செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வேகமெடுக்கும் குரங்கு அம்மை – சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு!

உலகில் 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை நோய் தீவிரமடைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் குரங்கம்மை காய்ச்சல் பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களென 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் கொங்கோ நாட்டில் 96 சதவீத அளவு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, கொங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசாக இது பரவி வருகிறது.

கொங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே கையிருப்பில் உள்ளன.

இது பற்றி உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும் போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரஸ், ஆபிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல  ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2024 லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதன் படி, நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது தண்டனை காலம் எவ்வளவு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

“இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” – இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனுஸ்

“பங்களாதேஷில் மேற்கொள்ளப்பட்ட இந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யுனுஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனஸ், இந்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

பங்களாதேஷ் கலவரத்தின்போது வன்முறையாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கியதில், இந்து மதஸ்தலங்கள், இந்துக்களின் வீடுகள், வணிக வளாகங்கள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலகியது முதல் பங்களாதேஷில் சிறுபான்மையின மக்கள் மீது 205 தாக்குல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், டாக்காவிலுள்ள தாகேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார்.

இதனையடுத்து இந்து அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் 17 கோடி மக்கள் தொகையில், 8 வீதம் பேர் இந்துக்கள் என்ற நிலையில், அவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் என கருதியே கலவரக்காரர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள முகமது யூனுஸ், அனைவரும் சம உரிமைகளை கொண்ட மக்கள் என்றும் மக்களுக்குள் வேறுபாடுகளை உருவாக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் சிதைந்ததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் அவை சரி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனா அரசு ஆட்சி கவிழ்ப்பின் பின் பங்களாதேஷில் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் !

பங்களாதேஷில் வாழும் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை  கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பங்களாதேஷில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டன பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இந்து, பௌத்த, கத்தோலிக்க ஒற்றுமை குழுவொன்று இந்த பேரணியினை ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில்  ஷேக் ஹசீனா  அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் ஆட்சிகவிழ்ப்பு கலவரம் – அமெரிக்காவே பின்னணியில் என்கிறார் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷை அமெரிக்காவை  ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பதவி விலகுவதற்கு முன்னர் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற அவர் முடிவு செய்தார். ஆனால், அவரது வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டதால், உடனடியாக கிளம்பும்படி பாதுகாப்பு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் உரையாற்றாமல் அவர் அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்தார். இந்நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்ற இருந்த குறிப்பு தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “பங்களாதேஷில் சவ ஊர்வலம் நடப்பதை பார்க்க விரும்பாததால் நான் பதவி விலகினேன். மாணவர்கள் உடல் மீதேறி ஆட்சிக்கு வர எதிராளிகள், விரும்பினர். அதனை நான் அனுமதிக்கவில்லை.

நான் தடுத்து நிறுத்தி இருக்கிறேன். வங்கக்கடலை அமெரிக்காவை ஆட்சிசெய்ய அனுமதி அளிப்பதுடன், நமது நாட்டிற்கு சொந்தமான புனித மார்ட்டின் தீவுகளின் இறையாண்மையை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் நான் ஆட்சியில் இருந்து இருப்பேன்.

பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். நான் தொடர்ந்து பதவியில் நீடித்து இருந்தால், இன்னும் பல உயிர் பறிபோயிருக்கும்.

என்னை நானே அகற்றிக் கொண்டேன். நீங்கள் தான் எனது பலம். என்னை நீங்கள் வேண்டாம் என்றீர்கள். நான் வெளியேறிவிட்டேன். அவாமி லீக் கட்சியினர் நம்பிக்கை இழக்க வேண்டாம். விரைவில் நான் மீண்டும் வருவேன். நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால், எனது குடும்பம், எனது தந்தை யாருக்காக உயிர் தியாகம் செய்தார்களோ, அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸை பொறுப்பேற்கிறார் ‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என பிறப்பிக்கப்படும் முகமது யூனுஸ்!

பங்களாதேஷின் க்ஷ இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அவர் நேற்று (08) இரவு 8 மணியளவில் பதவியேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.

இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்ததுள்ளார்.

இதனால் இடைக்கால அரசு அமையும் என அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்திருந்த நிலையில், இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டுள்ளது.

