கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தாய்லாந்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்

protest_afp.jpgதாய்லாந்து அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பாங்காங்கின் பிரதான வீதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டகாரர்கள் குவிந்து வருகின்றனர்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவாளர்களான இவர்கள், உள்துறை அமைச்சகத்திற்குள் உட்புகுந்ததோடு, தற்போதைய பிரதமர் பயணித்ததாக கருதப்படும் வாகனம் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசி எறிந்தனர். வீதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், இது வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரிசாவில் நக்ஸலைட் தாக்குதல்: 11 காவலர்கள் பலி

ஒரிசா மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய அலுமினியத் தாது சுரங்கத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நேற்று நடத்தியத் தாக்குதலில், மத்திய தொழில்பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

கோரபுட் மாவட்டம் பஞ்ச்பட்மாலி என்ற இடத்தில் தேசிய அலுமினியம் கம்பெனிக்கு (நால்கோ) சொந்தமான பாக்ஸைட் சுரங்கம் உள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்தில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்ஸலைட்டுகள் 100 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்து 80 தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய அவர்கள், பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டதாக காவல்துறை தலைவர் எம்.எம். ப்ரராஜ் தெரிவித்தார்.

சுமார் 10 மணி நேரம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் அனைவரும் சுரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு தப்பியோடி விட்டதாகவும், இந்த மோதலில் சிஐஎஸ்எஃப் காவலர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்ஸலைட்டுகள் 4 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார். 

போர் நிறுத்தம்: இலங்கையை அழுத்தி வருகிறோம்- ப.சிதம்பரம்

chidambaram1.jpgபிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசிடம் அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். நேற்று இலங்கையில் 2 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று காரைக்குடி அருகே வடகுடியில் நிருபர்களிடம் சிதம்பரம் பேசுகையி்ல்,

இலங்கைப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் பேசியும், அறிக்கைகள் விடுத்தும் வருகின்றனர். இதிலே சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மத்திய அரசைப் பொறுத்தவரை 83ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்த வேறு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசுகள் இந்த பிரச்சனையில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமைகளை அளிக்கும் குடியுரிமை கிடைக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கையிலே தமிழர்கள் வாழும் பகுதியிலே ஒரு மாநிலம் அமைய வேண்டும். தேவையெனில் மேலும் ஒரு மாநிலம் அமையலாம்.

இது நமது கொள்கை இந்த கொள்கையில் முன்னேற்றம் கொண்ட காலமும் உண்டு, பின்னடைவு ஏற்பட்டதும் உண்டு. தற்போதைய பின்னடைவு நமக்கு மிகுந்த வருத்தத்தையும் கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போர் நிறுத்தத்தினை பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்ததன் காரணமாகத் தான் இன்று இந்தியாவோடு சேர்ந்து உலக நாடுகளும், ஐநாவும் சேர்ந்து போர் நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றன. நேற்று முன்தினம் கூட ஐநா. சபையின் செயலாளர் பான்-கி-மூன் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நான் ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்து சில அழுத்தமான கோரிக்கைகளை இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறோம். மிகுந்த அழுத்தத்தோடு வற்புறுத்தி தெரிவித்திருக்கிறோம். போர் நிறுத்தத்தினை கோரிக்கை, வேண்டுகோளாக இல்லாமல் அதற்கும் மேலான தேவையாகவே கூறியுள்ளோம்.

அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தரப்பினரையும் போர் நிறுத்தத்திற்காக வற்புறுத்தி வருகிறோம். இதற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறேன். இதற்கு பலன் கிடைக்காவிட்டால் இலங்கை அரசுக்கு, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும். தமிழக மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை நம்ப வேண்டும், ஆதரிக்க வேண்டும். மத்திய அரசில் 4 ஆண்டுகள் 11 மாதம் அங்கம் வகித்து விட்டு அந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டு, அதன்பின் அந்த அரசை விட்டு வெளியே வந்து இந்த அரசு இலங்கை பிரச்சினையில் எதுவுமே செய்யவில்லை என்று சிலர் (பாமக) கூறுவது அபத்தமான விநோதம்.

