செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது – யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர்!

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

 

யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

 

“யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது.

 

வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எங்களுடைய சகோதர – சகோரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கின்றது, இங்கு அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள், இந்த வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கின்றார்கள் என்பவற்றை அறிந்துகொள்வதே எமது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.

 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மிகப் பெரிய அளவில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

 

நான் இன்று பருத்தித்துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன். அதாவது பன்மைத்துவத்தில் ஒற்றுமை என்று இருந்தது.

 

உண்மையில் அந்த வாக்கியம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியாவே பிரதிபலித்துள்ளது. தற்போது இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் இங்கு விஐயம் செய்வது மிகவும் அர்த்தம் உள்ள ஒன்றாகவே கருதுகின்றேன்.

 

நான் வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாகக் கொவிட் கால கட்டத்திலேயே வந்திருந்தேன். அந்தக் கால கட்டத்திலேதான் சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை சீன அரசு இலங்கைக்கு வழங்கி இருந்தது.

 

அப்போது சினோபாம் என்ற எமது தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு முழுவதும் முழுமையாகப் பாவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் சீன அரசு வலியுறுத்திக் கூறியிருந்தது. இவ்வாறு நாம் வலியுறுத்திக் கூறியதாலேயே இங்குள்ள மக்களுக்கும் அந்தத் தடுப்பூசிகள் பாவிக்கப்பட்டன.

 

இவ்வாறு வடக்கு, கிழக்கிலுள்ள எங்களுடைய சகோதர – சகோதரிகளுக்கு நாம் தடுப்பூசிகளை வழங்கியதைத் தொடர்ந்து இங்குள்ளவர்களுக்கு எங்களுடைய பல்வேறு உதவிகளைச் செய்தோம்.

 

அதனடிப்படையில் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம். அதேபோன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும், மீன்பிடி உபகரணங்களையும் வழங்கினோம்.

 

அந்த ஆண்டின் முதல் அரைநாண்டு காலத்தில் சீன அரசால் பல மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வடக்கு மாகாணத்துக்கு மட்டும் வழங்கியிருக்கின்றோம். இதற்கமைய வீட்டுத் திட்டம், அரிசி, மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை வழங்கினோம்.

 

இவற்றில் அரிசியை முழுமையாக வழங்கியுள்ளோம். ஆனாலும், வீட்டுத் திட்டம் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

 

சீன அரசு வழங்கிய உதவிகளின் பட்டியல் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்டவைதான். அந்தப் பட்டியலுக்கமைய எமது உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

சீனாவினுடைய நீண்டகால நண்பனாக இலங்கை இருக்கின்றது. ஆகையினால் இலங்கை அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் சீன அரசும் மதிக்கும்.

 

இலங்கை அரசுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு இணக்கப்பாட்டுக்கு முன்னேற்பாடான ஒரு ஒப்பந்தத்தை முதன் முதலில் சீனாதான் எழுதியது.

 

அதனைக் கடந்த ஆண்டு செய்திருக்கின்றோம். இதில் இருந்து நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளக் கூடியது என்னவெனில் சீன அரசு ஒரு முன்னுதாரணமாக இந்த விடயங்களைச் செய்து வருகின்றது என்பதைப் பார்க்கலாம்.

 

இலங்கையினுடைய மிக நெருக்கமான அயல்நாடாக இந்தியா இருக்கின்றது. அதனால் இலந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பலப்படுவதையும், பொருளாதார ரீதியான நெருக்கம் பலப்படுவதையும் நாங்களும் விரும்புகின்றோம்.

இவ்வாறான நிலைமையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத் கூறியிருக்கின்றார்.

 

இது மிகவும் சந்தோசமான விடயம். அவ்வாறு அவர்கள் விஜயம் செய்வதை நாங்கள் விரும்புகின்றோம். அதன் பிற்பாடு இலங்கை ஜனாதிபதி அவருக்கு ஏற்ற வகையில் பொருத்தமான நேரத்தில் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளலாம்.

