உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அரச வாகனங்களை காலம் தாண்டி பயன்படுத்தி வரும் மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 ​​அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும். – விக்கினேஸ்வரன் எச்சரிக்கை!

“பெரும்பான்மை சிங்களவர்கள் வாழும் இலங்கையில் ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.” என சி.வி.விக்கினேஸ்வரன் தெவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்ததாவது,

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக அந்த காலத்திலே இருந்து ஜேவிபி செயற்பட்டது. ஆனால் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் வாக்கு கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா சில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த முயல்கின்றனர். ஆனாலும் அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லலை என்றவாறாக கூறியிருக்கிறார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறன கருத்துக்களை கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகிறது போல உள்ளது.

 

இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும் இப்போது இருக்கும் 13 ஆவதையும் நாங்கள் இதற்காக பறிகொடுத்துவிட்டு ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.ஏனெனில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்க கூடியதாகத் தான் அமையும். ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். சிர்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாக கூறுகின்றோம்.

 

இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதை பார்க்கிறோம். அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை.ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதார பிரச்சனை தான் எங்களுக்கு இருக்கு என்று சில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.அதுவும் பொருளாதார பிரச்சனை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபடுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

 

வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிலே அதிக இரானுவர்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூக பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம். இவற்றையெல்லாம் பற்றி குளிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களை செய்வதால் பிரச்சனை தீரும் என அவர் நினைத்தாரானால் அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.

 

வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ் மொழியை பாவித்து அவர்களுக்கென்று வாழ்வு முறையொன்று அமைத்து இருக்கிறார்கள். அதனை உப்போதும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இல்லாமல் படுத்தும் விதத்தில் பொருளாதார ரீதியான தேவை என்று கூறுவது மனவருத்தத்திற்குரியது. அதனை நீங்கள் கண்டி்க்கிறோம்.மேலும் முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து என்பது தெற்கில் பொருந்தினாலும் வடகிழக்கிலே எங்களுக்கு பொருந்தாது. உண்மையில் இளையவர்கள் அனுபவசாலிகளாகவும் இருக்க முடியும். ஆனாலும் ரணில் அவர்கள் அனுபவசாலிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென கூறுவதற்கு காரம் இருக்கலாம்.

 

அதாவது அனுபவம் இல்லாமல் சில புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த நாட்டிற்கு அந்த விடயம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்துமென்று கருதலாம். ஆனால், வடகிழக்கு மாகாணங்களிலே இது சம்பந்தமாக அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் மத்தியிலே தான் இருக்கின்றது.

 

ஆகவே எங்களுக்கு தேவையானவர்கள் வந்து மக்களுக்காக ஓடியாடி சில சில நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க கூடியதாகவும் பல இடங்களிலும் சென்று மக்களுக்கு எதனை எடுத்துக் கொடுக்க முடியும் என்று ஆராயந்து நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் தான் தேவை. ஆகவே அந்த விதத்தில் வடகிழக்கு மமாகாணங்களில் இளைஞர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென மக்களைப் பொறுத்தவரையில் நினைக்கின்றனர்.

 

மேலும், மத்தியில் இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் சம்பந்தமான நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அவர் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பாராளுமன்றத்திலே நாங்கள் இவ்வாறான வயது சென்றவர்களை கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஏனென்றால் அதிகாரம் எங்கள் கைவசம் இல்லாத நிலை உள்ளது. ஆகையினால் அவர் கூறுவது தெற்கிற்கு பொருந்தும் எனினும் வடகிழக்கு மாகாணத்திற்கு பொருந்தாது என்று தான் நான் அவதானிக்கிறேன் என்றார்.

அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் – செல்வம் அடைக்கலநாதன்

அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 

இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

 

அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ‘ஒருவன்’ பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது,

 

”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

 

புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது.

 

வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும்.

 

13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது.

 

இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார்.

கிளிநொச்சியில் கட்டுப்பாடற்ற வகையில் தொடரும் மண் அகழ்வு – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பொலிஸார்!

கிளிநொச்சி – கிளாலியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.குலரட்ண தலைமையில் குறித்த 14டிப்பர் மணலையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன்பாக நடைபெற்ற கொலை – ஜனாதிபதியிடம் தீர்வினை கோரும் உறவினர்கள்!

