உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஏன் ஜேவிபி யால் முடிந்தது தமிழ் ஆயுதக்குழுக்களால் முடியாமல் போனது?

ஏன் ஜேவிபி யால் முடிந்தது தமிழ் ஆயுதக்குழுக்களால் முடியாமல் போனது? முன்னாள் ஈபிஆர்எல்எப் போராளி தோழர் சோலையூரான் உடனான பரபரப்பான கலந்துரையாடல். விரைவில் உங்கள் பார்வைக்கு…..

இலங்கையை சிங்கப்பூர் போன்ற இன நல்லிணக்கமும் – பொருளாதார வளமும் உள்ள நாடாக நாம் மாற்றுவோம் !

இலங்கையை சிங்கப்பூர் போன்ற இன நல்லிணக்கமும் – பொருளாதார வளமும் உள்ள நாடாக நாம் மாற்றுவோம் – அருண் ஹேமச்சந்திரா (என்.பி.பி திருகோணமலை வேட்பாளர்

 

இந்நாட்டில் சாதாரண மக்களை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவேன் – அனுர குமார திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் சில தினங்களில் நல்ல செய்தி வெளியாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நாட்டில் சாதாரண மக்களை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் சாதாரண மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

அரசியல்வாதிகள் எப்பொழுதும் தமது உயிர் மாத்திரமே சிறப்பானது என்றும் சாதாரண மக்களின் உயிர்கள் மதிப்பற்றது என்றும் எவ்வாறெல்லாம் எண்ணுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டிய ஜனாதிபதி, இக் கொலைகளுக்கு இந்த மனநிலையே முதன்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

தாஜுதீனின் கொலைக்கு காரணமானவர்கள் எவரும் இல்லை, லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விதம் இன்னும் தெரியவில்லை, எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தக் குற்றங்கள் அனைத்தையும் தான் ஆராய்ந்து வருவதாகவும் வலியுறுத்தியுள்ளதுடன் அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வோம் அதனை நினைவில் கொள்ளுங்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். நாளை அல்லது நாளை மறுநாள் அதைப் பற்றி உங்களுக்கு ஓரிரு நல்ல செய்திகள் கிடைக்கும் – என்றார். (ச)

“வடக்கு மக்களின் காணிகள் அனைத்தையும் விரைவில் அவர்களிடம் வழங்குவோம்“ – வவுனியாவில் ஜனாதிபதி அனுரகுமார

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வோம் எனவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

வவுனியாவில்  இன்று (10) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். வன்னி மக்கள் ஓரளவு வாக்கை அவருக்கு வழங்கியிருந்தனர்.

இந்த தேர்தலில் அவர் வருவாரா? அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வந்தார். இந்த தேர்தலுக்கு அவர் இங்கு வருவாரா? வரவில்லை. ஏன்? அவர்கள் அவர்களது வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வன்னியில் எமக்கு வீழ்ந்த 21 ஆயிரம் வாக்குகளும் எமது வெற்றிக்கு பாரிய ஒரு பங்களிப்பையும் சக்தியையும் வழங்கியிருந்தது.

வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கிறது. அந்தக்காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது பல்வேறு அநீதிகளுக்கு முகம்கொடுத்தோம்.

இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது.

ஆனால் அன்று அப்படி அல்ல வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

வடக்கின் மீன்வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகின்றன. எமது மீன்வளம் அழியும்வாறாக அதனை செய்கின்றனர். நாங்கள் அரசு என்ற வகையில் எமது கடற்றொழிலாளர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமது சக்தி. அதனை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்யவேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும். எனவே புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும்.

அத்துடன் எமது முதலாவது வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும்“ என தெரிவித்தார்.

வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காதீர்கள் – மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை !

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ தவிர்த்து, உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

வாக்கு எமது உரிமை, எமது சக்தி, எமது குரல், அது எமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றது.

இந்த உரிமையை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

கொழும்பில் 300 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி – 59 பேர் கைது !

கொழும்பில் பலர் இணைந்து மேற்கொண்ட நிதி மோசடியை கணிணி குற்ற விசாரணை பிரிவினர் கண்டுபிடித்துள்ளதுடன் 59 பேரை கைதுசெய்துள்ளனர்.

நிதிமோசடி திட்டத்திற்கு தலைமைதாங்கிய இருவர் உட்பட 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டவர்களை இலக்குவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டதுடன் சுமார் 300 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த வேவ்டெக் என்ற நிறுவனம் வெளிநாட்டவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது என சிஐடியினரிடம் தென்கொரிய தூதரகம் வியாழக்கிழமை முறைப்பாடு செய்திருந்தது.

வர்த்தகமுயற்சி என்ற பெயரில் தென்கொரியாவை சேர்ந்த ஒருவரிடம் 300 மில்லியன் மோசடி செய்துள்ளனர் என தென்கொரிய தூதரகம் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தது.

