உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் – ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர

செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசியல் பேரணிகளைப் பார்த்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என சர்ஜவஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று (11) காலை சர்வஜன அதிகார அமைப்பின் பல ஆசன அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வௌியிட்ட சர்வஜன அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர,

“மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததைப் போன்று எங்களுடைய செலவினங்களை கட்டுப்படுத்தி இயன்றளவு பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் மக்களை ஈர்ப்பதற்காக பஸ்ஸில் மக்களை ஏற்றிசெல்லவோ, ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தவோ இல்லை. கூட்டங்களுக்கு வரும் அனைவருமே அந்த வேட்பாளருக்குதான் வாக்களிப்பார்கள் என்று யாராவது நினைப்பார்களாயின் அது முற்றிலும் தவறு. இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே மக்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் நாடு முழுவதும் செல்கின்றனர். எனவேதான் நான் சொல்கிறேன் இந்த கூட்டத்தை வைத்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்காதீர்கள். இறுதி ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. மக்கள் வாக்குப் பெட்டிக்கு அருகே சென்று தங்களது மனசாட்சிக்கு ஏற்ப புத்திசாலித்தனமான முடிவை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

புத்தசாசனத்தை பாதுகாத்து சுபிட்சமான நாட்டிற்குள் அறநெறிப் பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அறநெறி பாடசாலைகளின் போட்டிகளுக்கேனும் அனுசரணையை வழங்க முடியாத அரசாங்கம் ஒன்று காணப்படுகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பதோடு அறநெறி கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விகாரைகளில் மகா சங்கத்தினர் முன்னெடுக்கின்ற மத சாசன செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் காணப்படுகின்ற ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மிகப்பெரிய பலமாக கொண்டு, வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாடு மூன்று பீடங்களையும் சேர்ந்த சங்கைக்குரிய மகா சங்கத்தினர் தலைமையிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடனும் இன்று (11) கொழும்பில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

மூன்று பீடங்களையும் சேர்ந்த பெருந்திரளான சங்கைக்குரிய மகா சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர். இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிராமங்களிலும் நகரங்களிலும் அமையப் பெற்றுள்ள விகாரைகளிலே இருக்கின்ற மகா சங்கத்தினர் எமது நாட்டின் சமாதானம், சுபீட்சம், அபிவிருத்தி போன்றவற்றிற்காகவும், சிறந்த தார்மீக சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை முன்னெடுக்கின்றனர்.

மகா சங்கத்தினருதும் ஏனைய மதத் தலைவர்களினும் ஆலோசனைகளினதும் அறிவுரைகளினதும் ஊடாக அரசாட்சி ஒன்று இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று எமது நாடு பலவிதமான சவால்களை எதிர்கொள்கின்றது. கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயலிழந்து மக்களுடைய வாழ்க்கை தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாட்டிற்கான சவால்கள் வருகின்ற போது வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினரே ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் தேவை மிகவும் முக்கியமாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் எமது நாட்டில் மனிதப் பண்புகள் குறைவடைந்து வருகின்றன. மத தலைமைத்துவங்களின் ஊடாக சிறந்த சமூகத்துக்குள் பிரவேசித்து வீழ்ச்சி அடைந்த நாட்டை அறநெறித் தன்மையுடன் சிறந்த பண்புகளின் பக்கம் விட்டுச் செல்ல வேண்டும்.

அறநெறி கல்வியை மையப்படுத்திய சிறந்த சமூகக் கட்டமைப்புக்கான அடித்தளம் இடப்பட வேண்டும்.

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட கல்வியை வழங்குகின்ற நிலையமாக மத ஸ்தலங்கள் மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு விகாரை கட்டமைப்புக்குள் நாட்டிற்கான சிறந்த விடயங்கள் இடம் பெறுவது மழுங்கடிக்கப்பட்டு, மத ஸ்தானங்கள் மூடப்படுகின்றமையினால் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை !

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது.

 

இந்நிலையில் இது தொடர்பில் ‘சுரகிமு தருவன்’ தேசிய இயக்கம் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

 

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருந்து கொள்வனவில் ஊழல் மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கெஹலியரம்புக்வெலவுக்கு பிணை !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

 

அதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 7 மாதங்களின் பின்னர் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வாகன விபத்தில் 17 வயது பாடசாலை மாணவி பலி – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் டிப்பர் வாகனம் மோதுண்டதில் நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த மாணவி தனியார் வகுப்பொன்றிற்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் 184 தமிழர்கள் படுகொலை நினைவேந்தல் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மகஜர் !

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

முன்னதாக படுகொலை ஞாபகார்த்த தூபியானது புனரமைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரியினால் திறந்துவைக்கப்பட்டது.

 

படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

 

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இந்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை.

 

இது தொடர்பில் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பும் வகையில் அருட்தந்தை க.ஜெகதாஸிடம் வழங்கப்பட்டது.