 

ஏனெனில் சீனாவுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் பொருளாதார மேம்பாடுகளும் பரிமாற்றங்களும் வளர்ந்து வர வேண்டுமென்றே நாங்களும் விரும்புகின்றோம்.

 

சீனாவுக்கு வடக்கு மக்களுடன் செய்ய வேண்டிய கலாசார மற்றும் கல்வி ரீதியான இரு தரப்பு பரிமாற்றங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன.

 

சீன அரசு இலங்கைக்கு அதிகூடிய வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்குகின்ற ஒரு நாடாகவே இருந்து வருகின்றது.

 

ஏனென்றால் சீனாவைப் பொறுத்த வரையில் இலங்கை மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாக உள்ளது.

 

எனக்குத் தெரிந்தவரைக்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் சீனாசார் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்விசார் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன.

 

நான் அறிந்த வரையில் சீன புலமையாளர் யாழ். பல்கலைக்கழகத்திலும், யாழ். பல்கலைக்கழகப் புலமையாளர்கள் சீனப் பல்கலைக்கழகத்திலும் தங்களுடைய கற்கை நெறிகளைக் கற்று வருகின்றார்கள்.

 

எனக்கு குழப்பகரமான ஒரு உணர்வை ஏற்படுத்துவது என்னவெனில் என்னுடைய சக உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும் சீனப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு விரும்புகின்றதால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தோடு தொடர்பை ஏற்படுத்துகின்றபோது அவர்களால் உரிய முறையில் தொடர்பை ஏற்படுத்துவதில்லை என்பது குழப்பகரமான உணர்வைத் தருகின்றது.

 

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன்.

 

அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

 

இதனூடாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட்டு ஒளிமயமான எதிர்காலம் இந்த நாட்டில் ஏற்படுவதற்கான ஒரு குறியீடாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.” – என்றார்.

தொடரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனம் – தாயும் சேயும் மரணம் !

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த நிலையில் தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம் பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்கு சொல்லாமல் மறைத்ததாகவும் உயிர் இழந்த பெண்ணின் உடலை கூட பார்ப்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

குறித்த பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பொதுமக்கள்,பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகை தரவில்லை எனவும் அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்ப்பதாகவும், தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

 

இவ்வாறான பின்னனியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தியை தமிழர்கள் ஆதரிப்பது பிரிவினைவாதத்துக்காகவே – விமல் வீரவங்ச எச்சரிக்கை!

தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இருந்து கிடைத்துள்ள ஆதரவானது இனவாதத்துக்கு எதிரானது மட்டுமல்ல பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  பிரிவினைவாதத்துக்கு சார்பாகச் செயற்பட்டுவந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக , தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை இதன்மூலம் மக்கள் வழங்கியுள்ளனர் . ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணம் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே இந்த அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கான எமது பொறுப்பை நாம் என்றும் கைவிடப்போவதில்லை . அந்தப் பயணம் தொடரும். பிரபுக்கள் அல்லாத தரப்புகள் வசம் ஆட்சி சென்றுள்ளது . அதை வரவேற்கின்றோம். டயஸ்போராக்கள் மற்றும் அந்நிய சக்திகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் பயணித்தால் ஆதரவளிக்கப்படும் . அவ்வாறு இல் லையேல் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் என்றார்.

அனுர ஆட்சியில் மீளவும் இனவாதம் தலைதூக்கவுள்ளது – எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அந்த வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (16) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம்.இதில் வரப் போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிற்பாடு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும், இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

மேலும், புதிய அரசமைப்பு வரைபுக்கு எதிராக, அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்புக்கு முரணானது என்ற பலமான செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபைத் தயாரிப்பதற்கும், அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப் போகின்றோம்.

 

அதற்குத் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக் கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம், அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் இல்லை – பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர

பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

 

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

 

இது தவிர, வருகை கொடுப்பனவாக பாராளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

 

தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

அதுமட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள எம்பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

 

மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் இருப்பதாகவும், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும் என்றும் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

 

மேலும், வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும் என்றும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு இணைந்து வசதியளித்துள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் குறித்த அமைச்சு ஏற்கும் எனவும் குறிப்பிட்டார்.

