செய்திகள்

செய்திகள்

செய்திகள்

3 மாத செலவீனத்துக்கு 44,014 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி சபைக்கு அறிவிப்பு. அரசியலமைப்பை மீறும் செயல்; ஐ.தே.க.எதிர்ப்பு

parliament.jpgஅரசின் 3 மாத செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள அதேநேரம், கணக்கு வாக்கெடுப்புப் பிரேரணையோ அல்லது வரவுசெலவுத்திட்டமோ பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல் அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்வது அரசியலமைப்பை மீறும் செயலென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

அச்சமயம் ஜனாதிபதியின் அறிவிப்புகளை வாசித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 150 (3) ஆம் பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியத்திலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்க அனுமதியளிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாக கூறினார்.

இதன் பின்னர் சபையில் ஏற்பட்ட சர்ச்சையொன்றின் போது ஐ.தே.க.வின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர முதலில் இது குறித்த பிரச்சினையை கிளப்பினார். “பாராளுமன்றத்தின் அதிகாரம் அவமதிக்கப்பட்டுள்ளது. நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது.

அரசியலமைப்பின் 150 (3) சரத்தின் பிரகாரம் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது  என்று அவர் இதன்போது கூறினார்.

இதேநேரம், ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பி இவ் விவகாரத்தை அரசியலமைப்பை மேற்கோள்காட்டி விளக்கிய ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான விஜேதாச ராஜபக்ஷ “அரசியலமைப்பின் 150 (3) ஆவது சரத்தின் பிரகாரம் கூறப்படுவது என்னவென்றால், நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படாத நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து 3 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்க முடியும் அல்லது நிதி ஒதுக்கீடு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்காத நிலையில் தேர்தலொன்றுக்காக திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறான எந்த சந்தர்ப்பமும் இல்லாததால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு முரணானது என்றார். எனினும் விஜேதாச ராஜபக்ஷவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா;

“அரசியலமைப்பின் 150 (3) சரத்துக்கு உட்பட்டே ஜனாதிபதி தனது அறிவிப்பை சபாநாயகர் மூலம் விடுத்திருக்கிறார். சட்டமா அதிபரின் பூரண ஆலோசனையின் பிரகாரமே இது செய்யப்பட்டிருக்கிறது. எனவே, விஜேதாச ராஜபக்ஷவின் ஆலோசனை ஜனாதிபதிக்குத் தேவைப்படாது. சட்டமா அதிபரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றால் உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு நீங்கள், நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். ஜனாதிபதி அனுப்பிய அறிவித்தலை விவாதத்துக்கு உட்படுத்த முடியாது  என்றும் தெரிவித்தார்.

எனினும் இது உயர்நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையில்லை என்றும் இதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது என்றும் இதில் சபாநாயகரே முடிவு சொல்ல வேண்டும் என்றும் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

இதேநேரம், அரசியலமைப்பின் 150 (3), 150 (4) சரத்துகளின் பிரகாரம் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக ஆளுந்தரப்பு எம்.பி.யான லலித் திசாநாயக்க தெரிவித்தார். ரணில்இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க;

“ஜனாதிபதி அனுப்பிய உத்தரவின் பிரதியொன்றை எமக்குத் தாருங்கள். 2000 ஆம் ஆண்டில் அப்போதைய சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க சட்டமா அதிபரின் அதிகாரம் தொடர்பில் நிலைப்பாடொன்றுக்கு வந்தார். பாராளுமன்றத்துக்கு சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருவதற்கு மட்டுமே சட்டமா அதிபரின் ஆலோசனை அவசியமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. எனவே, பாராளுமன்ற அங்கீகாரம் இன்றி அநுர பண்டாரநாயக்கவின் தீர்ப்பை மாற்ற முடியாது.எனவே, இவ்விடயத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப் பார்க்கிறீர்கள். இதை நாமே தீர்க்க முடியும். பாராளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கிறது. பாராளுமன்ற அதிகாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்குள்ளது.

