எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எல்ரிரிஈயினால் சிறைபிடித்த 7 இராணுவத்தினர் மீட்பு

mili.jpg
இராணுவத்தின் 59வது டிவிசன் படையினர் இன்று (மே:17) காலை எல்ரிரிஈயினால்  சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

mahinda-rajapaksha.jpgபுலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனரமைப்பு நடவடிக்கை பற்றியே விஜே நம்பியாருடன் பேசப்படும்: சமரசிங்க

mahinda-samarasinghe.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான  மோதலுக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இலங்கைக்கு வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி விஜே நம்பியாரைச் சந்திக்கவிருக்கும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசாங்கத்தின் திட்டம்பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் சூறை

indian-election.jpgசென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை சமூக விரோதிகள் சிலர் நேற்றிரவு சூறையுள்ளனர்.  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் இவரும், இயக்குநர் சீமானும் பேசியது வாக்காளர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் சில குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் சனிக்கிழமை இரவு 7.50 மணி அளவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்தது.

வந்தவர்கள் யார் என அங்கிருந்த ஊழியர்கள் விசாரிப்பதற்குள், அவர்கள் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவுகள், கம்ப்யூட்டகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

மக்களவைத் தேர்தலில் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் வெற்றி

indian-election.jpgஷூ மற்றும் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு, பொதுக் கூட்டம் போன்றவற்றில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம், பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் மீது காலணிகள் வீசப்பட்டன. இச்சம்பவங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பு வீசும் அளவுக்கு அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் காலணியால் குறி பார்க்கப்பட்ட சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் செருப்பு வீச்சுக்கு ஆளானார். ஆனால் கர்நாடகத்தில் அவரது மகன் ராகவேந்திராவும், அவர் சார்ந்த பாஜகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு – செ.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Selvarasa_Pathmanathan_LTTE“வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது” என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

“கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரம் மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாக காயமடைந்த 25 ஆயிரம் பேர் மருத்துவ பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் அங்குள்ளார்கள். எமது மக்களைப் பாதுகாப்பதே இப்போதுள்ள அவசரமான பணியாகும்” எனவும் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அவசர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“இதனைக் கவனத்திற்கொண்டு எமது மக்களைப் பாதுகாப்பதற்காக எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்” எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“சிறிலங்காவின் ஆயுதப் படையினரால் எமது மக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு உலகத்தில் உள்ள நாடுகளை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

போர் இடம்பெறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எமது மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எமக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாம் பின்வாங்க வேண்டியேற்பட்டது.

எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது கடந்த மூன்று தசாப்த காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்டு, இந்தத் தீவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வை நாடியது.

2007 ஆம் ஆண்டில் போர் தீவிரமடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்திருக்கின்றனர். வடபகுதியில் இராணுவம் தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதையடுத்து பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையாலும் மேலும் பலர் மரணமடைந்திருக்கின்றனர்.

“இந்தக் கொடூர நிகழ்வுகளை நிறுத்துவதற்கு எமது வரையறைக்கு உட்பட்ட எதனையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது எமது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதுடன், சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருக்கின்றோம்.

இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும். எமது மக்களுக்காகத்தான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.

நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.” இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மே 17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம் World Information Society Day – புன்னியாமீன்

17may-special.jpgஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல்,  குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.

நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450 -களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.

தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால ஆரம்பித்து வைக்கப்படுகிறது.   கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும்,  மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875-ஆம் ஆண்டில்  ஏப்ரல் 6 ஆம் திகதி அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.

இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி,  தொலைக்காட்சி, தொலைபேசி,  கையடக்கத் தொலைபேசி,  டெலக்ஸ்,  பெக்ஸ், மின்னஞ்சல்,  இணையம்,  முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள்,  செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும். தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி,  தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத்திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு. தொலைத் தொடர்பில் அந்நாடு காட்டிவரும் அரும் பெரும் சாதனைகள் மூலம் தொலைபேசியை இலத்திரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் கொள்ளப்படுகின்றது.

1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம்  International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தொரும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.

மனிதனின் தகவல் தொடர்புகள்,  செய்மதிப் பரிமாற்றம்,  கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு,  கலை வெளிப்பாடு,  வர்த்தகம்,  முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள்,  எரிமலைகள்,  பூகம்பம்,  வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும்,  போர்மூட்டம், பாதுகாப்பு,  தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பே‌சி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில்  4 பில்லியனைத் தாண்டியிருந்ததாக  என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது

அண்மைக்காலத்தில் கணனி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும்,  மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெற் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில்,  தொடர்பு சேவைகள்,  தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.

மின்னியல் தபால்,  மின்னியல் சஞ்சிகை,  மின்னியல் வெளியீடு, ரெல்நெட்,  தொடர் கலந்துரையாடல்,  உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.

எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது.

ஆரம்பத்தில்  இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம்,  அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக,  எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம் .

அதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்மதிகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. ‘நெவிகேடர்” மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும்.

இவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.

அதேநேரம்,  தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொலைதொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும்,  நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0517-world-information-society-day.html

முல்லைத்தீவில் பணியாற்றிய 3 வைத்தியர்கள்,மேலதிக அரசாங்க அதிபர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை?

mullivaikaal-02.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து வெளியேறி வவுனியா வந்து சேர்ந்த மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அது தாக்கியழிக்கப்படும் வரையில் பணியாற்றிய மருத்துவ அத்தியட்சகர் சண்முகராஜாவும் அவரது குடும்பத்தினரும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் வரதராஜா, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களர் டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று சனிக்கிழமை வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது 

ஜனாதிபதி நாடு திரும்பினார் -விமானநிலையத்தில் சூடான வரவேற்பு

he_2009-05-17.jpgஜோர்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார். நாடு மீட்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அரசாங்கத்தின் அமைச்சர்கள்,  ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் வரவேற்றனர்.

விமானத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி தரையைத் தொட்டு தாய்நாட்டை வணங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். இதனையடுத்து கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் ஜானாதிபதிக்கு ஆசிவேண்டி இடம்பெற்ற சர்வமத அனுஷ்டானங்களில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஜோர்தான் விஜயத்தின்போது அங்கு இடம்பெற்ற ஜீ-11 உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,  புலிகளிடமிருந்து விடுதலைபெற்ற நிலையிலேயே தான் இலங்கைத் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விவகாரம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இந்தியப் பிரதமர் ஆலோசனை

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

புதிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நாளை திங்களன்று புதுதில்லி செல்லும்போது, இந்தியப் பிரதமருடன் அவர் இலங்கை பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவார் என்று தெரிகிறது.

இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.