செய்திகள்

செய்திகள்

செய்திகள்

50 வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க அனுமதி; 8000 பேருக்கு பயிற்சி

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தலுக்கென ஆசிய நாடுகளில் இருந்து 50 தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பெப்ரல் அமைப்புக்கு அனுமதி வழங்கியிருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை நாடளாய ரீதியில் பணியில் அமர்த்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான விசேட பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் தேர்தல்கள் ஆணையாளருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணுவதில் கலந்து கொள்வதற்கு பெப்ரல் அமைப்பு பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்வைத்திருப்பதாகவும் பணிப்பாளர் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் அடையாள அட்டையில்லாதவர்கள் கிராம சேவகர்களை தொடர்பு கொள்ளுமாறும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

mano-ganesan.jpgஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மனோ கணேசனுக்கு எதிராக ஹெல உருமய நேற்று பகல் கண்டி மாநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஹெல உருமயவின் கண்டி மாவட்ட பிரதான வேட்பாளரான சுவர்ண திலக்க தலைமையில் கண்டி தலதா வீதியில் நடைபெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் ஆதவாளரான மனோ கணேசனை கண்டியிலிருந்து விரட்டுவோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் – பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்

jaffna.jpgகிளிநொச்சி, மாங்குளம், பூநகரி ஆகிய பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் தலைமை அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதி அடிக்கல் நடப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் அடிக்கல் நடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இதற்கமைய மாங்குளம் நகரத்தில் புதிய பொலிஸ் கட்டடத் தொகுதியும், கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி பொலிஸ் தலைமை அலுவலகமும், மன் னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி

epdp.jpgஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர், எம்பிக்களுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை : கோத்தபாய

gotabhaya.jpgஇராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்தார்.

கண்டன கூட்டம் – உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு கண்டனம் : தேடகம்

Uthayan_Canada ._._._._._.

கண்டன கூட்டம்
உதயன் பத்திரிகை  அலுவலகம் தாக்கப்பட்டதை  கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை  வலியுறுத்தியும்  தேடகத்தினால்  கண்டன கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது.

காலம் : 27-02-2010
இடம் : ஸ்காபுரோ சிவிக் சென்டர்
நேரம் : 3.00 pm – 6.00pm

அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்

தேடகம்

._._._._._.

கருத்துச் சுதந்திரத்திற்காய் தோள் கொடுப்போம்! – உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு எமது கண்டனம் : தேடகம்

Thedakam_Logo20.02.2010 அன்று உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலும், அதன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான மிரட்டலும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் உள்ளது. கனேடிய தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் இது முதலாவது நிகழ்வல்ல. தாயகம் பத்திரிகைக்கான தடை, அதன் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் மீதான மிரட்டல், தேடல் சஞ்சிகை விற்பனை நிலையங்கள் மீதான மிரட்டல், தேடக நூலக எரிப்பு, பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் மீதான தாக்குதல், வானொலி இயக்குனர் இளையபாரதி மீதான தாக்குதல், என ஊடகங்கள் மீதான வன்முறைகள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. சுதந்திரமாக கருத்தை முன்வைக்கும் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் கனடாவில் பல்வேறு தரப்பினரின் வன்முறைக்கு முகம்கொடுத்தே வந்துள்ளன. விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலின் அங்கமாகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற ஊடகங்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான தாக்குதல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கருத்துக்களம் ஆரோக்கியமான சமூகத்திற்கு மிக முக்கியமான அடிப்படையாகும். கருத்தை கருத்தால் முகம் கொடுக்கும் ஓரு சமூகம் உருவாக்கப்படவேண்டிய காலகட்டமிது. எமது அடிப்படை மனிதவுரிமைகளை முன்னிறுத்தி வளமான எதிர்காலத்தை வென்றெடுக்க வேண்டிய காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு எம்மை பின்னோக்கித் தள்ளிய சுதந்திர மறுப்புகளை, அடக்குமுறைகளை அறவே அகற்றி நீதியும் சமத்துவமும் நிலவும் ஒரு சமூகத்தை உருவாக்குவது அனைவரதும் கடமை. இதை அடிப்படையாகக் கொண்டே 1989ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பன்முகத்தன்மைக்காயும் கருத்துத் சுதந்திரத்திற்காயும் தேடகம் குரல்கொடுத்து வருகிறது.