இந்த விடயம் பற்றி ஆராய்ந்து உரிய உத்தரவைப் பிறப்பிப்பதாகவும் இதை விவாதமாக்கிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு நீதி இன்னமும் வழங்கப்படவில்லை ஜெனரல் சரத் பொன்சேகா

sarath_.jpg“சரண டைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கும் இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை. அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அந்த இளைஞர்களை விடுதலை செய்ய அல்லது வழக்குத் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.ஜெனரல் சரத் பொன்சேகா “பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிலுள்ள ஒரு நாட்டில் அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய ஜெனரல் பொன்சேகா மேலும் கூறியதாவது;

“நான் 2 ஆவது லெப்டினன்டாக இருந்த போது முதன் முதலில் பழைய பாராளுமன்றத்துக்குச் சென்றுள்ளேன். இராணுவ வெற்றியின் பின்னர் ஓர் இராணுவத் தளபதியாக இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்தேன். அப்போது ஜனாதிபதி எனது பெயரைக் குறிப்பிட்டு இந்தப் பாராளுமன்றத்தில் வைத்து வெகுவாகப் பாராட்டினார்.

ஆனால், இன்று மீண்டும் இந்தப் பாராளுமன்றத்துக்கு அரசியல்வாதியாக ஒரு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியாக வந்துள்ளேன். எனது அரசியல்வாழ்க்கையைக் கட்டியெழுப்ப எனக்கு வலுவூட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி.ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என்மீது சேறு பூசிய , என்மீது பழிகளைச் சுமத்தியவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் எனக்கு ஆதரவளித்த விடுதலைப் புலிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வாழாதவர்கள் மிகக் குறைவானவர்களேயுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழேயே மக்கள் வாழ வேண்டும். ஆனால், ஒரு ஜனநாயக நாடு இருந்ததாக எவருக்கும் நினைவில்லை. ஒரு நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழ் ஆட்சி செய்ய முடியாது விட்டால் ஆட்சியாளர்கள் தான் வெட்கப்பட வேண்டும். தற்போது இந்த நாட்டிற்கு அவசரகாலச் சட்டம் என்பது தேவையற்றதொரு விடயம்.

தற்போது மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் துன்புறுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலுமேயே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிலை. தவறானவர்களிடம் அதிகாரங்களைக் கொடுப்பது குரங்கின் கையில் கூர்மையான கத்தியொன்றைக் கொடுப்பதற்கு சமனானது. குறுகிய நோக்கங்களுடன் செயற்படுபவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படும்.

இந்த நாட்டில் முன்னர் சிறந்த பாதுகாப்பு அமைச்சு செயலர்கள் இருந்தார்கள். அவர்கள் சட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். அவர்களால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படவில்லை. தற்போது நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை அடக்கி வைக்கும் அவசரகாலச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டில் நியாயம் நிலை நிறுத்தப்படுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவுக்கு அல்ஹைடா மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றபோதும் அந்நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இங்கு மியன்மார் போன்ற இராணுவ ஆட்சி நடந்தால் அதனை ஏற்க முடியாது. அனைவரும் சமமான உரிமைகளுடன் வாழும் நாடு என்பதை உணர்ந்து மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் செயற்பட அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.

தற்போது இந்த நாட்டில் யுத்தம் இல்லை. கடந்த ஒரு வருட காலமாக எந்தப் பயங்கரவாத நடவடிக்கையும் இடம்பெறவில்லை. மக்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. நாட்டுக்கு ஆபத்தில்லை. எனவே, இந்த நாட்டுக்கு அவசரகாலச் சட்டம் இனித் தேவையில்லை.பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும்போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவது வையற்றதொரு விடயம்.

யுத்த காலத்தின் போது சரணடைந்த 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். நாம் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள போதும் இன ஐக்கியத்தை புரிந்துணர்வை ஏற்படுத்தி நியாயத்தை நிலைநாட்டத் தவறிவிட்டோம். ஆனால், இவற்றையே மக்கள் அரசிடம் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றங்கள் நீதியாகச் செயற்பட வேண்டும். சிறைப்படுத்துவதன் மூலமோ நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலமோ தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 100 சிறைகளில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் வருவோம்.

