::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை

batsman-sachin.jpgகுவாலி யரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார்.  200 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்களான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின். அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.

147 பந்துகளில் 200 ஓட்டங்களைப் பெற்ற சச்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்தார்.  இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார். இந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியா ஒரு நாள் போட்டி ஒன்றில் 400 ஓட்டங்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும்.

இலங்கையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் திருப்திகரமாக உள்ளன – ஐ. சி. சி. பிரதிநிதி தெரிவிப்பு

cricket.jpgஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக் கென விஷேடமாக பள்ளேகல சூரியவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச விளையாட்டு மைதானங் களின் தரம் திறமையான முறையில் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

2011ம் ஆண்டில் உலக கிரிக்கெட் கிண்ணத்துக்கான 12 போட்டிகள் இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இதனை முன்னிட்டு இவைகளின் தரங்களை பார்வையிட அண்மையில் இலங்கை வந்த பிரதிநிதிகள் குழுவினரே இவ்வாறு கருத்துத் தெரிவித் தனர்.

இம்மூன்று மைதானங்களின் நிர்மாணப் பணிகளைப் பற்றி குறை கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் இணைப்பதிகாரி திராஜ் மல் ஹோத்ரா குறிப்பிட்டார்.

தாங்கள் எதிர்பார்ததை விட பல மடங்கு திருப்த்தியளிக்கும் வகையில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி வருகின்றமையிட்டு மகிழ்ச்சியடைவ தாகவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு இறுதியில் சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானத்தில், மேற்கு இந்திய அணியுடனான போட்டியொன்றை நடாத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றது என இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் இடைக்காலச் சபையின் தலைவர் டீ. எஸ். த. சில்வா தெரி வித்தார்.

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் குவித்தார் சச்சின்

thendur.jpgஇந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொல்கத்தாவில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் அடித்தார்.

டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் அடித்த 47வது சதம் இதுவாகும். இந்த ஆண்டு டெண்டுல்கருக்கு மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது எனலாம்.

அவர் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் பங்களாதேசத்துக்கு எதிராக சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் சதம் கண்ட டெண்டுல்கர், மிர்புரில் நடந்த 2வது டெஸ்டிலும் சதம் அடித்தார். நாக்பூரில் நடந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டிலும் டெண்டுல்கர் சதம் கண்டு இருந்தார்.

கிங்ஸ் லெவன் அணியின் தலைவராக சங்கக்கார

kumar.jpgஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இந்தி யாவின் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

புதிய தலைவராக இலங்கையின் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) 3 வது “டுவென்டி-20” கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப். 25 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.  இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. கடந்த 2 தொடர்களில் இந்த அணியின் தலைவராக யுவராஜ் சிங் செயல்பட்டார்.

ஆனால் இந்த முறை தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய தலைவராக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

“யுவராஜ் சிங்கிற்கு பதில் 3 வது ஐ.பி.எல். தொடரில் சங்கக்கார அணியை வழிநடத்துவார். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் அணியின் தலைவராக யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலாவது முறை அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.

அணியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்குவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அணியில் அவருக்கு என தனி இடம் உண்டு” என்றார். இது குறித்து சங்கக்கார கூறியதாவது, கடந்த இரண்டு தொடர்களில் யுவராஜ் சிங்கின் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அவர் மிகச் சிறந்த தலைவர் தவிர எனது நல்ல நண்பர். அணி நிர்வாகத்தின் புதிய முடிவு குறித்து அவரிடம் பேசினேன். அதற்குப் பின் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்தேன்.

இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் யுவராஜ். ஆட்டத்தின் போக்கை அவரால் எந்த சமயத் திலும் மாற்ற முடியும் இவ்வாறு சங்கக்கார கூறினார்.

தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,

“யுவராஜ் துடுப்பாட்டத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. தலைமைப் பொறுப்பு அவரது செயல்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.

வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் இணைந்து சிறப்பாக தயாராகி வருகிறோம். அணி நிர்வாகத்தின் முடிவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் யுவராஜ்” என்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இன்று

sania-mirza.jpgஅவுஸ் திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் கிராண்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் நடக்கிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ராபெல் நடால் மற்றும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், டினரா சபினா (ரஷ்யா), இவானோவிச் (செர்பியா) போன்ற வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்.

இம்முறை இவருக்கு முதல் சுற்று போட்டி, கடினமானதாக இருக்கும் என தெரிகிறது. தர வரிசையில் 56வது இடத்தில் இருக்கும் இவர், 26வது இடத்தில் உள்ள பிரான்சின் அரவானே ரேசாயை சந்திக்கிறார். இதற்கு முன் இருவரும் மூன்று முறை மோதியுள்ளனர். இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர்.

