செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மக்கள் மீள்குடியேற்றப்படும் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை!

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் சில பகுதிகளில் காட்டு யானைகளினால் மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். வட்டக்கச்சி. இராமநாதபுரம், கண்டாவளை. கலமடுநகர் விசுவமடு. பிரபந்தனாறு முதலான பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அங்கு மக்களின் பயன்தரு மரங்களை இக்காட்டு யானைகள் நாசப்படுத்தி வருகின்றன.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பொதுமக்கள் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்த வந்ததாகவும் தற்போது மீண்டும் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘யார் இந்த கே.பி?’ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி

Anandasangaree Vஅரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்?

யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள் புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூது குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?. சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும் அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.

திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள் கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூது குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியாவார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?

சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு கேபியோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும். இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஜீவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள் நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இவர்களுக்கு இதுவரை காலமும் களநிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது.  இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும்  ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 பேர் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ போர் தமது பார்வைகளையும் கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள் ஒரு காலால் நடப்பவர்கள் தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஜீவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும் சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா மன்னார் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார் வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஜீவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எநத் ஒரு நாடும் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடீத்துள்ளன.

இத்தகைய நபர்களே நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவாகளை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் ஏன் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னனியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்ககுதல் கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு  முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.

இந்த நபர்களின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுகந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.

இது பலவிதத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும். கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக் கோரி ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

கைத்தொலைபேசியில் புலிகளின் பாடல்களை வைத்திருந்த மூவர் கைது!

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் பாடல்களை கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாhரின் திடீர் பரிசோதனைகளின் போதே இவ்விளைஞர்கள் தங்கள் கைத்தோலைபேசியில் இப்பாடல்களை வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வாகரை, நாவற்குடா, ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் மட்டக்களப்பில் சில இளைஞர்கள் கைத்தொலைபேசியில் புலிகளின் படங்கள், பாடல்களை போன்றவற்றை வைத்திருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்கள் சில பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வன்னியில் இறுதிப் போரின் போது பொது மக்களால் கைவிடப்பட்ட சைக்கிள்களைத் திருத்தியமைக்க 10 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவாகியுள்ளதாக வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். நேற்று கைவிடப்பட்ட வாகனங்கள் சில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கையிடப்பட்ட இவ்வாகனங்களை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நான்கு மாதங்கள் எடுத்ததென்றும் அவர் தெரிவித்தார். நேற்று (June 24 2010) வாகனங்களை சட்டபூர்வமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமத.p ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது கையளிப்பட்ட மோட்டார் வாகனங்கள் திருத்தப்பாடாமலேயே கையளிக்கப்பட்டன. சைக்கிள்கள் சில திருத்தப்பட்டு கையளிக்கப்பட்டன.

14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களும். 7ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கிளிநொச்சியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள் பல உதிரிப்பாகங்கள்  அகற்றப்பட்ட நிலையில் உள்ளதை அங்கு நேரில் சென்று பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

வடமாகாணசபை அலுவலகம் கிளிநொச்சியில் இயங்கவுள்ளது.

இதுவரை காலமும் திருகோணமலையில் இயங்கி வந்த வடமாகாண நிர்வாக அலகுகள் இனி கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய இம்மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வடமாகாண சபையின் நிர்வாக அலகுகள் அனைத்தும் கிளிநொச்சியில் இயங்கத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கும் முறிகண்டிப் பகுதிக்குமிடையில் ஏ-9 வீதியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் நகரில் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்ட தமிழ்மொழிப் பல்கலைக்கழக கட்டடத்தில் வடமாகாண சபையை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். எனினும், மூன்று வருடங்களுக்குள் மாங்குளத்தில் மகாணசபைக்கான நிரந்தக்கட்டடம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை வங்கியின் வட மாகாண அலுவலகம் எதிர்வரும் 4ம் திகதி யாழ்ப்பணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத்திறந்து வைக்கவுள்ளார்.

”நீதிபதிகள், சட்டத்தரணிகள் துணிச்சலுடன் செயற்பட வேண்டும்” ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்

Wigneswaran_C_V_Justiceகுற்றச் செயல்களை, சமூகச் சிரழிவு நடவடிக்கைளை துணியுடன் கண்டிக்க, தட்டிக் கேட்க விழையும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கும் விடயம் என ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.ஆர் கனகநாயகத்தின் உருவப்படம் நேற்று (June 24 2010) மாலை யாழ். நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள யாழ்.சட்ட நூலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகெண்டு உருவப்படத்தை திரை நீக்கம் செய்து நிகழ்த்திய நீண்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”‘ஏசியா நியூஸ்’ என்ற ஊடகத்திற்கு மனித உரிமைகள் பணியாளரும், சட்ட சமூக நம்பிக்கையகப் பணிப்பாளருமான ஒரு சிங்கள சகோதரர் ருக்~ன் பெர்னாண்டொ வடமாகாணத்தில் இராணுவ ரீதியான தாக்குதல்களுக்கு பதிலாக கலாசார, மதரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், வடமாகாணம் சிங்கள மயமாதலை எதிர்கொண்டுள்ளதெனவும் கூறி அது பற்றிய விபரங்களையும் கூறியிருந்தார்.

