செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பாகம் 19: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் நிலை – கழகத்தில் பெண்களின் பாத்திரம்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 19 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 19

தேசம்: தோழர் நாங்கள் இவ்வளவு நேரம் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் இது ஒரு முற்றுமுழுதான ஆண்களுடைய அமைப்பு மாதிரி. ஆனால் நிறைய பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக பாசறைகளில் நிறைய பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீங்கள் முதல் ஒரு தடவை குறிப்பிட்டது போல மத்திய குழுவிலும் சரோஜினி இருந்திருக்கிறார்.

அசோக்: சரோஜினிதேவி இருந்தவர்.

தேசம்: அப்போ இந்த பெண்களுடைய பாத்திரம் எப்படி இருந்தது. உண்மையிலேயே மத்திய குழுவில் 20 பெயரில் ஒரே ஒருவர்தான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த சூழலும் அப்படித்தான் இருந்திருக்கு. பெண்கள் அரசியலுக்கு வருவது மிக குறைவாக இருந்த காலகட்டம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

அசோக்: நான் அதை பற்றி பெரிதாக கதைக்கவே இல்லை . எல்லாம் ஆண் ஆதிக்க சிந்தனைதான் நமக்கு. உண்மையில் பெண்கள் அமைப்பு பற்றி கதைக்காமைக்கு காரணம், இதுபற்றி தனியாக கதைக்கலாம் என்றிருந்தேன். அத்தோடு பெயர்கள் குறிப்பிட்டு உரையாடுவதில் எனக்கு தயக்கம் இருந்தது.

புளொட்டின் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாவட்டங்ளிலும் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பாக செல்வி, யசோ, நந்தா இருந்தவங்க. அப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். அவங்களுக்கும் அரசியல் பாசறைகள், வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பெண்ணியம் தொடர்பாகவும் தேசிய விடுதலைப்போராட்டம் வர்க்க விடுதலை இதன் இணைவு, முரண்பாடு, போதாமை தொடர்பான விமர்சனங்ளோடு கூடிய அரசியல் அறிவை பெண்கள் அமைப்பின் தோழர்கள் பலர் பெற்றிருந்தனர். அந்தளவிற்கு அரசியல் சிந்தனை இருந்தது. ஏனென்றால் மாணவர் அமைப்புகளில் இருப்பவர்கள் பெண்கள் அமைப்புகளில் இருப்பார்கள். கூடுதலாக பெண்கள் அமைப்புகளில் கல்வி ஊட்டல்கள் நடந்தது.

அந்த நேரத்தில் தோழி என்றொரு பெண்ணிய அரசியல் சஞ்சிகை வெளியிடப்பட்டது. செல்வி அதற்கு பொறுப்பாக இருந்தார். அரசியல்பார்வை கொண்ட கலை, இலக்கிய சஞ்சிகையாக அது இருந்தது. அதைப் பார்த்தீர்கள் என்றால் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆக்கங்கள் அதில் வெளிவந்துள்ளது.

மத்திய குழுவில் ஒரு பெண் இருந்தது தொடர்பாக கேட்டீர்கள் தானே. மத்திய குழுவில் பெண் பிரநிதித்துவம் மிக மிக குறைவு. தோழர் சரோஜினிதேவி மாத்திரம் தான் இடம் பெற்றிருந்தார். உண்மையிலேயே அதை கூட்டியிருக்கலாம். நிறைய பெண்கள் இருந்தவர்கள். திறமை வாய்ந்த அரசியல் வளர்ச்சி கொண்ட பெண் தோழர்கள் தளத்தில் இருந்தார்கள். உண்மையிலேயே 20 பேர் கொண்ட மத்திய குழுவில் குறைந்தபட்சம் நான்கு பேராவது பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் தளத்திலிருந்தார்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதைப் பற்றி யாரும் கதைக்கவும் இல்லை. நான் உட்பட எல்லார்கிட்டயும் அந்தத் தவறு இருக்கு. கட்டுப்பாட்டு குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மத்திய குழுவில் இருந்தவர்கள் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். அது நடக்கல்ல.

