கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வடக்குப் பாடசாலைகளை நாளை திறக்க வேண்டாமென அரசு அவசர அறிவித்தல்

civiling_flee_vanni_01.png இலங்கையின் வடபகுதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்க வேண்டாம் என வடக்குக் கல்வி வலயங்களுக்கு அரசாங்கம் இன்று அவசர அறிவித்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண கல்விப்பணிபாளர் வீ.இராசையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று திங்கட்கிழமை காலை முதல் 30,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் மக்கள் முல்லைத் தீவிலிருந்து விடுவிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் மேமாதம் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ் அரச அதிபர் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளரை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இடம்பெயர்ந்து வருபவர்களைத் தங்க வைப்பதற்கு வவுனியாவில் மேலும் நான்கு பாடசாலைகளில் அவசர ஏற்பாடுகள்

civiling_flee_vanni_02.png பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி்னுள் வந்துள்ள சுமார் 5000 பேரைத் தங்க வைப்பதற்காக நான்கு பாடசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏற்பாடுகள் குறி்த்து இன்று மாலை வவுனியா செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற அவசர உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம், தாண்டிக்குளம் பிரமண்டு வி்த்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, முதலியாகுளம் பாடசாலை ஆகியவற்றில் ஓமந்தை பகுதிக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள 5000 பேரையும் தங்க வைப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்களுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஐ.சி.ஆர்.சி மற்றும் யுனிசெவ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று காலை வவுனியாவுக்கு இராணுவத்தி்னரால் கொண்டுவரப்பட்ட 1500 பேர் மனிக்பாம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் தனது தலைவிதியை இன்னும் சில மணித்தியாலயங்களின் சந்திப்பார் – இராணுவத் தளபதி

sarath-fonseka.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் எதிர்வரும் சில மணித்தியாலயங்களில் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும் என தொலைக்காட்சிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

படையினர் இன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் இறுதி மணல் அணையை உடைத்து மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்றைய இந் நிகழ்வு மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

20-karunanithi1.jpgநான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை. தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெண்கள் நடத்தும் போராட்டம் தீவிரம் – 5 பேர் சுகவீனம்

20-fast.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஐந்து பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கபப்ட்டிருந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் போலீஸார் அனுமதி மறுக்கவே, மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பல பெண்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு கவிதா (30), சித்ரா (40), சசிகலா (30) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதுரை பழனியம்மாள், காஞ்சீபுரம் சசிகலா, ஜெயமணி, மேகனா, செல்வி ஆகியோரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

இவர்களில் ஜெயமணி மயக்கமடைந்து விழவே, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று 8வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் கருணாநிதி செய்கிறார்:திருமா

thiruma_8-4.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

தி.மு.க. அரசின் மீது எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அதனால்தான் ஈழப் பிரச்னையை எதிரணியினர் தேர்தல் பிரச்னை ஆக்குகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியைப் பறி கொடுத்தவர் கருணாநிதி. அவரும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர். இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் அழைத்து மதுரையில் டெசோ மாநாடு நடத்தினார். இப்போது கூட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்த எங்கள் கூட்டணி இயற்கை கூட்டணி. கூட்டணிக் கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கத் தெரிந்தவர் கருணாநிதி. உண்மையான தலைவர்கள் இல்லாத கட்சிகளும், விபத்தில், வன்முறையில், சாதி உணர்வுகளைத் தூண்டி தலைவர் ஆனவர்களும் உள்ள கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி. நான் தவறானக் கூட்டணியில் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் அவர் உள்ள கூட்டணிதான் தமிழர்களுக்கு எதிரான கூட்டணி.

பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ

india-election.jpgவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று வைகோ பேசினார். அமைந்தகரையில் நடந்த தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். சேது சமுத்திர திட்டம் குறித்து நான் சொன்ன கருத்தை வைத்து, அ.தி.மு.க.,வுடன் நெருடல் இருப்பதாக ஒரு ‘டிவி’ பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால், அதற்கு அடுத்த கேள்விக்கு இந்திய பிரதமராக வர அனைத்து தகுதியும் உள்ளவர் ஜெயலலிதா என்று நான் கூறிய கருத்தை வெளியிடவில்லை.

தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் ‘டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,’ என்று கூறியிருக்கிறார். பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர் எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்.

சோனியாவே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா? – கருணாநிதி

20-karunanithi.jpgசோனியா காந்தியே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின் இன்னொரு பகுதியை அந்த டிவி வெளியிட்டுள்ளது.

அதில், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்வது என்பது மாநில அரசின் கையில் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றார்.

பின்னர், கொள்கை அடிப்படையில், அனுதாபத்தின் அடிப்படையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி அவர்களே நளினியிடம் இரக்கம் காட்டியபோது, நான் காட்டாமல் இருக்க முடியுமா என்றார் கருணாநிதி.

இதற்கிடையே, சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் காந்தி படுகொலையை நான் மன்னிக்க மாட்டேன். அதை செய்த இயக்கத்தையும் நான் மன்னிக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

பெப்ரவரி முதல் இதுவரை 10.000 நோயாளிகள் அரச பகுதிக்கு வருகை!

taking-to-green-ocean.jpgகிரீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த பெப்ரவரி முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் புலிகளின் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக ஐ. சி. ஆர். சி. தெரிவிக்கின்றது. கடந்த இரு தினங்களில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 940 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் ஐ. சி. ஆர். சி.யினூடாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். நோயாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

35000 மக்கள் மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு : பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு

puthu.jpgவன்னிப் பிரதேசத்திலிருந்து 35000 மக்களை காப்பாற்ற இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி இன்று மாலை தெரிவித்தார். மேலும் இந் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், தற்கொலைத் குண்டுத்தாக்குதல்  மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  காயப்பட்ட 17 பேர் விமான ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு : அரசு அறிவிப்பு 

 “24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”

இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : “பாதுகாப்பு பகுதியில் இருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். விரைவில் ஒட்டு மொத்த மக்களையும் மீட்டு விடுவோம். விடுதலைப்புலிகள் முற்றிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

பிரபாகரனுக்கு 24 மணி நேரம் கெடு விடுக்கிறோம். அவரும் அவரது குழுவினரும் அதற்குள் சரணடைய வேண்டும். இல்லை என்றால் எங்கள் படை அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் : புதுமாத்தளன் மேற்கு பகுதிமண் அரணின் 3 கி.மீ. படையினர் வசம் 
 
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் மேற்கு பகுதியிலுள்ள மண் அரணின் 3 கிலோமீற்றர் அளவிலான பகுதியினை இன்று காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் வரும் பொதுமக்கள் மீது இன்று 3 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அரசாங்கம் 24 மணி நேர காலக்கெடுவினை அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்த காலக் கெடு நாளை நண்பகலுடன் முடியவடையவுள்ளது.

civiling_flee_vanni_01.png

civiling_flee_vanni_02.png