திருமணத்துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகல்: சானியா

sania-mirza.jpgதிருமணத் துக்குப் பின் டென்னிஸிலிருந்து விலகவிருப்பதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சானியாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது இளவயது நண்பரான சோஹப் மிர்சாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனினும் திருமணம் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திருமணத்துக்குப் பின் டென்னிஸ் விளையாடும் எண்ணமில்லை என சானியா தெரிவித்தார். எனினும் திருமணத்துக்கு சிறிது காலம் ஆகலாம் என்றார் அவர். விளையாடுவதா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க சானியாவுக்கு முழு சுதந்திரம் உண்டு என அவரை மணக்கவிருக்கும் சோரப் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கோண கிரிக்கெட் தொடர்: கோப்பையை வெல்வது யார்? இந்தியா – இலங்கை இன்று பலப்பரீட்சை

catak.jpg3 நாடுகள் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. “லீக்” ஆட்டத்தின் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி இன்று 13ம் திகதி நடக்கிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாட்டி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

தற்போது நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும் இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியில் இந்திய அணி இலங்கை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம்பெற்றது.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்து இருப்பதால் கோப்பையை கைப்பற்றும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோலி, காம்பிர், கப்டன் தோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் இன்று இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்கு திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும்.

கடந்த 2 ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெஹ்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி “லீக்” ஆட்டத்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுப்பட்டது.

அவருக்குப் பதிலாக இடம்பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவா லாகத் திகழும் அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் அந்த அணியின் துருப்பு சீட் டாக உளளார். அவர் களத்தில் இருக்கும் வரை இலங்கையின் ஸ்கோரை கட்டுப்படுத்த முடியாது. கப்டன் சங்கக்கார தொடக்க வீரர் தரங்க ஆகியோரும் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் சமரவீர, முன்னாள் கப்டன் ஜயவர்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலகெதர ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் இன்று இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்

catak.jpgமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்றைய 5வது லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் உள்ள மிர்புரில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சங்கக்கார (68), ரன்திவ் (56), தில்ஷான் (33), துஷாரா (28) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இலங்கை அணி 46.1 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாகீர் கான், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் (48), கவுதம் காம்பீர் (71) ஜோடி சிறப்பாக ஆடியது. பின்னர் இணைந்த விராத் கோஹ்லி (71), யுவராஜ் சிங் (8) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 32.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் துஷாரா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலிடத்தில் இலங்கை அணி (12 புள்ளி) உள்ளது. எதிர்வரும் 13ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

ஆப்பிரிக்கக் கோப்பை போட்டியில் இருந்து விலகுகிறது டோகோ

togo-team.jpgநாடுகளுக் கிடையிலான ஆப்பிரிக்கக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக டோகோ அணியினர் பயணித்த பேருந்து துப்பாக்கிதாரிகளால் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதை அடுத்து, அந்த சுற்றுப் போட்டியில் இருந்து விலகுவது என்று டோகோவின் தேசிய விளையாட்டு அணியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக அங்கோலாவில் இருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

இதில் கொல்லப்பட்ட ஓட்டுனரை அடுத்து மேலும் காயமடைந்த ஒரு ஊடக அதிகாரியும், துணை பயிற்றுவிப்பாளரும் மரணமானதால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.

மேலும் ஆறு பேர் இதில் காயமடைந்துள்ளனர்.

காங்கோ பிரசவில்லில் இருந்து அங்கோலிய கபிந்த பகுதிக்கு பேருந்து நுழைந்தபோது துப்பாக்கிதாரிகள் அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரிவினைவாதத் தீவிரவாதிகள் தாமே இந்தத்தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.

800 விக்கெட்டைக் கைப்பற்றுவதுடன் கிரிக்கெட் வாழ்வை முடிக்கவுள்ளேன் முரளி கூறுகிறார்

muttiah.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவரது வருங்கால திட்டம் என்ன என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், மேற்கிந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறவிருக்கும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 800 விக்கெட்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.  ஆனால்,இவையெல்லாம் அப்படி நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் நான் எந்த வகையில் தேவையாக இருக்கிறேன் என்பது முக்கியமாகும். சுயநலத்துடன் செயற்பட நான் விரும்பவில்லை. நல்லபடியாக பந்து வீச முடியுமென்ற நிலை இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையெனில் மகிழ்ச்சியுடன் விடைபெறுவேன்.

ஏனெனில் எனக்கு பல்வேறு கவுண்டி அணிகளிலிருந்தும் சென்னையில் இருந்தும் விளையாட அழைப்பு வந்த வண்ணமுள்ளன. எனது உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் பந்து வீச எனது உடல் ஒத்துழைப்பது கடினம்.உடல் ஒத்துழைக்காவிட்டால் என்னை விளையாட நிர்ப்பந்திக்க மாட்டேன்.20 ஓவர் போட்டியில் எனது நாட்டுக்காக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதை சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன் என்றார்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமாக இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த அணிக்கும் எளிதான காரியமல்ல. 1997 ஆம் ஆண்டில் எங்கள் அணி நல்ல நிலையிலிருந்த போது கூட இந்தியாவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் டிரா தான் செய்தோம். இந்தியாவில் ஆடுவது என்பது எப்போதும் கடினமான விடயமாகும். தனது சொந்த மண்ணில் எப்படி ஆட வேண்டுமென்பது இந்திய அணியினருக்கு நன்கு தெரியும். இந்தியாவைப் போல் நாங்களும் எங்கள் சொந்த மண்ணில் பலமான அணியாகும் என்றார்.