தம்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நாட்டுத் தலைமைக்கு இருக்குமாக இருந்தால் அவசரகாலச் சட்டம் தேவையில்லை. தாம் யாருக்கு வாக்களித்தோம் என்று கூட வெளியில் கூற முடியாத நிலையில் இன்று மக்கள் உள்ளனர். அப்படிக் கூறுவோர் நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை. இந்த நாட்டில் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து. கருத்துகளை வெளியிட மக்கள் அச்சமடைகின்றனர். இந் நாட்டில் தொடர்ந்து சுதந்திரமாக வாழ முடியாத நிலை. பலர் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர். ஊடகங்களின் வாய்கள் மூடப்படுகின்றன. மக்களை அமைதியாக வைத்திருக்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

உண்மை பேசுவோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். ஆனாலும், சட்டம் தன் பணியைச் செய்யும். உண்மை ஒருநாள் வெளிப்படும். நீதி நிலைநாட்டப்படும். இந்த நாட்டின் ஆட்சியை எதிர்த்த மக்களுக்கும் எனது கட்சிக்கு வாக்களித்த 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் எனக்கு வாக்களித்த 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்”

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்; நான்கு பேர் படுகாயம்

சுகாதார பட்டப்படிப்பு மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்கான கால எல்லையை ஒரு வருடத்தால் குறைத்ததை எதிர்த்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் விகாரமகாதேவி பூங்கா முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பித்தது. பெருமளவு பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் அலரிமாளிகை நோக்கி செல்லாது தடுக்க நகரமண்டப சுற்றுவட்டத்தில் அப்பாதையை மறித்து பொலிஸார் நின்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து திரும்பி லிப்டன் சுற்றுவட்டம் நோக்கிச் சென்றனர்.

இந்நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு முன்னால் சென்று மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு செல்வதாகக் கருதி ஆணைக்குழு அமைந்துள்ள லோர்ட் வீதியில் தடுப்பதற்கு காத்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் டீன்ஸ் வீதி வழியாக சென்றனர். இந்நிலையில் அவர்களுக்கு முன்னால் சென்று 200 மீற்றர் தூரத்தில் இடைமறித்தனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், ஏனைய மூன்று மாணவர்களுக்கு காயமேற்பட்டது. நிலைமையை சமாளிப்பதற்கு கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிற்பகல் 12.45 மணியளவில் வந்தடைந்து ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் லோட் வீதி வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்ய சிரமப்பட்டனர். எமது பட்டப்படிப்பு 5 பாடநெறிகளாக 4 வருடம் இடம்பெற்று வந்தது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே தீர்மானித்தது.

நான்கு வருட பாடநெறியை மூன்று வருடங்களில் முடிப்பதற்கு அரசு மேற்கொண்ட தீர்மானம் நியாயமானதா? இந்த பட்டப்படிப்பை மாணவர்கள் எவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்யமுடியும். இதனால் சுகாதாரத் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமென்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன கருத்துத் தெரிவித்தார்.

மாணவர்கள் பிரதியமைச்சர் நந்திமிந்திர ஏக்கநாயக்கவுடன் சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது உயர்கல்வியமைச்சர் பதவியேற்றதும் ஓரிரு தினங்களில் அழைத்தது பிரச்சினைகளையும் பேசித்தீர்வுகாண்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே ஆர்ப்பாட்டத்தை பிற்பகல் 2.30 மணியளவில் மாணவர்கள் கைவிட்டனர்.

ரியாத்தில் வரலாறு காணாத பெரும் மழை

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இது குறித்து இளவரசர் பைசல் பின் அப்துல்லா கூறுகையில்,

ரியாத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் மூடப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ரியாத் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பாலங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகார துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை பொன்சேகா ஏற்க வேண்டும் -வைராக்கிய அரசியலையும் கைவிடக் கோரிக்கை

mahindananda.jpgசரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச நிதியைத் தவறாகக் கையாண்டதாலேயே அவர் இன்று சிறைக் கைதியாகியுள்ளார் என மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்: சரத் பொன்சேகா தாம் அரசியல் சிறைக்கைதி என தன்னை வர்ணிப்பதை விடுத்து அவர் இராணுவத் தளபதி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் வைராக்கிய அரசியலைக் கைவிடவேண்டும்.

30 நாடுகள் பங்கேற்கும் ஆசிய பசுபிக் மாநாடு ஜூனில் கொழும்பில் – ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு

ஆசிய பசுபிக் அமைப்பின் 9வது வட்ட மேசை மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடை பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் இலங்கை வரவுள்ளனர். இம் மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு இன்டர்கொன்டினல் ஹோட்டலில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் திலக் கொலரே, அமைப்பின் தலைவர் கலாநிதி அந்தனி ச்யு, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் பத்மினி பட்டுவிட்டகே, 09வது வட்டமேசை மாநாட்டுக்கு தலைமை வகிக்கவிருக்கும் பொறியி யலாளர் சேன பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஸ்திரமான நுகர்வு மற்றும் உற்பத்தி எனும் தொனிப்பொருளிலேயே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆசிய பசுபிக் வட்டமேசை மாநாடு தெற்காசிய நாடொன்றில் நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகுமென கலாநிதி அந்தனி க்யூ தெரிவித்தார்.