அமைச்சரவையில் நடைபெறும் விவாதங்கள் முடிவுகளை அனைத்து அமைச்சர்களும் அறிவார்கள். மாற்று கருத்து இருந்தால் அப்போது தெரிவித்து இருக்க வேண்டும். மத்திய அரசு இந்த நிமிடம் வரை போர் நிறுத்தத்திற்கான தேவையை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு முன் வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

புலிகளின் கடைசி அகழி படையினரிடம் வீழ்ந்தது – பெருந்தொகையான ஆயுதங்களும் மீட்பு

army-attack.jpgமுல்லைத்தீவு, அம்பலவான்பொக்கனை பிரதேசத்தில் உள்ள படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற புலிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்தப் பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த கடைசி அகழிகளையும் கைப்பற்றியுள்ளனர். புலிகளை இலக்கு வைத்து படையினர் நடத்திய கடுமையான பதில் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் முயற்சிகள் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. அம்பலவான்பொக்கனை பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

கடுமையான மழைக்கு மத்தியிலும் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொதுமக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ள அதேசமயம் புதுக்குடியிருப்பின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் கடுமையான தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மிதிவெடிகள் – 150, அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் – 14, கைக்குண்டுகள் – 150, வெடிமருந்துகள், குண்டுகள் – 08, கனரக ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகையான உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையில் அடைமழையால் நோயாளிகள் பாதிப்பு

trico.gifஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலும் வட பகுதியிலும் கடந்த சில தினங்களாகவே அடை மழை பெய்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக  புதுமாத்தளனிலிருந்து புல்மோட்டைக்கு கொண்டு வரப்படும் நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகளை ஏற்றிக் கொண்டு எந்த ஒரு கப்பலும் புல்மோட்டைக்கு வரவில்லை என்று அங்குள்ள மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்தார். மழை தொடர்ந்தால் நோயாளிகளை இறக்குவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார், அங்கு மேலும் பத்து அவசர ஊர்திகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்ற தேர்தலை புறக்கணியுங்கள்

india-election.jpgஇலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரவிக்கும் முகமாக பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழக மக்களிடம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலர்களில் ஒருவரான கார்த்திக் கூறுகையில்;

இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்படும் தமிழ் மக்களை காப்பாற்றக் கோரி கடந்த 5 மாதங்களாக நாம் போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இலங்கையில் நடக்கும் போரில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய இராணுவம் உதவி செய்து வருகின்றது. இதற்கு சாட்சியாக அங்கு நடக்கும் போரில் காயமடைந்த 125 இந்திய இராணுவ வீரர்கள் நந்தம்பாக்கத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, இலங்கையில் நடக்கும் போரில் இந்திய அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகின்றோம் என்ற பெயரில் சில கட்சிகள் போராடி வருகின்றன. இவை வாக்குக் கட்சிகள் தான். வாக்குகளுக்காக வேஷம் போடுகின்றனர்.

எனவே, இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

ரணில் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானால் அவருடன் விவாதத்திற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் -ஐ.தே.க.

போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சவாலை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தான் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் ஜனாதிபதி தயக்கம் காட்டாமல் மேல்மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்திற்குரிய திகதியை நிர்ணயித்து அறிவிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவரின் சவாலை ஜனாதிபதி தைரியமிருந்தால் ஏற்று விவாதத்துக்கு முன்வரவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முதலில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க கூறியதாவது;

கடந்த வியாழக்கிழமை மத்திய கொழும்பில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்; தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வாய்ப்பை ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் அவர் போதிய ஆதாரங்களுடன் தன்னுடன் பகிரங்கமான விவாதத்துக்கு வரவேண்டுமென்று சவால் விடுத்தார். தனது சுயநல அரசியலை நோக்கமாகக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை தவறாக வழிநடத்தவே அரசும் ஜனாதிபதியும் முனைப்புக் காட்டி வருகின்றது.

தனியார் ஊடகங்கள் மௌனியாக்கப்பட்டிருப்பதோடு அரச ஊடகங்கள் 24 மணி நேரமும் ஐக்கிய தேசியக்கட்சி மீதும் ரணில் மீதும் சேறு பூசுவதையே பணியாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் வைத்தே பகிரங்க விவாதத்துக்கு ரணில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 47 இலட்சம் வாக்குகளை பெற்றவர் ரணில். நாட்டின் பிரதமராக பதவிவகித்தவர். இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். நாட்டின் மாற்றுத் தலைவராக காணப்படுகின்றார். சர்வதேசம் ஏற்றுக் கொண்ட தலைவராகக் கூடக் காணப்படுகின்றார். இத்தனை தகைமையும் கொண்டவருடன் பகிரங்க விவாதத்துக்கு வரமுடியாது என்று ஜனாதிபதி கூறுவாரானால் அது இயலாமையையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் பொய்க்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்பதையே காட்டுகின்றது எனக் கேட்டுக் கொண்டார்.

