செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் 29 பேர் உயிரிழப்பு! 2,867 பேர் பாதிப்பு.

Kallappu_Battiஇவ்வருடம் கிழக்கு மாணத்தில் 2,867 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண அமைச்சின் பொதுச் சுகாதர சேவைப் பணிப்பாளர் மருத்துவர் ஜே.ஞானகுணாளன் அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளார்.

Kallappu_Battiவருட ஆரம்பத்திலிருந்து இதுவரை திருகோணமலை, கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம், ஆகிய பிரதேசங்களில் 11 பேர் உயிரிந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பிரிவில் கல்முனைத் தெற்கு, வடக்கு, காரைதீவு, சாய்ந்தமருது, நிந்தவூர், ஆகிய பகுதிகளில் 7 பெரும், மட்டக்களப்பு சுகாரார சேவைப்பிரிவில் 11பேரும், அம்பாறை சுகாதர சேவைப் பிரிவில் ஒருவரும் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடைச் சிறையிலுள்ள புலிகளால் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் கரு ஜயசூரிய

Karu_Jeyasuriyaசிறைச் சாலையில் விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ள நிலையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்க புலிகளால் அச்சறுத்தல் உள்ளதெனவும், அவ்வாறு எதுவும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதித் தவைருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை நேற்று திஙகள் கிழமை கரு ஜயசூரிய சென்று பார்வையிட்டார் அதன் பிறககு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சரத்பொன்சேகாவின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாத த்தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரத்பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவே சரத்பொன்சேகா இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோதச் செயல்களைக் கண்டித்து நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

தேசம்நெற் இணையத்தில் தடங்கல்

இன்று காலை முதல் தேசம்நெற் இணையத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம். இணையத்தில் செய்திகளைப் பதிவிடும் போது தவறான இணைப்புக் காரணமாக இணையம் முற்றாகச் செயலிழந்து போனதால் இத்தடங்கல் ஏற்பட்டது.

இதனை சிலரின் நாசகார வேலையா எனக் கேட்டும் சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவ்வாறு எதுவும் அல்ல. இது முற்றிலும் தொழில்நுட்பத்தவறால் ஏற்பட்ட தடங்கலே. அதனை உடனடியாகச் சரிசெய்கின்ற தொழில்நுட்ப அறிவின்மையால் சீர் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

உடனடியாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தொடர்பு கொண்ட தேசம்நெற் வாசகர்களுக்கும் ஏனையவர்களுக்கும் எமது நன்றிகள்.

தேசம்நெற்.

கிளிநொச்சியில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து தற்போது பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழைக்காலத்தில் தாக்குப்பிடிக்கக் கூடியதான தற்காலிக கூரைத்தகடுகளுடனான வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது கூரைக் தகரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனும் தெரிவித்துள்ளார். மழையினால் பாதிக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் தற்போது உதவிகளை வழங்கி வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உட்பட வன்னியில் மீள்டியமர்ந்துள்ள மக்களின் வீடுகள் பல முற்றாக அழிந்துள்ள நிலையிலும் சேதமுற்றுள்ள நிலையிலும் தற்பொது பெய்து வரும் கடும் மழையினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால் நாம் கலந்து கொண்டிருப்போம்”: பா.அரியநேத்திரன்.

இன்று திங்கள்கிழமை நடைபெறும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு இக்கூட்டத்தில் தாங்கள் பங்கு பற்றியிருப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து ஆராயும் இக்கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் எம்மால் சுட்டிக்காட்டியிருக்க முடியும் என அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் வரை உயிரிழப்பு! வெள்ளப் பெருக்கினால் பலரைக் காணவில்லை!

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் ஐந்து பேர்வரை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியதால் இவ்வுயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய இணைப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் தொடாச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவம் இதனால், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மண்சரிவினால் மலையகத்தில் பதுளைக்கும் அப்புத்தளைக்குமிடையிலான வீதி முடப்பட்டு போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மறுப்பு.

கடந்த யூன் மாதம் கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்டு அதன் மேயராக பதவி வகித்த முகமட் உவைஸ் இம்தியாஸை மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அங்கு வசித்து வரும் இம்தியாஸ் அங்கிருந்து வெளியேறுவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை தாம் வெளியேறப் போவதில்லை என தெரிவித்திருக்கும் அவர் ஜனாதிபதியிடம் தனது வீட்டுப்பிரச்சினை குறித்து கூறியிருப்பதாகவும், வீடமைப்பு அதிகாரசபை ஊடாக விரைவில் தனக்கு வீடொன்றைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாகவும், அது வரை மேயர் இல்லத்தில் இருக்குமாறு அவர் கூறியதாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவிக்கையில், இம்தியாஸ் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மூன்று மாதங்கள் கால அவகாசம் கோரியதாகவும் அது வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மேயர் இல்லத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், இதனால், மேயர் வாசஸ்தளத்திற்கு நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்துவதை கொழும்பு மாநகரசபை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவிற்காக நூறு பிக்குகளுடன் தானும் சிறைசெல்லத் தயார் என மாதுலுவாவே தேரர் தெரிவிப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்கோவிற்கு பதிலாக தாம் சிறையிலிருக்கத் தயார் என கோட்டை நாகவிகாரையின் விகாராபதி வண. மாதுலுவாவே தேரர் தெரிவித்துள்ளார்.

போன்சேகாவிற்குப் பதிலாக நூறு பிக்குகளுடன் தானும் சிறைச்சாலையில் இருப்பதற்குத் தயாரெனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் நன்றிகெட்ட விதமாக நடந்துள்ள இந்நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு அதை ஒன்று படுத்திய பொன்சேகாவிற்காக தாம் எதனையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் மாதுலுவ தேரர் தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொட ங்குகின்றன. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதி வரை நடைபெறும்.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மட்டும் நடை பெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள் முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த காமன் வெல்த் விளையாட்டுத் திரு விழாவில் 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி

சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் (நேற்று முன்தினம்) கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும். “என்னைக் கொலை செய்வதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை” எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பளிக்க முடியுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பில் கவனத்திற்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவ நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.