தேசம்: அது மட்டும் இல்லை. இருந்த அந்தப் பெண் தோழருக்கும் பெரிய பாத்திரம் கொடுக்கப்படவில்லை. சம்பிரதாயத்துக்கு அவர்களை வைத்திருந்த போல. சரோஜினிதேவி பற்றி ஒரு குறிப்பான அறிமுகத்தை வைக்கிறது நல்லம் என்று நினைக்கிறேன்.

அசோக்: அவர் ஆரம்பகால உறுப்பினர். காந்தியத்துக்கூடாக வந்தவர். தோழர் சண்முகலிங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மலையகத்தில் வேலை செய்த ஒரு இடதுசாரி தோழர். காந்திய குடியேற்றங்களில் முன்னணியில் இருந்த தோழர் அவர். அவர் சரோஜினிதேவியினுடைய தம்பி. தோழர் சண்முகலிங்கம் கனடாவில் இறந்திட்டார். சரோஜினிதேவி இப்ப கனடாவில் தான் இருக்கிறார்கள்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் பார்த்தனுடைய ஜென்னியும் முக்கியமான ஆளாக இருந்தவா.

அசோக்: குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஜென்னி இந்தியாவில் கம்யூனிகேஷன் பயிற்சி முடித்து தளத்துக்கு வாராங்க. ஒரு கட்டத்தில் தளத்துக்கான பெண்கள் அமைப்பை அவர்தான் பொறுப்பெடுக்கிறார்.

தேசம்: இதில உண்மையா பெண்களின் பங்களிப்பை பொறுத்தவரைக்கும் ஆக பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் பெண்கள் பொறுப்பாக போடப்படுதா? விடுதலைப் புலிகளிலும் இதே பிரச்சனை தானே இருந்தது. விடுதலைப்புலிகள் பெண்களும் சரிசமமாக யுத்தகளத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட பதவிகள் பொறுப்புகள் என்று வரும்போது பெண்கள் அமைப்புக்கு மட்டும்தான் அவர்கள் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அரசியல் பிரிவுகளில் அவர்களுடைய பாத்திரம் பெருசா…

அசோக்: ஒரு காலகட்டத்தில் புளொட்டில் முரண்பாடுகள் வந்த பிற்பாடு மாநாட்டுக்கு முன்னர் என்று நினைக்கிறேன் நேசன் ஆட்கள் வெளியில போனபிறகு நேசனின் இடத்துக்கு பெண் தோழர் தான் நியமிக்கபட்டவர். வனிதா என்று நினைக்கிறேன்.

தேசம்: யாழ் மாவட்ட பொறுப்பாளராக

அசோக்: ஓம். யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளராக இருந்த வங்க.

தேசம்: இதில 85 ஆம் ஆண்டு கால கட்டங்களில் என்று நினைக்கிறேன் மணியம் தோட்டத்தில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அது புளொட் என்று சொல்லியும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியத்தில் புஷ்பராஜா கூட பதிவு செய்திருக்கிறார். அது சம்பந்தமாக நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்.

அசோக்: மணியம் தோட்டத்திலிருந்து பெண்களுடைய சடலம் எடுக்கப்பட்டதாக கதை ஒன்று வந்தது. ஆனால் அதற்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை.

தேசம்: அப்படி உடலங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா?

அசோக்: எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் புளொட் என்று சொல்லி வதந்தி உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அதற்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறேன். அதற்கான சாத்தியம் இல்லை.

தேசம்: மாவட்ட பொறுப்பாளர்களாக இருந்த நேரம் அரசியல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடைய பாத்திரம் எவ்வாறு மதிக்கப்பட்டது? அது அங்கீகரிக்கப்பட்டதா? அதற்கான அங்கீகாரம் இருந்ததா?

அசோக்: எல்லா மாவட்டங்களிலும் விடுதலைக்கான உத்வேகம் இருந்தது தானே. அந்த அடிப்படையில் பெண்களின் பாத்திரம் மதிக்கப்பட்டது. பெண்கள் தொடர்பாக ஒரு வித்தியாசமான, இரண்டாம் பட்சமான பார்வை இருக்கவில்லை. சமநிலையான போக்கு, கண்ணோட்டம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

தேசம்: எல்லா இயக்கங்களுக்குள்ளையும் நடந்த பல்வேறு முரண்பாடுகள் சகோதர படுகொலையாக இருக்கட்டும் எல்லாம் முரண்பாடுகளிலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும் கூடுதலாக அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருக்கு.