“ உனது கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் அந்தக் கருத்தை
சொல்லுவதற்கான உனது உரிமைக்காய் நான் உயிரைக் கொடுத்தும் போராடத் தயார்”

என்று பிரஞ்சு அறிஞர் வால்ட்டயர் சொன்னது போன்று நீதிக்கும் சமத்துவத்திற்குமாக போராடும் மக்கள் குலாம், சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் இத்தகையை அச்சுறுத்தல்களை நிச்சயம் எதிர்த்தே தீருவர்.

உதயன் பத்திரிகை மீதான இவ் வன்முறையை தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்) வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராய் வன்முறையைத் தூண்டும் சக்திகளை இனங்கண்டு அவர்களை மறுதலிக்க தமிழ் மக்கள் முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.

22.02.2010
தேடகம்
கனடா

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனை கைகொடுக்கும்

he_the_president.jpgசகிப்புத் தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதிக்கப்பட்ட சகோதரத்துவமும் கைகொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :-

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து மீலாதுன் நபியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முஹம்மது நபி பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவரின் போதனைகளை நினைவு கூரும் ஒரு தினமாகும். சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, தர்மம் என்பன பல உயர் விழுமியங்களை புனித நபி அவர்கள் தனது போதனைகள் மூலம் முன்வைத்தார்.

இலங்கையில் மீலாதுன்நபி விழா தேசிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. இம்முறை இந்தத் தேசிய கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் இடம்பெறுகின்றது. அங்குள்ள முஸ்லிம் மக்களின் சமய மற்றும் கலாசாரச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. இலங்கை முழுவதும் ஜனநாயகம், மீள ஸ்தாபிக்கப்பட்டு சமாதானமும் நிலைநிறுத் தப்பட்டுள்ள நிலையில் அமைதியான சூழலில் இம்முறை முஸ்லிம்கள் மீலா துன் நபியைக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய முக்கிய தினத்தில் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு நான் எனது மனப்பூர்வ மான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு சமாதானம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை சகல சமூகங்கள் மத்தியிலும் கட்டியெழுப்பவும் அவற்றை ஸ்திரப்படுத்தவும் தீவிர பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

உயிருடன் மீட்கப்பட்ட சிசு தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனை

images-baby.jpgஎப்பாவெல பகுதியில் 16 வயது சிறுமி ஒருவருக்கு பிறந்த குழந்தை உரையொன்றில் கட்டபட்ட நிலையில் பொலிசாரலால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை மார்ச் 2ஆம்

rauff-hakeem.jpgதமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் படி உத்தரவிடக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை மார்ச்   2ஆம் திகதி நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பதில்  பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்தத் திகதியை நீதிமன்றம் விசாரணைக்குத் தீர்மானித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை அடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்தே ரவூப் ஹக்கீம் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல்  செய்துள்ளார்.

கண்டி மாநகரசபை மேயர் நீக்கப்பட்டதை ஆட்சேபித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

கண்டி மாநகர சபை மேயர் எல்.பி.அலுவிகாரவை திடீரென பதவி நீக்கம் செய்தமை மத்திய மாகாண முதலமைச்சரின் நியாயமற்ற செயல் என்பதனை சுட்டிக்காட்டி ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபையை விட்டு வெளி நடப்பு செய்ததால் கூட்டம் 15 நிமிடங்களுடன் முடிவடைந்தது.

கண்டி மாநகரசபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை பதில் மேயர் தலைமையில் கூடியது. இதன்போது ஐ.தே.க.உறுப்பினர்களும் ஜே.வி.பி.உறுப்பினர்கள் சிலருமாக கண்டி மாநகர சபையின் மேயர் எல்.பி.அலுவிகார பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கைகளில் கறுப்புப்பட்டிகளை அணிந்து வந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பமானதும் ஜே.வி.பி.உறுப்பினர் ஆனந்த கோணவல, மேயர் பதவி நீக்கப் பட்டமையானது முதலமைச்சரின் நீதி நியாயமற்ற செயலெனச் சுட்டிக்காட்டினார். ஏனைய சில உறுப்பினர்களும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து சபையிலிருந்து வெளியேறினர். இதனையடுத்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 18 நிமிடங்களுடன் சபை கலைந்து சென்றுள்ளது.