உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் மலையகத் தமிழ் பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “இலங்கையின் தமிழ் சமூக தலைவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம். தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி எனும் மூன்று முக்கியத்துவமிக்க அம்சங்களுடனான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலைய தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மலையகத் தமிழர்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலய நிர்மாணம், மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல முக்கிய முயற்சிகளுக்காக இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசா மீண்டும் தெரிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசா மீண்டும் தெரிவு!

கடந்த 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது . இந்த மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த சஜித் பிரேமதாஸ தலைமையில் 2020 இல் உருவாக்கப்பட்டதே ஐக்கிய மக்கள் சக்தியாகும். அவர் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி அவரால் வெற்றி பெற முடியவில்லை.

சஜித் பிரேமதாஸவை பொறுத்தவரை இலங்கை அரசியலில் தோல்வியடைந்த ஆளுமையற்ற தலைவராக காணப்படுகிறார். வெறுமனே தந்தையான பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தார் என்ற நெப்போரிஸத்தினூடாக அரசியலுக்குள் நுழைந்தவர். தெற்காசியாவின் சாபக்கேடான வாரிசு அரசியலின் விளைவுதான் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த அனைத்து சிங்கள தேசிய கட்சிகளிலும் காணக் கூடியதாக உள்ளது.

கடந்த இரு தேர்தல்களிலும் இலங்கை மக்கள் குடும்ப அரசியலுக்கு சாவு மணியடித்த போதும் மக்கள் ஆணையை கருத்தில் கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாஸவை மீண்டும் கட்சித் தலைவராக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரசியலில் முகவரி வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தியப் பிரதமர் மோடி சேடம் இழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒட்சிசன் கொடுப்பாரா? !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு வந்தடைந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். கொழும்பில் இந்திய சமூகத்தினரும் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக தமிழ் தேசியத் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பு சென்றுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது, தமிழ் தலைவர்களை தனித்தனியாக சந்திப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் குழுவாகவே சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இச்சந்திப்புக்காக கொழும்புவந்துள்ள செல்வம் அடைக்கலநாதனின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன் தேசம்நெற்றுக்கு நேற்றுத் தெரிவித்தார். தமிழ் தலைமைகள் இதுவரை இந்திய பிரதமருடன் என்ன பேசப்போகின்றோம் என்பது பற்றி கலந்துரையாடவில்லை என சாம் சம்பந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஆனாலும் சந்திப்பு நேரங்கள் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் தாங்கள் சந்திப்புக்கு முன்னதாக அங்கேயே இதுபற்றி கலந்துரையாடிய பின் சந்திப்போம் என சாம் சம்பந்தன் குறிப்பிடுகின்றார். மாகாண சபை வேண்டாம், இந்தியப் பிரதமர் இது பற்றி கதைக்காமல் இருப்பதே நல்லது எனக் கருதும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இச்சந்திப்பில் கலந்துகொள்வாரா அவர் என்னத்தை கேட்பார் பேசுவார் என்பது சுவாரஸியமான விடயமாக இருக்கும். ஏற்கனவே முன்னாள் பா உ எம் ஏ சுமந்திரன் இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம்கோரியுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மையப்படுத்தி மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளையும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதும் விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது. இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

சம்பூர் மின்னுற்பத்தி நிலையம் உட்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மகோ சந்தி ரெயில் பாதையையும் திறந்து வைக்க உள்ளார். இலங்கையின் கலாச்சாரத் தலைநகரமான அநுராதபுரத்தின் மாகா போதிக்கும் இந்தியப் பிரதமர் விஜயம் செய்ய உள்ளார்.

தமிழ்நாடு மாநில அரசின் ஆதரவைப் பெறுவதற்காவே கடந்த காலங்களில் இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கூடிய கவனம் எடுத்து வந்தது. அந்நிலை தற்போது முற்றாக மாறியுள்ளதை யாழ் ஈழநாடு பத்திரிகை அண்மைய ஆசியர் தலைப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது தமிழக மாநில் அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு நீர்த்துப்போன நிலையிலேயே உள்ளது. ஒரு பகுதி தமிழர்கள் பாலியல் காமுகனாகியுள்ள சீமானுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர். அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற அயலவர் திருவிழாவிற்குச் சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர்களாக இருந்து விட்டு நாடு திரும்பினர். முதல்வர் மு கா ஸ்டாலினை சந்திக்கவே முடியவில்லை.

