செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொ காலமானார்!

ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொன்னம்பலம்(மு. பொ) நேற்று அதிகாலை(07) கொழும்பில் காலமானார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.

1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.

அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

இந்நிலையில் அவருக்கு அண்மையில் ‘தமிழ் நிதி’ விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது.

‘மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று’ என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்.பி.பியின் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது அல்ல, அது ஐந்து வருடங்களுக்கானது – அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது அல்ல என்றும் தெரிவித்தார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் குற்றஞ்சாட்டி வருவதற்குப்  பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்கள் ஐந்தாண்டுகளில் பூர்த்திசெய்வதற்கானதாகும். சஜித் பிரேமதாச போன்ற சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று, ஐந்து வாரங்களுக்குள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.

நாங்கள் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்குத் திட்டமிடப்பட்ட ஒரு பணியை ஐந்து வாரங்களுக்குள் முடிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். நாங்கள் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவில்லை. கடந்த ஐந்து வாரங்களுக்குள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுத்ததை வைத்து அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன. நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இருந்தும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய நிலையில், இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளனர். இருப்பினும் தற்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை இயக்குகின்றனர். நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறோம். ஊழல்மிக்க அரசியல் கலாசாரம், மோசடி போன்ற விடயங்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களுக்கான இறுதி திகதி அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11-11-2024) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக் கூடாது. மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது. வீடு வீடாகச் செல்ல முடியாது என அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனை மீறி செயற்படுவது சட்டவிரோத செயலாகும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் ட்ரம்ப் – புடின் வாழ்த்து !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு தைரியசாலி என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் ஒரு வணிகர் ஆவார். அவர் அரசியலில் போதியளவு அனுபவத்தை கொண்டவர் அல்ல என்பதால் சில தவறுகளை அவர் விடலாம்.

எனினும், அவர் மீது உயிரை பறிக்கும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவர் அதை எதிர்கொண்ட விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக புடின் கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் எனவும் புடின் விளக்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் டொனால்ட் ட்ரம்ப்பை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாம் எதுவிதமான பொய்களையும் கூறவில்லை – ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

நாம் மக்களுக்கு எவ்வித பொய்களையும் கூறவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா  தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் எவ்வித பொய்களையும் மக்களிடம் கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவ்வாறு ஏதேனும் பொய்யுரைத்திருந்தால் அதனை அம்பலப்படுத்துமாறு சவால் விடுப்பதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் – ஜனாதிபதி அனுர குமார உறுதி !

புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:

‘எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசியலமைப்புகள் தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை. சோல்பரி அரசமைப்பு, 1972ஆம் ஆண்டின் அரசமைப்பு மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. மக்களுக்குரிய அடிப்படைச் சட்டங்களே அரசமைப்பாகும். எனவே, நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம். இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும்.

 

 

புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும். புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படும். கோத்தாபய ஆட்சிக் காலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டது, அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து, சாதகமான, மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களை மையப்படுத்திய வகையில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்.

 

 

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மூன்று, நான்கு மாதங்களில் அரசமைப்பு தொடர்பில் குறைந்தளவிலேயே அவதானம் செலுத்தப்படும். பொருளாதாரம் பற்றியே கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதன்பிறகு அரசியலமைப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்’ – என்றார்.

 

ஒத்திவைக்கப்பட்டது ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களை, ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க புதிய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சீர்திருத்த முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இச்சீர்திருத்தங்களின் கீழ், பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக ஒரு தொகுதி (அலகு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் தேசிய கல்வி நிறுவனத்தால் (National Institute of Education) ஒன்று, ஆறு மற்றும் பத்தாம் ஆண்டு மாணவர்களைப் பயன்படுத்தி சுமார் இருநூறு பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டது.

 

முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இந்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கான (Module) தொகுதி முறையை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

 

இந்தச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலைக் கல்வியை பன்னிரண்டாம் வகுப்போடு முடித்துவிட்டு, பொதுத் தேர்வை பத்தாம் வகுப்பில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டது.

 

இந்நிலையிலேயே புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை, ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழரசுக் கட்சி பலமாகவே இருக்கிறது – பொன் சிவசுப்பிரமணியம்

தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறியோர் அனைவருமே கொள்கைகளுக்காக வெளியேறவில்லை – சுய நலன் அடிப்படையிலும் ஆசனங்களுக்காகவும் சண்டையிட்டே வெளியேறினர் – பொன் சிவசுப்பிரமணியம்

 

 

 

 

 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுக்காப்புக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவு – பகிரங்கப்படுத்தியது என்.பி.பி !

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் அதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம் என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளளார்.

இதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே 57 பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்த சுமந்திரனிடம் 500 மில்லியன் நட்ட ஈடு கோரும் அங்கஜன் இராமநாதனின் தந்தை !

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக தனது பெயருக்கும், தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம். ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடத்த பிரச்சார கூட்டம் ஒன்றில் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீட்டு தொகை கேட்டு ,தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் சதாசிவம் இராமநாதன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.