செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கல்முனை மின்சாரஅதியட்சகர் சடலமாக மீட்பு.

கல்முனை மின்சார சபைக்கட்டத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் மின் அதியட்சகரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபையின் கல்முனைக்கிளையில் கடமையாற்றி வந்த சிரேஸ்ட மின்அத்தியட்சகரான பிரேமதாச (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைப்பட்டுள்ள நிலையில் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடாநாட்டில் ரயில் பாதைகள் அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

யாழ்.குடாநாட்டிற்கான ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகள் மற்றும், ரயில் நிலையங்கள் இருந்த இடங்கள் நில அளவை செய்யப்பட்டு அடையாளமிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ருயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களில் அத்துமீறி குடியேறியிருக்கும் மக்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் யாழ்.குடாநாட்டிலுள்ள ரயில் பாதைகளை மீளமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போதே அதன் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் பாகங்கள் களவாடப்பட்டு வருகின்றன.

இறுதிக்கட்டப் போரின் போது வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உதிரிப்பாகங்கள் நாளுக்கு நாள் களவாடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கைவிடப்பட்ட வாகனங்களில் மோட்டார் சைக்கிள்களே பெருமளவில் காணப்படுகின்றன. நாளுக்கு நாள் அவற்றின் உதிரிப்பாகங்கள் கழற்றப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

பொது மக்கள் தங்களின் வாகனங்களை அடையாளம் கண்டு அவற்றை எடுத்துச் செல்வதற்கான பொலிஸ் முறைப்பாட்டுக் கடிதம் பெறுவது தொடக்கம் பல்வேறு ஆவணங்களை ஒழுங்கு படுத்துவதற்கிடையில் குறித்த வாகனங்களின் பாகங்கள் கழற்றப்பட்டு விடுவதாக தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டு கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் சுமார் ஏழாயிரம் மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூவாயிரம் மோட்டார் சைக்கிள்களின் விபரங்கள் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் மோட்டார் வாகனப்பிரிவில் கணனியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏனைய வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு.

பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ்கட்சிகளின் அரங்கம் பலதடவைகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்ததை நடத்த வருமாறு தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் கட்சிகள் ஒருமித்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Jaffna_Hospitalயாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆறு அம்சக்கோரிகிகயை முன்வைத்து மீண்டும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி ஒரு மணி நேரம் பணிப்பறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று வியாழக்கிழமையும் ஒருமணித்தியாலம் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல், 11.30 மணியிலிருந்து 12.30 வரை அவர்கள் மிண்டும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து ஒரு மணிநேரம் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக உணவுத்திட்ட அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்தில் மூடப்படுகின்றன.

உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணத்தில் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள அதன் அலுவலகங்களையும் அது மூடியுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும், மொனராகலை அலுவலகங்கள் இதற்கமைய மூடப்பட்டுள்ளன. உலக உணவுத்திட்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்ததிட்டங்கள் தொடர்பாக எஞ்சிய தகவல்களை சேகரிப்பதற்கு மட்டும் மட்டக்களப்பில் அதன் உப அலுவலகம் ஒன்றை வைத்திருப்பதற்கு உலக உணவத்திட்ட
நிறுவனம் தீர்மானித்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத்திட்டத்தின் கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கி வந்த நாடுகள் தற்போது உதவிகளை நிறுத்தியுள்ளமையினாலேயே இவற்றை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உலக உணவுத்திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக உலக உணவுத்திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்.குடாநாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு.

யாழ்.குடாநாட்டில் மழையினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குடாநாட்டில் மட்டும் 8,363 குடும்பங்களைச் சேர்ந்த 30,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 744 குடும்பங்களைச் சேர்ந்த 5 760 மக்கள் பொது இடங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக யாழ்.குடாநாட்டில் 156வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

2,138 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நெடுந்தீவிலும் நல்லூரிலும் இருவர் வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு காயமடைந்துள்ளனர். இத்தகவல்களை யாழ். மாவட்டச்செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நிலவுவதால் இம்மாதம் நடுப்பகுதிவரை மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கிளி.பச்சிலைப்பள்ளியில் தை மாதத்திற்கு முன்னதாக எஞ்சியுள்ள அனைவரும் மீள்குடியேற்றப்படுவர்.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்வரும் தை மாதத்திற்கு முன்னதாக மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என பச்சிலைப்பள்ளி பிரதேசச்செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மிள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய நிலையில் 72 குடும்பங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பச்சிலப்பள்ளி பிரதேச்செயலர் பிரிவில் இதுவரை 2393 குடும்பங்களைச் சேர்ந்த 7426 மக்கள் மீள்குடியர்த்தப் பட்டுள்ளதாகவும் பிரதேசச் செயலர் தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 35 யாழ்.மாணவர்கள் 3 ‘ஏ’ திறமைச்சித்தி.

sri-lankan-students.jpgக.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று செவ்வாய்கிழமை இணைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் 35 பேருக்கு மூன்று ‘ஏ’ திறமைச்சத்தி கிடைத்துள்ளது.

வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுமங்கலி சிவகுமார் என்ற மாணவி கணிதப்பிரிவில் மூன்று ‘ஏ’ திறமைச் சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் என்ற மாணவன் உயிரியல் பிரிவில் மூன்று ‘ஏ’ சித்திபெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். வர்த்தகப் பிரிவிலும் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் புருசோத்தமக்குருக்கள் ராஜாராம் மூன்று ‘ஏ’ பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரன் மூன்று ‘ஏ’ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

யாழ்.இந்துக் கல்லூரியில் கணிதப்பிரிவில் 9 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். வேம்படி மகளிர் கல்லூரியில் கணிதப்பிரிவில் 4 பேரும், உயிரியல் பிரிவில் 3 பேரும், வர்த்தகப்பிரிவில் 2 பேரும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் ஒருவரும், உயிரில் பிரிவில் 3 பேரும் மூன்று ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கணிதம், உயிரியல், கலை ஆகிய பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் வர்த்தகப்பிரிவில் ஒருவரும் மூன்று ‘ஏ’ சித்தியும் பெற்றுள்ளனர்.

யாழ். வெள்ள அனர்த்தத்திற்கு அவசர நிதி ஒதுக்கிடு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அனர்த்த நிலமையை சீர்செய்வதற்காக அவசரமாக பத்து இலட்ச ரூபா நிதியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒதுக்கியுள்ளதாக யாழ். அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களில் மூவாயிரம் ரூபாவிற்கு குறைவாக மாதாந்தம் வருமானம் பெறும் மக்களுக்கே இந்த நிதியிலிருந்து சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து நிலம் ஈரமாகியுள்ள நிலையில் தங்கியுள்ள மக்களுக்கு பிளாஸ்ரிக் விரிப்புக்களை வழங்க அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.