அசோக்: பிற்காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கு. இயக்கங்கள் உடைவடைந்து பெண்கள் வெளியேறின பிற்பாடு இந்த சமூகம் பார்த்த பார்வை ஒரு சிக்கலான பார்வை. அது ஆய்வு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு குடும்ப பாதுகாப்போ சமுகப் பாதுகாப்போ எதுவுமே கிடைக்கவில்லை. உடல் ரீதிலும் உள ரீதிலும் இப் பெண்கள் மிக மிக பாதிக்கப்பட்டடார்கள். நாங்கள் இந்த சமூகம் கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

தேசம்: 2010ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு விடுதலை புலிகள் இருந்த பெண்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கு. அந்த வகையில் புளொட் போன்ற அமைப்பில் நிறைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்புகள் வெற்றிகரமாக செயற்படாமல் தோல்வியுற்ற போது இந்தப் பெண்கள் எப்படி வீடுகளுக்குப் போய் … அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அசோக்: நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல பெண்களுக்கு எல்லா இயக்கங்களிலும் இது நடந்துள்ளது .வீடுகளுக்கு போனபோது வீட்டுக்கார ஆட்கள் விரும்பினாலும் கூட சுற்றியிருந்த சமூகம் அந்தப் பெண்கள் மீது ஒரு வித அபிப்பிராயம் கொண்டு இருந்ததால அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது. புளொட்டை பொறுத்தவரை இவ்வாறான நிகழ்வுகள் மிகக்துறைவு. நாங்கள் பெண்கள் அமைப்பினை உருவாக்கம் செய்தபோது தளத்தில்மிக கவனமாக இருந்தோம். முதலில் அவர்கள் முழுமையாக எங்களைப் போன்று விட்டை விட்டு வெளியேறி இயக்கதிற்கு வரும் மனநிலையை மாற்றினோம். வெளியேற்றத்தை எப்போதும் நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அப்படி வெறியேறி வந்த ஒருசிலரை அவர்களை தொடர்ச்சியான அவர்களின் கல்வியை தொடர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்தம். இவர்கள் மாணவர் அமைப்பிலும் இருந்தபடியால் இது எங்களுக்கு சாத்தியமானது.

இதில் தோழர் குமரனின் ஒத்துழைப்புமிக மிக பெரியது. கடைசி காலங்களில் சில தோழிகளை எங்களுடைய தோழர்களே பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையில் திருமணம் செய்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ஆணாதிக்க நிலவுடமை சமுக கொடுர மனநிலையை இன்னும் விடாப்பிடியாக தக்க வைத்திருக்கும் சமூகம் எங்களுடையது. இது பற்றி நிறைய கதைக்கலாம். ஆனால் அது என் மன உளச்சலை இன்னும் கூட்டுவதாக போய் விடும். இது ஒரு அரசியல் சமூக ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம். ஏன் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று. ஏனென்றால் எங்களுக்கு சமூகத்துக்கான மனோபாவம் ஒன்று இருக்குதானே. அந்த கோணத்தில் ஆராயவேண்டும் நிச்சயமாக.

தேசம்: திருமணம் செய்து போயிருந்தாலும் பிற்காலத்தில் கூட, அண்மையில் ஒரு பெண் தற்கொலை செய்திருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தப் போராட்ட சூழலா அல்லது சூழல் ஏற்படுத்திய தாக்கமா அதைப்பற்றி நீங்கள் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: நான் முதலில் சொன்னதுதான். புளொட் ஒரு இடதுசாரி இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் புளொட்டில் இருந்த தோழர்கள் எல்லாம் முற்போக்காக இருப்பார்கள் என்று நாங்கள் கருதினால் அது தவறு. இருந்த தோழர் ஒரு பெண்ணையோ தோழியையோ திருமணம் செய்த போது அந்தக் குடும்பங்களில் முற்போக்காக இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. ஏனென்றால் நான் சொன்னேன் தானே முற்போக்காக வாழ்வது என்பது ஒரு கோட்பாடு சார்ந்த வாழ்க்கை முறைமை. அது எமது அகநிலையோடும் புற வாழ்வோடும் இணைந்தது. நாங்கள் அரசியல் சமூக தளங்களில் முற்போக்கு என்ற முகமூடியை தரிப்பது என்பது மிகச் சுலபம்… ஆனால் தனிப்பட்ட குடும்பவாழ்வில் முற்போக்கு முகமுடியை நீண்ட காலத்திற்கு அணிந்து ஏமாற்ற முடியாது. எப்படியும் எங்க உண்மை முகம் தெரிந்துவிடும். நாங்க மிக விரைவில அம்பலபட்டு போவம்.

