கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

நலன்புரி நிலையங்களில் நகைகளைப் பாதுகாக்க வங்கிக் கிளைகள்

chals_.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களின் பெறுமதி மிக்க நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாத்துக் கொடுப்பதற்கு அரசாங்க வங்கிகள் பாதுகாப்புப் பெட்டகங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறினார்.

தமிழர்கள் பெரும்பாலும் தமது பணத்தை தங்க ஆபரணங்களில் முதலீடு செய்வது வழக்கம் என்பதால்,  இடம்பெயர்ந்த மக்களின் பெறுமதிவாய்ந்த ஆபரணங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வளையல்கள்,  தாலி போன்ற ஆபரணங்களையே கூடுதலாகப் பாதுகாப்புப் பெட்டகங்களில் மக்கள் வைத்துள்ளனர். தற்பொழுது வங்கிகள் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பாதுகாப்பு பெட்டகங்களை வழங்க ஆரம்பித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

அதேநேரம், அரசாங்க வங்கிகள் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தமது வங்கிக் கிளைகளையும் திறந்துள்ளதாகவும்  சார்ள்ஸ் கூறினார். இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்க வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் 165 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான இணைப்பதிகாரி,  முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோ கூறியுள்ளார்.

ரொறன்ரோ நகரில் தமிழர்கள் மாபெரும் பேரணி: போக்குவரத்து செயலிழப்பு எனத் தகவல்

canada1.jpgஇலங்கையின் வடக்கே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாகவும் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகளால் ரொறன்ரோ நகரின் போக்குவரத்து செயலிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தமிழர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கார்டினர் நெடுஞ்சாலை இரவு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொலிஸார் 7:50 மணியளவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பில் கனடிய அரசாங்கம் உறுதியான ஒரு நடவடிக்கையை எடுக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான கோர்மி தேவா தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரொறன்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். இருந்த போதிலும், நகரின் முக்கிய பாதையான கார்டினர் நெடுஞ்சாலையின் போக்குவரத்து இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக செயலிழந்திருந்தது.

கண்டி அஸ்கிரிய மைதானம் யாருக்கு சொந்தம் திரித்துவக் கல்லூரிக்கா, அஸ்கிரிய ஆலயத்துக்கா -இன்று கண்டியில் உயர்மட்டக் கூட்டம்

asgiriya.jpgகண்டி அஸ்கிரிய விளையாட்டு மைதானம் கண்டி திரித்துவக் கல்லூரிக்குச் சொந்தமானதா? அல்லது அஸ்கிரிய பீடத்துக்குச் சொந்தமானதா? என்ற சர்ச்சை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை விட்டு திரித்துவக் கல்லூரி இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டுமென அஸ்கிரிய ஆலயம் திரித்துவக் கல்லூரிக்கு கடிதம் மூலம் அறவித்துள்ளது.

இதனால் இப்பிரச்சினை தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று திங்கட்கிழமை கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் திரித்துவக் கல்லூரி பிரதிநிதிகளும் அஸ்கிரிய ஆலயப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு தரப்பினரும் இம்மைதானம் தமக்குரியது என்று உரிமை கோரிவருகின்றனர்.

1911 ஆம் ஆண்டு இந்த மைதானக் காணியை இலங்கை அரசிடம் இருந்து திரித்துவக் கல்லூரி குத்தகைக்குப் பெற்றுக்கொண்டதுடன் அது தொடர்பான ஆவணத்தில் அன்றைய இலங்கையின் ஆளுநர் (கவர்னர்) ஒப்பமிட்டதாகவும் இக்கல்லூரியின் அதிபரும் ஒய்வு பெற்ற பிரிகேடியருமான டபிள்யூ.ஜீ.கே.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இக்கல்லூரி மேலும் காணியை குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளும் அனுமதியும் வர்த்தமானி மூலம் பின்னர் வெளியிடப்பட்டது எனவும் அவர் கூறினார்.

1985 இல் மேலும் சில காணிகளை மைதானத்துடன் இணைத்துக் கொள்வதற்கு குத்தகை உடன்படிக்கை ஒன்று அரச காணி சட்ட விதிகளின் கீழ் கைச்சாத்திடப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா அதில் ஒப்பமிட்டார். 2005 இல் சில காணிகள் இதற்கு வாங்கப்பட்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அது தொடர்பான ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளார்.

இது தொடர்பாக தகுந்த ஆவணங்களும் உறுதிகளும் எம்மிடம் உள்ளன. இதற்கான வரிகளும் எம்மால் செலுத்தப்பட்டுள்ளன எனவும் அதிபர் தெரிவித்தார். இதேவேளை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண உடுகம ஸ்ரீ புத்தரஹிந்த தேரர் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்;

கண்டி திரித்துவக் கல்லூரியின் இந்த மைதானம் தொடர்பான குத்தகைக்காலம் காலாவதியாகிவிட்டது என்றார். நூறு வருடங்களுக்கு மேலாகக் கண்டி திருத்துவக் கல்லூரியுடன் இணைந்துள்ள இந்த மைதானம் 1980 களில் அன்றைய இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவரும் அமைச்சரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான காமினி திஸநாயக்காவினால் சர்வதேச கிரிக்கெட் மைதானமாக தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் பலிப்பான ஸ்ரீ சந்தானந்த சர்வதேச பாடசாலை அதிபரிடம் அஸ்கிரிய மைதானத்தை வைபவரீதியாக கையளித்துள்ளார். இதனையடுத்தே இந்தப் பிரச்சினை தற்போது எழுந்துள்ளது.

