்பினர்களும் இருப்பதாகவும் அவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.

முல்லைத்தீவு நோயாளர்களுக்கு இனி புல்மோட்டையிலேயே சிகிச்சை -ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpgமுல்லைத் தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்படும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இனிமேல் நேரடியாக் புல்மோட்டை மற்றும் பதவியாவில் அமைக்கப்பட்டுள்ள தள வைத்தியசாலைகளுக்கே அழைத்துச் செல்லப்படுவர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்திய மருத்துவர்களைக் கொண்ட தள வைத்தியசாலைகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதையடுத்து திருமலை ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவின் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை மற்றும் பதவியா வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அழைத்து வருவதற்கு 2 – 3 மணித்தியாலங்கள் போதுமானது. இதன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது வரை 9 தொகுதிகளாக கடல்வழியாக அழைத்து வரப்பட்ட 3195 நோயாளர்களில் 1512 பேர் தமது சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலை – 732 பேர், பொலன்னறுவை வைத்தியசாலை – 171 பேர், கந்தளாய் வைத்தியசாலை – 160 பேர், தம்பலகாமம் வைத்தியசாலை – 75 பேர், கொழும்பு மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை – 93 பேர் என வெளியிடங்களிலும் 1231 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஏனைய 425 பேர் தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 24 பிரசவங்கள் இது வரை இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஐ.பி.எல்: புதிய அட்டவணை கோருகிறது இந்திய அரசு

i-p-l-logo.jpgஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய அட்டவணையை தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி, மே 24ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன.

இதையடுத்து, அட்டவணையை மாற்றுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, ஐபிஎல் நிர்வாகம் புதிய அட்டவணையை கடந்த 7ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

ஆனால், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், டெல்லி உட்பட பல்வேறு மாநில அரசுகள், போட்டி அட்டவணைகள் தொடர்பாக ஆட்சேபம் வெளியிட்டன. தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்றும், கூடுதல் படையினர் தேவை என்றும் தெரிவித்தன. சில மாநில அரசுகள், ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன. ஒரு சில மாநிலங்கள், தேர்தல் முடிந்த பிறகுதான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன.

ஆகவே, அதன் பிறகு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நிர்வாகம் இந்த மாதம் 7ஆம் தேதி சமர்ப்பித்த அட்டவணைப்படி போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் தெரிவித்துள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு, புதிய அட்டவணையைத் தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி சரத் 1 கோடி கையெழுத்து இயக்கம்

sarathkumar.jpgஇலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துகளை அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை கட்சியின் தலைவர் சரத்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியி்ல் முதல் கையெழுத்தை சரத்குமார் போட்டார்.

இதைத் தொடர்ந்து அப் பகுதி பொது மக்கள், கடைக்காரர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அப்போது சரத்குமார் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு உரிமை கோரி 60 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். உடனே, இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்ப உள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்கள், மத்திய அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்கள் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். சேவை மனப்பான்மை, தொலைநோக்கு பார்வையுடன் உழைக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். ஏப்ரல் 2ம் தேதி முதல் எங்கள் கட்சியின் பிரச்சாரம் தொடங்கும் என்றார்.