இங்க எங்களுக்கு நடந்த சூழல் துரதிஷ்டவசமானது. நாங்கள்தான் முற்போக்கு முகமூடிகளை தரித்துக் கொண்டமேயொழிய உண்மையான இடதுசாரிகளாகவோ மாக்சிச ஐடியோலொயி கொண்டவர்களாகவோ அதை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவோ நாங்க இருக்கல்ல. அனேகமான குடும்பங்களில் வெறும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருந்திருக்கிறோம். குடும்பத்தில் சமநிலையைப் பேணாமை. பெண்களுக்கான உரிமையை கொடுக்காமை. சினேகிதியாக தோழியாக பார்க்கிற தன்மை மிகக் குறைவாகத்தான் இருந்தது.

தேசம்: மற்றது அண்மையில் நீங்கள் எழுதி இருந்தீர்கள் அது ஏற்கனவே ஜென்னி அவர்களும் எழுதி இருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த பெண் உறுப்பினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பற்றி. அது சம்பந்தமாக சுருக்கமாக சொல்ல முடியுமா. அந்த சம்பவம் பற்றி. பெயரைக் குறிப்பிடாமல் சொல்லலாம்.

அசோக்: தீப்பொறி பற்றிய உரையாடலுக்குப் பிறகு கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கக் கோரி மட்டக்களப்பில் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

பசியும் வன்முறையும் இல்லாத தன்னிறைவான வாழ்வு எமக்கு வேண்டும். வன்முறைகளை நிறுத்துவதற்கு அரசினதும் அரசியல் ரீதியானதுமான முன்னெடுப்பு உடனடியாக எமக்கு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இன்றைய தினம் மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகளால் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினுடைய ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற இப் பேரணியானது மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் இருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்றது.பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வாரத்தின் ஒரு பகுதியாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இப் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் பறைமேளம் அடித்து, நீளப் பேரணியாகச் சென்றனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வார நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது.பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் உணவுப் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதுடன் உணவு விநியோகத்தினையும் இலகுபடுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பசி பட்டினியிலிருந்து மக்களை விடுவிக்க சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டங்களை அரசு உடனடியான அமுல்படுத்த வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாத உள்ளுர்வளப் பொருளாதார முறைமையை பிரதானமாக்கும் நடைமுறைக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பாவித்து கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பாதைகளை பேரணியில் சென்றவர்கள் ஏந்தி சென்றனர். இந் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

முடிவுக்கு வருகிறது கொரோனாவின் ஆட்டம் – ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள மகிழ்வான தகவல் !

“மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்

பிரியந்தகுமார கொலை தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லை – சியல்கோட் சட்டத்தரணிகள் அறிவிப்பு !

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாக போவதில்லையென சியல்கோட் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன்,  இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பில் அச்சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரியந்த குமார கொலை தொடர்பில் நேற்று மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சந்தேக நபர்கள் குஜ்ரன்வாலா பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 13 நாட்கள் காவல்துறையின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, பிரியந்தகுமார பணியாற்றிய ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 345  ஊழியர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் தாக்கிக் கொலைசெய்யட்டு தீயிடப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம், கடந்த 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது இறுதிக் கிரியை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வருகிறது எங்கலா மெர்கர்ஸின் 31 வருட அரசியல் வாழ்க்கை – ஜேர்மனின் புதிய அதிபராக ஒலாஃப் ஸ்ச்சோல்ஸ் !