விளம்பரப்பலகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் கடும் உத்தரவு

election_ballot_cast.jpgமேல் மாகாண சபை தேர்தல் தொடர்பான விளம்பரப்பலகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் கடும் உத்தரவு பிறப்பித்து பொலிஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில் :

சிறியளவிலான சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் ஏனையவற்றை அகற்றுமாறும் அவர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான தேசிய வாக்களிப்பு நிலையம் தேர்தல் வன்முறை தொடர்பில் 72 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்களில் ஜே.வி.பி ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் கடத்தல் சம்பவங்கள் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புல்மோட்டை வைத்தியசாலையிலுள்ளோரை கிறிஸ்தவ மதகுருமார் நேரில் சென்று பார்வை

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட துணை ஆயர் அதிவந்தனைக்குரிய பொன்னையா ஜோசப் தலைமையிலான கிறிஸ்தவ மதகுருமார் குழு ஒன்று புல்மோட்டையில் களவைத்தியசாலையில் முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களையும் நோய்வாய்ப்பட்டவர்களையும் சென்று பார்வையிட்டது

அக்குழுவில் திருகோணமலை மாவட்ட எஹெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி பிரான்ஸிஸ் சேவியர் டயஸ், நிலாவெளி புனித ஜோசப் தேவாலயப் பங்குத் தந்தை அருட்பணி குணநாயகம், உதவிப்பங்குத் தந்தை அருட்தந்தை அஜித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

புல்மோட்டைக் களவைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சையளித்து வரும் இந்திய டாக்டர் குழுவின் தலைவர் டாக்டர் வசந்தகுமாரை கிறிஸ்தவ மதகுருமார் குழு சந்தித்து உரையாடியுள்ளனர்.

உள்ளுர் அதிகார சபைகள் சட்டமூலம் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு

election_ballot_cast.jpgமாகாண சபைக்கான அதிகாரங்களை மேலும் குறைத்து சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்; அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளுர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது தமிழ்ப் பேசும் மக்ளிடையே இன்றைய அரசு தொடர்பான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்தும். அத்துடன்  இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பாராமுகத்தன்மை குறித்து சர்வதேசமும் சந்தேகக் கண்ணோடு நோக்கக் கூடிய ஒரு வாய்ப்பினை இந்தச் சட்ட மூலம் வழங்குமென புளொட் இயக்கத் தலைவர் ரீ. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது, இன்றைய நெருக்கடியான கட்டத்திலும் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக சர்வதேசம் உன்னிப்பாகத் தமது கவனத்தைச் செலுத்திக் கொணடிருக்கும் போதும் இலங்கை அரசாங்கம் இவ்வாறனதொரு சட்ட மூலத்தின் வாயிலாகக் தமிழ்பேசும் மக்களின் உள்ளுராட்சி பிரதிநிதித்துவத்தில் கைவைப்பது ஒரு காலோசிதமான செயலல்ல. அத்துடன் இன்று இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் குறைந்த பட்சமாக வழங்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரங்களிலிருந்து மேலும் சிலவற்றைப் பிடிங்கியெடுப்பதானது அதிகாரப் பரவலாக்கத்தையே கேள்விக்குட்படுத்தி விடும். எதிர்காலத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை புதிய சட்ட மூலத்துக்கு அமைவாகவே அரசு நடத்தப் பார்க்கிறது.

இந்த அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமானால் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் வாழக் கூடிய தமிழ் பேசும் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தில் அதிகளவில் இழப்புகளை எதிர்நோக்குவர். வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் பெருன்பான்மை இன மக்களின் பிரதேசங்களை எல்லைப் புறமாகக் கொண்ட தமிழ்ப்பேசும் மக்களின் பிரதேசங்களும் அதே போன்று வவுனியா மாவட்டமும் பாதிக்கப்படுவதுடன் மலையகம் உட்பட இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளில் சிறுபான்மை இனமக்கள் பிரதிநிதித்துவத்தில் பாரிய இழப்பை ஏற்படுத்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.