வர்த்தக முயற்சியொன்றில் முதலீடு செய்வதாக தெரிவித்து தென்கொரிய பிரஜையொருவரிடமிருந்து ஒருமில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள் பின்னர் அதனை திருப்பிக்கொடுக்கவில்லை என தென்கொரிய தூதரகம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட சிஐடியின் சிசிஐடி பிரிவினர் கொழும்பு ஹவெலொக் வீதியில் ஆடம்பர தொடர்மாடியொன்றிலிருந்து மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து கண்டுபிடித்தனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 57 பேர் இலங்கையர்கள் உட்பட 59 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 27 பேர் பெண்கள் அவர்களில் இருவர் கர்ப்பிணிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஐந்துமொழிகளில் பேசும் திறமை மிக்கவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் இதன் பின்னர் பெண் சட்டத்தரணியொருவரும் இந்த நடவடிக்கைகளிற்கு முகாமையாளராக செயற்பட்டு வந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யபட்ட ஊழியர்கள் தங்களிற்கு ஐடி தொழிலில் வேலைவாய்ப்பு என தெரிவித்தே வேலைக்கு சேர்த்தார்கள் ஆனால் தங்களை வேலைக்கு சேர்ப்பதற்கு முன்னர் ஜப்பானிய கொரிய ஜேர்மனிய மொழிகளில் தங்களிற்கு திறமையுள்ளதா என்றே பரிசோதித்தார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் தங்கள் ஆடம்பர அலுவலகத்திற்கு 9 மில்லியன் செலுத்திவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தங்களுடைய பிரச்சினைகளையே அறியாதவர்கள் எப்படி மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கப் போகின்றார்கள்? – மாவடி ஏஆர் சிறிதரன் !

தங்களுடைய பிரச்சினைகளையே அறியாதவர்கள் எப்படி மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கப் போகின்றார்கள்? கலைஞர் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரனுடன் உரையாடல்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்க கூடிய ஒரே அணி தமிழரசுக்கட்சி தான் – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சி பழம்பெரும் கட்சியாகும். தற்போது மாற்றம் தேவை என்று கூறுபவர்கள் பழம்பெரும் கட்சியை விட்டுவிட்டு புதிய கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையான மாற்றம் அல்ல.

அடையாளம் மாற்றாத அரசியல் மாற்றமே உண்மையான மாற்றமாகும். நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தேசம் என்கிற அடையாளத்தினை வழங்கியது எமது கட்சியாகும். அதன் காரணத்தினால் தான் எமது கட்சியின் ஸ்தாபகரை தந்தை செல்வா என்று அழைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் தற்போது தான் சமஷ்டி பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக சமஷ்டியை வலியுறுத்தும் எமக்கு வாக்களிப்பதில் என்ன தவறுள்ளது.

அதேநேரம், தமிழரசுக் கட்சி பொருத்தமான மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது. உதாரணமாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் ஒன்பது வேட்பாளர்களில் இருவரைத் தவிர ஏனைய எழுவரும் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள்.

அதேபோன்று அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பெண் வேட்பாளர்கள் ஆணை மையப்படுத்திய வகையில் தான் தெரிவு செய்வார்கள். ஆனால் இம்முறை உண்மையான செயற்பாட்டாளர்களை நாம் அடையாளம் கண்டு நிறுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை, நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி பதவியேற்று ஒருமாதத்துக்குள்ளேயே தனது செயற்பாடுகளில் இருந்து சறுக்க ஆரம்பித்துவிட்டார். மதுபான சாலைகளுக்கான சிபார்சுக்கடிதங்களை வழங்கிய அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியலை அவர் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி அநுர, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஏற்கனவே எமது பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கவுள்ளதாக எழுத்துமூலமாகவே தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இடைக்கால அறிக்கையை நாம் தயாரித்து அதனை வெளியிடுவதற்கு தயாரானபோது, அப்போது அநுரகுமார எம்மிடத்தில் வருகை தந்து கூறினார்… இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள். ஆகவே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சம்பந்தமாக நாம் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று எனக்கும் சம்பந்தனுக்கும் கூறினார்.

அதனையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அவரை நாங்கள் அழைத்துச் சென்று அவரது கூற்றில் நியாயம் உள்ளது. கால அவகாசத்தினை வழங்குவோம் என்று கூறினோம். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அநுர குறிப்பிட்டார்.

அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது. அதனை கையாள வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பலமான அணியொன்றை வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும். அந்த அணியானது தமிழரசுக் கட்சியாகவே இருக்க வேண்டும் என்றார்.

 

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் – ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார்.

லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார்.

சுண்ணாகம் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் – விரைந்து செயற்பட்ட சிறிபவானந்தராஜா !

நேற்றையதினம் சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்திருந்த நிலையில் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததது.

இந்த நிலையில் சுன்னாகம் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸார் பணி இடை நீக்கம் – தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்டு உடன் நடவடிக்கை.

நேற்றைய தினம் சுன்னாகம் பகுதியில் அமைதியின்மைக்கு காரணமான இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மக்கள் மீது மது போதையில் வந்தோர் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா அவர்கள் உடனடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கட்சி மேலிடத்துக்கும் கொண்டு சென்றார். உடனடியாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இருந்தார்.

அவரின் வேண்டுகோளுக்கிணங்க, இரு பொலீஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பணத்தில் இருந்து மேலதிக விசாரணைகாக, உயர் மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, மேலதிக பொலிஸார் சுன்னாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் Dr. சிறிபவானந்தராஜா மக்களுக்கான நீதியை பெற்றுத் தருவதில் தேசிய மக்கள் சக்தி ஒரு போதும் பின்னிற்காது என்றும், மேலதிக விசாரணைகளின் பின் தொடர்புபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதுவரை மக்களை அமைதி காக்கவும் வேண்டினார். இந்த தேர்தல் காலத்தில் இப்படியான சம்பவங்களை வைத்து சில அரசியல் கட்சிகள் குளிர்காய முற்படுவது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்தார்.