உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இன, மத விடயங்களை அடிப்படையாக கொண்டு நான் தேர்தல் பணிகளை நடத்துவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07) முற்பகல் நடைபெற்ற இலங்கையின் அப்போஸ்தலிக்க ஆயர் பதவிப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுதந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி கர்பி டி லெனரோல் ஆயர் தலைமையில் 160 மாணவர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இன, மத விடயங்களை அடிப்படையாக கொண்டு தாம் தேர்தல் பணிகளை நடத்துவதில்லை எனவும், மதத்தை எப்போதும் அரசாங்கத்திலிருந்து பிரித்து வைத்து, அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து மத மக்களும் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சுதந்திர அப்போஸ்தலிக்க மறைமாவட்ட ஆயர் பேரவையின் சிடொனின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி கிர்பி டி. லனரோல் அருட்தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த தசாப்தத்தில் அப்போஸ்தலிக்க ஆயர் பீடத்திற்கு அருட்தந்தை லனரோல் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார்.

நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார்.

இலங்கையில் கிறிஸ்தவ சமூகத்தின் வெற்றிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பல நூற்றாண்டுகளாக நாட்டில் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்டார்.

தமது மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அனைத்து மதத்தினருக்கும் சமமான வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மத நடைமுறைகளின் எதிர்காலம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் டிஜிட்டல் யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என இரண்டு முக்கிய சவால்களை சுட்டிக்காட்டினார்.

 

யொஹெதஸ் குட்டன்பேர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் போன்ற தொழில்நுட்பம் மத போதனைகளை பிரபலப்படுத்துவதில் வரலாற்று ரீதியாக முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், டிஜிட்டல் தளங்களின் எழுச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மதங்களுக்கு ஏற்படுத்தக் கூடிய புதிய சிக்கல்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

 

குறிப்பாக டிஜிட்டல் ஊடகங்களால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கு உளவியல் ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர்கள் தொடர்பான அண்மைக்கால பிரச்சினைகளுக்குரிய நிகழ்வுகளை எடுத்துரைத்துடன், இப்பிரச்சினைகளைத் தீர்க்க மத மற்றும் சமூகத் தலைவர்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.

எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயத்தை கருத்திற்கொண்டு செயற்படுவதே சிறந்ததெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மதப் பின்னணி எதுவாக இருந்தாலும் அனைத்து மக்களின் தேவைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பான தகவல்களை முன்வைத்தார்.

பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மக்கள் எந்தவித மத, இன பாகுபாடும் இன்றி இன்னல்களை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டினார். இக்கட்டான நேரத்தில் பொறுப்பேற்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராட்டிய சாகல ரத்நாயக்க, அவரது அமைதியான மற்றும் நம்பகமான தலைமைத்துவத்தையம் பாராட்டினார்.

மத்திய வங்கியின் சுதந்திரம், புதிய அரச நிதி முகாமைத்துவ சட்டங்கள் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலங்களை நிறைவேற்றியமை போன்ற குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புகள் பற்றி குறிப்பிடப்பட்ட சாகல ரத்நாயக்க, நாட்டை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்டார்

பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர். – அருட்தந்தை மா.சக்திவேல்

தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கட்சியினரும் அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர்.

சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நேரடி விவாதத்தில் பங்குகொள்ள ஆர்வம் காட்டாத ஜனாதிபதி வேட்பாளர்கள் !

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிகின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபற்கும் நேரடி விவாதம் இன்று நடைபெற்றிருந்தது. இருப்பினும் விவாதத்தில் ஒரு வேட்பாளர் மட்டுமே கலந்து கொண்டார்.

மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, மற்றும் நாமல் ராஜபக்ஷ, பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் திலித் ஜயவீர மாத்திரமே இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் இன்றைய விவாதத்தில் 16 வேட்பாளர்கள் மாத்திரமே பங்கேற்பதாக உறுதியளித்திருந்தபோதும் இன்று ஒருவர் மட்டுமே கலந்து கொண்டதுடன் நாளையதினமும் நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு !

