செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க ஏற்பாடு

தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள், அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணை க்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

இடம்பெயர்ந்தவர்கள் உட்பட சகலருக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பு -தபால் மாஅதிபர் அறிவிப்பு

election_box.jpgஇடம் பெயர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நேற்று (21) வரை 93% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தபால் மாஅதிபர் எம். கே. பி. திசாநாயக்க தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி சகல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு ள்ளதாகக் கூறிய தபால் மா அதிபர், முகவரி தவறின் காரணமாக வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று தபால் மாஅதிபர் கூறினார்.

2008ஆம் ஆண்டில் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறவில்லையாயின் அதற்கு தபால் திணைக்களம் பொறுப்பல்ல. அது வாக்காளர்களின் தவறாகும். வாக்காளர் பட்டியலில் உள்ளவாறு கிடைக்கப்பெற்ற அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படும் என்றும் தபால் மாஅதிபர் கூறினார்.

அதேவேளை வட மாகாணத்திற்கு வாக்காளர் அட்டைகள் தாமதமாகக் கிடைக்கப்பெற்றதால், அவற்றை விநியோகிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக வட மாகாண பிரதித் தபால் மாஅதிபர் வி. குமரகுரு தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. நிவாரணக் கிராமங்களில் தபாலகங்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு நேரடியாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் குமரகுரு தெரிவித்தார். அதேநேரம் மக்கள் மீளக்குடியேறியுள்ள பகுதிகளிலும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கிறிஸ்மஸ்தீவில் 11 இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமான கிறிஸ்மஸ் தீவில் குழப்பம் விளைவித்ததாக 11 இலங்கை அகதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் மொத்தமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் 21க்கும் 36க்கும் இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆயுத கையாளல், குழப்பம் விளைவித்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு அகதிகள் பராமரிப்பு குழுமத்தின் உறுப்பினரான இயன் ரின்டோல் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மோதலில் முகாமுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஸ்ஜிதுகளை வாக்கு கேட்கும் மேடைகளாக்க வேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpg‘மஸ்ஜி துகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என  நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட. ‘மஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இன்று ஹைட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgநில நடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட ஹைட்டி தீவில், இன்று 6.1 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இன்று மாலை 4.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி காலை 6.03) தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் இருந்து வடமேற்கே 35 மைல் தொலைவில், பூமிக்கடியில் 13.7 கி.மீ ஆழத்தில் பின்அதிர்வு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

haitibuidling-pd.jpgஅதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இதனால் பீதியடைந்து தெருக்கள், சமவெளிப் பகுதிகளுக்கு வந்ததாகவும், பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹைட்டியில் உயிரிழந்தனர். உலகளவில் 2வது மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்ததுடன், தங்கள் நாட்டு மீட்புக்குழுவினரை ஹைட்டி அனுப்பியுள்ள நிலையில் சக்தி வாய்ந்த பின்அதிர்வு இன்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன் – ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

sampanthar.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

election_box.jpgஎதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களுக்கு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கின்றார்.இந்தத் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு மிக நீளமானதாகிக் காணப்படலாம். வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவசரப்படாமல் வாக்குச்சீட்டை நன்கு வாசித்த பின்னர் தாம் தெரிவு செய்யும் வேட்பாளருக்குத் தமது புள்ளடியை அல்லது ஒன்று (1) இலக்கமிடலாம். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு அவசியமெனக் கருதுமிடத்து இரண்டாவது, மூன்றாவது தெரிவையும் அடையாளமிட முடியும்.

ஒருவரை மட்டும் தெரிவு செய்வதானால் X புள்ளடியை இடமுடியும்.

மூவருக்கு அடையாளமிட விரும்பினால் முதலாவது தெரிவுக்கு (1) என்று அடையாளமிட்ட பின்னர் இரண்டாவது, மூன்றாவது தெரிவுகளுக்கு முறையே 2,3 என அடையாளமிடமுடியும்.ஒரு வாக்குச்சீட்டில் ஒருவரைத் தெரிவு செய்து X புள்ளடி அல்லது (1) ஒன்று என அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு செல்லுபடியானதாகும்.

முதலாவது தெரிவைத் தேர்ந்தெடுக்காமல் 2,3 என மட்டும் அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டொன்றை அடையாளமிட வேண்டிய நடைமுறை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

3:1) “1” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் ஒரு வேட்பாளருக்குத் தமது வாக்கை அளிக்க முடியும்.