யாழ். குடாநாட்டிற்குள் ஊடுருவியுள்ள புலிகளை உடனடியாக சரணடையுமாறு இராணுவம் அறிவிப்பு

saran.jpg வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்துள்ள மக்களோடு மக்களாக விடுதலைப்புலி உறுப்பினர்களும் ஊடுருவியுள்ளனர் என்றும் இவ்வாறு ஊடுருவிய புலி உறுப்பினர்களை உடனடியாக சரணடையுமாறும் இராணுவத்தினர் அறிவித்து வருகின்றனர்.
வலி. மேற்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆட்டோ வண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தனர்.

அவ்வறிவிப்பில், யாழ். மாவட்டத்துக்குள் அண்மைக்காலமாக புலி உறுப்பினர்கள் ஊடுருவி வருகின்றனர். இவ்வாறு ஊடுருவி வரும் புலி உறுப்பினர்களுடன் தொடர்புவைத்திருப்பதையோ, உணவு வழங்குவதையோ முற்றாகத் தவிர்ப்பதோடு அவர்கள் தொடர்பான விடயத்தை உடனடியாக எமக்கு அறிவித்து உதவுங்கள்.

இதைவிடுத்து அவர்களை மறைத்து வைத்து உணவளித்து தகவல் வழங்காது இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் செய்தியாளர்களை இலங்கை திருப்பி அனுப்பியமை குறித்து பிரிட்டன் ஏமாற்றம்

channel-4news.jpg
இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர் குழு ஒன்றை திருப்பி அனுப்பியது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை படையினரின் அந்தஸ்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் தொலைக்காட்சி செய்தியாளர்களை, இலங்கை அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

இலங்கை படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தப்பி முககாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள் மோசமாக நடத்தப்படுவது, மற்றும் அவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்படுவது ஆகியவை குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற இவர்கள் மூவரும் பிரிட்டனின் ”சனல் 4” தொலைக்காட்சியை சேர்ந்தவர்களாவர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தாம் சில தவறுகளை செய்ததாக இவர்கள் ஒப்புக்கொண்டதாக, இலங்கை பாதுகாப்பு தகவல் மையத்தைச் சேர்ந்த லக்ஸ்மன் ஹுலுகல்ல அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கையில் ஒரு பெரிய அளவிலான வெளிப்படைத்தன்மை தேவை என்ற நிலைமை இருக்கின்ற நிலையில், இவர்களை திருப்பி அனுப்புவதற்காக இலங்கை எடுத்த முடிவு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

election-commission.jpgஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்று மாலை 5.00 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரயுமான ராஜேஷ் லக்காணி தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் 13ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளன்று நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதில்,

தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தான் வழிகாட்டும் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு கட்சி சின்னம், கொடி, போஸ்டர் போன்றவைகளை வைத்திருக்க கூடாது. உணவு பண்டங்கள் எதையும் வழங்கக் கூடாது. அங்கு 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கூட்டமாக இருக்க அனுமதி இல்லை. முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்படும் நபர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும். அந்த நபர்கள் குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது.

வேட்பாளராகவோ அல்லது வாக்களிக்க செல்லும் வாக்காளராகவோ இல்லாத பட்சத்தில் எந்த ஒரு அமைச்சரும் வாக்குச்சாவடிக்குள் செல்லக் கூடாது. அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்ட நபர் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் பாதுகாப்பு அலுவலருடன் செல்லலாம். ஆனால், தொகுதி முழுவதும் பாதுகாப்பு அலுவலருடன் சுற்றி வரக்கூடாது.

அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு பெற்ற நபர்கள் வாக்களிக்க பாதுகாவலருடன் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு கட்டளைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகளை அரசியல் கட்சிகள் எப்படி பின்பற்றுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டைரக்டர் பாரதிராஜாவை விடுதலை செய்ய வேண்டும்: தா.பாண்டியன்

bharathi-raja.jpgடைரக்டர் பாரதிராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, ஓவியர் சந்தானம், திரைப்பட நடிகர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் சோனியா காந்திக்கு கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய அளவில் இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுள்ள சூழலில் அதைக் கண்டிக்கும் முயற்சியாகத்தான் இந்தக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த நியாயமான கோரிக்கையைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் தண்டிக்க முயற்சி செய்யும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் எந்தவொரு சம்பவத்தையும் துணிச்சலாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக மாறவேண்டும்

