செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள்.”- லண்டன் டைம்ஸ் அறிக்கையால் பரபரப்பு !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்தாக பிரித்தானிய ஊடகமான த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“கூட்டம் முடிந்தது, சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்சேக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” என ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் 6 மாதங்களில் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் இதற்கு முன்னர் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை பெயரிடப்படாத மூத்த அரசாங்க அதிகாரி, இரண்டாவது விசில்ப்ளோயர் தாக்குதல் தரிகளுடன் சாலியின் உறவுகள் பற்றிய மௌலானாவின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

மேலும் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு, பொலிஸ் விசாரணைகளை மீண்டும் மீண்டும் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

2019ல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட போதும், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ அதை வெளியிட மறுத்துவிட்டார். மேலும் மௌலானா பல ஆண்டுகளாக ராஜபக்சக்களுக்கு விசுவாசமான அரசியல்வாதியான பிள்ளையானுக்கு உதவியாளராக பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு  மீட்பு விவகாரத்தில் மத்திய அரசே முடிவு செய்யலாம்; நீதிமன்றம் தலையிட முடியாது.” – இந்திய நீதிமன்றம்

கச்சத்தீவு  மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம்  தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, தலைமை நீதிபதி இதனை அறிவித்து வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

1974-இல் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு  ஒப்படைக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக  The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வாக 1974 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

எனினும், கச்சத்தீவு  மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய உயர்  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இந்தியா !

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த ரொக்கெட் 11:50 மணி அளவில் பறக்க ஆரம்பித்தது.

பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை அடைய 109 நாட்கள் ஆகும்,

ஆதித்யா-எல்1 கப்பலில் சூரிய செயல்பாட்டின் நீண்ட தூர ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கருவிகள் உள்ளன. இதன் பணி 6 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரனின் தென் துருவப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த வாரம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது.

ஆழமான விண்வெளியை ஆராயும் மற்ற நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை இந்தியா வேகமாகப் பிடிக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1975 முதல் கிட்டத்தட்ட 100 ரொக்கெட்டுகளை ஏவியுள்ளது,

இலங்கையில் பின்தங்கிய சமூகப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான கொள்கை வகுப்பு மற்றும் செயற்திட்டங்களை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் !

இலங்கையில் நலிவுற்ற நிலையில் உள்ள பின்தங்கிய சமூகப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான கொள்கை வகுப்பு மற்றும் செயற்திட்ட உருவாக்கத்தில் அரசாங்கம் விசேட கவனஞ்செலுத்தவேண்டுமென புத்திஜீவிகள் மற்றும் பல்துறைசார் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித அபிவிருத்தி முன்முயற்சி ஆகியவற்றினால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள், கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பல்பரிமாண அடிப்படையில் மக்களை நலிவுற்றவர்களாக உணரவைக்கும் காரணிகள் மற்றும் அவை பொதுமக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் கடந்த 2022 நவம்பர் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் தேசிய குடித்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் 25,000 குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோடா, ‘அண்மையகாலங்களில் நிதியியல் கட்டமைப்பானது மிகவேகமாகச் சுருக்கமடைந்துவரும் நிலையில், பல்பரிமாணத் தாக்கங்கள் பற்றிய புரிதலை மேலும் ஆழமாக்குதல் என்பது செயற்திறன்மிக்க கொள்கை உருவாக்கத்துக்கான முதற்படியாகும்’ என்று சுட்டிக்காட்டினார். அந்தவகையில் இலங்கை தொடர்பான இவ்வறிக்கையானது நலிவுற்ற சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய கொள்கை உருவாக்கம் மற்றும் செயற்திட்ட வடிவமைப்பில் மிகவும் வலுவான தாக்கத்தைச் செலுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை இந்த ஆய்வறிக்கைத் தயாரிப்பில் பணியாற்றிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித அபிவிருத்தி முன்முயற்சியின் பணிப்பாளர் கலாநிதி சபினா அல்கிரே, ‘பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம்’ என்ற அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள மற்றும் கண்டறியப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். ‘இலங்கையில் 55.7 சதவீதமானோர், அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.3 மில்லியன் மக்கள் பல்பரிமாணப் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர் என்ற சிக்கலான விடயத்தை இவ்வறிக்கை வெளிச்சம்போட்டுக் காண்பித்துள்ளது’ என்று சுட்டிக்காட்டிய அவர், இந்நிலைவரத்தை உரியவாறு கையாள்வதற்கு கடன்களின் அளவைக் குறைத்தல் மற்றும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கான முற்கூட்டிய தயார்நிலையை வலுப்படுத்தல் என்பன இன்றியமையாதனவாகும் என்று வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோடாவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாட்டின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கும் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பின்தங்கிய சமூகங்களைச்சேர்ந்த மாணவர்களின் இயலுமையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தியதுடன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 17 ஐயும் அடைந்துகொள்வதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.

