செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் நிம்மதியும் சுதந்திரமும் கிடைக்கும் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpg“சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும், நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினசெய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் கூறியதாவது, புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறு தல், இறப்பு, முதலானவற்றை நினைவுகூரும் வெசாக் பண்டிகையை இம்முறையும் அரச அனுசரணையில் கெளரவத்துடனும், தூய்மையுடனும், கொண்டாடக் கிடைத்துள்ளதைப் பெரும்பேறாகக் கருதுகிறேன். மேலான பெளத்த போதனைகள் எமக்கு சரியான வாழ்க்கை வழிமுறையைக் காட்டித்தருகின்றன. எமது அரச கொள்கைகளின் பிரகாரமும் அம் மதத்தை பெருமதித்தே செயலாற்றப்படுகின்றன.

இதற்குக் காரணம் சரியான வாழ்க்கை வழிமுறையானது புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அனுகூலமாக அமைவதனாலாகும். நான்கு தீய குணங்களில் இருந்து விடுபட்டு பஞ்சசீலக் கொள்கையை மதிக்கும் சமூகத்தில் சகலருக்கும் சுதந்திரமும் நிம்மதியும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

“ஜயங் வேறங் பசவதி-துக்கங் சேதி பறாஜினோ
உபசன்னோ சுகங் சேதி- ஹித்வா ஜய பறாஜயங்”

“வெற்றியடைபவர், தோல்வியடைவோரின் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்துகிறார். தோல்வியடைபவர் துக்கத்துடன் வாழ்கின்றார். நடுநிலையாக செயற்படும் சாந்த குணமுடையவர் வெற்றி தோல்வியில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ்வார்” என புனித பெளத்த போதனைகள் குறிப்பிடுகின்றன.

தீவிரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு குரோதமில்லாது எம்மை மனிதாபிமான அடிப்படையில் பலப்படுத்தியதும் புனித பெளத்தத்தைக் கடைப்பிடித்துவருவதனாலேயாகும். எம்மை குரோதத்துடன் நோக்கிய எதிரிகளை வெற்றிகொண்டதன் பின்னர் அன்புடன் செயலாற்றுவதற்கு வழிகாட்டியதும் எமது சமய ஒழுக்கநெறிகளாகும்.

தீவிரவாதத்தின் மூலம் இலட்சக்கணக்கான எமது சகோதர மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தானம் வழங்குவதும், நல்ல வார்த்தைகள் மூலம் ஆறுதல் கூறுவதும், சமத்துவமாகக் கவனிப்பதும் இந்த புனித வெசாக் காலத்தில் நன்மை பயக்கக்கூடிய வழிமுறை என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

புனித பெளத்த போதனைகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே எமது இலட்சியமாக இருக்கவேண்டும். இந்த வெசாக் காலம் அதற்கு வழிவகுக்கும். அதன் பிரகாரம் எமது வீரத்தைப் பயன்படுத்தி தோல்வியடையச் செய்யவேண்டிய எதிரிகளாக இருப்பது, பேராசை, பாகுபாடு, மடமை என்பவையாகும். பெளத்த கொள்கையை மதிக்கும் நம் எல்லோரினதும் எதிரிகள் இவையேயாகும்.

நாம் வெற்றி கொள்ளவேண்டியது அன்பு, கருணை, காருண்ணியம் என்பவற்றையேயாகும். அப்போது தோல்வியும் இல்லை, பொறாமையும், குரோதமும் இல்லை. நாம் அந்த செம்மையான இலட்சியப் பாதையை நோக்கி அணி திரள்வோமாக. உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இவ்வாறு ஜனாதிபதி தனது வெசாக் தினத்தையொட்டிய ஆசிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மன்னார் – பூநகரி வீதி புனரமைப்பு

sri-lankan-road.jpgமன்னார் – பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் 83 கிலோமீற்றர் நீளமான ஏ-32 பிரதான வீதியை மூவாயிரம் மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிரி தெரிவித்தார்.

எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள முதற்கட்ட பணியின்போது 48 கிலோ மீற்றர் நீளமான வீதியே புனரமைக்கப்படவுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்டதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் எஞ்சியுள்ள வீதியை வெகுவிரைவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டிற்கு இலகுவாக செல்லும் 280 மீற்றர் நீளத்தைக் கொண்ட சங்குப்பிட்டி பாலம் நிர்மாணிக்கும் பயணிகள் இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வட மாகாணத்தில் வெகு விரைவில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏ-32 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள அதே சமயம், யாழ் – கண்டி- கொழும்பு ஏ-9 பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகளும் 12 கிலோ மீற்றர் நீளமான சிலாவத்துறை- முருங்கன் வீதி, 40 கிலோ மீற்றர் நீளமான புத்தளம் – மன்னார் வீதியின் புனரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், மேலும் இந்தப் பகுதியிலுள்ள வீதிகளும், பாலங்களும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக பொது முகாமையாளர் ரஞ்சித் பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.

செல்வி ஜெயலலிதாவின் தமிழீழம் தொடர்பான நிலைப்பாட்டிற்கு பிரித்தானியத் தமிழர் வரவேற்பு

british_tamil_forum.jpg இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் 60 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தழிழ்த் தலைவரின் இந்தக் கூற்று எமது பிரச்சனை தொடர்பாக வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, மிகமுக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.

தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றியறிதலை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்த தருணத்தில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இந்தநிலையில் சர்வதேச அரசுகளும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களும் அமைப்புக்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுகின்றது.

புலிகளை தடை செய்த நாடுகள் தமது சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டன – விமல் வீரவன்ச

parliament-of-sri-lanka.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்த உலக நாடுகள் பலவும், புலிகளுக்கு எதிராக தத்தமது சட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இலங்கை விடயத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை விவாதத்துக்கென சபைக்கு சமர்ப்பித்து பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “படையினர் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில் சர்வதேச சமூகம் தற்போது அதை தடுத்து நிறுத்தும் வகையில் அழுத்தங்களை கொடுக்கின்றது. உதவிகளை நிறுத்துவோமென கூறியும், போர் குற்றங்களை சுமத்தியும் விடுதலைப்புலித் தலைவர்களை இவர்கள் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

நாம் உண்மையில் இந்த நாட்டை ஆதரிக்கின்றோமென்றால், இந் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்திற்கு ஒன்றுபட்ட செய்தி ஒன்றை கூறவேண்டும். அதாவது, இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள தடை ஏற்படுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு இதை முடிவுக்கு கொண்டுவர இடமளித்து ஒதுங்கியிருக்குமாறு நாம் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகத்துக்கு கூறவேண்டும். எனினும், இந்த தீர்க்கமான தருணத்திலும் கூட துரதிர்ஷ்டவசமாக எமக்கு அந்த ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

உலகில் பல நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளன. எனினும் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே இன்று புலிக் கொடியுடன் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமது சட்டங்களை உரிய முறையில் அமுல் படுத்த தவறிவிட்டன. நோர்வே அரசாங்கமோ அங்குள்ள இலங்கை தூதுவராலயத்தை புலி ஆதரவாளர்கள் தாக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே இவையனைத்தையும் நாம் கண்டிக்க வேண்டும்’ என்றார்.

சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கிவிட்டனர் புலிகள்: இலங்கை ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஇலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார்.

எந்தவிதமான வழியும் இல்லாத நிலையில், ஒரு இறுதி நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  முந்தைய சமரச முயற்சிகளை விடுதலைப் புலிகள் நகைப்புக்கிடமானவையாக மாற்றிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கும் வகையில், மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தம் ஒன்று அமலுக்கு வரவேண்டும் என்று கோரும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்த கருத்து வந்துள்ளது.

ரூ. 8 இலட்சம் பெறுமதியான உணவு பொருட்கள் பிரதமர் அலுவலகத்தினால் கையளிப்பு

Wanni_War_IDPsவவுனியா காமினி வித்யாலய நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் சார்பில் உதவிச் செயலாளர் மங்கள திஸ்ஸ தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று சந்தித்ததோடு 8 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் கையளித்தது. வவுனியா மாவட்ட அராசங்க அதிபர் திருமதி சார்ஸ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேற்படி பொருட்களைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வு வவுனியா இடர் முகாமைத்துவ அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.

பிரதமர் அலுவலகத்தின் சமூகப் பணிப் பிரிவு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் மேற்படி நலன்புரி நிலையத்தைப் பார்வையிடுவதற்கென ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். முகாமிலுள்ள மக்களுக்கான மதிய உணவினையும் வழங்கினர்.