இப்பேர்ப்பட்ட முகவரியற்ற அரசியல்வாதிகளாக தமிழ் தேசியவாதிகள் செயற்படுகின்றனர். முதலமைச்சர் மு கா ஸ்டாலினை அவருடைய மாநிலத்துக்குச் சென்றே சந்திக்க முடியாத தமிழ் தேசியத் தலைமைகள் தற்போது சேடம் இழுத்துக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியைச் சந்தித்து தங்களுக்கு ஒட்சிசன் ஏற்றுவதற்கு அவர்கள் கொழும்பில் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்குமிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளை ஓரம்கட்ட பிரதமர் மோடி ஈழத்தமிழர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஈழத்தமிழர்கள் இந்திய மத்திய அரசின் நலன்களுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தீவிர வலதுசாரிகளாக இருக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கு போதுமான அரசியல் அறிவு இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பாராதிய ஜனதாக் கட்சி புத்தரை கிருஸஷ்ண பகவானின் அவதாரங்களில் ஒன்றாகவே பார்க்கின்றது. இலங்கையில் உள்ள சிங்கள – தமிழ் மக்கள் பௌத்தர்களும் – இந்துக்களும் உறவுகள். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களுமே சர்ச்சைக்குரியவர்கள் கையாளப்பட வேண்டியவர்கள். இதனை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கலாநிதி அண்ணாமலை வவுனியாவில் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார். வலதுசாரித் தமிழ் தேசியத் தலைமைகளின் வங்குரோத்து அரசியலால் தமிழ் மக்கள் தங்களுக்குள் சாதி, மாதம், பிரதேசம் என்று பிரிந்துள்ளவர்கள் ஏனைய சமூகங்களுடன் மட்டுமல்ல தமிழகத்துடனும் முரண்பட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தவிர்த்து கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் கரங்களை இறுகப் பற்றி கரையேற வேண்டும் என ஜனாதிபதி அனுரவுக்கு மனோகணேசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமருடன் கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு கிழக்கு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாடுவார்களா என்பதும் அரசியலில் முக்கிய பேசுபொருளாக அமையும். வலதுசாரி தமிழ் தேசியத் தலைமைகளும் பிரதமர் மோடியைச் சந்தித்து வடக்கு கிழக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கடற்றொழில் அமைச்சரும் மோடியைச் சந்தித்தால் அது தமிழ் தேசிய கட்சிகளின் நிலையை கீழுறக்குவதாகவே கணிக்கப்படும். இந்தியப் பிரதமர் மோடியின் விஜயம் இலங்கை அரசியலிலும் பார்க்க ஈழத்தமிழர்களின் அரசியலிலேயே கூடிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

ஒட்டிசுட்டானில் பெண்ணுக்கு விழுந்த அடி அர்ச்சுனாவுக்கும் தமிழ்அடியானுக்கும் விழ வேண்டியது!

ஒட்டிசுட்டானில் பெண்ணுக்கு விழுந்த அடி அர்ச்சுனாவுக்கும் தமிழ்அடியானுக்கும் விழ வேண்டியது!

தமிழ்ப்பெண்களின் மீது அதிகரித்திருக்கிற வன்முறைகளின் உச்சகட்டம் ஒரு தமிழ் எம்பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணை “ விபச்சாரி “ என்று சொன்னதாகும்.

அந்த வெட்டகக்கேடான செயலை கண்டிக்காத மற்றைய தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் எம்பிக்களும் என ஒரு மரத்துப்போன சமூகமே வேடிக்கை பார்த்தது. போதாக்குறைக்கு பெண்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களை “ ஊழல் ஒழிப்பு அணி வன்னி “ என்ற பெயரில் பதிவிட்ட போதும் அதனை வரவேற்ற தமிழ்அடியான் என்ற ரஜீவன் ராமலிங்கம் போன்றவர்களுமே “ ஒட்டிசுட்டான் “ சம்பவத்திற்கு பொறுப்பானவர்களாவார்கள்.

