கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸிலுள்ள எம்.ரி.வி./எம்.பீ.சி. அலுவலகம் திங்கட்கிழமை பட்டப்பகலில் இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் அந்த ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
திங்கட்கிழமை பிற்பகல் 3.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக எம்.பீ.சி. எவ்.எம். முகாமையாளரான சுரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியொன்றிலும் வந்தவர்களினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவகமும் எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுமே கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ளது. மாலை 3.45 மணியளவில் பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியிலும் வந்த கும்பலொன்று அந்த நிறுவனக் கட்டிடத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு திடீரென கற்கள், போத்தல்கள், பொள்ளுகள் போன்றவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தி பிரதான நுழைவாயிலூடாக உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர்.
இந்த குண்டர்குழு நடத்திய தாக்குதலில் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலகம், எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவன செய்திப் பிரிவு இணைந்திருக்கும் கட்டிடத்திற்கும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேநேரம், குண்டர் குழு தாக்குதல் நடத்தும் சத்தம் கேட்டதுமே அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிறுவனங்களுக்கும் அறிவித்தும் பொலிஸார் எவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லையென சுரங்க சேனாநாயக்க கூறினார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடத்திற்கும் வாகனங்களுக்கும் மட்டுமல்லாது பாதுகாப்பு கமராக்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிவித்தும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வராததால், சம்பவத்தின் பாரதூரத்தை உணர்ந்தும் தற்காப்பின் பொருட்டும் எம்.ரி.வி./எம்.பீ.சி. நிறுவன பணியாளர்களும் பாதுகாப்பு ஊழியர்களும் குண்டர் குழுவினர் மீது திருப்பித் தாக்குதல் நடத்தியதாகவும் சுரங்க சேனாநாயக்க கூறினார்.
குண்டர்கள் தாக்குதல் நடத்திய கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தியே பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் குண்டர்கள் பின்வாங்கிவிட்டதாகவும் கூறிய எவ்.எம். முகாமையாளர் சேனாநாயக்க, அதன் பின்னரே பொலிஸார் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் தங்களது நிறுவனப் பணியாளர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும் எம்.ரி.வி/எம்.பீ.சி. ஊகட நிறுவன பணிகளுக்கு எந்தத் தடங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவத்தை அடுத்து அந்த நிறுவனத்தை சுற்றி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.