உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“வெளிநாடுகளில் மிருகங்களின் நோய்க்கு கூட பயன்படுத்தாத கதிர்வீச்சு இயந்திரங்கள் மூலம் இலங்கையில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.” – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச !

நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கோபோல்ட் கதிர்வீச்சு வெளிநாடுகளில் மிருகங்களுக்கு கூட பயன்படுத்துவதில்லை. அதனால் காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும். லினியா எக்ஸலேட்டர் என்ற கதிர்வீச்சையே பயன்படுத்த வேண்டும். அதுவே தற்போதுள்ள நவீன உபகரணம். ஆனால், எமது நாட்டில்  கோபோல்ட் கதிர்வீச்சே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கதிர்வீச்சை வெளிநாடுகளில் மிருகங்களின் புற்றுநோய்க்கு கூட பயன்படுத்துவதில்லை.

அத்துடன், லினியா எக்ஸலேட்டர் கதிர்வீச்சு உபகரணம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் கராப்பிட்டிய ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனை பதுளை, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இரண்டாம் கட்டமாக இந்த உபகரணங்களை வழங்குவதற்கு 2 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் கோபோல்ட்  கதிர்வீச்சு சாதனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, ஒரு லினியா கதிர்வீச்சு இயந்திரத்தின் விலையில் பாதி செலவிடப்பட்டு, காலாவதியான, வெளிநாடுகளில் விலங்குகளுக்கு கூட பயன்படுத்தாத இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர். இந்த காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இந்தியாவில் இருந்து பெனசியா என்ற கதிர்வீச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றாலும், இந்த கதிர்வீச்சு இயந்திரம் இந்தியாவில் கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றார்.

“கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள்.” – நாடாளுமன்றில் எஸ்.சிறிதரன் !

“ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சட்டமா அதிபர் உட்பட உயர் அதிகாரிகளின் அழுத்தங்களினால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி டி.சரவணராஜா தனது குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீதிபதிக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் உட்பட கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கங்கள் பல இணைந்து கடந்த திங்கட்கிழமை எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதியிடம் வலியுறுத்தல் மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகத்துக்கு மிடுக்காக குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது. உள்ளக விசாரணையில் சரியான மற்றும் நியாயமான நீதி கிடைக்காத காரணத்தால்தான் சர்வதேச விசாரணையை தொடர்ந்து கோருகிறோம் என்பதை அரச தலைவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஜேர்மனிய நாட்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ‘நாங்கள் என்ன இரண்டாம் தரப்பினரா (செகன்ட் கிளாஸ்) என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆத்திரமடைந்து பதிலளிக்கிறார்.

சர்வதேச நாடுகளிடம் கையேந்தும்போது இந்த இரண்டாம் தரப்பினரா என்ற நிலை ஏன் தோன்றவில்லை. அதே போல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவற்கும், தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் உலக நாடுகளிடம் நிதி மற்றும் ஆயுதம் பெற கையேந்தும்போது இரண்டாம் தரப்பினரா என்ற எண்ணம் தோன்றவில்லையா?

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினை என்ன? பிரச்சினையின் ஆணி வேர் என்ன? என்பதை அரச தலைவர்கள் ஆராயாமல் இருக்கும் வரை இந்த நாடு எவ்வாறு முன்னேற்றமடையும். நாட்டின் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இலவச சுகாதாரத்துறையில் எதிர்காலம் தொடர்பில் அரச மருத்துவ சங்கத்தினர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசாங்கம்  எதிர்ப்பு அறிவிப்புக்களை மாத்திரம் வெளியிடுகிறதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை.

கொழும்பில் உள்ள கனடா, பிரித்தானியா உட்பட சகல தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் முன்பாக இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நாட்டுக்காவது செல்ல வேண்டும் என்பதே இளைஞர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் முஸ்லிம்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். குறிப்பாக, படித்த சமூகத்தினர் விரைவாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம், ஆசியாவின் ஆச்சரியம் என்று குறிப்பிட்டுக் கொண்டுவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை. மாறாக, இந்து ஆலயங்களை அழித்து அங்கு விகாரைகளை கட்டுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மனநிலையில் எவ்வாறு முன்னேற முடியும்?

நாட்டின் தொழிற்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஆடை தொழிற்சாலைகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பொருளாதார மீட்சி என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், நாட்டின் பொருளாதார நிபுணர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் இனவாத செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள். இனவாதத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டால் எவர் ஆதரவு வழங்குவார்?

இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து நீதியான தீர்வை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.

“இளைஞர் யுவதிகளுக்கு Wi-Fi இலவசமாக வழங்குவதாக கூறிவிட்டு ஊடக சுதந்திரத்தை முடக்குகிறார் ஜனாதிபதி ரணில்.” – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு !

“சர்வதேச  விசாரணையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.”என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளுக்காக ஆளும் தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புகழ்பாடுகிறார்கள். ஜனாதிபதிக்கும் எமக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித முரண்பாடும் கிடையாது.ஆனால் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்களின் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மக்களின் போராட்டத்தை தடுப்பதற்காக தற்போது நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கு வை-பை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமூக ஊடகங்களை முடக்குவதற்காக சட்டம் கொண்டு வர முயற்சிப்பது கவலைக்குரியது.

ஜேர்மனிய ஊடகத்துக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நேர்காணலில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயங்களை கொண்டு ஆளும் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளார்கள். நேர்காணலின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போல் கருத்துரைத்தார்.

ஜனநாயகத்தை முடக்கி,சர்வதேசத்தை  பகைத்துக் கொண்டு ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொதுஜன பெரமுனவினர் கடந்த ஆண்டு லி குவான்யூ , மாத்தீர் மொஹமட் ஆகியோர் என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை களமிறக்கி,நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ராஜபக்ஷர்கள் தலைமறைவாகி உயிரை பாதுகாத்துக் கொண்டார்கள். அடுத்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கி மீண்டும் பாடம் படித்துக் கொள்ள போகிறார்கள்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அரசாங்கம் உணர்வுபூர்மாக ஆராய்வதில்லை. எண்ணம் போல் விலையேற்றத்தை இலக்காக கொண்டுள்ளது. மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீண்டும் மின்கட்டணம் அதிகரித்தால் தென்னாசியாவில் அதிக மின்கட்டணம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

தற்போதைய மின்கட்டண அதிகரிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. பெறும் வருமானத்தில் மக்களால் எவ்வாறு வாழ முடியும். மக்களின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால் பாரிய எதிர்விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

இலங்கையில் அதிகரித்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை!

நாட்டின் 65 நகரங்களில் மாத்திரம் சுமார் 3,000 முதல் 4,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் கணக்கிடப்பட்டவர்களின் தரவுகள் விரைவில் சேகரிக்கப்பட்டு அவர்களில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களின் பற்றிய தகவல்கள் திரட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

24 மாநகர சபை பிரிவுகள் மற்றும் 41 நகர சபை பிரிவுகளில் நான்கு நாட்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

“முல்லைத்தீவு நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய பதவி விலகலுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.” – சரத்வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால், என்னை அந்த நேரத்திலேயே கைது செய்திருக்கலாம் என நாடாளுமன் உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

”2 ஆயிரம் வருடங்கள் பழைமையான எமது பௌத்த புராதானச் சின்னத்தில், பொங்கல் வைத்து வழிபட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு நீதிபதியுடன் பேசிய காரணத்தினால், நானும் எனது கருத்துக்களை முன்வைக்க நீதிபதியிடம் அனுமதி கேட்டிருந்தேன். எனினும், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.நான் முன்னாள் இராணுவ அதிகாரி என்பதாலும், எனக்கு சட்டங்கள் தெரியும் என்பதாலும், நீதிபதியொருவர் கருத்து வெளியிட மறுத்தமையால், நானும் அமைதியாகிவிட்டேன்.

நாடாளுமன்றிலும், குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த அனுமதியளித்தமை தவறு என்றும் இது இந்து- பௌத்த மக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றுதான் கூறியிருந்தேன். இதனை நான் இன்றும் கூறுவேன். இது எப்படி அச்சுறுத்தலாகும்?

 

அந்த சம்பவத்திற்குப் பின்னர் நான் குறித்த நீதிபதியை சந்திக்கக்கூட இல்லை. முல்லைத்தீவு, நீதிபதிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் 5 வழக்குகள் உள்ளன.இந்த வழக்குகள் தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழு ஊடாக தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சட்டமா அதிபரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவரது தீர்ப்பை மாற்றுமாறு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது தெரிவித்துள்ளது.

 

அப்படி அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தால், அவர் இதுதொடர்பாக பிடியாணையொன்ற பிறப்பித்திருக்கவும் முடியும்.

அவர் வெளிநாடு செல்வதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக, அவரது வாகனத்தை விற்பனை செய்து, வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரை அவர் சந்தித்துள்ளார். பொலிஸ் பாதுகாப்பும் அவருக்கு குறைக்கப்படவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவரது மனைவியோ, இவரால் தனக்கு தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாக நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையே அளித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸிலும், இதுதொடர்பாக அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார். இதில், குறித்த நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மனநல வைத்தியர்கள், இவருக்கு வைத்தியம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி கூறுவாராயின், யாரால் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும். ஜனாதிபதி, பொலிஸ் அமைச்சர் உள்ளிட்டோர், இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்ய குழுக்களை நியமித்துள்ளனர்.