“கோழைத் தனத்தை எங்கள் மத்தியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு நேர்மையாக எவருக்கும் சோடை போகாத நிகழ்வுகளைத் துணிவாக வெளிப்படுத்தக்கூடியவர்களாக ஊடகவியலாளர்கள் மாறவேண்டும்’  இவ்வாறு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் சமூகம் ஊடகத்துறையில் எதிர்நோக்கியுள்ள சவால்கள் எனும் விடயம் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; ஒவ்வொருவரினதும் கலாசாரத்தினையும் அந்தந்த கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் ஏதாவது ஒரு விழிப்புணர்வு அல்லது எழுச்சிக் கூட்டங்களை நடத்தி அதனைப் பாதுகாப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது எங்கள் மத்தியில் உள்ள சூழல் எங்களின் கலாசாரம், விழுமியங்கள், சுதந்திரங்கள், உரிமைகள் அழிந்துவிடுமா? அல்லது அழியப்போகின்றதா? அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்று முயற்சி செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எதையுமே வியாபாரமாக பார்க்கின்ற இக்காலத்தில் எல்லாமே இன்று வியாபாரமாகி விட்டது. சில விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதனால்தான் அதற்குரிய பதிலை உரியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றைப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டால் எமது சமூகம் முன்னேறுவதற்கு இதுவொன்றே போதுமாகும். எமது பிரதேசத்தில் இருக்கின்ற சில ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகள் அல்லது அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிக்கொண்டுவருவதற்கு பயந்து ஒதுங்குகின்றார்கள்.

தங்களுக்குரிய உணவு சமைக்கும் பணியை நிவாரணக் கிராம மக்கள் ஆரம்பித்தனர்

risard-badi.jpgவவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் நேற்று (10) முதல் தாங்களாக சமைக்கத் தொடங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அவர்கள் தாமாக சமைத்து சாப்பிட சமையல் உபகரணங்கள், உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள் அடங்கலான சகல நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று (10) வவுனியா அரச அதிபர் பணிமனையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த மாநாட்டில் வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ், மேஜர் ஜெனரல் சந்ரசிரி, அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் 4 நிவாரணக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவுகளே இவ்வளவு காலமும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தினூடாக அரிசி, மா, பருப்பு, சீனி என்பன வழங்கப்படுவதோடு ஏனைய உலர் உணவுப் பொருட்கள் சமையல் உபகரணங்கள் என்பனவற்றை அராசங்கமும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

மக்கள் மீள்குடியேற்றப்படும் வரை மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து உலர் உணவுப் பொருட்கள், மலிகைச் சாமான்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, மக்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்குவதற்கென வவுனியாவில் களஞ்சியமொன்றை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார். இனிமேல் வவுனியா அரச அதிபரினூடாக மாத்திரமே இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்க விரும்புபவர்கள் வவுனியா அரச அதிபரிடம் தமது உதவிகளை கையளிக்குமாறும் அவர் கோரினார்.

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கான சேமநல திட்டங்களை துரிதப்படுத்துமாறு பணித்தார்.

குடிநீர் மற்றும் மலசலகூட வசதியற்றவர்களுக்கு உடனடியாக உரிய வசதிகள் அளிக்குமாறும் அவர் தெரிவித்தார். மலசல மற்றும் குடிநீர் வசதியற்றவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள சில பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், விரைவில் குறித்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார். ஆண்டியபுளியங்குளம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 1346 பேர் இன்று (11) வலயம் 2 இல் தங்கவைக்கப்பட உள்ளனர். அருவித்தோட்டம் சிவானந்த கல்லூரியில் உள்ள மக்களும் விரைவில் நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சிறியவர் முதல் பெரியவர் வரை சகலரையும் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பான அறிவுரைகளை அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளார்.

இதுவரை ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 910 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் அனைவரும் இன, மத, பேதங்களை மறந்து உதவ முன்வர வேண்டும் எனவும் கோரினார். அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகக் கூறிய அவர், பருப்பு, கடலை, நெத்தலி, மீன் மற்றும் மலிகைச் சாமான்களே அதிகமாகத் தேவைப்படுவதாகவும் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த மேஜர் ஜெனரல் சந்ரசிரி இராணுவத்தினரின், அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு உதவி வருவதாகக் கூறினார்.

முதியவர்களை தமது உறவினர்களுடன் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதித்து வருவதாகக் கூறிய அவர் பிரிந்த குடும்பத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.

மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிக வீடமைப்பு, மலசலகூடம், மின்சாரம், குடிநீர், சுகாதாரம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டது. வெளி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு கையளிக்கப்படும் நிவாரணப் பொருட்களை வவுனியாவில் களஞ்சியப்படுத்த மூன்று நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று இராசையா இளந்திரையன் ஷெல் வீச்சில் படுகாயம்

ilanthirayan.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று   அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் நேற்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என  இணைய செய்திகள் தெரிவிக்கின்றன

நீண்டகால இடைவெளிக்கு பின் இளந்திரையன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சனிக்கிழமை செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.