3:2 )”2”என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது இரண்டாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

3:3 ) “3” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது மூன்றாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

04: வாக்காளர் ஒருவர் தமது வாக்கை ஒரு வேட்பாளருக்கு மட்டும் அளிக்க விரும்பினால். “1”  என்பதற்குப் பதிலாக “புள்ளடி X இடப்பட்டிருந்தாலும் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியாகும்.

04:1 முதலாவது தெரிவுக்குப் பின்னர் 2,3 அடையாளமிட்டு இரண்டாம், மூன்றாம் தெரிவை அடையாளமிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

04:2 எவருக்கும் வாக்களிக்கப்படாத வாக்குச்சீட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட X புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டும் முதலாவது தெரிவில்லாத 2 ஆம் 3 ஆம் தெரிவை அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டும் முற்றாக நிராகரிக்கப்படும்.

எனவே வாக்காளர்கள் முதலாவது தெரிவை அறிவித்த பின்னர் தாம் விரும்பினால் 2 ஆம், 3 ஆம் தெரிவை அடையாளமிடமுடியும். அது கட்டாயமாக 2,3 என்று குறிப்பிடப்படவேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

ஓஷியானிக் கப்பல் அகதிகள்; 13 இலங்கையரை ஏற்க நியூசிலாந்து இணக்கம்

இந்தோனேசியாவின் தனஜங் பினாங் துறைமுகத்தில் ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 78 பேரில் 13 பேரை ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து குடியேற்ற அமைச்சர் ஜொனாத்தன் கோலமனின் செயலகம் இதை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓஷியானிக் வைக்கிங் கப்பலை இந்தோனேசியா வழிமறித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 78 இலங்கை தமிழ் அகதிகளில் 28 பேரை அமெரிக்காவும், 13 பேரை கனடாவும் 3 பேரை நோர்வேயும் ஏற்பதற்கு இணங்கியிருந்தன. அவுஸ்திரேலியா 22 பேரை அகதிகளாக தமது நாட்டில் குடியமர அனுமதிக்கவுள்ளது. இந்த நிலையில் எஞ்சியிருந்த 13 பேரையும் ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

இன்று இந்த 13 பேரும் நியூசிலாந்தில் குடியேறுவது பற்றிய விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் புறப்படவுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும் கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை – சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை – அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச் சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படு கின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம். பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீள்குடியேற்றங் கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப் பட்டு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர். சட்ட விரோதமான மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றிருந்தால் அது குறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம். தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை 500 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து விரும்பும் துறையில் தொழிற்பயிற்சி

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் முன்னெடுக்க விரும்பும் துறைகளின் அடிப்படையில் 500 பேர்களாகப் பிரித்து, அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அருகில் புனர்வாழ்வு வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவத ற்காக யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும், வவுனியாவில் 5 இடங்களும், வெலிக்கந்தையில் 3 இடங்களும், திருகோணமலையில் 3 இடங்களும், மட்டக்களப்பில் 4 இடங்களுமாக 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மெனிக்பாமில் உள்ள நலன்புரி முகாம்களில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடுவில் ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைவரும் 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் துறை, விவசாயத் துறை, கணனிசார் துறை, மிருகவளர்ப்பு, தையல் துறை என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் மீன்பிடித் துறை, விவசாயத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டவர்களாவர்.

சிறுவயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்பிப்பதற்கும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர இவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பிக்கப்ப டுவதோடு இசை, நடனம் ஆகிய துறைகளிலும் ஈடுபட வசதிகள் அளிக்கப்படுவதாக ஆணையாளர் கூறினார். புனர்வாழ்வு பெறும் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, சிலருக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்தபின் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று தாம் பயிற்சி பெற்ற துறையில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள், எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் சிறந்த மன நிலையுடனும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்த பின்னர் ஒவ்வொரு நபரினதும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்ட பின் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் சிபார்சின்படி விடுவிக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது 10, 832 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்களில் 2,500க்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2,500க்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியையும், 2,000க்கும் அதிகமானவர்கள் முல்லைத்தீவையும், சுமார் 1,000 பேர் வவுனியாவையும், சுமார் 500 பேர் மட்டக்களப்பையும், 500க்கும் அதிகமானவர்கள் மன்னாரையும், சுமார் 500 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.