2021 ஆம் ஆண்டு 06மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்திரம் என்பவர் உயிரிழந்திருந்தார்.

 

இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

 

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை அழிக்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் புதிய ஜனாதிபதி தலையிட்டு தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை, தாயார், சகோதரி ஆகியோர் நேற்றையதினம்(17) மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்கள்.

 

குறித்த சம்பவத்தின்போது தமது சகோதரன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே அவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்தால் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்த இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக்கொண்டு சாட்சியங்கள் மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணைக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன !

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது – அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள்

 

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பிவித்துரு ஹெல உறுமய தலைவர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். சிஐடியினர் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஷானி அபயசேகர மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் எங்களிற்கு எந்த பிரச்சினையுமில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவு குறித்து பெருமளவு அறிக்கைகள் வெளியாகியுள்ளன, சிஐடியினர் இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கட்டும், அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 16 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

வெற்றி பெறவேண்டும் என்று செயற்படும் அமைப்பு அல்ல தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்கின்றோம் இந்த தீவில் உள்ள இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் சிங்கள தேசம் அங்கிகரிக்கப்பட்டு தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையால் மிகமோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

 

சிங்கள தேசம் தங்களின் பெரும்பான்மையினை வைத்துக் கொண்டு தமிழர் தேசத்தில் இருக்கின்ற நிலப்பரப்பினை ஆக்கிரமித்து அதனை திட்டமிட்ட சிங்கள மயமாக்கலினைத்தான் கடந்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் செய்து வருகின்றது.

எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதுதான் எங்கள் இலக்காக இருந்தாலும், இன்று மிகப்பெரிய ஆபத்து நடக்க இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கக்கூடிய ரில்வின் சில்வா நேற்று ஒரு கூட்டத்தில் சொல்லியுள்ளர் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் அவசியம் இல்லை அது தமிழ்மக்களின் கோரிக்கையாகவும் இல்லை என்றும் சொல்லியுள்ளார்.

அதற்கான அடிப்படை ஒன்று இருக்கின்றது கடந்த ஐனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு புதியஅரசியல் அமைப்பு ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற கருத்தினை வெளிப்படுத்தி இருந்தாலும் புதிய அரசியல் அமைப்பு 2015 ஆண்டு மைத்திரி பால சிரி சேன, ரணில் விக்கிரமசிங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கான புதிய அறிக்கை இடையில் ஸ்தம்பிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதன் ஊடாகத்தான் இந்த புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் என்றும் அதன் ஊடாக தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வரைபினை தயாரிப்பதற்கு அன்று பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து தரப்புக்களும் ஒத்துளைத்திருந்தார்கள் அன்று பாராளுமன்றத்தில் ஈபிடிபியும், தமிழ்தேசியக்கூட்டமைப்பும்தான் மக்கள் பிரதிநிதிகள் இருந்தர்கள் அந்த வரைபினை தாயரிக்கும் குழுவின் தலைவராக கூட்டமைப்பு சித்தார்த்தனைதான் நியமித்திருந்தார்கள்.

இன்று அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாட்டினை எடுத்து பார்த்தால் தென்னிலங்கையில் ஊழலினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் வடகிழக்கில் ஊழல் வாதிகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் போறது இல்லை. ஊழல் வாதிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்து மற்றைய முழுப்பேரும் உள்ளே போவார்கள்.

தேர்தலின் பின்னர் அவருக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறி அந்த பெரும்பான்மையினை எடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தரப்புக்களைத் தான் தேடவேண்டும். அதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் பேரம் பேசுவது கடினமான விடயம் அவ்வாறு இருந்தால் தமிழர்களின் உரிமைசார்ந்த விடையங்களில் விட்டுக்கொடுப்புக்களை அவர்கள் செய்யவேண்டி வரும்.

அதனை தவிர்த்து ஏதோ ஒருவகையில் பெரும்பான்மை எடுப்பதாக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்த மற்றவர்கள் வெல்லவேண்டும் அவர்கள் இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு பெரும்பான்மை எடுக்கும் வாய்ப்பு உள்ளன.