ஜேர்மனியின் புதிய அதிபராக ஒலாஃப் ஸ்ச்சோல்ஸ் அந்த நாட்டு நாடாளுமன்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

16 வருடங்கள் அந்த நாட்டு அதிபராக கடமையாற்றிய எங்கலா மெர்கர்ஸின் 31 வருட அரசியல் வாழ்க்கை  நிறைவுக்கு வருகின்றது. இந்தநிலையில் 63 வயதான ஜேர்மனின் புதிய அதிபருக்கு அந்த நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

அவர் முன்னாள் அதிபர் எங்கலா மெர்கர்ஸின் ஆட்சி காலத்தில் துணை அதிபராக கடமையாற்றியிருந்தார்.

நாடாளுமன்றில் அவருக்கு 395 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிராம மக்கள் 11 பேரை உயிரோடு கொளுத்திய மியன்மார் இராணுவம் – வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சர்வதேசம் !

மியான்மரில் கிராம மக்கள் 11 பேரை இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்துச் சென்ற இராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, இராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினர் 11 பேரை பிடித்து இராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதேவேளை, கடந்த 5ஆம் திகதி யாங்கூன் நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அந்நாட்டு இராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வரும் இராணுவம், இதுவரை 1,300 இற்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம்.” – பிரியந்த குமாரை எரித்தவர் வாக்குமூலம் !

பாகிஸ்தானில் உள்ள ராஜ்கோட் தொழிற்சாலையின் முகாமையாளர் பிரியந்த குமாரவின் உடலுக்கு தீ வைத்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொலைக்கும்பலின் தலைவரான முகமது கலாம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் ஆட்களை ஒன்றுதிரட்டி முகாமையாளரின் உடலுக்கு எண்ணெய் ஊற்றி “அல்லாஹூ அக்பர்” என்று கூறி கொளுத்தினோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஹமீட் மீரியும் இந்த வாக்குமூலத்தை அவர் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பாடசாலைகளில் பெண்கள் உயர்தரம் கற்க தடை – தலிபான்கள் அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உயர்தரங்களில் கல்வி கற்பதற்கு தலிபான்கள் விதித்துள்ள தடைக்கு அந்த நாட்டின் பாடசாலை மாணவிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தங்களது கல்வியை தொடர முடியாமல் போனமையானது மரண தண்டனையைப் போல் உணர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர் வெளியேறியதை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். இதனையடுத்து அங்கு ஆரம்ப பிரிவு மாணவிகளுக்கு மாத்திரம் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

விரைவில் உயர்தர மாணவிகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என தலிபான்கள் உறுதியளித்த போதிலும், காபூல், நங்ஹகார் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள உயர்தர வகுப்புகள் அடங்கிய மகளிர் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு மற்றும் வறுமை காரணமாக பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தயங்குவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போன மாவீரன் நெப்போலியனின் ஆயுதங்கள் !

மாவீரர் நெப்போலியன் போனபார்ட்டின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றிவாகையும் சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை தன் வசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு போர்களை தொடுத்தார்.
1799-ம் ஆண்டு அவர் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்திய போது எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் 5 ஆயுதங்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
வாள் மற்றும் 5 ஆயுதங்கள் 1.5 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உள்பட ஆயுதங்கள் 2.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
மாவீரர் நெப்போலியனின் போர்வாள் ரூ. 21.11 கோடிக்கு ஏலம்இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறியதாவது:-
தொலைபேசி மூலம் ஏலம் முடிக்கப்பட்டது. மாவீரர் நெப்போலியனின் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குபவர் மிகவும் அரிதான வரலாற்றை தனது வீட்டுக்கு எடுத்து செல்கிறார்’ என்றார்.
நெப்போலியனின் இந்த ஆயுதங்கள் அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குனராக இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் தயாரிக்கப்பட்டது. பேரரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆண்டோச் ஜூனோட்டிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது.
ஆனால் ஜெனரல் மனைவி தனது கடனை அடைப்பதற்காக வாளை விற்றுள்ளார் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு – அனுமதியளித்துள்ள அரசாங்கம் !

சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அந்த இயந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதுதான்.

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம் || Death  Pod to commit suicide without pain in Switzerlandசுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் ‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த எந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த எந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடுமாம். அடுத்தாண்டு முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.