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை வண்ணாத்தியாறு பகுதியின் காட்டுப் பகுதியில் இயற்கை வளங்களை அழித்து சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறும் இடமொன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலிருந்து மணல் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகக் கிடைத்த தகவல்களுக்கு அமைவாகயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூப்பிற்கும் அதிகமான மணல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“விக்னேஸ்வரன் கூறுவதைத் தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்” – அனுர குமார திசாநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்  சொல்வதைத் தமிழர்களே கேட்பதில்லை. நான் அவரையெல்லாம் கண்டுகொள்வேனா என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அநுரகுமார திசாநாயக்க ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், ‘அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவானால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெறமுடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும்.ஏற்கனவே நாடு சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள்’ என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடியாகவே, “விக்னேஸ்வரன் கூறுவதைத் தமிழர்களே பொருட்படுத்துவதில்லை. நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்” என்று அநுர தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகில் எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அரசுகள் இன்னொரு அரசுகளுக்குத்தான் ஆதரவை வழங்குகின்றன. தனி நபருக்கு அல்ல. ஆதலால், இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் இந்தியாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன்.

சீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய விடயங்களில் நான் சீனாவுடன் நெருக்கமாகவே பணியாற்றுவேன் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தமக்கு ஆடம்பரமான வாகனம் வேண்டும் என்று அயல்நாட்டுக்கு கடிதம் எழுதிய தமிழ்தேசிய குழுவினர் தான் சஜித் பிரேமதாசவுடன் நிற்கிறார்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நாடாளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை முன்வைத்திருந்தார்.

அது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்தபோது குறித்த பிரேரணையை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.

இவ்வாறான நிலையில் இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த இந்த ஒத்திவைப்பு சிலவேளை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதான அறிவிப்பு வெளியாகியமை தாக்கத்தை செலுத்தி இருக்கலாம்.

ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மாகாண சபை தொடர்பான விவாதம் சிலருக்கு தேவையாக இருக்கலாம் மற்றொரு தரப்பினர் அதை விரும்பாமல் இருக்கலாம்.

இருந்தாலும் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என தெரிந்தும் அதற்கு முன்னரே சஜித் பிரேமதாசவின் ஆதரவு அறிவிப்பை சுமந்திரன் வெளிப்படுத்தி விட்டார்.

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வரும் நிலையில் பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும் நிலையில் தமிழ் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது.

13 வது திருத்தம் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஆரம்ப புள்ளி என அன்றிலிருந்து அதே நிலைப்பாட்டையே கூறி வருகிறேன்.

ஆனால் தமிழ் மக்களை ஏகப்பிரதிநிதிகள் என கூறுவோர் 13-ஐ தும்புக்கட்டையாலும் தொட்டுப் பாக்க மாட்டோம் என கூறிவிட்டு கடந்த மாகாண சபையில் தமிழ் இனத்தை பெற்று தர போகிறோம் என மக்களை உசிப்பேற்றி வாக்குகளை பெற்றார்கள்.

இறுதியில் மாகாண சபையை நடத்த முடியாமல் கட்சி ரீதியாகப் பிரிந்து நின்று சண்டை பிடித்ததும் தமக்கு ஆடம்பர வாகனம் வேண்டும் என அயல்நாடு ஒன்றுக்கு கடிதம் அனுப்பியதுமே நடந்தது.

சக தமிழ் காட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க விடாது தமது அரசியல் இருப்பு கலை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்துக்கு காலம் மக்களை உசுப்பேத்தி அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்கள்.

இனியும் அவர்களின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ஏனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பதில்களை மக்கள் தமது வாக்குகளால் வழங்கியுள்ளார்கள்.

எனது அரசியல் பயணம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது இலக்கு.

ஆகவே தமிழ் மக்கள் தமக்கான ஜனாதிபதியை தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி சிறந்த ஒரு முடிவை எடுப்பார்கள் என நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் – தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

நமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

 

திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து கொண்ட பின்னர் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

 

இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் தமக்கான பெரும்பான்மை ஆதரவினை வழங்கியிருப்பதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.

 

மேலும் நாட்டின் பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் வலியுறுத்தியிருந்தார்.

உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நான்கு இராஜாங்க அமைச்சர்கள் !

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் தேர்தல் முறைக்கேடுகள் – 2000ஐ தாண்டியது குற்றங்கள்!

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (04 ஆம் திகதி பி.ப 4.30 வரை) தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி தொடக்கம் 04 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,227 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு ரிஷார்ட் பதியூதீனை அழைத்து சென்று பிரச்சாரம் செய்யும் சஜித் பிரேமதாச தென்னிலங்கைக்கு அவரை அழைத்து செல்ல மாட்டார்.” – அனுர குமார திசாநாயக்க

“நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டிவரமாட்டார்.

ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். எனினும் அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை வேட அரசியல். கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம்.

பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும். இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை.

போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே.

அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். ரணில் கடைசி நேரத்தில் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.