 

குறித்த நினைவுத்தூபியில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அங்குவந்த பொலிஸார் நினைவுக்கல்லை உடைத்தெறிந்து அங்கு பணியிலீடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய நிலையில் நேற்றையதினம் நினைவேந்தல் நடைபெற்றது.

இன்று முதல் பெருதோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளம் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

பெருதோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளத்தை இன்று முதல் வழங்க கம்பனிகள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டாயமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு நன்றி.

”முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்படும். மிகுதி 350 ரூபா பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன் – ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

எமது அரசாங்கத்தில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் முன்னேற்றம் அடையும். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

 

கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளை கண்டது தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது அரசாங்கத்தில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் என்பன முன்னேற்றம் அடையும் இங்குள்ள விவசாயம் மீன்பிடி கைத்தொழில் என்பனவற்றிற்கு ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 

எங்களுக்குத் தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும் என்பதே இங்குள்ள இளைஞர்களுக்கு பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

 

இங்குள்ள அரசியல்வாதிகள் இன மத ரீதியான பணிகளே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தினை பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

 

இலங்கையிலுள்ள கலாச்சாரங்களை இங்குள்ள இளைஞர் யுவதிகளைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும். என உறுதி என உறுதி கூறுகின்றேன்.

 

வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப் படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும் கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தை கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இனவாதம் மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினை உடைய அரசியலை நான் முன்னெடுப் பதில்லை நான் முடியுமா னவற்றை மட்டுமே கூறுவேன்.

 

இங்குள்ள உங்களுடைய திறமைகளை பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம் விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன். இது சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் உங்களிடம் வேண்டுகிறேன் . சிந்தனையுடைய இளைஞர்களை உங்களது எதிர்காலத்தை திட்டமிட அழைப்பு விடுக்கிறேன். என அவரது மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி அமைப்பாளர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச் சுதந்திரம் பேணப்படும்” – அனுரகுமார திசாநாயக்க

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச் சுதந்திரம் பேணப்படும்” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளை நகரில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்கள் இன்று பிரசார மேடைகளில் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்திவருகின்றனர்.

 

எனது வெற்றி, நாட்டு மக்களின் வெற்றியாகும். தேசிய மக்கள் சக்தியினால் நூற்றுக்கு 3 வீத வாக்குகளை மாத்திரமே பெறமுடியும் என எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

 

ஆனால் தற்போது அவ்வாறு அவர்கள் கூறுவதில்லை. தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் அசம்பாவிதங்கள் இடம்பெறும் என கூறிவருகின்றனர். அதாவது தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பதை எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் நன்கு அறிவார்கள் அதனாலேயே சமூகத்தில் போலி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

 

நாம் எதிர்வரும் 22 ஆம் திகதி நிச்சயமாக வெற்றிபெறுவோம். போலி விமர்சனங்களை கண்டு நாம் அச்சமடைய போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில மத்திய வங்கி கொள்ளையர்கள் பயப்பட வேண்டும்.

 

கலாசார நிதியத்தில் நிதிமோசடியில் ஈடுபட்டவர்கள் பயப்பட வேண்டும். வீடமைப்பு நிதியத்தில் கொள்ளையடித்தவர்கள் பயப்பட வேண்டும். அதனைவிடுத்து இந்த நாட்டின் அப்பாவி பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.

 

நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் நிறைந்த யுகம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். தேர்தலில் நாம் வெற்றிபெற்று இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்போம்.

 

அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளமாட்டோம்.நாட்டில் நடைமுறையில் உள்ள ஊழல்அரசியல் கலாசாரத்தினை நாம் முற்றாக மாற்றுவோம். ஏனைய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தேர்தல் வெற்றியையும் நாம் கொண்டாடுவோம்.

 

ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள மக்களிடம் நாம் ஒருகோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

 

ஜனநாயகஉரிமைப்படி வாக்களிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் நாட்டில் புதிதொரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் தேசிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

 

எமது ஆட்சியில் நாம் யாரையும் கைவிட மாட்டோம் மக்கள் யுகம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும்.

 

யாழில் நான் தெரிவித்த கருத்தினை இனவாத செயற்பாடாக ரணில்விக்ரமசிங்க திரிபுபடுத்தினார். ஆனால் அதற்கு சுமந்திரன் தகுந்த பதிலடி வழங்கினார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன மத சுதந்திரம் பேணப்படுவதுடன் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிப்போம்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார்துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் – அனுர குமார திசாநாயக்க

தனியார்துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாக, அதன் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கமொன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,
ஒய்வுபெற்ற பலர் அவலம் நிறைந்த துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.
நாட்டின் உற்பத்திக்கு தனியார் துறையினர் பெரும் பங்களிப்புச் செய்கின்றனர். ஒவ்வொருவரும் இத்தனை வயது வரைதான் வேலை செய்யவேண்டும் என்றொரு விடயம் உள்ளது. ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும். எனவே, தனியார் துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்று எங்களிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.