விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா !

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கத் தயாரான தற்காலிக அணியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இலங்கை அணியின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உட்பட 36 பேர் பேருக்கு நேற்று முன்தினம்  (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தொற்று உறுதியான லஹிரு திரிமன்னே மற்றும் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தரும் அரசாங்கத்தின் கொரோனா தொற்று தொடர்பான நெறிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

“விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர் – அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். ’’ – விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
நாளை போட்டி குறித்து, விவசாயிகள் போராட்டம் குறித்தும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருடன் நாங்கள் போட்டியை தொடங்க விரும்புகிறோம். ஐபிஎல் போட்டிக்குப்பின் கடுமையான பயிற்சி மூலம் சிறப்பாக வந்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தை பார்க்கும்போது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது நாட்டில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் பேசுவோம். இந்த பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுதியுள்ளனர். அணிகளுடனான ஆலோசனையில் இதுகுறித்து பேசினோம். அதன்பின் அணியின் திட்டம் குறித்து ஆலோசித்தோம்’’ என்றார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ‘‘அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர்’’ என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த லியோனல் மெஸ்சி !

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி,  அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வருகிறார்.

33 வயதான மெஸ்சி 2004-ம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். 30-க்கும் அதிகமான பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.

ஆனாலும் அணியின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அதிருப்தி தெரிவித்து மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறப் போவதாக தெரிவித்தார். ஆனாலும் அவரால் பல்வேறு சட்ட சிக்கல்களால் பார்சிலோனா கிளப்பில் இருந்து வேறு கிளப்புக்கு மாற முடியவில்லை.

இந்த நிலையில் மெஸ்சி கடந்த 2017 முதல் 4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் விளையாட்டு உலகில் தனி ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் உள்ள தகவல்படி ஒரு சீசனுக்கான மெஸ்சியின் ஊதியம் ரூ.1,217 கோடியாகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் இதர வருவாயும் அடங்கும்.

ஆனாலும் ஸ்பெயின் வரி விதிகளின்படி இந்த தொகையில் பாதியை மெஸ்சி வரியாக செலுத்தி இருக்க வேண்டியது இருக்கும்.

ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் சுமார் ரூ.4,500 கோடியை மெஸ்சி ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் படத்தை வெளியிட்டு பெயரையும் அறிவித்த விராட் கோலி!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி – பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த மாதம் 11ம் திகதி பெண் குழந்தை பிறந்தது.
அவர்கள் பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்கள் பின்தொடரவில்லை.
இந்த இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் “வாமிகா’’  எனவும் தெரிவித்துள்ளார்.

பழனி முருகனுக்கு முடிக்காணிக்கை செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் !

தமிழகத்தின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து சிறப்பாக அசத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழனி வந்தார்.பழனி மலைக்கோயிலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார்.

“இலங்கையின் கிரிக்கெட் தரத்தை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் முன்னேற்ற முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது” – அர்ஜூன ரணதுங்க

“விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது” என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இலங்கை கிரிக்கெட்டினை வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாமல்ராஜபக்சவினை அவதானித்த வண்ணமுள்ளனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாமலின் குடும்பத்தவர்கள் என தெரிவித்துள்ள, ரணதுங்க இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட்டினை முன்னேற்றகரமான நிலைக்கு நாமலால் கொண்டு செல்ல முடியாவிட்டால் வேறு எவராலும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக பலர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆதரவை பெற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்சவிற்கு விளையாட்டை பற்றி தெரியும் என்பதாலும் அவர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் யாரும் தேவையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது என ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“இந்திய வீரர்கள் ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை ” – மன்னிப்பு கேட்டது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் !

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சீன் காரோல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள்(முகமது சிராஜ், பும்ரா) ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை தான். விரும்பத்தகாத இந்த சம்பவத்துக்காக நாங்கள் மீண்டும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், டிக்கெட் விவரங்கள், ரசிகர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்.

மைதானத்தில் இருந்து சந்தேகத்தின் பேரில் வெளியேற்றப்பட்ட 6 ரசிகர்களுக்கும் இனவெறி புகாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நியூசவுத் வேல்ஸ் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது விசாரணை முடியும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை ஆயுர்வேத மருத்துவரின் கொரோனா பாணியை எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா !

கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் மருந்தினை பயன்படுத்திய இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார்.

துரித அன்டிஜென் பரிசோதனையின் போதே அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அமைச்சரின் பத்து உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர் தனது மருந்தினை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசென்றவேளை இராஜாங்க அமைச்சர் அதனை பயன்படுத்தியிருந்தார்.

“நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன்” – அஷ்வினிடம் மன்னிப்பு கேட்டார் அவுஸ்திரேலிய அணி தலைவர் டிம்பெய்ன்!

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்-விகாரி ஜோடியை வீழ்த்த முடியாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் விரக்தி அடைந்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன், லபுசேன், மேத்யூ வாடே ஆகியோர் “சிலெட்ஜிங்”கில் ஈடுபட்ட னர். அஸ்வின் களத்தில் இருந்த போது டிம்பெய்ன் வார்த்தைகளால் உசுப்பேற்றி சீண்டினார். மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டார்

4-வது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பன் மைதானத்துக்கு வா, பார்ப்போம் என்று சீண்டினார். இதற்கு அஸ்வின், “நீ இந்தியா வா பார்ப்போம். அதுதான் உனக்கு கடைசி தொடராக இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பெய்ன் சீண்டியதால், அஸ்வின் நடுவரிடம் புகார் அளித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விகாரி அடித்த கேட்சை பெய்ன் கோட்டை விட்டார்.

இந்தநிலையில் ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“நான் செயல்பட்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நன்றாக வழிநடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. நெருக்கடி காரணமாகவே நான் தவறாக செயல்பட்டு விட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட நான் குறைவாக நடந்து கொண்டேன். நேற்றைய ஆட்டம் எங்களது மதிப்பில் சரிவை ஏற்படுத்தி விட்டது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன்.

நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன். அடிக்கடி பேசினேன். ஆனால் கேட்சை விட்டு விட்டேன் என்று கூறி எனது தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

பின்னர் நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன்பின் எல்லாம் சரியாகி விட்டது. அடுத்த டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பான ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி சமன் செய்தது இந்தியா !

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று முடிந்தது.

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.

சிட்னி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 91 ஓட்டங்களையும் வில் புகோவ்ஸ்கி 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் மற்றும் புஜாரா ஆகியோர் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 94 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இந்தியா அணிக்கு 406 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கேமரூன் கிரின் 84 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 81 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவிச்சில், நவ்தீப் சைனி மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, போட்டியின் இறுதிநாள் வரை 334 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுகளை இழந்து களத்தில் தாக்குபிடித்தது. வெற்றி இலக்குக்கு 72 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலைப் பெற்றது.

இதன்போது இந்திய அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 97 ஓட்டங்களையும் செடீஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அஸ்வின்- விஹாரி பொறுப்பான ஆட்டம்... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

ஹனுமா விஹாரி 161 பந்துகளுக்கு 23 ஓட்டங்களுடனும், அஸ்வின் 128 பந்துகளுக்கு 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்து  போட்டியின் போக்கை மாற்றியமைத்தனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 131 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.