பாராளுமன்றம் போய் விபச்சாரி என்று சொன்ன எம்பி அர்ச்சுனாவிடம் நியாயம் கேட்க சாளினியின் குடும்ப ஆண்கள் யாரும் முன்வந்திருந்தால் நிலமை என்னவாகியிருக்கும் யோசித்து பார்க்க வேண்டும்.மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய இரு பெண்களுக்கிடையிலான முரண்பாட்டில் , தனது மனைவிக்காக தலையீடு செய்த கணவன் , பொல்லுக்கட்டுடன் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். சண்டை சச்சரவுகளில் வார்த்தை தடிக்கும் போது மனிதர்கள் வார்த்தைகளை சிதற விடுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மைக்கு அப்பால் சட்டத்தை கையில் எடுக்கும் துணிவை யார் கொடுத்தது? . தாக்குதலை மேற்கொண்ட நபர் தன்னுடைய மனைவி இன்னாரா இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார். இப்படியான இழிச் செயலை செய்ய ஒரு நபரை தூண்டியது வேறு யாருமல்ல, இந்த சமூகம் தான். குறையறிவுடையவர்கள் சமூகத்தில் கொட்டும் அபத்தமான கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள் தான் இப்படியான பரிதாபமான சம்பவங்களை தோற்றுவிக்கின்றன.

சமீபத்தில் கூட ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஊடகவியலாளர் சங்கவியின் நடத்தை குறித்து அவதூறுகள் பரப்பியிருந்தது. சங்கவி மீதனா அந்த வசையை சங்கவியின் கணவர் பொதுவெளியில் வந்து சங்கவி உத்தமி , நான் அதை நம்புகிறேன் என உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்அடியான் என்றழைக்கப்படும் எம்பி அர்ச்சுனாவின் ஜால்ரா ரஜீவன் ராமலிங்கம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படியான பகுத்தறிவு அற்ற பெண்கள் விரோத “ஆண்மையை “கருத்தியல்கள் தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போய்யுள்ளன. இவை தணிக்கை குறைந்த சமூக வலைத்தளங்களினூடாக சமூகத்தில் மீள் வலியுறுத்தப்படுகின்றன. இந்த காலத்திற்கும் ஒவ்வாத காட்டுமிராண்டிக் கருத்துக்களால் கவரப்படும் ஒரு தமிழ்ச் சமூகம் வெடித்து வளர்ந்து வருகின்றது.

இவர்கள் வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளால் உந்தப்பட்டு காரியங்களில் இறங்குகிறார்கள். ஊடகவியலளர் சங்கவியின் கணவர் தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சமூகத்தில் ஒட்டிசுட்டான் சம்பவங்கள் நடக்கும். இலங்கையில் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இப்படி நடக்கிறது. பிரான்ஸ்சில் பாரிஸில் வைத்து , ரிக்ரொக் பெண்ணான சுஜி கூல்லை’ லாச்சப்பல் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க் காவாலிகள் கொஞ்சப் பேர் என கூடித் தாக்கியமை குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதல் வீடியோவுக்கு புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமை வெற்றி கொண்ட வெற்றிப்பாடலை பின்னணி இசையாக போட்டு சமூவ வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

“சுஜி கூல் “என்ற பெண் தாக்கப்பட்ட போது பாரிஸில் ஈழத்தமிழர்கள் எப்படி வேடிக்கை பார்த்தார்களோ அப்படியே ஒட்டிசுட்டானில் நடக்கின்றது. மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் பெண்ணுக்கு கூட வேலை செய்கிறவர்கள் உட்பட யாரும் உதவ முன்வரவில்லை. அடியின் கொடூரம் தாங்காது கதறும் பெண்ணிடம் மன்னிப்பு கேளடி என இன்னுமொரு பெண்மணியும் ஆணும் அறிவுறுத்துகிறார்கள். இன்னும் பலர் மறிப்பமா? வேண்டாமா ? என வாகனத்திற்குள் இருந்து கலந்துரையாடுகிறார்கள். வேறுயாரோ நபர்கள் நடப்பதை வீடியோ எடுக்கிறார்கள். வீடியோ காட்சியின்படி தாக்குதலில் ஈடுபடும் நபர் தனது மனைவி இன்னாரா? இன்னாரா?
கேட்டு அடிக்கிறார் .

அதாவது தமிழ் அடியான் ரஜீவன் ராமலிங்கம் ஆலோசனைப்படி தனது மனைவிக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார். இதேமாதிரியே பாரிஸில் தாக்கப்பட்ட சுஜி கூலிடம் ரிக்ரொக்கில் தமிழீழம் பிடிக்க புறப்பட்ட நபர் ஒருவர் என்னுடைய அம்மா இன்னாரா? இன்னாரா? என்று கேட்டு அடிக்கிறார்.

பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை கடும் கண்காணிப்புடன் பாதுகாக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிப்பவர்களே பிரான்ஸில் தமிழ்ப் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் மேற்கத்தைய சாராயத்தையும் , உணவையும் மற்றும் நவநாகரீக உடையையும் தான் கற்றுக் கொண்டுள்ளார்கள். மேற்கத்தைய நாடுகளின் முற்ப்போக்கு கருத்துக்களான பாலினச் சமத்துவம், சகோதரத்துவம், சாதியற்ற சமூகம் , பல்லினச் சமூக ஒழுங்கமைப்புக்கள் என எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிக்கவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை போருக்குப் பிந்திய ஈழத்தமிழர் வாழ்வியல் மாறிவிட்டது. இதனை ஊடகவியலாளர் மற்றும் சூழலியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் இவ்வாறு தனது முகநூலில் கருத்துப் பதிவிட்டுள்ளார். “ சட்டவிரோதிகளுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பும் செல்வாக்கும், அதனை தட்டிக்கேட்பவர்களுக்கு இன்மையே வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது “ என்கிறார்.


கடந்த வருடம் தமிழ்ச்செல்வன் ஏ9 வீதியில் வைத்து கறுப்பு வாகனத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்ட போதும் மக்கள் ஒட்டிசுட்டானில் நடந்தது போன்று வேடிக்கை பார்த்தனர் என வேதனையுடன் பதிவு செய்துள்ளார். சமூகத்தின் இந்த மனப்பாங்கு ஆபத்தானது. ஏன் ?இந்த சமூகப் பிரக்ஞை அற்ற மாற்றம். நீண்ட காலமாக வன்முறைகளை மட்டுமே பார்த்து வந்த சமூத்தில் “ வன்முறைகளுக்கு இசைவாக்கம்” அடைந்து விட்டார்களா? அல்லது யுத்தம் முடிந்தும் இராணுவ முற்றுகையில் ஆயுத முனையில் கண்காணிப்பில் அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையா? என கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

ஒட்டிசுட்டானில் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பெண்கள் மீதான வன்முறை எந்த வடிவமாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் மகளிர் விவகார அமைச்சு உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

வன்முறைக்கு பின்னான வாழ்க்கையை எதிர்கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவள ஆலோசனை மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒட்டிசுட்டான் பெண், ரிக்ரொக் சாளினி, ஊடகவியலாளர் சங்கவி போன்றோருக்கு உரிய உதவிகளை வழங்க பெண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள் முன்வர வேண்டும்.

