செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உலகில் 11 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிர்ப்பலி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்  தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.92 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாது” – 800 படத்திலிருந்து விலகிய நடிகர் டீஜே !

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் இளவயது முரளிதரனாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் டீஜே அருணாசலம் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

எனது தாயாரும் ஈழத்தைச் சேர்ந்த தமிழர் தான். இப்படத்தின் அரசியல் காரணமாகத் தான் இந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாதென தயாரிப்பாளருக்கு தெரிவித்தேன். இத்தகைய சூழ்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை ‘800’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

‘அசுரனில்’ நடித்ததற்காக விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டேன், அவர் மீது மிகுந்த மரியாதையும் புகழும் கொண்டிருப்பதால் 800 ஐத் தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

800 முதல்பார்வை (Firs look) கடந்த செவ்வாய்கிழமை வெளியாகி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதால், சமூக ஊடகங்களில் மக்கள் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதியையும் இப்படத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் விவேக் மற்றும் சேரன் போன்றோரும்  விஜய் சேதுபதியை இப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் பலரும் ‘800’ திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” – விஜய்சேதுபதிக்கு நடிகர் விவேக் அறிவுரை !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இன்று(15.10.2020) தமிழ்நாட்டில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நடிகர் விவேக் இதுபற்றி தெரிவிக்கையில்,

“உங்கள் அனைவரதும் பார்வைதான் எனது பார்வையுமாக உள்ளது. கருத்து சொல்லும் அளவுக்கு அவ்வளவு பெரியமனிதனல்ல நான். இருந்தாலும் மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக டுவிட்டரில் #shameonvijaysethupathi என்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக இந்திய அளவில் எதிர்ப்பு பதிவுகள் இந்திய சமூகவலைத்தள மக்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடத்தை அண்மிக்கும் கொரோனாப்பரவல் – 10 லட்சத்து 90ஆயிரம் பேர் பலி !

 உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 83 லட்சத்து 46 ஆயிரத்து 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 84 லட்சத்து 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 830 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 85 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 90 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,20,805
பிரேசில் – 1,51,063
இந்தியா – 1,09,856
மெக்சிகோ – 83,945
இங்கிலாந்து – 43,018
இத்தாலி – 36,246
பெரு – 33,419
ஸ்பெயின் – 33,204
பிரான்ஸ் – 32,942
ஈரான் – 29,070
கொலம்பியா – 28,141

“விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும்’ – பிள்ளையான் நம்பிக்கை !

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்  குறிப்பிட்டுள்ளதாவது,

“11.10.2020 ஆம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு 5 வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தூண்டுதலுக்கு கிடைத்த வெற்றிக்கேடயம். அத்தோடு எல்லாவற்றையும் தலைமையேற்று நடாத்தி விட்டு ´எடுப்பார் கைப்பிள்ளையாக´ ஆட்சி செய்து என்னுடைய அம்மாவின் கோரிக்கை கடிதத்தை உதாசீனம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த வேளையில், சிறைக்கு நயவஞ்சகமாக அனுப்பப்பட்டேன். இருந்தாலும், என் மேல் நம்பிக்கை வைத்து, அனைத்து போலிப் பிரசாரங்களையும் முறியடித்து, வட கிழக்கில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகூடிய 54,198 விருப்பு வாக்குகளை அளித்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தை வழங்கினர்.

அன்பான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவனாக, விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் எனது அரசியல் பயணம் தொடர்கிறது என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி ஸ்கிறீன்களிலும், நாணயத்தாள்களிலும் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிருடன் வாழும்..? – அவுஸ்திரேலியா ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சித்தகவல்..!

உலகை அச்சுறுத்தி வரும் கொடிய வைரசான கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு புதிய தகவல்கள் நாளுக்குநாள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது தொடர்பாக பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அவ்வப்போது முடிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ரூபாய் தாள்களில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என தெரியவந்துள்ளது. தொலைபேசி ஸ்கிரீன்கள், எவர்சில்வர் பொருட்களிலும் 28 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
காட்டன் போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் அதிக காலம் உயிர்வாழ்கிறது.  வெப்பநிலையை 20 டிகிரி, 30 டிகிரி, 40 டிகிரி என வெவ்வேறு அளவுகளில் வைத்து வைரஸ் படிந்த பொருட்களை ஆய்வு செய்துள்ளனர். நேரடி சூரிய ஒளி வைரஸை விரைவாக செயலிழக்கச் செய்யும் என்று ஏற்கனவே ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், புற ஊதா ஒளியின் விளைவை அகற்றும் வகையில், இருட்டில் இந்த புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