2024ல் சுற்றிவளைப்புக்களில் 18000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

இந்த வருடத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 18000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புடன் 18 ஆயிரத்து 790 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

 

கடந்த நவம்பர் 16ஆம் திகதி இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி படகில் 46 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் கைப்ற்pயதுடன் அப் படகில் இருந்த 5 மீனவர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டு நேற்று காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 

குறித்த மீனவர்கள் 23 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட கந்தர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பல நாள் மீன்பிடி படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

IMFஉடன் ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார தெரிவிப்பு !

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர், தீர்மானகரமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தனர்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ஆட்சியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

 

மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார். தனது தலைமையின் கீழ், சிறுவர் வறுமை மற்றும் போசாக்கின்மை போன்ற அத்தியாவசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்தார்.

 

அத்துடன் கடந்த காலங்களில் சமூக சேவை செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதுடன், வளங்களை வினைத்திறனான ஒதுக்கீடு மற்றும் பாவனையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

 

நாட்டை ஆட்சி செய்வது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. மக்கள் வழங்கிய ஆணையின் முக்கிய அம்சமான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தானும் தனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

 

அந்த செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சட்டமியற்றும் மற்றும் ஏனைய நிறுவனரீதியான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் கடுமையான ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,சர்வதேச நாணய நிதிய குழுவிடம் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பு அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு சாதகமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு அதன் ஊடாக பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

 

இதில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டிருந்தனர்.

யாழில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாம் – உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து பதின் நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ள நிலையில், இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தியிருந்ததுடன், நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ் உத்தரவு இராணுவ தலைமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் !

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக விழிப்புலனற்றவர் என்ற வகையில் இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

 

பலப்பிட்டிய, கொடகெதர பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி பிறந்த இவருக்கு தற்போது 57 வயதாகும்.

 

ஐந்தாம் வகுப்பில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அவர் கண்ணில் பந்து பட்டதால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது.

 

இந்த விபத்தின் பின்னர் சுகத் முற்றிலும் பார்வையற்றவராகி, அதன் பின்னர் மேலதிக கல்விக்காக இரத்மலானை பார்வையற்றோர் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

 

அதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சித்தியடைந்த சுகத் வசந்த டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் வழிகாட்டி அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.

 

பின்னர், சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியாக 25 வருடங்கள் நீண்ட சேவையாற்றிய சுகத் வசந்த டி சில்வா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

 

உயர்தர கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே மக்கள் விடுதலை முன்னணியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த சுகத் வசந்த, தனது அரசியல் வாழ்க்கையில் தற்போது 40 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.

பொதுத்தேர்தலில் 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 1.04 வீத வாக்குகளையே பெற்றனர்!

2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 1.04 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டனர்.

 

யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சுயேச்சைக்குழு 17 மாத்திரம் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில் ஏனைய அனைத்து சுயேச்சைக் குழுக்களும் 13 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டிருந்தன.

 

வெற்றி பெற்ற சுயேச்சைக்குழு 17 மாத்திரம் 27,855 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. போட்டியிட்ட ஏனைய 284 சுயேச்சை குழுக்களில் 282 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரம் ஒரு வாக்குகளையேனும் பெற்றுக்கொண்டிருந்தன.

 

அதனடிப்படையில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 115,966 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதில் ஒரு சுயேச்சைக்குழு 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 70 சுயேச்சைக் குழுக்கள் 1000 – 7500 வரையான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தன.

 

40 சுயேச்சைக் குழுக்கள் 500 – 1000 வரையான வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் 139 சுயேச்சைக் குழுக்கள் 100 – 500 வரையான வாக்குகளையும் 31 சுயேச்சைக் குழுக்கள் 100 க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டிருந்தன.

 

இதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 11,148,006 மொத்தம் செல்லுபடியான வாக்குகளில் 1.04 வீத வாக்குகளை மாத்திரம் சுயேச்சைக் குழுக்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.