இம்மாநாட்டினை இலங்கையில் நடத்துவதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த பல புத்திஜீவிகளின் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள முடிவதுடன், உல்லாசப் பயணிகளுக்கான வருகையை அதிகரிக்க முடியுமெனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உரையில் கூறினார்.

ஆசிய பசுபிக் அமைப்பின் 7வது வட்ட மேசை மாநாடு வியட்நாமிலும் 08வது மாநாடு தன்சானியாவிலும் நடைபெற்றன. அப்போது தீர்மானிக்கப்பட்டதற்கமைய 09வது மாநாடு இலங்கையில் ஜூன் 10 முதல் 12 வரை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இதில் அங்கத்துவம் வகிக்கும் பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனா, வியட்நாம், கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்களது அனுபவங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நாட்டிலுள்ள அதிகூடிய வளங்களைப் பயன்படுத்தி சூழல் மாசடையாத வகையில் சிறந்த பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வதே மாநாட்டை நடத்துவதற்கான எமது இலக்கு என பொறியியலாளர் சேன பீரிஸ் கூறினார்

இறுதிப் போரின் நாட்கள் நினைவு கூரப்படுகின்றன!

Wanni_Warஇறுதிக்கட்டப் போரினால் மக்கள் அதிகம் கொல்லப்பட்ட மே மாதப் பகுதியை விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்காகவும், அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையொட்டியும் மே மாதம் 18ம் திகதி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வெற்றி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, வன்னியில் இறுதிக் கட்டப் போரினால் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவுகளை வன்னி மக்கள் கண்ணிருடனும், துயரின் வேதனைகளுடனும் நினைவு கூருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்வலி விளம்பரங்கள் அதிகளவில் பிரசுரமாகி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குற்றச்செயல்களோடு, வதந்திகளும் யாழ்ப்பாண மக்களை அச்சமடைய செய்கின்றன!

Jaffna Townயாழ்குடா நாட்டில் இடம்பெறும் கடத்தல், கொலை, கொள்ளைச் சம்வங்களையடுத்து வதந்திகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடத்தல், கொள்ளை, கொலை செய்யப்பட்டதான உண்மையற்ற வதந்திகள் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு அவை காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.  கடந்த சில தினங்களாக வடமராட்சிப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிற வதந்தி பரவியதால் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்பிற்கும் உள்ளாகினர். வடமராட்சியில் இரு தினங்களாக மக்கள் ஆறு மணிக்குப்பிறகு விடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வணிக நிலையங்கள் நேரகாலத்திற்கே மூடப்படுகின்றன. ( தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா )

 இதே வேளை, யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத்  தடுக்க சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்படுவர் என யாழ். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எனினும் கடந்த 2ம் திகதி  நெல்லியடியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் 25 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சமட்பவத்தையடுத்து, பொது மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதன் காரணமாக பலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இலங்கையின் தென்பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கூட செல்லத் தொடங்கினர். போரின் முடிவின் பின்னர் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கொழும்பு மற்றும், தென்பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். மேற் குறிப்பிட்ட படுகொலைச் சம்பவமானது  யாழ்ப்பாணத்தில் கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி விட்டதோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது  மக்கள் இதனால் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கம்.

glpeiris.jpgஅவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தேவையற்றவை எனக் கருதப்படும் அவசரகால விதிமுறைகளே இப்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எவ்வாறாயினும் அவசரகால சட்டத்தை இப்போதைக்கு முழுமையாக நீக்கமுடியாது என்றும் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.

மேல் மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்கள்

மேல் மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக 5 பேர் இன்று(04) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பொதுத்தேர்தலையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே புதிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீ.ல.சு.க. கொழும்பு மாவட்டம் அஜ்மல் மவ்ஜுத், ஸ்ரீ.ல.சு.க. களுத்துறை மாவட்டம் எம்.எம்.எம்.அம்ஜாத், களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி. லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, மற்றும் உதயசாந்த பெரேரா, சுதத் மத்துமகமகே ஆகியோரே மேல் மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாவர்