உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது..? வெளியானது தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

வவுனியாவிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம்மிக்க உயர்மட்ட கலந்துரையாடலையடுத்தே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

 

இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.

 

அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும்.

 

முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபீ தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் இடம்பெற்றன.

 

தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும்.

 

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயற்படுதல் வேண்டும்.

 

13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

 

2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது. ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும்.

 

சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம்.

 

ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும்,

சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம்.

 

2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார். ‘எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்’ என்பதையும் குறிப்பிட்டார்.

 

‘இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். ‘ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.’ தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.’

இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம். ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.

 

எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் ” எனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொது வேட்பாளர் எனும் மாயமானை நம்பி ஏமாறாதீர்கள் – சஜித் பிரேமதாச மேடையில் சுமந்திரன்!

தமிழ் பொது வேட்பாளர் எனும் மாயமானை நம்பி ஏமாறாதீர்கள் – சஜித் பிரேமதாச மேடையில் சுமந்திரன்

 

வெற்றி பெற்று 50 நாட்களுக்குள் 150 பாராளுமன்ற உறுப்பினர்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அனுர குமார திசாநாயக்க

தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற வேண்டியவர்கள் எனவும், தான் வெற்றிபெற்று ஒன்றரை மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

பன்னல பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

“ரணில் விக்கிரமசிங்க எவ்வளவு சொன்னாலும், சஜித் பிரேமதாச எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை. எமது பயணத்தை இனி தோற்கடிக்க முடியாது. ரணில் சஜித், நீங்கள் அறிய மிகவும் தாமதமாகிவிட்டீர்கள். விரைவில் பாராளுமன்றத்தை கலைப்போம். இந்த பாராளுமன்றத்தில் அநாகரீகமாக அலறல். கொலை செய்து சிறை சென்ற குற்றவாளிகள், கப்பம் வாங்கி சிறை சென்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

 

இப்படிப்பட்ட பாராளுமன்றம் தேவையா? இன்னும் ஒன்றரை மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. இந்த பாராளுமன்றத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.” என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் – PAFFREL

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1300-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

இவற்றில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 62 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் 19 தாக்குதல் சம்பவங்களும் அலுவலகங்கள் மீதான 27 தாக்குதல் சம்பவங்களும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக கூறியுள்ள ரோஹண ஹெட்டியாரச்சி, இந்த காலப்பகுதியில் அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அத்துடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் 150-இற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழர் தேசமாய் ஒன்றுபடுவோம் – யாழ் பல்கலை சமூகம் அழைப்பு !

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

 

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

 

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

 

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன.

 

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது.

அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

 

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

 

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம் !

 

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

 

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

 

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

 

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் !

 

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

 

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கமாட்டேன் என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இருக்கவில்லை. அது பலவந்தமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். அதனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் என்பன நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த ஒப்பந்தம் அமுலாக்கப்பட்ட விதத்தை நானும் அனுமதிக்கவில்லை. ஒப்பந்தம் வந்தபோது நான் இராணுவத்தில் இருந்தேன். ஒப்பந்தம் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை ஏற்க முடியாது.

13 வழங்கப்படும் எனச் சஜித் கூறுகின்றார். அதேபோல் ஐக்கியமான நாடு பற்றி சஜித் மற்றும் அநுர ஆகியோர் கதைக்கின்றனர். ஆனால், ஒற்றையாட்சி எனும் நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

நான் ஜனாதிபதியாகும் பட்சத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்.

ஆனால், 13 ஐ விடவும் அதிகாரங்களைப் பகிர்ந்து மக்கள் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் வரை மேற்படி அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ !

ஜனாதிபதி தேர்தல் அன்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம்  நாவாந்துறையில் இன்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தியும் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி செல்லும் போது வடக்கு பின்தங்கிவிடும் எனவும் வடக்கின் அரசியல் பிரச்சினைகளை மட்டுமன்றி அபிவிருத்தி பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை தான் அச்சுறுத்தியதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்கவை  சுமந்திரன்  பாதுகாத்தாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அநுர, சஜித் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர். அவ்வாறு செய்தால் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது . வாழ்க்கை செலவை குறைப்பதே எமது முதலவாது குறிக்கோள்.அஸ்வெசும நிகழ்ச்சி திட்டம்.உர மானியம். வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் சம்பளத்தை அதிகரிக்க முடியும். வரியையும் குறைக்க வழிசெய்ய முடியும்.

அநுர, சஜித் ஆகிய இரண்டு வேட்பாளர்களும் வரியை குறைக்க வேண்டும் என கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் மேலும் பல பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்கள். சலுகைகளை வழங்க வேண்டும். முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும். தனியார் துறையிலும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம்.சுய தொழில் முயற்சியாளருக்கு வட்டியில்லா கடன்களை வழங்க வேண்டும்.

காங்கேசன்துறை பிரதேசத்தில் முதலாவது முதலீட்டு வலயம் உருவாக்கப்படவுள்ளது. தொடர்நது பரந்தன், மாங்குளத்தில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படும். பூநகரி பிரதேசத்தில் சூரிய மின்சக்தி திட்டம் உருவாக்கப்படும். சஜித், அநுரவிடம் தீர்வுகள் இல்லை. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொரும் எதிர்வரும் 21ஆம் திகதி அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இன்று (14) நெல்லியடியில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) நீங்கள் வெகுவாக வாக்களித்தால் அதற்கு மதிப்புண்டு மாண்புண்டு. அதை வைத்து தமிழ் மக்களின் அடையாளமாக காட்டி எமக்கு நடந்து வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்கு கூறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எமக்கு இழைக்கும் இன்னல்களை தடுக்கலாம். இவர் இத்தனை இலட்சம் வாக்குகளைப் பெறறவர் என அடையாளம் காட்டக் கூடியதாக இருக்கும்.

பெரும்பான்மை அரசியல் வாதிகளை ஆதரிப்பது தமிழ் பேசும் அரசியல் வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மையினைத தரும் ஆனால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.

சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென தொடங்கிய பகிஷ்கரிப்பாளர்கள் இப்போது தமிழ் பொது வேட்பாளரையும் பகிஷ்கரிக்க சொல்கின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி இனவாத கட்சியா..? தமிழ் – முஸ்லீம் மக்களின் நிலைப்பாடு என்ன..? ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

ஜே.வி.பி இனவாத கட்சியா..? தமிழ் – முஸ்லீம் மக்களின் நிலைப்பாடு என்ன..? ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 பிரச்சாரங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜே.வி.பி கட்சி பற்றிய இலங்கை சிறுபான்மை மக்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது..? இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வாளர் பஷீர் செய்யத் அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!