ஒட்டிசுட்டான் பெண் பணியாற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இந்தவிடயத்தில் கண்டிக்கப்பட வேண்டும். தன்னுடைய நிறுவன ஊழியரை பாதுகாக்கத் தவறியுள்ளது. சம்பந்தப்பட்ட பிணக்கில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் மனைவி மீது விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான பெண் வேலைக்கு அணியும் சீருடையில் உள்ளார். அவர் பணியிலிருக்கும் போதே அவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனம் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத்தை வழங்க வேண்டும். வேலையிடங்களில் பணியாளர்களிடையே மனஸ்தாபங்கள் பிணக்குகள் வரும் போது மூன்றாம் நபர் பணியிடத்திலேயே தலையீடு செய்து சுமூகமாக தீர்க்கும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , காலாச்சார காவலர்கள் என சமூக ஊடகங்களில் வாயாடுபவர்கள் மற்றும் சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். ஒட்டிசுட்டானில் பொல் கொண்டு பெண்ணைத் தாக்கிய நபர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திலுள்ள பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஒட்டுசுட்டான் பெண் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பூச்சியம் சகிப்புத் தன்மை கூட கடைப்பிடிக்கப்படக் கூடாது. இந்த விடயத்தில் பரப்பப்படும் காணொளியில் பெண்ணின் தனிநபர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவருடைய ஆள் அடையாளம் மறைக்கப்படுதல் வேண்டும்.

விபச்சாரி மற்றும் பாலியல்த் தொழிலாளி என்ற முத்திரை குத்தல்களை எதிர்கொள்பவர்கள் அவமானம் அடையத் தேவையில்லை. இவ்வாறான பிரச்சினைகளை வன்முறையால் அல்ல அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் சமூக ஊடகங்களில் போராடுவது மட்டுமன்றி களத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

மாவட்டசபையை எதிர்த்த காலம் போய் உள்ளுராட்சித் தேர்தலில் நீயா? நானா? போட்டி !

மாவட்டசபையை எதிர்த்த காலம் போய் உள்ளுராட்சித் தேர்தலில் நீயா? நானா? போட்டி !

நாடு அனுரவோடு. யாழ்ப்பாணம் யாரோடு..?

மயில்வாகனம் சூரியசேகரம் சமூக அரசியல் செயற்பாட்டாளர்

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் !

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் !

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இந்த அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண மக்கள் அதிக அளவில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர் என்பதால், துரிதமான சேவைகளை வழங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தால் பொதுமக்களின் நேரம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படும். ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் சேராமல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஒரே அணியில் செயற்பட வேண்டும் !

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் சேராமல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக ஒரே அணியில் செயற்பட வேண்டும் !

இலங்கையின் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான தடையுத்தரவை பிரித்தானிய அரசு கொண்டுவருவதற்கு பின்னிருந்து செயற்பட்ட சென் கந்தையா

தவறு செய்யும் அரச ஊழியர்களின் வேலை பறிபோகும் எச்சரிக்கிறார் ஜனாதிபதி அநுர

தவறு செய்யும் அரச ஊழியர்களின் வேலை பறிபோகும் எச்சரிக்கிறார் ஜனாதிபதி அநுர

புத்தளை நகரில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தகாலங்களைப் போலன்றி லஞ்சம் கொடுக்காமல் மக்கள் அலுவல்களை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கப் பணத்தை திருடாத மற்றும் வீணாக்காத அரசாங்கம் ஒன்றை 76 ஆண்டுகளுக்குப் பின்னர் அமைத்துள்ளோம். முன்பு வீதி போடும் போது அமைச்சரின் வீட்டுக்குப் பணம் சென்றது. இனிமேல் அவ்வாறு நடக்க முடியாது. அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒரு சில அரச ஊழியர்கள் சிறு சிறு தவறுகள் செய்கிறார்கள் எனத் தகவல்கள் வருகின்றன. அப்படி செய்தால் கஷ்டப்பட்டு பெற்ற அரச வேலைகள் பறிபோகலாம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சுங்கத்துறையில் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அத்துறையிலிருந்து இன்னும் இரண்டு மூன்று பேர் வெளியேறலாம் என்றார். மேலும் ஜனாதிபதி அநுர அதேமாதிரி பொலிஸ் துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

பிரதமர் ஹரினி அமரசூரிய பிரான்ஸ்சில் சுற்றுப்பயணம்

பிரதமர் ஹரினி அமரசூரிய பிரான்ஸ்சில் சுற்றுப்பயணம்

ஏப்பிரல் 1 இல் பிரான்சில் நடைபெறவுள்ள யுனஸ்கோ சர்வதேச நிபுணர் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்கிறார். அவ் அமர்வில் இலங்கையின் புனித நகரான அநுராதபுரத்தின் பாரம்பரியம் , அதனுடைய வாழ்க்கை மற்றும் அதனைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறை என்ற தொனிப்பொருளில் உரையாற்றுகிறார். இவ் விஜயத்தின் போது பிரான்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்

யாழ்ப்பல்கலைக்கழகத்தின் தில்லுமுல்லுகளும் திருகுதாளங்களும்..