 

கொள்கையளவில் அவர் சொல்லியுள்ளார் தமிழ்தரப்புக்கள் தேர்தலின் பின்னர் தன்னை ஆதரிக்க இருப்பதாக சொல்லியுள்ளார். நிபந்தனை இல்லாத ஆதரவினை கொடுக்கக்கூடிய ஒரோ ஒரு தரப்பு இந்த ஊழல் வாதிகள்தான் தங்களின் ஊழல் பிடிபடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றார்கள்.

அவர்கள் செய்யப்போது அவர்கள் ஒத்துளைப்பு கொடுத்து தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியல் அமைப்பு. இவற்றை பார்த்தால் தமிழர்களின் சரித்திரத்தில் முதல்தடவையாக தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் ஒன்று புதிதாக தொடங்கப் போகின்றது.

 

இதனை தடுப்பதாக இருந்தால் வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை பெற்று ஆகவேண்டும். அதுதான் எங்களின் இலக்கு.

 

நிறைவேற்றப்படப்போகும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பினை தமிழர்களின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டதாக வரக்கூடிய வரலாற்று தவறில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்ற வேண்டும். அதுதான் எங்கள் பணி. அதற்கான ஆணையினை தமிழ்மக்கள் வழங்க வேண்டும் என்பதற்காக கொள்கைப்பற்றுடைய உறுதியான உறுப்பினர்களைத்தான் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

 

இன்று தமிழ் தேசியம் வளரும் நிலையினையே காட்டிக்கொண்டிருக்கு சமஸ்டி என்று உச்சரிக்கக் கூடாது என்று சொன்ன தமிழ்தேசிய கட்சிகள் சமஸ்டியினை பற்றி கதைக்கவேண்டிய இடத்திற்குள் வந்துள்ளார்கள்.

13 ஆம் திருத்தம் தான் ஒற்றையாட்டிசியினை தூக்கி பிடித்தவர்கள் கடந்த ஐனாதிபதி தேர்தலில் எல்லோரும் கூடி தமிழ் தேசியத்திற்காக சுயர்நிர்ணய ஆணையினை கொடுங்கள் என்று ஆணையினை கேட்கவேண்டி வந்தது.

அது எல்லாம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலப்பாடு தமிழரசு கட்சி சுமந்திரன் சமஸ்டியினை பற்றி வாய்திறக்கவில்லை. ஆனால் ஐனாதிபதி தேர்தலில் சொன்னார் சமஸ்டிதீர்வு தான். நாங்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரோ ஒருதீர்வு என்று.

தமிழ் தேசியம் மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது இயக்கத்தினை அழித்து தமிழ்தேசித்தினை கரைத்துவிடலாம் என்று போக விரும்பிய பாதை கரைந்துள்ளது. என தெரிவித்தார்.

நாமல் ராஜபக்சவவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவவை கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ப்ளஸ் வன் என்ற அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி விடுத்துள்ளார்.

அண்மையில் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வின்சத யஸஸ்மினி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மீட்டு எடுக்கும் நோக்கிலேயே, மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்வதினை விரும்பவில்லை என்றும் வின்சத யஸஸ்மினி தெரிவித்துள்ளார்.

பெறுமதியற்ற நாமலை இந்த தேர்தலில் பூச்சியமாக்கி கொள்ளையிட்ட மக்கள் பணத்தை மீள கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென யசஸ்மினி ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அவற்றை நிருபித்து காட்டுமாறு சவால் விடுத்திருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவாகும் இவ்வாறு நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை தேவையான போது வெளிப்படுத்தப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

எதிர் தரப்பினர் கூறுவதை போல விசாரணை அறிக்கையை நினைத்தப்படி வெளியிடுவதற்கு இது ஒன்றும் குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை அல்ல எனவும் விஜித ஹேரத் சாடியுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத இரு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஏழு நாட்களுக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை நான் வெளியிடுவேன் என கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார்.

 

அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் ஏன் தயங்குகின்றது என்பதை அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய விஜித ஹேரத்,

 

ஒவ்வொரு தனிநபர் கோரிக்கையின் அடிப்படையில் அவற்றை வெளியிட முடியாது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், தங்கள் பணிகளைச் சரியாகச் செய்யத் தயாராக உள்ளோம்.

 

கம்பன்பில கூறுவதை போல அவரின் அறிக்கைகள் தொடர்பில் தாம் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார்.