வவுனியா காமினி மகா வித்தியாலய நலன்புரி நிலயைத்தில் 781 குடும்பங்களைச் சேர்ந்த 1820 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை வவுனியா மாவட்டச் செயலகம் பெற்றுக்கொடுப்பதுடன் சுகாதாரம், தொலைத்தொடர்பு சேவைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று மேற்படி நலன்புரி நிலையத்தில் வெசாக் சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கொழும்பிலிருந்து பிரபல பாடகர்களான சூரியகுமார் முத்தழகு, கலாவதி சின்னச்சாமி, மேர்ஸி எதிரிசிங்க ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் தமிழ், சிங்களப் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.

நலன்புரி நிலையத்தில் உள்ள மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் தமக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன் புதுமாத்தளன் பகுதி உட்பட ஏனைய பகுதிகளில் அகப்பட்டுள்ள தமது உறவினர்களை விரைவாகத் தம்மோடு சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை பரிசீலிக்கிறார் ஐ.நா. தலைமைச் செயலர்

ban_ki_moon_.jpgபோர் நடக்கும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்பதா என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்.

“உயிர்கள் பலியாவதைத் தடுக்க முடியுமானால் அவர் அங்கு செல்வார்” என்று பான் கீ மூன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார். போர் பகுதிகளில் இருந்து தப்பி வந்துள்ள 2 லட்சம் மக்கள் தங்கியுள்ள முகாம்களை வந்து நேரடியாக பார்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரை தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைத்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்தி, அங்கு மோதல் பகுதியில் திண்டாடும் மக்களுக்கு உணவு மற்றும் உதவிகள் செல்வததற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை திரும்பத் திரும்ப பான் கி மூன் கோரி வந்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் சேர்த்து போர் முனையில் ஓர் மூலையில் கொண்டு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐம்பதிதாயிரம் பேர் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படும் மக்களை அங்கிருந்து வெளியேற விடுமாறு பான் கீ மூன் அவர்கள் விடுதலைப்புலிகளையும் கேட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் சமைத்து உண்ண வசதி செய்யப்படுகிறது

vavuniyatents.jpg
வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தாமே சமைத்து உண்ணக்கூடிய புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அனர்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யூ எல் எம் கால்தீன் தெரிவித்துள்ளார்.

இதற்கான வசதிகள் அனைத்தும் இந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த 20ம் திகதிக்கு பின்னர் வந்த பொதுமக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமைத்த உணவை வழங்கும் போது பலசிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இதனை தவிர்கும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னிக் குழந்தைகளுக்கு 5 இலட்சம் பால்மா பக்கட்களை வழங்கும் திட்டம் ஆரம்பம்

menikfarm.gifதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 இலட்சம் பால்மா பக்கட்டுகளை வழங்கும் திட்டம் நேற்று (07) காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகியது.

நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் பால் மா பக்கட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டு. மாவட்டத்தில் 5 ஆயிரம் பக்கட்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி. ஈஸ்வரராஜா தெரிவித்தார். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற பால் மா பக்கட்டுகள் கையளிக்கும் வைபவத்தில் மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே. தவராஜாவும் கலந்துகொண்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ளோருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப ஐ.சி.ஆர்.சி. ஒத்துழைப்பு அவசியம்

medical_lorry.jpgபாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்  சிக்குண்டுள்ள மக்களுக்கென போதியளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைப்பு நல்குவது மிக அவசியம் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்  சிக்குண்டு எஞ்சியுள்ள மக்களுக்கென தற்போது  ஓசன் கப்பலில் அனுப்பப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதியளவாக இருக்குமென நாம் நம்பவில்லை. அதனால் இம்மக்களுக்கு அதிகளவு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு ஐ. சி. ஆர். சி. ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில்  சிக்குண்டுள்ள மக்களுக்கு அனுப்பி வைப்பதற்குத் தேவையான அளவு உணவுப் பொருட்களும், கப்பலும் எம்மிடமுள்ளன. அவற்றை அம்மக்களுக்குக் கொண்டுசேர்க்க ஐ. சி. ஆர். சியின் ஒத்தாசையே எமக்குத் தேவையாக உள்ளது என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் :-

புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஐ. சி. ஆர். சி. மேற்கொள்ள வேண்டும்.

தற்போது அப்பகுதியிலுள்ள நோயாளர்களை அழைத்துவரும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஓசன் கப்பலில் தான் முப்பது மெற்றிக்தொன்படி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கின்றோம். நேற்று முன்தினமிரவும் இவ்வாறு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஐ. சி. ஆர். சியின் ஒத்தாசை கிடைக்குமாயின் 500 மெற்றிக் தொன் படி உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளோம் என்றார்.