தென் னிலங்கைப் பகுதிகளிலிருந்த வந்து யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள் திடீரென நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ளமை தொடர்பாக யாழ். அரச அதிபரோ, தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். முகாமையாளரோ எதுவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை எனவும், இந்த அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழ் தரப்பு ஆராய்ந்து வருவதாவும் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
படையினரின் ஆதரவுடனேயே இக்குடியேற்றம் நடைபெற்றுள்ளது எனவும், தமிழரின் பாரம்பரிய பூமியில் அவர்களைச் சிறுபான்மையினராக மாற்றும் அப்பட்டமான இனவாதமே இது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன மண்ணில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் யூதக் குடியேற்றத்திற்கு ஒப்பானது இது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கண்டல்காடு என்னுமிடத்தில் மீள்குடியேறுவதற்காக முஸ்லிம்கள் குடிசைகளை அமைக்க முற்பட்டபோது அரசஅதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களின் குடிசைகள் தீக்கிரையாக்கபட்டன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பலர் இன்னமும் மீளக்குடியமர முடியாத நிலையிலுள்ளனர். அவர்கள் அத்துமீறி அரசகாணிகளில் குடியேறுவதுதான் ஒரே வழி என்பதை இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் சிவாஜிலிங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