பல்கலைக்கழகங்கள் உயர்கல்வியான பட்டப்படிப்பை வழங்கும் உயரிய கல்வி நிறுவனம். அதுமட்டுமல்லாமல் ஆய்வுகளை மேற்கொண்டு சமூகத்தின் தேவைக்கான அறிவியல் வழிகாட்டலை வழங்குகிறது. அப்படியான ஒரு நிறுவனம் வினைத்திறனற்று சரியாக இயங்காவிடில் அது சமூகத்திற்கு பெரும் கேடாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் சமீப காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக புதிய புதிய சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மக்களின் வரிப்பணமான 16 கோடி 60 இலட்சத்தை பிணையாக கட்டி புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் சென்ற கல்வியாளர்கள் நாடும் திரும்பவில்லை மற்றும் கட்டிய பிணைப்பணமும் மீள வசூலிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
வழமையாகவே பல்கலைக்கழகங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு புலமைப் பரிசில் பெற்றுச் செல்லும் கல்வியாளர்களும் மற்றும் கல்வித்துறை சாரா பல்கலைக்கழக ஊழியர்களும் குறிப்பிட்ட செயல்த்திட்டங்கள் முடிந்த பின்னர் பணிக்கு திரும்ப வேண்டும். அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் செயல்த்திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் நாடு திரும்பி கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

இந்த விடயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் கணக்காளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கையின் படி 80 கல்விமான்களும் 21 கல்வித்துறை சாரா அலுவலர்களும் என 101 பேர் புலமைப் பரிசில் செயல்த்திட்டங்களின் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை நாடு திரும்பவும் இல்லை. கடமைகளைப் பொறுப்பேற்கவும் இல்லை. 1980 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் வெளிநாடு சென்று , நாடு திரும்பாது உள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களுக்கு செலுத்திய பிணைப்பணம் 16 கோடி 62 இலட்சத்து 98 ஆயிரத்து 684 ரூபாய் மீள அறவிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீளப்பெற யாழ்ப் பல்கலைக்கழகம் எந்த பிரயத்தனமும் செய்யவில்லை. மேலும் திரும்பப் பெறப்பட்ட 6 கோடி 17 இலட்சத்திற்கு அதிகமான பிணைப்பணம் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் கணக்காளர் நாயகம் கண்டுபிடித்துள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசமாக உயர்கல்வியை பெற்றுக் கொண்டவர்கள், நாட்டில் பணி புரியாமல் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்படியிருக்க அதே மக்களின் வரிப்பணத்தை பிணையாக வைத்து வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்பாலும் குறைந்தபட்சம் பிணைப் பணத்தையாவது திரும்ப செலுத்தாமலும் இருப்பது மோசடி. இவ்வாறான ஊழலுக்கு யாழ்ப் பல்கலைக்கழகம் துணை போய்யுள்ளமை வெட்கக்கேடானது.

  • பரீட்சை முடிவுகளில் தாமதம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அடுத்த திருகுதாளம் பரீட்சை முடிவுகள் மிகத் தாமதமாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

பொதுவாக பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்று மாதத்திற்குள்ளாக வெளியிடப்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2019 முதல் 2023 காலப்பகுதிகளில் மொத்தமாக 11 பீடங்களில் பரீட்சை முடிவுகளில் நான்கு மாதங்கள் தொடக்கம் 27 மாதங்கள் வரை தாமதிக்கப்பட்டே வெளியிடப்பட்டதாகவும் மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை கூறுகின்றது.