 

இந்தக் குழுக்கள் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை செய்து, உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று நாமும் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் – நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைக் குழு நியமனம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணங்கள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாக ஆராய்ந்து நீதிமன்ற செயல்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை களைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதிச்சேவை ஆணைக்குழு, பிரதம நீதியரசரிடமும் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்”. – மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள்

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே பண்ணையாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ந்து  19வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும்,கால்நடை பண்ணையாளர்களின் நிலத்தை விட்டுவெளியேறுமாறும்,கால்நடை பண்ணையாளர்களை வாழவிடுமாறும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போராடிவரும் தம்மை கேலிக்குரியதாக எண்ணுவதாகவும் தீர்வினை வழங்கவேண்டியவர்கள் இவ்வாறு தம்மை கருதுவது கவலைக்குரியது எனவும் தமக்கான தீர்வினை சில தினங்களுக்குள் வழங்காவிட்டால் மாவட்டத்தில் பாரியளவிலான வீதி மறிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும்,   சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஆசிய கண்ட நாடுகள் மட்டும் ஏன் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீற்றம் !

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பிய வேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்.

நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள்  என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர் நான் அவ்வாறு செயற்படவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து பிரிட்டனில் பலர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் ஏன் நீங்கள் சனல் 4னை மாத்திரம் கருத்தில் கொள்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்உறுதியான வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தமைக்கு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்- சிஐடியின் முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஏன் அது பற்றி கேள்வி எழுப்பகூடாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்புகின்றது உங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் அதனை முதலில் என்னிடம் கேட்கவில்லை நான் கேள்வி எழுப்பிய பின்னரே கேட்கின்றீர்கள் நீங்கள் சனல் 4 அறிக்கை முற்றிலும் உண்மையான விடயம் என்பது போல என்னிடம் கேள்வி எழுப்பினீர்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியவோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளாத போது எதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் நாடாளுமன்றம் அதனை கேட்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“சுமந்திரனை போல வேறொருவர் நீதிமன்றத்தை மலினப்படுத்தியிருந்தால் கடூழிய சிறைதண்டனை தான்.” – நீதியமைச்சர் மற்றும் சுமந்திரன் இடையே வாக்குவாதம் !

சுமந்திரன் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியதைப் போன்று வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச,

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2020.10.20 ஆம் திகதி நாடாளுமன்ற உரை ஊடாக நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். உயர்நீதிமன்றம் பயனற்றது, உயர்நீதிமன்றத்தில் உள்ளவர்கள் வீடு செல்ல வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் கட்டளைப் பிறப்பித்ததாக இவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிமன்றத்தை மலினப்படுத்தினார்.

சுமந்திரனை போன்று நீதிமன்ற கட்டமைப்பை பிறிதொருவர் விமர்சிக்கவில்லை. பிறிதொருவர் விமர்சித்திருந்தால் இன்று அந்த நபர் கடூழிய சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இவரே நீதிமன்றத்தை மலினப்படுத்தினார் என்று சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், நான் குறிப்பிட்ட விடயத்துக்கு பொருத்தமற்ற வகையில் நீதியமைச்சர் உரையாற்றுகிறார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதியமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை. நான் நீதிமன்றத்தை விமர்சித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு நான் உரையாற்றவில்லை என்றார்.

“முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம்.” – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் !

“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பது  நீதிச் சேவை ஆணைக்குழுவுக்காகும்.“ என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் பாரியவிடயம். அதேபோன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பான பயங்கரவிடயமாகும். நீதிபதி வழங்கிய உத்தரவுகள் காரணமாக அவருக்கு மரண அச்சுறுத்தல் உட்பட பல்வேறு அழுத்தங்கள் தொடர்பாக மிகவும் பயங்கரமான அறிவிப்போன்றை அவர் விடுத்திருக்கிறார்.

அதனால் அவரின் அறிவிப்பு தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு  இதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வெளிநாடொன்றுக்கு சென்ற பின்னரே அவரிடமிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது. அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தான் பதவி விலகுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தம், அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் வெளிநாடொன்றுக்கு சென்று கடிதம் அனுப்பவேண்டியதில்லை.

அத்துடன் நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பு விடுக்கலாம், பிடியாணை கட்டளை விடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. அதேபோன்று குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தாவிட்டால் அதன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். ஏனெனில் நீதிவான் நீதிபதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம், நியமன அதிகாரம் என அனைத்தும் நிர்வகிக்கப்படுவது நீதிச்சேவை ஆணைக்குழுவினாலாகும். நீதிச்சேவை ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும்.

அதனால் முல்லைத்தீவு நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அந்த அதிகாரம் இருப்பது நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாத்திரமாகும்.

எனவே யாருக்காவது இது தொடர்பில் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து, அது தொடர்பில் பதில் ஒள்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவோ அதில் தலையிடவோ அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணைக்குழு தேவையெனில் அது தொடர்பில் விசாரணை நடத்தி பதில் ஒன்றை வழங்கும் என்றார்.