எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

606 பேர் அரச பகுதிக்கு வருகை

_mullai_1.jpgபாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து 173 பெண்கள், மற்றும் 242 குழந்தைகள் உட்பட 606 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது. 173 பெண்களும், 193 ஆண்களும், 112 சிறுவர்களும், 130 சிறுமிகளும் இதில் அடங்குவதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

முல்லைத்தீவு இராமநாதபுரம் பகுதியில் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தேடுதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 எம்.எம். மோட்டார் குண்டுகள், எம்.பி.எம்.ஜி. குண்டுகள், 6 லைனர்கள், 4 கிரேன்டுகள், 55 வரை படங்கள், புலிகளின் சீருடை ஒன்று, புலிகளின் தொப்பிகள் 25 என்பவற்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களுள் எவரும் காயமடைந்திருக்கவில்லை எனவும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

கடத்தலை தொடரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள்

caption.jpgஅமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும், அமெரிக்கர் ஒருவரை பணயமாக பிடித்து வைத்துள்ள சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான இழுபறிகள் தொடருகின்ற நிலையில், ஏடன் வளைகுடாவில் மேலும் இரு சம்பவங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

16 அமெரிக்க சிப்பந்திகளுடனான அமெரிக்க இழுவைப் படகு ஒன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக மரிடைம் அமைப்பு கூறுகின்றது. பிறிதொரு சம்பவத்தில், கடற்கொள்ளையர்கள்,  இருபத்தாறாயிரம் தொன்கள் எடையுள்ள கடற்கலன் ஒன்றின் மீது சுட்டதாக கூறப்படுகின்றது.

அந்த கப்பலின் தலைமை மாலுமியின் அறையை நோக்கி அவர்கள் கைக்குண்டை ஏவியதாகவும், ஆனாலும், அது வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் கடற்கொள்ளையர்களை தண்ணீர் குழாய்கள் மூலம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கண் தான தினம் பிரகடனம்

eye.jpgடிசம்பர் மாதம் 18ஆம் திகதியை கண் தான தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.

கண் தான சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான தேசபந்து டொக்டர் ஹட்ஸன் சில்வாவின் பிறந்த தினத்திலேயே இந்த கண் தான தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவர் தனது 48 வருட சேவையில் பார்வையற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கண் தானம் வழங்கியுள்ள சேவையை கௌரவிக்கும் வகையிலும் இச்சேவையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே இத்தினம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் – தேமுதிகவிலும் ஒருவர் மாற்றப்பட்டார்

jaya.jpgதிருவள்ளூர் (தனி), பெரம்பலூர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புகார்கள் வந்ததால் இந்த முடிவை ஜெயலலிதா எடுத்ததாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, தேர்தல் பணிகளை அதிமுக வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் மூலம் விசாரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்  திருவள்ளூர் (தனி) மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதா அதிரடியாக நேற்று மாற்றினார். அதனால், 2 வேட்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

earth_indo.jpg
இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குனாங் சிடொலி பகுதியில் நேற்று காலை 8.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 20 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிபரம் உடனடியாக தெரியவில்லை.

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் – பிரதமர்

army-wanni.jpgபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதனைப் போல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து மக்களும் தமது இன, மத, குல, மொழி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறினார். ஹொரணை ஸ்ரீ.ல.சு. கட்சி காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

கடந்த 30 வருடமாக வட கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த பயங்கரவாதத்தை அழித்து ஒழிக்கும் கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த  பயங்கரவாதத்தை ஒழிக்க தென்பகுதியிலுள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

அதேபோல் நாட்டின் அபிவிருத்தியிலும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். நாட்டின் யுத்தத்தின் போதும் நாட்டின் அபிவிருத்தியின் போதும் மாகாணசபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் பாரிய ஒத்துழைப்பை வழங்கின. அதேபோல் இவைகள் மத்திய அரசிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

வடக்கு யுத்தத்தை சுமார் 1/2 மணி நேரத்தில் முடித்து வெற்றி வாகை சூடலாம். ஆனால் அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் இந்த யுத்தம் மெது மெதுவாக நடைபெறுகின்றது.

நாவலப்பிட்டி வைத்தியசாலையில் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற பெண்ணுக்கு விளக்கமறியல்

baby.jpgநாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் ஒன்பது நாள் ஆண் குழந்தையொன்றை கடத்திச் செல்ல முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதான பெண்ணை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிவான் லலித் ஏக்கநாயக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நாவலப்பிட்டி வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணொருவர் அங்கு பிரசவ வார்ட்டில் தங்கியிருந்த பெண்ணுடன் சிநேகிதம் வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் அப்பெண்ணின் 9 நாள் ஆண் குழந்தையை இவர் கடந்த 9 ஆம் திகதி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். குழந்தையின் தாயிடம் டாக்டர் அவரை அழைப்பதாகக் கூறி வெளியே அனுப்பிவிட்டே இவர் குழந்தையை கடத்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அங்குவந்த குழந்தையின் தாய் எழுப்பிய கூக்குரலையடுத்து உஷாரடைந்த வைத்தியசாலையின் பணியாளர்கள் குழந்தையைத் தூக்கிச் செல்ல முயன்ற பெண்ணைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட பெண்ணை நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டிப் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 137 மி.மீ. மழை வீழ்ச்சி

lighting.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 137 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரிவித்தார்.

மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. புதிய காத்தான்குடி, பூம்புகார், களுதாவளை, வெல்லாவெளி உட்பட பல பகுதி களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் போக்கு வரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொட்டாவ முதல் தொடங்கொட வரையில் பாதை விஸ்தரிப்பு

mahinda.jpgநாட்டின் தென் பகுதியிலுள்ள பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான பாதையை விஸ்தரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்துக்கு 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு ஒத்திவைப்பு

protest_afp.jpgதாய்லாந்தில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   தொடங்குவதாக இருந்த இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்பத்ற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சார்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் ஏற்கனவே தாய்லாந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்தில் பிரதமர் அபிசித் விஜ்ஜாஜிவாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அவர் பதவி விலகும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009   மாநாடு நடைபெறவிருந்த இடத்துக்கு முன்பு திரண்ட ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநாட்டு அரங்கத்தின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.