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் யாழ்ப்பல்கலைக்கழ நிர்வாகம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய காலம் கனிந்து வருகின்றது. பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்தி பெறுபேறுகளை அறிவிப்பதையே பல்கலைக்கழகங்கள் தமது தலையாய பணியாக செய்ய வேண்டும் . பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தனிப்பட்ட சுயநலன்களுக்கு மாணவர் சமூகத்தை பிழையாக வழி நடத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். பெரும்பாலும் யாழ் பல்கலைக்கழகம் தற்போது மூவின சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் இன்னும் பொறுப்புடன் நடுநிலமையுடன் செயற்பட வேண்டும்.

  • யாழ்ப்பல்கலைக்கழகத்தில் தொடரும் பகிடிவதை

1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறுவகையான வன்செயல்களையும் தடை செய்தல் சட்டத்தின் மூலம் பகிடிவதை செய்வதானது இலங்கையில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும், பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் எனவும் ஏற்பாடுகளை கொண்டுள்ளது.

பகிடிவதைக் குற்றத்திற்கு பிணை வழங்கப்படாது. அப்படியிருக்க யாழ்ப்பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர் ஒருவர் மீது சில சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதை என்ற சாட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான நாத்தாண்டியா மாணவர் கேட்கும் திறனை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்க்கும் மற்றும் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவ தினம் அன்று விரிவுரைக்கு சென்று கொண்டிருந்த சம்பந்தப்பட்ட மாணவரை சில சிரேஷ்ட மாணவர்கள் வழிமறித்து , மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனியார் மாணவர் தங்கும் விடுத்திக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து ஏனைய சில புதுமுக மாணவர்களையும் பகிடிவதை என்ற பெயரில் ஹெல்மெட்டாலும் மற்றும் பலவாறும் தாக்கியுள்ளனர். அப்போது நாத்தாண்டியாவைச் சேர்ந்த மாணவர் மயக்கமுற்று விழுந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மாணவனுக்கு வலி நிவாரணியான பனடோலைப் கொடுத்து வெளியோ போக விட்டுள்ளார்கள். கூகுள் வரைபட உதவியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியை அடைந்த நாத்தாண்டியா மாணவர் அம்புலன்ஸ்ஸில் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.. இவ்வாறு உடல் மற்றும் உளரீதியாக மோசமாக பாதிப்படைந்துள்ள தனது மகனுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு தந்தை நீதி கேட்டு பொலிஸ் சென்றுள்ளமை யாழ்ப் பல்கலைக்கழகம் எவ்வளவு தூரம் மாணவர்களுக்கு ஆபத்தானதாக மாறியியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.

யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமே வன்முறையை கையிலெடுக்கின்ற போது , அவரைப் போன்ற பேராசிரியர்களால் வழிநடத்தப்படும் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதில் ஆச்சரியம் இல்லை. சமீபத்தில் பேராசிரியர் சி . ரகுராம் கலைப்பீடத்தில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு அமைத்திருந்த கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் புதுமுகப் பெண் மாணவிகளை பகிடிவதையின் போது சிரேஷ்ட மாணவர்கள் தூசண வார்த்தைகள் கொண்டு வசைபாடுவது தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளன. ஆண்புதுமுக மாணவர்கள் உடலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் அறிந்ததே. அதேநேரம் பகிடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 இரண்டாம் வருட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விடயத்தில் யாழ்ப் பல்கலைக்கழகம் விசாரணைகளை செய்யும் என்றும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிரஜன் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்குப் யாழ்ப்பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பல்கலைக்கழகம் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கின்றது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் பாலியல் சுரண்டல், பாலியல் இலஞ்சம் , ஊழல் , வன்முறை , போதைப்பொருள் கலாச்சாரத்துடன் பகிடிவதையும் சேர்ந்து பல்கலைக்கழக பெருமையை உலகறியச் செய்துள்ளது. விவகாரம் மானியங்கள் ஆணைக்குழு வரை சென்றுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பில் தனியானவொரு சுயாதீனமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பல்கலைக்கழகம் கிளீன் செய்யப்பட வேண்டும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.