பெரும்பாலும் மாணவர்களால் வழிநடத்தப்பட்ட ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கு மத்தியில் நாட்டின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்கு முஹம்மது யூனுஸும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், யூனுஸ், வன்முறைகளையும் போராட்டங்களையும் விடுத்து கோரிக்கை முன்வைக்குமாறும் அமைதியான முறையில் ஆட்சி நடத்த வழிவகுக்குமாறும் மக்களிடமும் இராணுவ அதிகாரிகளிடமும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ‘பரம ஏழைகளுக்கான வங்கியாளா்’ என்று அழைக்கப்படும் முகமது யூனுஸ் சமூக அக்கறை கொண்ட தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் நாட்டு மக்களிடையே பிரபலமானவா். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் ‘குறுங்கடன்’ (மைக்ரோ-ஃபைனான்ஸ்) முறைக்கு முன்னோடியாக இருந்த ‘கிராமீன் வங்கி’யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

எனினும், முகமது யூனுஸின் வங்கி நடவடிக்கைகள் தொடா்பாக ஷேக் ஹசீனாவின் அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

பிரித்தானிய குடியேறிகளுக்கு எதிராக தொடரும் போராட்டம் – 400க்கும் மேற்பட்டோர் கைது !

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து கடந்தவாரம் முதல் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை தடுத்து வைப்பதற்காக 500 க்கும் மேற்பட்ட மேலதிக சிறை அறைகள் ஒதுக்கபட்டுவருவதாகவும் வன்முறைகளை கட்டுப்படுத்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறப்புகாவற்துறையினர் களமிறக்கப்படுவார்கள் என அரசாங்கம் இன்று(6) அறிவித்துள்ளது.

கடந்தவாரம் முதல் தலையெடுத்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ள நிலையில் நேற்றிரவு(5) பெல்ஃபாஸ்ற் நகரில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதலில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேர்மிங்காம் நகரில் அதிதீவிர வலதுசாரிகள் குடியேறிகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக நேற்று அணிவகுப்பு பற்றிய வதந்திகளையடுத்து பல வாகனங்களும் ஒரு மதுபானசாலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சவுத்போர்ட் நகரத்தில் கடந்தவாரம் மூன்று சிறுமிகள், 17 வயதான ஆயுதாரி ஒருவரால் கத்தியால் குத்திகொல்லப்பட்ட பின்னர் குறித்த தாக்குதலை செய்தவர் ஒரு முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர் என பரப்பட்ட வந்தியை அடுத்து வெடித்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எதிர்நோக்கும் முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை நாளை(7) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்பொதான தகவல்கள் கிட்டியுள்ளதாக ஹரோ சட்ட மையத்தின் இயக்குனர் பமீலா ஃபிட்ஸ்பட்றிக் ஒரு தகவலை வெளியிட்டுள்ளாதால் அது குறித்த முன்னெச்சரிக்கைகள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன.

நேற்றிரவு பிளைமவுத் பகுதியில் காவற்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட்ட வன்முறை தாக்குதல்கள் நடத்தபட்டதால் பல அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். பிளைமவுத் வன்முறைகள் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிதானியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இதுபோன்ற மிக மோசமான வன்முறைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் கலவரம் – 30ற்கும் அதிகமான குழந்தைகள் பலி !

பங்களாதேஷில் அண்மையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது முப்பத்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் இடம்பெற்ற இடங்களை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த குழந்தைகள் ஐந்து வயது நிரம்பாதவர்கள் எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அரசு நிர்ணயித்த இட ஒதுக்கீடு முறை குறைக்கப்பட்டது, ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பொலிஸ் காவலில் உள்ளவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்களில் 266 பேர் உயிரிழந்ததோடு, 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பதவி விலகினார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா !

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதேவேளை, தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து இராணுவ உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் (India) புறப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது.

 

 

இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது.

 

அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டு இராணுவம் கோாிக்கை விடுத்திருந்தது.

இன்ஸ்டாகிராமை தடை செய்த துருக்கி!

மத்திய கிழக்கு நாடான துருக்கி இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால் இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக ஐந்து கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடி ஆகும் அதேவேளை துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.