இப்படியான ஒரு சூழலில் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக கொலை. கொள்ளை, கற்பழிப்பு, மற்றும் கலாசார சிரழிவுகள் நடைபெற்று வருவருவதை நீங்களும் அறிவீர்கள். தெற்கிலிருந்து விலைமாதர்களும் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலைவிரிப்பதாகவும், போதைப் பொருட்கள் கல்விக் கூடங்களுக்கு அருகில் விற்பனைக்கு விடப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.

எமது சொந்த தமிழ் இரத்தங்களும் இப்பேர்பட்ட சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றபோது மனவேதனை ஏற்படுகின்றது.  இவ்வாறான சமூகச் சீரழிவுகளை துணிச்சலுடன் கண்டிக்கும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுகின்றமை அதிhச்சியளிக்கின்றது. எனினும், இந்த அழிவுகளிலிருந்து குடாநாட்டை மீடபதற்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த துணிச்சலான பங்களிப்பு முக்கியமானது. 

பின்னணியில் வன்முறைகளைக் கையாள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் துணை போகின்றார்கள் எனப் பயந்து சட்ட நடவடிக்கைகளைக் கைவிடக்கூடாது.  எமது சூழலில் நடப்பவை நீதிமன்றங்களில் எதிரொலித்தால் தான் வெளிநாட்டவர் கூட அவற்றைக் கவனத்தில் எடுப்பர்.”

இவ்வாறு ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பொது உடன்பாடு காண்பதற்காக தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடின.

douglas-devananda.jpgஇனப் பிரச்சனைக்கான பொது அரசியல் இணக்கப்பாடு ஒன்றைக் காண்பது தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் நேற்று (June 24 2010) கொழும்பில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளன. கொழும்பிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை 6.15 மணியளவில் இச்சந்திப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே இன்ப்பிரச்சினைக்கான தீர்வை விரைந்து காணமுடியும் என்கிற கருத்தை இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வெளிப்படுத்தினர். மீண்டும் யூலை முதலாம் திகதி இக்கட்சிகள் ஒன்று கூடும் எனவும் இச்சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.

TamilPartys_Meeting_24thJune10ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) சார்பில் என். சிறிதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே. சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, சிறிரெலோ சார்பில் எஸ்.உதயன், ஈரோஸ் சார்பில் பிரபா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு பொது இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு. தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.

கிளிநொச்சி செயலகத்தில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்காக எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்படவுள்ளது. நீதி மறுசீரமைப்பு அமைச்சின் அனுசரணையுடன் அரசாங்க நிர்வாக மற்றும், உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த நடமாடும் சேவை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது. இச்சேவையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் பயன் பெற முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு, திருமண அத்தாட்சிப் பத்திரங்கள் தொடர்பான சேவை, தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவை, காலங்கடந்த ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான விடயம், விதவைகள் அநாதைகள் ஆகியோருக்கு ஓய்வூதிய இலக்கம் வழங்கல், போன்ற சேவைகளை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில்!

இலங்கை அரசாங்கம் அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டமும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடும் கிளிநொச்சியிலேயே நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கூட்டத்திற்குச் செல்லும் அமைச்சர்கள் தங்கள் அமைச்சு சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களை அங்கு பார்வையிடுவார்கள் எனவும் அங்கு மீள்குடியேற்றபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பர் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாகவும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதல் நாள் அப்பிரதேசத்தில் நடமாடும் சேவை ஒன்றினை நடத்துவதற்கும் ஜனாதிபதி ஆலோசனை கூறியுள்ளதாகவும், அதன்படி  கிளிநொச்சியில்  முதலாவதாக இது நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூலை 14ம் திகதி அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கூட்டத்தின் போது செய்தியாளர்களும் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

‘புறக்கோட்டைக் குண்டு வெடிப்பிற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை.’ பொலிஸ் பேச்சாளர்

கொழும்பு புறக்கோட்டையில் நேற்று (June 24 2010) இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவத்துள்ளார். கடந்த வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்களால் எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில்  நேற்று அதிகாலை நடைபெற்ற கைக்கண்டுத் தாக்குதலினால் ஐந்து படையினர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். இக்கைக்குண்டு வெடிப்பிற்கு எவரும் காரணமா அல்லது தற்செயல் விபத்தா என்பது குறித்து பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று மாலை வரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.