‘நான் கல்வியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது நாடு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள் மற்றும் சேவை விநியோகங்களும் தடைப்பட்டிருந்தன. இருப்பினும் நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இச்சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு முன்வந்தோம். அதன்படி நன்கொடையாளர்களின் 70 சதவீத உதவியின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைத்துணி என்பன இலவசமாக வழங்கப்பட்டன. அவ்வுதவியை இவ்வருடம் 100 சதவீதமாக உயர்த்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதேபோன்று அடுத்த சில வருடங்களில் சுமார் 3000 பாடசாலைகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமையளித்துத் திறம்படக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இருப்பினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எமது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டதெனச் சுட்டிக்காட்டியதுடன் எனவே அரசியல்வாதிகள் ‘அதனைச்செய்வோம், இதனைச்செய்வோம்’ என்று கூறுவதைவிடுத்து, வகுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு செயல்வடிவம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இவ்வாய்வறிக்கை தொடர்பில் நடைபெற்ற குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்ற கலாநிதி ரமணி குணதிலக, பி.எஸ்.எம்.சாள்ஸ், வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன ஆகியோர் பின்தங்கிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நிலவும் யதார்த்தபூர்வமான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை விரிவாக முன்வைத்தனர்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான மேற்படி சந்திப்பில், மேற்படி  கொள்கை நடவடிக்கைகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நீண்டகால சுற்றாடல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்புடன் இந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு இணைந்துள்ளன என்பன பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இதன்போது அமைச்சர் வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை  வலியுறுத்திய அவர், இந்த சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் பட்டியலிட்டுள்ளார்.மேற்படி இலக்குகளை அடைவதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா – எதிர்க்கும் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக்கப்படும். மசோதா நிறைவேற்றியதன் மூலம், சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. உறுப்பினர் ஆயிஷா வஹாப் அறிமுகப்படுத்திய இந்த மசோதாவிற்கு ஏராளமான சாதி சமத்துவ மக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.

 

எஸ்.பி.403 சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த வஹாப், நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றார். அதேவேளையில் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி (CoHNA) கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளது.

பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ ஆடையை அணியத் தடை – பிரான்சில் புதிய கட்டுப்பாடு !

பிரான்ஸ் பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமுலுக்குக் கொண்டுவரப்படும்” என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்பது சட்டமாக உள்ளது. அதன்படி பெரிய அளவிலான சிலுவைகள், யூதர்களின் கிப்பாஸ், முஸ்லிம்கள் பயன்படுத்தும் தலையை மறைக்கும் முக்காடு என எதுவும் அனுமதிக்கப்படுவதுல்லை. இந்நிலையில், இஸ்லாமிய சிறுபான்மையினச் சிறுமியர் அணியும் அபயா எனப்படும் முழு அங்கியை அச்சமூக சிறுமிகள் அரசுப் பள்ளிக்கு அணிந்துவர தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

முன்னதாக, கடந்த 2004-ல் பள்ளிகளில் தலைக்கு மட்டும் அணியப்படும் முக்காடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 2010-ல் முகத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸின் 50 லட்சம் முஸ்லிம்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இந்தச் சூழலில் அபயாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “அபயா எனப்படும் முழு அங்கியை இனிமேல் பள்ளிச் சிறுமிகள் அணிந்துவர அனுமதிக்கப் போவதில்லை. ஒரு குழந்தை பள்ளி வகுப்பறைக்குள் நுழையும்போது அதன் புறத்தோற்றத்தைக் கொண்டு குழந்தையின் மதத்தை கண்டுபிடிக்கும்படி அவர்கள் ஆடை, அணிகலன்கள் இருக்கக் கூடாது” என்றார். ஏற்கெனவே பிரான்ஸில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடையிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள பிரான்ஸ் நாட்டின் முஸ்லிம் சிறுபான்மையின அமைப்புகளின் கூட்டமைப்பான தி பிரென்ச் கவுன்சில் ஆஃப் முஸ்லிம் ஃபெயித், ஆடை மட்டுமே மத அடையாளம் ஆகிவிடாது. ஆகையால் அபயா தடை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில் அந்நாட்டு கல்வி அமைச்சரின் இந்த புதிய கெடுபிடி பலதரப்பு மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் அதிருப்தியில் உள்ளனர்.

EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டம் – குவிக்கப்பட்ட பாதுகாப்பு படை !

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) இந்த போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

குறித்த போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு இன்று (28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

 

சிம்பாப்வேவின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் மங்கக்வா !

ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேவில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் திகதிகளில் நடந்தது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

 

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.

 

இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறும்போது, சரியான சரி பார்ப்பு இல்லாமல் அவசர மாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார். தேர்தல் 23-ந்திகதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது. ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜனாதிபதி தேர்தல் முடிவு நாளை வெளியிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே அரசு, இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன்பின் இடைக் கால அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனால் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை எம்மர்சன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். தற்போது 2-வது முறையாக எம்மர்சனின் வெற்றியை எதிர்க்கட்சி ஏற்காததால் போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற போது முக்கிய பதவியிலிருந்த சந்தோஷ் ஜா !

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில்  வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அமெரிக்க – இந்திய அணு ஆயுத பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொலிஸார் எடுத்த mugshot புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருக்கிறார் – ஜோ பைடன்

போலீஸார் எடுத்த மக்-ஷாட் (பொலிஸ் பதிவு படம்.) புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீஸார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை போலீஸார் எடுத்த ‘மக்-ஷாட்’ புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவியது.

 

இந்த நிலையில், ட்ரம்ப்பின் புகைப்படம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ட்ரம்ப் மிகவும் அழகான நபர் என்று பதிலளித்துவிட்டு சென்றார்.