19வயதுப் போலந்துப்பெண் வீராங்கனை இகா ஸ்வியாடெக் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் எதிரொலியாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது. முன்னணி வீராங்கணைகள் பலரும் கலந்து கொள்ளாத சூழலில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் தகுதிச் சுற்றில் போட்டியிட்டு வென்று மெயின் டிராவில் போட்டியிட்டார்.
தரவரிசை பட்டியலில் 54வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.

பரப்பரப்பான இறுதி போட்டியில் சோபியா கெனினை 6 – 4, 6 – 1 நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். போலந்து நாட்டில் இருந்து டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறும் முதல்வீரர் இகா ஸ்வியாடெக் என்பது குறிப்பிடதக்கது.

பிரெஞ்சு ஒபனில் மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் இகா ஸ்வியாடெக் நான்காம் இடம் பிடித்துள்ளார் இதற்கு முன் மோனிகா செலஸ் (16), அரங்ஸா சான்சேஸ் (17), ஸ்டெபி கிராப் (17) ஆகியோர் வென்றுள்ளனர்.

விராட் கோலியின் அதிரடியுடன் சென்னையை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர் !

ஐ.பி.எல் தொடரின் பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில்  வென்று முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில்  4 இலக்குகளை இழந்து 169 ஓட்டங்களைகள் எடுத்தது. அணித்தலைவர் கோலியின் அதிரடியால், கடைசி 5 பந்துப்பரிமாற்றங்களில் அந்த அணிக்கு 74ஓட்டங்க கிடைத்தன. கடந்த சில போட்டிகளில் சரியாக ஓட்டங்கள் குவிக்காத கோலி, சென்னைக்கு எதிராக அதிரடி காட்டி 52 பந்துகளில் 90 ஓட்டங்கள்  குவித்து அசத்தினார்.

பின்னர் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. டூ-ப்ளெஸிஸ் 10 பந்துகளில் 8 ஓட்டங்களுக்கும், வாட்சன் 18 பந்துகளில் 14 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய ராயுடு 42 ஓட்டங்களும், ஜெகதீசன் 33 ஓட்டங்களும் சேர்த்து ஆறுதல் அளித்தனர். அடுத்து வந்த தலைவர்  தோனி உட்பட யாரும் நிலைத்து நிற்காததால், சென்னை அணி 132 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து  37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸை பந்தாடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ் !

நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில்  வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க விரர்கள் ஷிகர் தவான் 5 ஓட்டங்களிலும், பிரித்வி ஷா 19 ஓட்டங்களிலும் ,ஆட்டமிழந்தனர். அணித்தலைவர்  ஷ்ரேயாஸ் 22 ஓட்டங்களிலும் , ரிஷப் பண்ட் 5 ஓட்டங்களிலும் ரன்அவுட் முறையில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய ஸ்டொய்னிஸ்  39 ஓட்டங்களும், ஹெட்மையர் 45 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 34ஓட்டங்களிலும், பட்லர் 13ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். தலைவர் ஸ்மித் 24 ஓட்டங்களிலும் ராகுல் திவாட்டியா 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலும்ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் அணி 19 புள்ளி 4 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு தன்னுடைய முழுமையான இலக்குகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  .

டெல்லி அணியில் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் டெல்லிஅணி வெற்றி பெற்றதன் மூலம்  புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

கொரோனா உயிர்ப்பலி நாளுக்கு நாள் அதிகரிப்பு – 10 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியது உயிர்ப்பலி !

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும்  பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 604 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 80 லட்சத்து 38 ஆயிரத்து 584 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 759 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 66 ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,17,661
பிரேசில் – 1,49,034
இந்தியா – 1,05,526
மெக்சிகோ – 82,726
இங்கிலாந்து – 42,592
இத்தாலி – 36,083
பெரு – 33,098
ஸ்பெயின் – 32,688
பிரான்ஸ் – 32,521
ஈரான் – 27,888
கொலம்பியா – 27,331