செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05)  சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 40 பேர் பலி !

பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று (30) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த குண்டு தாக்குதல் பாகிஸ்தானின் பஜௌர் நகரில் அரசியல் கூட்டத்தை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொது மக்களிடமிருந்து சுமார் 11,000 முறைப்பாடுகள் !

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதனூடாக ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான இயலுமை தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் மூன்றாவது நாள் நடைபவனி மன்னாரில் !

மலையக எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை   பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான நடைபவனி மன்னாரை வந்தடைந்தது.

இந்த நடைப்பயணம் இன்று காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது.

அப்போது மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பேரணி காணப்பட்ட இடத்துக்கு சென்று, நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆசி வழங்கியதோடு தொடங்கிய நடைபவனி, முற்பகல் 11 மணியளவில் மன்னார் நகரை அடைந்தது.

அதனையடுத்து, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தை சென்றடைந்த பேரணியினரை மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.

இந்த நடைபவனியின் 4ஆம் நாளான நாளை திங்கட்கிழமை (31) காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து முருங்கன் நோக்கி பேரணியினர் பயணிக்கவுள்ளனர்.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளில், ‘மலையக எழுச்சிப் பயணம்’ என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடை பயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த  வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், காலை 11  மணியளவில் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்தது.

மலையக மக்கள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்களின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை அந்த தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதோடு வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்நிலையில், நடைபயணம் மூன்றாம் நாளான இன்றைய தினம் (30) காலையில் மீண்டும் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகி, மன்னார் நகரை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்தில் தூக்குதண்டனை !

இலங்கையைசேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத் தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

 

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் 2015 இல் மசூதியொன்றின் மீதுஇடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்துபேருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

 

குவைத்தின் மத்திய சிறைச்சாலையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மசூதி தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவர் போதைப்பொருள் வர்த்தகர் இலங்கையை சேர்ந்த தண்டனை வழங்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் மற்றையவர் இலங்கையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது தொலைபேசி தேவையே இல்லை – ஐ.நாடுகள் சபை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசி மாணவர்களின் கற்றல் நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிபயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் தொலைபேசிகளின் திரையை நீண்ட நேரம் பார்ப்பதன் மூலம் குழந்தைகளின் உணர்ச்சி ஸ்திரத்தன்மை முறிவு ஏற்படுவதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு கூறியுள்ளது.

இந்த காரணிகளின் அடிப்படையில் ஸ்மார்ட் தொலைபேசிகளை பாடசாலைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகளைப் பார்ப்பது குழந்தைகளின் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக யுனெஸ்கோ சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, பாடசாலைகளில்; கையடக்க தொலைபேசிகளின் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

மேலும் புதிய விடயங்கள் எப்போதும் சிறந்தவை அல்ல என்றும், கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காமல் கல்வியில் ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தை’ பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

கோவிட்-19 காலப்பகுதியில் ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் கற்பிப்பது பயனுள்ளதாக இருந்தாலும், வகுப்பறையில் கற்பிக்கும் முறையால் உருவாகும் குழந்தைக்கும் ஆசிரியருக்கும் இடையிலான நெருங்கிய உறவு ஒரு மாணவருக்கு மிகவும் முக்கியமானது என்று யுனெஸ்கோ கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, கல்வி முறைமைகளில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது” – கனடா பிரதமர்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன.இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

கறுப்பு ஜூலையின் கொடுமை பதற்றத்தை அதிகரித்து சில தசாப்தங்கள் நீடித்த ஆயிரக்கணக்கானோர் மரணமாகிய ஆயுதமோதலாக மாறியதுடன்  இதன் மனப்பாதிப்பை சமூகங்கள் தற்போதும் அனுபவிக்கின்றன.

சோகமான இந்த நாளில் நாம் தமிழ் கனேடியர்களுடனும் உலகம் எங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடனும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்தி தப்பிப்பிழைத்தோரை கௌரவிப்பதுடன் வெறுப்பிற்கும் வன்முறைக்கும் எதிராக எப்போதும் குரல்கொடுப்பதற்கு உறுதியுடன் இருப்பதை மீள வலியுறுத்துகின்றோம்.

மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்து இவ்வாண்டில் இந்த நாள் முதல்முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது.

பத்திரிகை துறையிலும் Ai – கூகுள் நிறுவனம் புதிய முயற்சி!

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை 2027 டிசம்பர் 31 வரை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19) தீர்மானித்துள்ளது.

 

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் இந்த வரிச் சலுகை முடிவடைய இருந்தது.

 

புதிய ஜிஎஸ்பி பிளஸ் முறைமை தொடர்பான கலந்துரையாடல்கள் தொடரும் அதேவேளையில் இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை வரிச் சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 3.2 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளதாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆப்கான் பாடகி பாகிஸ்தானில் வைத்து சுட்டுப்படு கொலை !

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத ஆயுத தாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி(38). இவர் பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

பாடகி ஹசிபா நூரி (வயது38) கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கான் தலிபான்களிடம் இருந்து தப்பித்து, பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஒரு நேர்காணலில், தலிபான்களால் தனக்கும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி பேசியுள்ளார். அவர் தனது தாயுடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 14 இலட்சம் அகதிகள் பாகிஸ்தானில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. பாடகி ஹசிபாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.